ஏரோதின் சூழ்ச்சி

மேய்ப்பன் பிறப்பு
ஆடு மேய்க்கும் சிலருக்கு
தூதர்களால் தெரிவிக்கப்பட்டது.

ஞானியர் சிலரின்
ஞானங்களில்
அச்செய்தி அறிவுறுத்தப்பட்டது

கீழ்த்திசை ஞானிகள்
மேல் நோக்கினர்,
வானவன் தேவன் கீழ்நோக்கினார்.
ஒளியின் வடிவம்
இருளிள் இடிவுக்காய்
இறங்கியது அவர்கள் இதயங்களில்.

யூதேயா அரண்மனையின்
அரியாசன மஞ்சங்களில்
இடியென இறங்கியது
இயேசுவைத் தேடி வந்த
ஞானிகளின் வார்த்தைகள்.

“யூதர்களின் அரசன் எங்கே ?”
விண்மீன் ஒன்று வித்தை செய்கிறது,
பூமிப் பந்துக்கு இதோ
புது ராஜா பிறந்திருக்கிறாரே.
அந்த
“யூதர்களின் அரசன் எங்கே ?”

ஏரோதின் இதயத்துள்
விரோத முள் தைத்தது.

என் சாம்ராஜ்யத்தின்
எல்லை ஆள
இன்னொரு அரசனா ?

என் தோட்டத்து
மலர்களின்
மாலைகளுக்காய் இன்னொரு கழுத்தா ?

என் வாளும் கேடயமும்
இன்னொரு தோளுக்கா ?

இல்லை,
இதை அனுமதிப்பது ஆகாது.

ஒற்றைக்கதிரவன் நானே.
என்னை எடுத்து
எரியும் குழிக்குள்
எறியும் அவன் யார் ?

நீள் கடலை
உறிஞ்சப் பிறந்த அந்த
பிஞ்சுப் பஞ்சு எங்கே ?

நெஞ்சில் பாய்ந்த ஈட்டியை
சூசகமாய் மறைத்து விட்டு
சாகசமாய் பேசினான் மன்னன்.

தலைமைக் குருக்களும்
மறைநூல் அறிஞரும்
அவசரமாய் அழைக்கப்பட்டனர்
அரசவைக்கு.

மெசியா பிறந்தால்
எங்கே பிறப்பார் ?
அரண்மனையில் எழாத
அழுகுரலுக்குச் சொந்தமான
அரச குழந்தை
எங்கே பிறந்திருக்கலாம்
சொல்லுங்கள்.
மன்னன் வினவினான்.

அவை
ஏட்டுச் சுருளை விரித்தது.
நரைத்த தலையுள்
நுரைத்த அறிவை பிரித்தது.

பெத்லேகேமில் பிறக்கலாம் பிதாமகன்,
இறைவாக்கினர் வாக்குகள்
இறவா வாக்குகள்
அவை அதைத்தான் அறிவிக்கின்றன.

தீய்க்குத் தூபமிட்டன
அவர்களின் தீர்மானம்.

அரசன் அசரவில்லை,
ஞானிகளிடம்
அகத்து அழகு
முகத்தில் தெரியாமல் பேசினான்.

ஞானிகளே.

பெத்லேகேம் பேறுபெற்ற இடம்
அரசனைப் பெற்றதால்
பெருமைப்படப் போகும் இடம்.

செல்லுங்கள்.
அரசனைக்கண்டு வாருங்கள்,
நானும்
ஆராதிக்க ஆயத்தமாகிறேன்.

கண்டு வந்து சொல்லுங்கள்
நான்
கண்டு வணங்க வேண்டும்.

ஞானிகள் விலக,
சூட்சும அரசவை
மெளனத்துள் மண்டியிட்டது.

மூர்க்கத்தனமான ஓர் முடிவுக்காய்
வாள்கள் உறைக்குள்
அசையாதிருந்தன.

அரசவையின் இரகசியங்கள்
அறியாமல்
ஞானிகள் நடந்தனர்.
வானம் வழிகாட்ட
பூமியில் சுவடுகள் நீளமாயின.

குளிரில் உடல்கள் குறுகுறுக்க
இதயம் எதிர்பார்ப்பில்
எரிந்து கொண்டிருந்தது.

இதோ
வால் நட்சத்திரம்
நடப்பதை றுத்தி,
நடப்போரைப் பார்த்தது.

ஞானியர்
ஆனந்தக் கடலின்
அலைகளாய் அலைந்தனர்.

வானத்தின் வால்பிடித்து
ஞாலத்தின் சிறப்பருகே
ஞானியர் வந்தனர்.
o

மாட்டுத் தொழுவம் ஒன்று
மீட்பின் மகனுக்காய்
மடிதிறந்து படி அமைத்திருந்தது.

நாடுகளின் மெத்தைகள்
அரசனுக்காய் விழித்திருக்க,
பெத்லேகேம்
தொழுவமொன்று
தொழுகை பெற்றது.

வைக்கோல் கூட்டுக்குள்
ஓர்
வைரம் வளர்க்கப்பட்டது
வரலாற்றில் இது ஒரே முறை.
வரலாறே இவருக்கு விரல் முனை.

முத்துக்கள் எப்போதுமே
மாளிகைகளில் பயிராவதில்லையே,
சிப்பியில் தானே
அவை சிரம் கொள்கின்றன.

தலை தாழ்த்தித் தரை வீழ்ந்து
வணங்கினர் ஞானியர்.
பொன், தூபம், வெள்ளைப் போளம்
வழங்கினர் ஞானியர்.

பிறந்ததன் பயனாய்
உயர்ந்ததை வழங்கினர்.

<< இறவாக் காவியம்… தொடரும்…>>

மறுமொழியொன்றை வழங்குக