பால்ய காலம்
ஆக்னஸுக்கும்
நட்புகளையும், சிரிப்புகளையும்
மட்டுமே
சம்பாதித்துத் தந்தது.
பெரிய வீடு
தோட்டத்துப் பூக்களைத்
தொட்டுக் கொண்டு துணையிருக்கும்
தென்றல்.
எப்போதும்
நிம்மதியைத் தர
சம்மதிக்கும் சுற்றம்
என
ஆக்னஸ் ஆனந்தத்தில் தான்
மையம் கொண்டிருந்தாள்.
வயதுக்கு மீறாத
மழலைத்தனம் முகத்தில் மிளிர,
உள்ளுக்குள் மட்டும்
வயதுக்கு மீறிய
பக்தியும், பணிவும்.
குயில் ஒன்று
புல்லாங்குழல் பயில்வதாய்
பாடல் பயின்றாள்.
ஆலய பாடல் குழுக்களில்
பாடினாள்.
ஆண்டவனுக்காய் பாடுவதில்
மனம் முழுதும்
ஆன்மீகப் பூக்கள்
ஆனந்தமாய் முளைத்தன.
திரு இருதய ஆலயம்
அவளுடைய
ஆரம்பக் கல்வியை
ஆரம்பித்து வைத்தது.
கல்வியில்
முதல் தரம் வாங்கினாள்
கடமைகளின்
கால்களும் உடைபடாமல்
காத்துக் கொண்டாள் !.
ஊருக்குச் நல்ல பிள்ளையாய்
வீட்டுக்குச் செல்லப்பிள்ளையாய்
துளிர்க்கும் போதே
வாசனை அளித்தாள்.
அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில்
ஓர் ஏழை விதவை
விலக்க இயலா வறுமையுடனும்
இருட்டில் தவழும்
ஏழு குழந்தைகளுடனும்
குடிசை வீடொன்றில்
குடியிருந்தாள்.
அவள் வீட்டைவிட்டு
வெளிச்சம் வெளியேறி
வெகு நாட்களாகியிருந்தது.
வறுமை
உள்புகுந்தும்
வருடங்களாகியிருந்தது.
ஆக்னஸின் தாய்
அந்த வீட்டை
தன் இரண்டாம் குடும்பமாய்
பாவித்தாள்,
ஆக்னஸோ
அவ் வீட்டிற்கு உதவுவதில்
எட்டாம் குழந்தையானாள்
பூவோடு சேர்ந்த
பூ,
இருமடங்கு வாசம் வீசியது.
ஆக்னஸிற்கு
ஒன்பது வயதான போது
அவர்கள் குடும்பத்தை
ஓர்
முரட்டுப் புயல்
முட்டிக் கவிழ்த்தது.
துயர அலை ஒன்று
உயரமாய் வந்து
கரையில் விளையாடிய அவர்களை
கண்ணீருக்குள்
மூழ்கடித்தது.
ஆக்னஸின் தந்தையை
மரணம் வந்து சந்தித்து.








