
.
கொதிக்கக் கொதிக்கக் கொட்டும்
சூரிய பானத்தை
நிலாக் கோப்பை
குளிர வைத்துப் பரிமாறும்.
நிலவும் சூரியனும் இன்னும்
அயல் தேசக் காப்புரிமைக்குள்
அடைக்கப்படவில்லை.
தொட்டு விட இயலாத
தூரப் புள்ளிகளை
பூமி
நட்சத்திரமென்று பெயரிட்டு
உலகுக்கெல்லாம் உரிமையாக்கும்.
மிதக்கும் கட்டிடங்கள்
இப்போதைக்கு
சாத்தியமில்லாமல் போனதால்
தூரவானம் இன்னும்
கம்பி வேலிகளுக்குள் கட்டப்படவில்லை.
துருவப் பனி எப்போதும்
தீர்ந்து போகாது என்பதால்
யாரும்
வெட்டி எடுத்துச் செல்வதில்
வெட்டுக் குத்து நடப்பதில்லை.
இன்னும்
காற்றுக்கு வரி கட்டும்
காலம் வரவில்லை.
ஆற்றுக்குள் மணலெடுத்தால்
ஊற்றெடுக்கும் பிரச்சனைகள்.
பாலைவனத்தில்
மணல் திருடினால்
யாரும்
பொருட்படுத்துவதில்லை.
மேகத்தைப் பிரிந்து
தாய் வீடு திரும்பும்
மழைப்பெண்ணுக்கு
வானத்தில் வரப்புகள் இல்லை.
கீழே விழுந்தபின் தான்
அவை
அரசாங்க அணைக்கட்டுகளில்.
விதிமுறைகள்
பூமியில் வித்தியாசமானவை.
இழுத்துப் பிடித்து
அமுக்க முடியாததெல்லாம்
பொதுவுடமை.
விரட்டி விரட்டி
வால் தொட முடிந்ததெல்லாம்
தனியுடமை !









Janaki சொன்னது,
ஆகஸ்ட் 24, 2006 இல் 9:54 பிற்பகல்
Pramatham xavier! nalla thinking!Ovvoru nalum vithyasamana kavithaigala pottu asatharinga! nalaiku ethai patri eluthuvingannu guess pannave mudiyala…
கலை அரசன் மார்த்தாண்டம் சொன்னது,
ஆகஸ்ட் 24, 2006 இல் 11:07 பிற்பகல்
Dear சேவியர், மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் எழுதிவிடுகின்றீர்கள்.
“இன்னும்
காற்றுக்கு வரி கட்டும்
காலம் வரவில்லை.” – ஐடியா குடுத்துட்டீங்களா? சீக்கிறமா வரிய எதிர்பார்காகலாம்!