சோதனைச் சாலையில் கடவுள்.

 

.

ஆண்டவன் இருக்கிறார்
என
நான் நடும் நம்பிக்கையின்
கடுகு விதைகளை
என் ஆறறிவு
தயவு தாட்சண்யமின்றி
நறுக்கிப் போடும்.

இருக்கின்றார் என்று நான்
ஒரு காய் நகர்த்தும் போது,
எப்படி?
என நான்கு காய்கள்
எனக்கெதிராய் நகர்த்தப் படும்.

வெற்றிகளை நான்
பட்டியலிட்டால்,
என்னை விட வெற்றி பெற்ற
நாத்திக நண்பர்களை
அது
துணைக்கு அழைத்து வரும்.

தோல்விகளை நான்
எடுத்து வைத்தால்,
என்னை விட அதிகமாய் தோற்ற
ஆத்திக அன்பர்களை
அது ஆதரவுக்கு அழைத்து வரும்.

நோய்களுக்காய்
நான்
கடவுளைத் தொழுதால்
அதிசயம் நடக்காவிடில்
அவநம்பிக்கை வந்து சம்மணமிடும்.

வரலாறுகளுக்காய் நான்
இறையை நம்பினால்,
கல்வெட்டுகள் நிஜமா எனும்
சந்தேகம் என்
மனதில் வெட்டும்.

வரலாறுகள் உண்மை என
அறிவியல் சொன்னால்,
வரலாற்று நாயகன் உண்மையா ?
என
எதிர் கேள்வி உருவாகும்.

புரியாமல் நம்பும்
அறிவியல் கருவிகள் ஏராளம்,
ஆதாரமில்லாமல் ஆண்டவனை
நம்பும்போதோ,
அரை குறை சிந்தனைகள்
அலைக்கழிக்கின்றன.

ஆனாலும்
எங்கேனும்  ஏதேனும்
நடந்து விட்டால்,
மனசு
ஆண்டவா என்று தான்
ஆரம்பிக்கிறது.

1 மறுமொழி

  1. Arun சொன்னது,

    ஆகஸ்ட் 28, 2006 இல் 12:17 பிற்பகல்

    Arumayana Kavithai… A couple of spelling corrections…

    என்னை விட அதிகமாய்__ தோற்ற
    ஆத்திக அன்பர்களை

    வரலாற்று நாயகன் உண்மையா ?
    என
    எதிர்__ கேள்வி உருவாகும்.


மறுமொழியொன்றை வழங்குக