
தேனிலவுக்குச் செல்லும்
தம்பதிகளைப் போல
உற்சாகமாய்
வீசிக்கொண்டிருப்பதில்லை
காற்று எப்போதும்.
முத்தமிட்டுத் தூங்கி
முத்தமிட்டு விழித்து
புனிதத்துவம் அடையும்
பொழுதுகள்
இல்லாமல் போகின்றன
பல வேளைகளில்.
இழுத்து முடித்த சிகரெட்டை
செருப்புக் காலால்
நசுக்கும்
பல பொழுதுகள்.
அவிழ்ந்து வீழ்ந்த
கொலுசு மணியை
கவனமாய் எடுத்து வைக்கும்
சில பொழுதுகள்.
தவிர்த்தலுக்கும்
தவித்தலுக்குமிடையே
நகர்ந்து கொண்டிருக்கிறது
தாம்பத்ய ரயில்
எல்லா வீடுகளிலும்.
சொல்லிக் கொண்டோ
சொல்லிக் கொள்ளாமலோ.








