மன விளிம்புகளில்…

0

அறிவு ஜீவிபோல பதிலிறுக்கிறாய்,
எந்தப் பதிலும் உனதில்லை.
எல்லாம் உன்மேல்
காலம் காலமாக
தேய்க்கப்பட்ட தீர்மானங்கள்.

நீ,
கண்ணாடியில் காணும்
முகம் உனக்கானதில்லை.
நீ யாரென்று
யாரோ தீர்மானித்ததன்
யாருமல்லாதவன் தான்.

நீ
இட்டதாய் கருதும்
அத்தனையும் யாரோ ஒருவர்
இட்டதன் நீளல்களே.

செவிகளும் கண்களும்
செரித்துக் கொட்டும்
கழிவுகளிலிருந்தே,
உனக்கான விடையை
நீ இழுத்தெடுக்கிறாய்.

புலமை எனும்
புலன்களைக் கொண்டே
உன்
அகழ்வாராட்சியையும் நடத்துகிறாய்.

உன்
அத்தனை சிந்தனைகளையும்
அவிழ்த்தெறிந்துவிட்டு,
எப்போதேனும்
நிர்வாண மனதோடு
உள்மனம் கிளறிப்பார்.

விடையென்ற கருதல்கள்
கேள்விகளாய் மாறி
கேள்விகளோடே ஜனித்து
கேள்விகளோடே மரித்து
விடையல்லாத நிலையே
விடையென நிலைக்கும்.

புள்ளிக்குள்
புதையுண்டு கிடக்கும்
பிரம்மாண்டப்
பிரமிடுகள் வெளியேறத் துவங்கும்.

- ‘மன விளிம்புகள்’ கவிதை நூலிலிருந்து

2 மறுமொழிகள்

  1. ரேவதிநரசிம்ஹன் சொன்னது,

    ஜனவரி 5, 2007 இல் 7:07 பிற்பகல்

    அற்புதம்.
    திணிக்கப்பட்ட சோறுபோல பழக்கப்பட்ட வார்த்தைகள் தெரிந்தோ தெரியாமலேயோ வந்து விழுகின்றன.
    ஒரே ஒரு நிமிடம் பேசுவதற்கு முன்னால்
    யோசித்தால்…

  2. Prasanna R சொன்னது,

    ஜனவரி 10, 2007 இல் 8:28 பிற்பகல்

    Well Xavi, manadhai kilari parkkum vaira varigal. Excellent.

மறுமொழியொன்றை வழங்குக