கல்லுக்குள் ஈரம்
- என். சொக்கன்
தமிழில் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள் என்று ஒரு பாகுபாடு இருப்பதைப்போலவே, புரிகிற கவிதைகள், புரியாத கவிதைகள் என்றும் பிரிவினை உண்டாகியிருப்பதை மறுக்கமுடியாது.
எது புரிகிறது, எது புரியாதது, எது இலக்கியம், எது ஜல்லி என்னும் பொதுத் தலைப்புகளில், இந்த இரு கட்சியினரும், ஒருவர் மற்றவர்களைத் தாக்கிக்கொள்வதிலும் குறைச்சலில்லை. இந்த சிண்டுபிடிச்
சண்டைகளைப்பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கும் குறைவே இல்லை.
அந்தவிதத்தில், பொதுஜனப் பரப்பைச் சென்றடையவேண்டும் என்னும் நோக்கத்துடன் எழுதுகிறவர்களின் குறிப்பிடத்தக்கவர் சேவியர். அவரது ஐந்தாவது தொகுதியான, ‘கல் மனிதன்’, ஒரே ஒரு இடத்தில்
புரியாத கவிதைகளைக் கிண்டல் செய்வதுபோல் லேசாக உரசிப் பார்க்கிறது, மற்றபடி, தான் பார்த்த மனிதர்களைத் தனது கவிதை மொழியில் பதிவு செய்வதிலேயே முழு கவனத்தையும் செலுத்தியிருக்கிறார்
கவிஞர்.
முன்னுரையில் ‘உள்ளடக்கத்தில்மட்டுமின்றி, வடிவ எளிமையிலும் மனித நேயம் பயில்கின்றன இக்கவிதைகள்’, என்று திரு. இந்திரன் குறிப்பிடுவதுபோல், இந்தக் கவிதைகளின் அழகு மொத்தமும், அவற்றின்
எளிமையில்தான் உள்ளது. மனிதர்களையும், அவர்தம் மன உணர்வுகளையும் எளிய வார்த்தைகளில் பதிவு செய்திருக்கும் இக்கவிதைகளை, யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதைவிட, ஒவ்வொருவரும்
இக்கவிதைகளில் தங்களை உணரலாம் என்பதுதான் இவற்றின் முக்கியமான தகுதி.
இந்தப் பொதுப்பண்புக்கு ஒரு சிறிய உதாரணமாக, ‘வேர்’ எனும் இந்தச் சிறு கவிதையைச் சொல்லலாம்
:
‘இத்தனை
வருடங்களுக்குப்பிறகும்
நான்
பேசினால்
கண்டுபிடித்துவிடுகிறார்கள்
என் ஊரை’
இதே தொகுதியின் வேறொரு கவிதையில் சேவியர் எழுதுவதுபோல், நமது ஊர், நமது மாநிலம், நமது நாடு என்று பயண தூரங்களும், புலம்பெயர்தலின் தீவிரமும் விரிவாகிக்கொண்டே சென்றபோதும், நமது
வேர்களை இழந்துவிடுவதில்லை என்பதில் ஒரு சந்தோஷம் எல்லோருக்கும் இருக்கும், அல்லது இருக்கவேண்டும் என்பதை, சேவியரின் பல கவிதைகள் பேசுகின்றன.
அதேபோல், சக மனிதனின்மீது நேசம் தேவை என்பதையும், தனது கவிதைகளில் அடிக்கடி வலியுறுத்துகிறார் சேவியர். இவை, வெறும் கோஷங்களைப்போல் இல்லாமல், ஈரமான காட்சிப் பதிவுகளாக
விரிந்து, மனதில் ஆழ்ந்த தாக்கத்தை உண்டாக்குகின்றன.
இந்த உத்தியின் நீட்சியாக, சேவியரின் சில கவிதைகள், சின்னக் கதைகள்போலவே விரிகின்றன. ‘காதல் கணவன்’, ‘கல்யாணக் கணக்குகள்’, ‘காதலுக்குப் பின் திருமணம்’, ‘கயிற்றில் தொங்கும்
கொடி’, ‘மின்சாரம்’ ஆகிய கவிதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
பெரும்பாலும் இரண்டு பக்கங்களுக்கு நீளும் இந்தக் கவிதைகளைவிட, ‘படிகள்’, ‘நிறக் குறியீடு’, ‘வாழ்க்கை’, ‘நிலைகள்’ போன்ற சிறு கவிதைகளில் சேவியர் முன்வைக்கும் நுணுக்கமான கேள்விகளும்,
அவதானிப்புகளும்தான் இந்தத் தொகுதியின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன.
இதே காரணத்தால்தான், ‘திட்டு’ போன்ற கவிதைகளின் வார்த்தை விளையாட்டுக் குறும்பையும் மீறி, அந்தக் கவிதைகள் வெளிப்படுத்தும் உணர்வுகள்தான் சிறப்பாக வெளிப்படுகிறது.
ஆங்காங்கே தலைகாட்டும் காதல் கவிதைகள், ஏனோ இந்தத் தொகுப்பில் பொருந்தாத அம்சங்களாகவே உறுத்தித் தெரிகின்றன. அதேபோல், ‘விலக்கப்பட்ட வியர்வைகள்’, ‘கடவுளும், பூசாரியும்’ போன்ற
சில கவிதைகள் மேலும் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கலாமோ என்கிற ஆதங்கமும் தலைகாட்டுகிறது.
தொகுப்பை வாசித்து முடித்தபின், பல கவிதைகள் மனதில் நிற்கின்றன. அவற்றில் மிகச் சிறந்ததாக ஒன்றைச் சொல்லவேண்டுமானால், ‘அப்பா என் உலகம்’ என்ற கவிதையைக் குறிப்பிடலாம். இதைப்
படித்தபிறகு, இனிமேல் தம்ளரிலோ, பாட்டிலிலோ தண்ணீர் குடிக்கும்போதெல்லாம், ‘தண்ணீர்தான் உலகிலேயே சுவையான பொருள்’ என்று சொல்லும் அப்பாவின் நினைவுதான் வரப்போகிறது என்பதுமட்டும்
நிச்சயமாகத் தோன்றுகிறது.
(கல் மனிதன் / சேவியர் / சந்தியா பதிப்பகம் / 128 பக்கங்கள் / ரூ 60/-)





karthik சொன்னது,
ஜனவரி 24, 2007 இல் 4:30 பிற்பகல்
andha kavidhai ‘ver’ romba nalla iruku
Suralitharan inthu சொன்னது,
நவம்பர் 29, 2009 இல் 10:06 பிற்பகல்
Hi kavithai very nices very like
சேவியர் சொன்னது,
December 4, 2009 இல் 12:16 மு.பகல்
//Hi kavithai very nices very like//
ரொம்ப நன்றி.. அடிக்கடி வாங்க…