( உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை வெளியிட்ட ‘சேவியர் கவிதைகள் காவியங்கள்’ என்னும் தொகுப்புக்கு எழுத்தாளர் சொக்கன் அவர்கள் தந்த முன்னுரை ) சேவியர் – கவிதைகள் & காவியங்கள்
புகழ்பெற்ற ‘டைம்’ ஆங்கிலப் பத்திரிகையின் சமீபத்திய இதழொன்றைக் கடைகளில் பார்த்தேன், இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அதன் அட்டையில் இடம்பெற்றிருந்தார். அதைக் கண்டதும், அனிச்சையாய் ஒரு ‘ஆஹா’ செய்தேன், சந்தோஷமான ஆஹா, உற்சாகமான ஆஹா, பெருமை கலந்த ஆஹா, லேசாய்ப் பொறாமையும் கலந்த ஆஹா !
ஏனெனில், டைம் இதழின் அட்டையில் இடம்பிடிப்பது சாதாரண கௌரவமில்லை. சேவாகின் மானசீக குருவாக அவர் நினைக்கிற சச்சின் டெண்டுல்கர்கூட, இந்த பெருமையைப் பெறுவதற்கு பத்தாண்டுகளுக்குமேல் தொடர்ச்சியாய் விளையாடி, ஏகப்பட்ட நல்லபேர் வாங்கவேண்டியிருந்தது, 1999ல் டைம் இதழின் அட்டையை சச்சின் அலங்கரித்தபோது, அவர்தான் இந்த பெருமையைப் பெற்ற முதல் இந்திய வீரராய் இருந்தார், அவருடைய ‘மறுபிரதி’ என்று எல்லோராலும் ஆரவாரத்தோடு வரவேற்கப்படும் இளம் திறமையாளர் வீரேந்திர சேவகிற்கு, இருபத்தைந்து வயதிற்குள் டைமின் அட்டை கௌரவம். பெருமையோடு, பொறாமைப்படாமல் வேறென்ன செய்வதாம் ?
கிட்டத்தட்ட அதேபோன்றதொரு கலவை உணர்ச்சியைத்தான், நண்பர் சேவியரின் அனைத்து கவிதைகள், காவியங்கள் அழகான முழுத்தொகுப்பாய் வரவிருக்கும் சேதி கேட்டபோது அனுபவித்தேன். இந்த இளம் வயதில் ஒரு கவிஞரின் அனைத்து படைப்புகளும் நூல்வடிவம் பெறுவது எத்தகைய கௌரவம் ! அவரது திறமைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்திருக்கிற பரிசாகவே இந்த பெருமையைக் கருதுகிறேன். பெருமிதம் கொள்கிறேன் !
எங்கள் ‘தினம் ஒரு கவிதை’ இணையக் குழுவோடு வளர்ந்த படைப்பாளி, எங்கள் ‘ஆஸ்தான கவி’ சேவியர் என்பதால் இந்த சந்தோஷம் இரட்டிப்பாகிறது, அவரை நேரில் பார்த்ததைவிட, இந்த இணையக்குழுவின் மூலமாகவும், குழுவின் பரிசீலனைக்கு அவர் அனுப்புகிற கவிதைகளின்வழியாகவும், பிற மின்மடல்களின்வாயிலாகவும் சந்தித்ததுதான் அதிகம், ஆகவே, அவருடைய படைப்புகள் அனைத்தையும், அவர் இயங்குகிற உற்சாகத்தையும், வேகத்தையும் அருகேயிருந்து ரசித்த பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
கவிதைகளைப் பொறுத்தவரை சேவியர் ஒரு புயல்.
ஒவ்வொரு வாரமும் ஏழெட்டு கவிதைகளாவது ‘தினம் ஒரு கவிதை’யின் பரிசீலனைக்குத் தவறாமல் அனுப்பிவிடுவார் சேவியர், மேலேமேலே கவிதைகளை அடுக்கி, நம்மைத் திக்குமுக்காடச் செய்கிற அவரது வேகம் எப்போதும் ஆச்சரியப்படுத்தும், அதேசமயம், வேகமாய்ச் செய்ததற்கான ஒரு அடையாளமும் கவிதைகளில் இருக்காது – ஒவ்வொன்றும் வெவ்வேறு புதுப்புது விஷயங்களைத் தொடுகிற கவிதைகள், ஒவ்வொன்றிலும் கச்சிதமான செய்நேர்த்தி., மென்மையான நடை, நல்ல வார்த்தைத் தேர்வு, நல்ல முத்தாய்ப்பு, நல்ல கருத்துகள் – ‘புயலுக்குள் ஒரு தென்றல் இருக்கிறது’ என்று ஒரு ஜென் சொலவடை உண்டு (உண்டா என்ன ?!) அது சேவியருக்குப் பொருந்தும்.
புதுமுயற்சிகளுக்கு எப்போதும் தயாராய் இருக்கிறவர் சேவியர், குறிப்பாய் சவால்கள் இவருக்கு ரொம்பவே பிடிக்கும் – இந்தக் காரணத்தாலேயே, ‘தினம் ஒரு கவிதை’க்காக அவ்வப்போது சிறு தொகுப்புகள் தயாரிக்கும்போது, அவற்றிலெல்லாம் சேவியரின் பங்களிப்பு தவறாமல் இருக்கும், சில விசேஷ தலைப்புகளை மையமாய்க் கொண்டு தயாராகும் இந்தக் கவிதைக் கொத்துகளுக்காக எழுதுவதென்பது, ஏற்கெனவே தைக்கப்பட்ட சட்டைக்கேற்ப, நம் உடம்பைக் குறுக்கி அல்லது விரித்துக்கொள்கிற கம்ப சூத்திரம்தான் ! ஆனால் அப்போதும், தன் கவிதைத் தரத்தை விட்டுக்கொடுத்துவிடாதபடி உழைக்கிறவர் சேவியர், கொடுத்த தலைப்பிற்குப் பொருத்தமாய், அதேசமயம் தனிப்பட்டமுறையில் – stand alone – பார்க்கிறபோது தரமான கவிதையாகவும் சேவியரின் அந்தப் படைப்புகள் மிளிரும்.
‘அந்த காலத்து ஐந்திணைகளையும் புதுக்கவிதையில் பயன்படுத்துவதுபோல் ஒரு தொகுப்பு கொண்டுவருவதாய் இருக்கிறேன் சேவியர், பாலைத் திணைக்கு நீங்கள் எழுதலாமே’ என்று வேண்டுதலாய் ஒரு மின்மடல் அனுப்பிவிட்டு வீட்டுக்குச் செல்வேன், மறுநாள் காலை என் மின்னஞ்சல் பெட்டியைத் திறக்கையில், பாலைத் திணையில் ஐந்து புதுக்கவிதைகளாவது காத்திருக்கும் ! இப்படி இம்-மென்பதற்குள் கொடுத்த தலைப்புகளிலெல்லாம், அதுவும் ஐந்து அல்லது ஆறுக்குக் குறையாத கவிதைகளை ஒரு ராத்திரிக்குள் எழுதி அனுப்பிவிடுகிற சேவியரை, ‘நவீன காளமேகம்’ என்று நான் வேடிக்கையாய் அழைப்பதுண்டு !
ஒரு கவிதையின் மேன்மைக்கு உண்மையான உணர்வுகள் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு கச்சிதமான தகவல்களும் அவசியம் என்று நினைக்கிறவர் சேவியர். ஒவ்வொரு கவிதைக்கும் அவர் தயாராகிற விதம், பரவசமூட்டும் ஒரு அனுபவம், அதற்காக தன் நினைவு அடுக்குகளிலிருந்தும், இணையத்திலும், பிற நண்பர்களிடமும் அக்கறையோடு அவர் தகவல்கள் சேகரிப்பது வழக்கம். அப்படி ஆழ்ந்த ஈடுபாட்டோ டு சேர்க்கும் விஷயங்களை, வெறுமனே பட்டியலிடும் படைப்புகளாய் தன் கவிதைகளை அமைத்துவிடாமல், அழகியல் உணர்வோடு அவற்றைக் கோர்த்துக் கவிதையாக்கும் வித்தகர் இவர்.
அதேபோல், ஒவ்வொரு விஷயத்தைச் சொல்லும்போதும், அதற்கான சரியான வார்த்தைகளைத் தேடித் தேடிச் சேர்ப்பதும், மிகப் பொருத்தமான உவமைகளுக்காக பாடுபடுவதையும் கண்கூடாய்ப் பார்த்திருக்கிறேன் – முந்தின நாள் இரவு ஒரு கவிதை அனுப்பியிருப்பார், மறுநாள் அலுவலகம் செல்வதற்குள் இன்னொரு மின்னஞ்சல் வந்திருக்கும், ‘பழைய கவிதையை மறந்துவிடுங்கள், ஒரு சிறு மாற்றம் செய்து, இதோ மீண்டும் அனுப்பியிருக்கிறேன்’ என்பார், இரண்டு கோப்புகளையும் திறந்து, ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரே ஒரு வார்த்தை மாறியிருக்கும், ஆனால் அந்த மாற்றம் கவிதையின் தரத்தைப் பலமடங்கு உயர்த்தியிருக்கும், தனக்கு முழுத் திருப்தி உண்டாகிறவரை தன் முயற்சியில் சளைக்காத நவீன விக்ரமாதித்யன் என்று இவரைச் சொல்லிவிடலாம். (இந்த உதாரணத்தைச் சொன்னதற்காக, நல்ல கவிதையை வேதாளம் பிடிப்பதற்கு ஒப்பிடுகிறேன் என்று யாரும் என்னை உதைக்கவராமலிருப்பார்களாக !)
உதாரணமாய், ஒருமுறை ‘வண்ணக் கவிதைகள்’ எனும் தலைப்பில், ஐந்து கவிஞர்கள் ஆளுக்கொரு வண்ணம்பற்றி கவிதைகள் எழுதினார்கள், சேவியர் வெள்ளை நிறம்பற்றி எழுத ஒப்புக்கொண்டிருந்தார். வழக்கம்போல் அந்தப் பொருளில் ஐந்து கவிதைகள் அனுப்பியிருந்தார், ஐந்தையும் வாசித்தேன், அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். என்றாலும், அவருக்கு எழுதிய நன்றி மடலில், ‘இந்தமுறை உங்கள் ஐந்து கவிதைகளில் எனக்கு முழுத் திருப்தி அளித்ததாக எதுவும் இல்லை சேவியர், ருப்பதில் சிறந்ததைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்று பொருள்படும்படி எழுதிவிட்டேன்.
அந்த மடல் மென்மனது சேவியரைத் தைத்துவிட்டது, மறுநாள் அதே தலைப்பில் இன்னும் சில கவிதைகளை முயன்று, ‘இவற்றுள் ஏதேனும் உங்களுக்கு முழுத் திருப்தி அளிக்கிறதா ?’ என்று தவிப்போடு கேட்டிருந்தார், படைப்பாக்கத்தின் உன்னத நிலையைத் தொட்டுவிடுவதற்கான அவரது ஏக்கத்தை அன்று புரிந்துகொண்டேன். ந்த ஏக்கமும், சாதிப்பதற்கான சுய ஊக்கமும்தான் அவரை இன்றைய நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது, எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்களின் ‘புது நானூறு’ (சிறந்த நானூறு புதுக்கவிதைகள்) வரிசையில் அவரது படைப்பிற்கு இடம்பிடித்துத்தந்திருக்கிறது, இந்திய ஜனாதிபதி பாரதரத்னா டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவரின் இதயத்தைத் தொட்டு, மனம்நிறைந்த பாராட்டு வாங்கித்தந்திருக்கிறது !
அமெரிக்காவில் இருந்துகொண்டு தமிழ்வளர்க்கிற இந்த இளம்கவிஞர், ‘விரைவில் இந்தியா வருகிறேன்’ என்று முதன்முதலாய்த் தொலைபேசிய தினம் எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது, ‘இந்த தடவை இந்தியா வரும்போது ஒண்ணு, கல்யாணம் செஞ்சுக்கணும், அல்லது ஒரு கவிதைத் தொகுப்பு கொண்டுவரணும்’ என்று குறும்பு கலந்த ஆர்வத்தோடு சொன்னார் சேவியர், ‘முதல் விஷயத்தை நீங்கள் கவனியுங்கள், கவிதைத் தொகுப்பு தானாய் வரும்’ என்று சொல்லிவைத்தேன், அதேபோல் அவரது திருமணம் முடிந்த சில நாள்களுக்குள், சேவியரின் முதல் கவிதைத் தொகுப்பு, ‘ஒரு மழை இரவும், ஓராயிரம் ஈசல்களும்’ வெளியானது ! அதன்பின் ‘மன விளிம்புகளில்’ எனும் இரண்டாவது தொகுதி சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல், இந்த முழுத்தொகுப்பு, அவரது திறமையைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு எடுத்துச்செ(சொ)ல்லும் என்னும் நம்பிக்கை எனக்குண்டு.
இந்தத் தொகுப்பைப் பார்க்கையில், சட்டென்று கண்ணில் படுகிற ஒரு விஷயம், ரொம்பவே சந்தோஷமளிக்கிறது. இயற்கை, காலமாற்றங்கள், காதல், குடும்பம், சமூகம் என்று ஒவ்வொரு தலைப்பிலும், ஒரு சிறு தொகுப்பு வெளியிடுமளவு ஏராளமான கவிதைகளை எழுதியிருக்கிறார் சேவியர். இவை யாவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவை என்றாலும், இவற்றை இந்தமுறையில் தொகுத்து வாசிக்கும்போது, கவிஞரின் சிந்தனை வீச்சையும், ஒரே துறைசார்ந்த விஷயங்களை, பிரச்சனைகளை வெவ்வேறு கோணங்களிலிருந்து அவர் கையாளும் விதத்தையும் வியக்கமுடிகிறது. குறிப்பாய், காலமாற்றங்கள் குறித்த சேவியரின் கவிதைகளை, இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த பகுதி என்று குறிப்பிட்டுச் சொல்வேன் !
அவரே அடிக்கடி சொல்வதுபோல், சேவியரின் வேர்கள் அவரது ளம்பருவ கிராமத்தில் ருக்கின்றன, ஆகவே, நாகரீகத்தின் மற்றோர் எல்லையாக கருதப்படும் நகரங்களுக்குப் புலம்பெயர்ந்த ஒரு கிராமத்தானின் குரலாகவே அவரது பல கவிதைகள் ஒலிக்கின்றன. ந்த மாற்றத்தை, அதன் விளைவுகளை, ழப்புகளை, லாபங்களை அவர் தனது கவிஞனின் கண்களால் பார்த்து, அலசி, வர்ணித்து எழுதும்போது, வாசிக்கிறவர்கள் தங்களையே அதில் பார்த்துக்கொள்ளமுடிகிறது.
புரியாமல் எழுதுவதில் இவருக்கு நம்பிக்கையில்லை, ஒரு படைப்பு அதன் வாசகரை எளிமையாய், முழுமையாய்ச் சென்றுசேரவேண்டியது, படைப்பாளி அனுபவித்த அதே வலியை, அல்லது சந்தோஷத்தை அவருக்குள் உண்டாக்குவதை அவசியமாய்க் கருதுகிறார் சேவியர். அழகியல் உணர்ச்சியோடும், நேர்த்தியோடும் சொல்லப்படவேண்டிய கவிதைகள், தம்முள் சில நல்ல கருத்துகளையோ, உறுத்தாத, உரக்கச் சொல்லாத அறிவுரைகளையோ சுமந்து சென்றால், அது கலா-துரோகமில்லை என்பதும் இவரது நம்பிக்கை, இந்த எண்ணத்தின் பிரதிபலிப்புகளாகவே சேவியரின் பெரும்பாலான படைப்புகள் அமைந்திருக்கின்றன.
சேவியரின் கவிதைகள் பலதும், குறுங் கதைகளாகத் தோன்றுகின்றன. இதற்குக் காரணம், கவிதையின் கடைசிப் பகுதிக்கு அவர் தரும் முக்கியத்துவம், முத்தாய்ப்பு வரிகளில், அதுவரை கிடைத்த வாசகானுபவம் முழுமையடையவேண்டும் என்பதில் அவர் காட்டுகிற அக்கறை, அவரது படைப்புகளை, கச்சிதமாய் சொல்லப்பட்ட சிறுகதைகளோடு ஒப்பிட்டு மகிழச் செய்கின்றன.
அதேபோல் சேவியரின் காவியங்கள், கவிதை நடையில் எழுதப்பட்ட சிறுகதைகளாக / குறுநாவல்களாகவே தோன்றுகின்றன. ஆனால் அவற்றிலும்கூட, வியக்கவைக்கும் பல வர்ணனைகளை எழுதியிருக்கிறார் சேவியர், கதை என்ற அளவில் இவற்றை அணுகும் வாசகன் ஏமாற்றமடையச் சாத்தியமுண்டு, ஆனால் இப்படி லேசான கதைக் கருக்களை எடுத்துக்கொண்டு, அவற்றை அலங்கரித்து, தலைவாரிப் பூச்சூட்டி அழகுபடுத்துவதிலேயே சேவியரின் முழு கவனமும், வெற்றியும் இருக்கிறது. ஆகவே, இவற்றையும் நீள்கவிதைகளாகவோ, உரைவீச்சுகளாகவோ அணுகி வாசிப்பது நிறைவளிக்கிறது.
ஆர்வமுள்ள படைப்பாளிக்கு, எல்லைகளில் பிரியமிருப்பதில்லை. ஆகவே, சேவியரும் வழக்கமான கவிதைகள் தாண்டிய புது முயற்சிகளில் தொடர்ச்சியாய் ஈடுபட்டுவருகிறார். இயேசு கிறிஸ்துவின் வாழ்வைப் புதுக்கவிதையில் சுருக்கமாகவும், அழகாகவும் சொன்ன அவரது ‘இறவாக் காவியம்’ மற்றும் சாலமோன் நீதிமொழிகளைப் புதுக்கவிதை வடிவில் தருகிற முயற்சி ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. புனைகதைகள் எழுதுவதிலும் ஆர்வம்மிக்க சேவியரின் சிறுகதைகள் முன்னணி இதழ்களில் வெளியாகியிருக்கின்றன, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இசை ஆல்பம் ஒன்றிற்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார், தற்போது அன்னை தெரசாவின் வாழ்வைப் புதுக்கவிதை வடிவில் தருகிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இவர்.
சேவியரின் மனைவி திருமதி. ஸ்டெல்லா அவரது இலக்கிய ஆர்வத்துக்கு உறுதுணையாய் இருக்கிறார், தன் கணவரின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவருகிறார் இவர், ஆகவே விரைவில் சேவியரின் கவிதைத் தொகுப்புகள் ஆங்கிலத்திலும் வெளிவரத்துவங்கும் என்று நம்பலாம்.
இரைச்சலான இன்றைய திரைப் பாடல்களில்கூட, நல்ல கவிதை வரிகளைத் தேடிக் கண்டெடுத்து ரசிக்கும், பகிர்ந்துகொள்ளும் கவிதைப் பித்தர் சேவியர், அவரோடு நட்புரீதியில் பழகும் எவரையும், நல்ல கவிதைகளின்பக்கம் இழுத்துப்போய்விடுவது அவரது மிகநல்ல பழக்கங்களுள் ஒன்று.
நான் அவரிடம் அடிக்கடி சொல்வதுபோல், வயது அவரது பக்கம் இருக்கிறது. அவருடைய அனைத்து முயற்சிகளுக்கும், எல்லாம்வல்ல இறைவன் துணைநிற்பானாக !
நான் சத்தியமாய்க் கவிஞனில்லை, கவிதை ரசிகன், ஆகவே சேவியரின் ரசிகன், நண்பன், அவரது பல கவிதைகளை இணையத்தில் பதிப்பித்தவன் என்கிற நட்புரிமையில்தான் இந்த முன்னுரையை எழுதியிருக்கிறேன், அதே உரிமையோடு சேவியருக்கு ஒரு விண்ணப்பம் அல்லது கோரிக்கையையும் முன்வைக்கிறேன். இன்றைய இலக்கிய உலகில் இயங்குகிறவர்கள், தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக்கொண்டுதான் முன்னேறவேண்டிய சூழ்நிலை, இந்த சுய ஊக்கம் – self motivation – சேவியரிடம் அளவுக்கு அதிகமாகவே உண்டு, அந்த அதீத உற்சாகத்தில் நிறைய எழுதுகிறார், ரொம்ப நல்ல விஷயம், ஆனால், வருங்காலத்தில், இந்த வேகத்தால் அவரது எழுத்தின் தரம் நீர்த்துப்போய்விடாதபடி அவர் கவனமாய்ப் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம், ஏனெனில், இனி அவரது படைப்புகள் அவருக்கு மட்டுமில்லை, தமிழ்க் கவிதை உலகிற்கும் சொந்தம் !
அதேபோல், சமகாலக் கவிதை முயற்சிகள், நூல்கள்பற்றிய தனது கருத்துகளை அவர் பதிவுசெய்யவேண்டியது அவசியம். கவிதையோடு, நல்ல உரைநடைக்கும் சொந்தக்காரரான சேவியர், நூல் விமர்சனங்கள், அறிமுகங்கள், அலசல்கள் போன்றவற்றில் ன்னும் அதிக முனைப்போடு ஈடுபடவேண்டும் என்பது என் விருப்பம், அது அவரது படைப்புருவாக்கத்திறனை பல எல்லைகளுக்குக் கொண்டுசெல்லும் என்று நான் திடமாய் நம்புகிறேன், வேண்டுகிறேன்.
கடைசியாய் ஒரு விஷயம், இப்படியொரு அற்புதமான முழுத்தொகுப்பு வெளியிடுமளவு சாதித்தபிறகும், ‘நான் என்ன பெரிதாய்ச் செய்துவிட்டேன் ?’ என்று அமரருள் உய்க்கும் அடக்கத்தோடு கேட்கிறார் பாருங்கள், அதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான் – இன்னும் நிறைய சாதிக்கப்போகிறார் இவர், எல்லாவற்றுக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள் சேவியர், கைதட்டக் காத்திருப்பவர்களின் கடையேன் யான் !
என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
ஆத்தூர்.
(03 05 2003)





சிறில் அலெக்ஸ் said,
February 8, 2007 at 8:24 pm
வாழ்த்துக்கள் சேவியர்.
அன்பு said,
February 8, 2007 at 9:36 pm
மிகுந்த சந்தோசமாயிருக்கிறது, வாழ்த்துக்கள் நண்பரே.
மா.கலை அரசன் said,
February 8, 2007 at 11:22 pm
தங்களின் கவிதைகளை இரசிக்கும் பாக்கியம் பெற்ற இரசிகன் என்பதில் பெருமையடைகின்றேன்.
வாழ்த்துக்கள் சேவியர் சார்.
சேதுக்கரசி said,
February 18, 2007 at 7:30 am
வாழ்த்துக்கள் சேவியர்! நானும் உங்கள் கவிதைகளை முதன்முதலில் படித்தது சொக்கனின் தினம் ஒரு கவிதை குழுமத்தில் தான்!
Prasanna R said,
February 20, 2007 at 1:19 pm
வாழ்த்துக்கள் சேவியர்.
G Suvetha said,
March 12, 2008 at 6:30 pm
Very much surprising to read about Mr.Xavier & his poetic skills……!!
I don’t think that he’s an ordinary poet …..
He seems to have more powers !!
சேவியர் said,
March 13, 2008 at 10:45 am
மனமார்ந்த நன்றிகள் சுவேதா. மனம் திறந்த பாராட்டுக்கு.
aruljo said,
February 7, 2009 at 3:14 pm
நண்பர்கள் கவிதைகள்
சேவியர் said,
February 9, 2009 at 10:35 pm
நன்றி அருள் ஜோ…
K.SIVA(Fr) said,
May 9, 2009 at 4:21 am
KAVITHAI MAKIL VUUDDI, POOK KALINAI MALARA VAITHU, POOTHAI JILEE SENROORAI , PUTHU MANITHA NAAKKI, VIITHIJILE SeLVOORAI VIYAKKA, THAANUVAKAI UUDUKINRA THUNKAL KAVITHAI. ” UNKAL KAVITHAI”-K.SIVA-(Fr)
Suralitharan inthu said,
November 29, 2009 at 9:53 pm
Thanks kavithai nics
சேவியர் said,
December 4, 2009 at 12:19 am
/Thanks kavithai nics//
நன்றிகள் பல
ஷாமா said,
January 23, 2010 at 11:25 am
சேவியரின் வாசகி என்ற ரீதியில்,
திரு சொக்கன் அவர்கள், நம் “கவியரசன் சேவியர்” அவர்களைப் பாராட்டியதில் மிகவும் மகிழ்ந்தது என்னவோ நான் தான்!…
அவரது வாசகி என்பதில் பெருமையடைகிறேன்….
சேவியரின் முயற்சிகளும் அவர் கனவுகளும் ஈடேற வாழ்த்துகிறேன்….இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!
சேவியர் said,
January 24, 2010 at 12:50 am
நன்றிகள் ஷாமா
உங்கள் அன்புக்கும், கரிசனைக்கும்…