ஆதாமின் பத்தாவது
தலைமுறையின்
தலை மகன் நோவா !
அந்தக் காலகட்ட
மனிதர்கள்
ஆயிரம் ஆண்டுகள்
ஆயுள் கொண்டிருந்தனர்.
பின்
மனிதர் பெருகுதல்
அதிகரித்தபின்,
அவர்கள்
தீய வழிகளை அதிகமாய்
தீண்டினர்.
பார்த்த பெண்களை எல்லாம்
மனைவியராய்
ஆக்கினர்.
கடவுளின் கோபம்,
அவர்களின் ஆயுளை
நூற்று இருபதாய் சுருக்கியது.
தன் திட்டங்களை எல்லாம்
மனிதன்
காலில் மிதித்து
புதைத்ததை எண்ணி
கடவுள் கலங்கினார்.
எங்கும்
தீமையின் ஆறுகள்
திமிறி ஓடுவதைக் கண்டு
துயரம் அடைந்தார்.
இனிமேல்
இந்த மனித குலமே
மரணிக்க வேண்டும் என்று
தீர்மானித்தார்.
அத்தனை உயிர்களையும்
அழிக்கும் கோபம்
ஆண்டவருக்குள்
மையம் கொண்டது.
பூமியின் மீது
நல்லவராய் இருந்த
நோவாவை ஆண்டவர்
கருணைக் கண் நோக்கினார்.
நோவாவை நோக்கி,
போ,
முந்நூறு முழம் நீளம்
ஐம்மது முழம் அகலம்
முப்பது முழம் உயரமாய்
கோபர் மரக்
கொம்புகளைக் கொண்டு
ஓர் பேழைசெய்.
பேழையின்
உள்ளும் புறமும்
தார் பூசி சீராக்கு.
உள்ளுக்குள் மூன்றடுக்கு
உண்டாக்கு,
ஒரு பக்கம் மட்டுமே
கதவை வை.
நீ, உன் மனைவி,
உன் புதல்வர் அவர்கள் மனைவியர்,
ஆண் பெண்ணாய்
எடுக்கப் பட்ட எல்லா
உயிரினப் பிணைகள்,
உணவுகள் இவற்றோடு
உள்ளுக்குள் செல்.
என்
கோபத்தின் கொந்தளிப்பை
அவிழும் மேகம்
அறிவிக்கும்
வானம் சரிக்கும் நீரில்
பூமி செரிக்கும்.
பெருமழை இப் பூமியை
விழுங்கும்.
தீமை செய்த
இத் தலைமுறை
அழியட்டும் என்றார்.
நோவா
கீழ்ப்படிந்தார்
ஆண்டவர்
ஓர்
பெருமழையை
வருவித்தார்.
பூமியின் தலையை
அது
தனக்குள் அமிழ்த்தியது.
மலைகளும்
கானகமும்
தண்ணீரில் மூழ்கின.
மூச்சு விடும்
ஜீவராசிகள் எல்லாம்
நாசிகளில் நீர் நிறைய
அத்தனையும் மாண்டன.
சதையுள்ள அத்தனையும்
செத்து மடிந்தன.
நோவாவின் பேழை மட்டும்
தண்ணீரில்
மெல்ல மெல்ல மிதந்து
அலைந்தது.
நோவாவுக்கு
அப்போது அறுநூறு வயது.
நாற்பது நாளைய
பெருமழை,
நூற்றைம்பது நாளைய
வெள்ளப் பெருக்கை
உருவாக்கியது.
பின் மழை மெல்ல ஓய்ந்தது.
மழையின் மதகுகள்
அடைக்கப் பட்டன.
ஏழு மாதங்கள்
கழிந்தபின்,
பேழை அராரத்து மலைத்தொடரில்
மெல்ல மெல்ல
தங்கியது.
பத்தாம் மாதத்தில்
மலைகளின் தலைகள்
மெல்ல
வெள்ளத்தை விட்டு
வெளியே வந்தன.
நாற்பது நாளுக்குப் பின்
நோவா,
சாரளத்தை சமீபித்து
ஓர்
காகத்தை வெளியே அனுப்பினார்.
அது
போவதும் வருவதுமாய்
இருந்ததைக் கண்டு
தண்ணீர்
காயவில்லை என்று
தீர்மானித்தார்.
நிலப்பரப்பு வெள்ளம்
வடிந்து விட்டதா என்றறிய
ஓர்
புறாவை நோவா
தூதனுப்பினார்.
மாலையில் வந்த புறா
தன்
அலகுக்குள்
ஓர்
ஒலிவ கிளையை
எடுத்து வந்தது.
பூமி உலர்ந்ததை
நோவா
புரிந்து கொண்டார்.
இன்னும் ஓர்
ஏழு நாளுக்குப் பின்
அவர்
மீண்டுமொரு புறாவை
பூமிக்கு அனுப்பினார்.
அது,
திரும்பவும் பேழைக்கு
திரும்பவேயில்லை.
மீண்டும் இரண்டு மாதங்கள்
பேழைக்குள் வாழ்ந்தபின்
நோவா
கூரை விலக்கி
தரை பார்த்தார்.
பூமி,
உலர்ந்து போய் இருந்தது.
ஆண்டவர் அப்போது
அவர்களை
வெளியே வரச் செய்தார்.
பின் ஆண்டவர்
நோவாவிடம்,
உன் சந்ததியை நான்
கடல் மணலைப் போல
பெருகச் செய்வேன்
பூமியின் அத்தனை
பிரதேசங்களும் வளங்களும்
உங்கள்
கட்டளைகளுக்குள் கிடக்கும்.
தாவரங்களும்
விலங்குகளும் இனிமேல்
உங்கள்
உரிமையாகும்.
யாருடைய
இரத்தம் சிந்தலுக்கும்
நீங்கள் காரணமாக வேண்டாம்,
சிந்த வைப்பவன் தானும்
இரத்தம் சிந்துவான்.
வெள்ளப் பெருக்கு
இனிமேல்
பூமையைப் புதைக்காது.
மனித சிந்தனைகள்
சிறு வயதிலிருந்தே
அவனுள்
தீயவற்றை திணிக்கிறது.
இனிமேல்,
என் கோபம் பூமியை அழிக்காது.
மண்ணுலகு
இருக்கும் வரைக்கும்,
விதைக்கும் நாளும்
அறுவடைக் காலமும்,
பகலும், இரவும்
வருவது தவறாது.
இனி பூமி
பூக்களின் தேசமாகும்,
அங்கே
என் அக்கினிப் பார்வை
அழிவை தராது என்றார்.
நோவாவின் தலைமுறை
உலகமெங்கும்
தன் கிளைகளை
வளர விட்டுப்படர்ந்தது.
நோவா
தொள்ளாயிரத்து ஐம்பதில்
ஆண்டவர் அடி சேர்ந்தார்.





joy சொன்னது,
மார்ச் 23, 2009 இல் 10:58 மு.பகல்
i went mor
joy சொன்னது,
மார்ச் 23, 2009 இல் 11:00 மு.பகல்
very nice
சேவியர் சொன்னது,
மார்ச் 25, 2009 இல் 12:26 பிற்பகல்
நன்றி ஜாய்..