ஆயிரம் பேர்
கூடியிருக்கும் அவையில்
எனக்குப்
பொருளுதவி செய்யாதே.
விரும்பினால்
என் குடிசைக்கு வந்து
யாருமறியாமல் தந்து போ
நீ
தரவிரும்பியவற்றை.
கனம் குறைந்திருந்தாலும்
மனம் நிறையும் எனக்கு.
உன்னுடைய
அன்பளிப்புகளை
ஆலய முற்றங்களில்
கூனிக் குறுகிப் பெற்றுக் கொள்ள
வலிக்கிறது.
நான்
ஏழையென்பதை
பிரகடனப் படுத்துவதற்காய்
பொதுக்கூட்டங்கள்
போடாதே.
பசியை விட
பட்டினியை விட
சாவை விடக் கொடுமையானது
எல்லோரையும் விட
நான் தாழ்ந்திருப்பதாய்
நீ
அறிவிப்புக் கூட்டம் நடத்துவது.
எனக்குத் தருவதாய்
சொல்லிக் கொள்கிறாய்.
ஆனால்
தருவதை விட
அதிக மதிப்புள்ள
கர்வத்தைப் பெற்றுக் கொள்கிறாய்.
போகும் போது அதற்காய்
சின்னதாய்
ஒரு
நன்றியாவது சொல்லி விட்டுப் போ.
·
-தை காலாண்டிதழில் வெளியான எனது கவிதைகளில் ஒன்று










Nandha சொன்னது,
மார்ச் 6, 2007 இல் 4:44 பிற்பகல்
/போகும் போது அதற்காய்
சின்னதாய்
ஒரு
நன்றியாவது சொல்லி விட்டுப் போ./
சரியான சவுக்கடி. உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். மிகவும் அருமை. என் மனமார்ந்த பாராட்டுகள்.
சேவியர் சொன்னது,
மார்ச் 6, 2007 இல் 8:20 பிற்பகல்
//நன்றி நண்பரே //
Arivazhagan சொன்னது,
மார்ச் 8, 2007 இல் 10:43 மு.பகல்
இன்றய சமுதாயம் பற்றிய அருமையான கருத்தை கவிதையாக மிகவும் அருமையாக வெளிபடுத்திமைக்கு நன்றி