திருட்டு : உண்மை கலந்த கதை

station.jpg

ஐயோ… என் பையைக் காணோமே…. என் பையைக் காணோமே…
விடியற்காலை நாலு மணிக்கு இரயிலில் கேட்ட கதறல் குரலுக்கு எல்லோரும் எழுந்து விட்டார்கள். இரயில் விழுப்புரத்தைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.

கதறிக்கொண்டே அங்கும் இங்கும் ஓடி எல்லா இருக்கைகளின் அடியிலும் தவழ்ந்து தவழ்ந்து தேடிய அந்த அம்மாவுக்கு குறைந்த பட்சம் ஐம்பது வயதாவது இருக்கும். ஒட்டிய தேகம், கலைந்த தலை, சாயம்போய் ஆங்காங்கே கிழிவதற்குத் தயாராய் இருக்கும் சேலை. அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத வண்ணத்தில் ஜாக்கெட்.

என்னம்மா … என்ன இருந்துது பைல ? எங்கே வெச்சிருந்தே ? நல்லா போய் தேடிப்பாரு. இப்படியா தூங்கறது ட்ரெயின்ல ? ஆளாளுக்கு ஏதோதோ சொல்ல அந்தம்மா அழுகை இன்னும் அதிகமாகியது.

ஊரில இருந்து சென்னைக்கு வரங்கய்யா… என் பொண்ணு கல்யாணத்துக்காக ஊர்ல இருந்த உழவு மாட்டையும் நிலத்தையும் வித்து நகையும் பணமும் கொண்டு வந்தேன். பத்தாயிரம் ரூபாயும், பத்து பவுன் நகையும் இருந்துது பைல. நேற்று முழுக்க அலைச்சலுங்க. அதான் கொஞ்சம் அசந்துட்டேன். அப்படியும் தலகாணி மாதிரி வெச்சி தான் தூங்கினேன். எந்த பாவி பய எப்போ எடுத்தான்னு தெரியலையே. ஐயா… தேடிப்பாருங்கையா…. புண்ணியமா
போவும். யாராச்சும் எடுத்திருந்தா குடுங்கையா… கால்ல விழறேன்… அந்த அம்மாவின் புலம்பலும் அழுகையும் இரயில் பெட்டியை நிறைத்தது.

சிலர் மீண்டும் போர்வைக்குள் நுழைந்து தூங்க, சில நல்லெண்ணம் கொண்டோர் பெட்டியில் தேடவும், யாராவது வந்தாங்களா என்று விசாரிக்கவும் துவங்கினர். அதற்குள் டி.டி.ஆருக்கு தகவல் போக, டி.டி.ஆர் வந்து சேர்ந்தார்.

யாருக்கும்மா பொட்டி காணோம் ?
‘ஐயா எனக்குதான்யா… பொட்டி எல்லாம் இல்லை. பைதான்யா.. அதுக்குள்ள பத்தாயிரமும், பத்துபவுன் நகையும் இருந்துதுய்யா… எப்படியாவது தேடிப்புடிச்சு குடுங்கையா …’ நேரம் செல்லச் செல்ல கிடைக்காமல் போய்விடுமோ என்னும் நினைப்பிலேயே அந்த அம்மாவின் அழுகை அதிகமானது.

பேரென்னம்மா ?
‘பொன்னம்மா’
இவ்ளோ நகை பணம் எல்லாம் எடுத்துட்டு வரே… ஒரு சங்கிலி கொண்டு வந்து கட்டி வைக்க வேணாம் ? கூட யாரும் வரலயா ?

‘ஐயா யாரும் வரலீங்க… நான் மட்டும் தான். இந்த பணம் இல்லேன்னா என் பொண்ணு வாழ்க்கை போயிடுங்க…’ பொன்னம்மா நிறுத்தாமல் அழுதாள்.

களவு போன பொருள் கிடைக்கிறது குதிரைக்கொம்பும்மா…. முணுமுணுத்துக் கொண்டே ஒவ்வோர் இருக்கை இருக்கையாய் நடந்து கொண்டிருந்த டி.டி.யாரிடம் ஒருவர் கிசுகிசுத்தார்.
‘சார்… பையைத் திருடினவனை நான் பார்த்தேன். பார்க்க ஸ்டுடண்ட் மாதிரி இருக்கானே ஐம்பத்து ஒன்பதாம் எண் இருக்கைல… அவன் தான் சார் எடுத்தவன் நான் பார்த்தேன்…நான் சொன்னதா சொல்லிடாதீங்க….’ கிசுகிசுத்துவிட்டு திரும்பிக் கொண்டார் அவர்.

டி.டி.ஆர்… ஏதும் தெரியாதவர் போல எல்லோரிடமும் கேட்டுக்கொண்டே அவனிடமும் விசாரித்தார். அவன் ஏதும் தெரியாதது போல பேச… டி.டி.ஆர் அகன்றார்.

அதன்பின் வி?யங்கள் ரகசியமாக நடந்தன. பொன்னம்மா அழுதுகொண்டு அங்குமிங்கும் அலைய, டி.டி.ஆர் செங்கல்பட்டு இரயில்வே காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் அனுப்பி, இரயில் வண்டி செங்கல்பட்டு வந்ததும் சாதாரண உடையில் வந்த காவலர்கள அவனை அமுக்கி வெளியே போட்டதில் உண்மையை ஒத்துக் கொண்டான் அவன். பொன்னம்மாவுக்கு போன உயிர் வந்ததுபோல் இருந்தது.

வாயில மண்ணுவிழுந்த பயலே நீ நல்லா இருப்பியா… உன்னை கள்ளி வெட்டிச் சாரி போக…. என்று அவளுடைய பாஷையில் சபித்துக் கொண்டே கிடைத்த பையை பரபரப்பாய் பிரித்துப் பார்த்து எல்லாம் சரியாய் இருக்கிறது என்றதும் எல்லா தெய்வங்களையும் மனசுக்குள் நினைத்து நன்றி சொல்லி இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

அப்போது … இன்ஸ்பெக்டர் கூப்பிட்டார்.
‘வாம்மா… ஸ்டேசன் வா… கம்ப்ளெயிண்ட் எழுதி குடு’

‘ஐயா… கம்ப்ளெயிண்ட் எல்லாம் வேண்டாங்கய்யா…. ஏதோ பாவி மவன் தெரியாம எடுத்துட்டான். அதான் கிடச்சுடுச்சுல்லீங்களா ? போகட்டும் நாசமாப் போறவன்… நம்ம கம்ளெயிண்ட் குடுத்தா படிச்ச முடியாம போயிடும் இல்லையா ?’
பொன்னம்மாவுக்குள்ளிருந்த கிராமத்து இதயம் பேச, திருடியவன் கூட ஏகத்துக்கு குற்ற உணர்வை முகத்தில் வாங்கி தலை கவிழ்ந்தான்.

‘ஏம்மா…. உன்னோட லெக்சரை எல்லாம் ஸ்டேசன்ல வெச்சுக்கோ… வா… சீக்கிரம்…  டிரையின் கிளம்பப் போவுது’ இன்ஸ்பெக்டர் கத்தினார்.

‘ஐயா… என்கிட்டே இருக்கிற டிக்கெட்டை வெச்சு வேற ட் ரெயினில போவ முடியுமுங்களா ?’ அப்பாவியாய்க் கேட்டுக் கொண்டே இறங்கிய பொன்னம்மாவைப் பார்த்து சக பயணிகள் பரிதாபப் பட்டனர்.

‘அவ்வளவுதான் அந்த போலீஸ்காரங்க இருக்கிற பத்துல ஒண்ணையாவது புடுங்காம விடுவானுகளா ?’
‘ஆதாயம் இல்லாம எவன் ஆத்தோட போவான் ?’
‘ பாவம் கிழவி…’

‘சரி பரவாயில்லை… தொலைஞ்ச பணம் கிடச்சுதே..’
ஆளாளுக்கு ஏதேதோ பேசிக் கொண்டார்கள். வண்டி நகர்ந்தது.

***

பொன்னம்மா ஸ்டேசன் வாசலில் காத்திருக்கத் துவங்கி இரண்டு மணி நேரமாகிவிட்டது.  அதற்குள் பையைத் திருடிய பையனை ஸ்ட்டியோடு நிற்க வைத்து போட்டோ  எடுக்கவும், கைரேகைகளை எடுக்கவும் ஆரம்பித்திருந்தது ரெயில்வே போலீஸ்.

அவனும் அவன் பாகத்துக்கு கெஞ்சினான். ‘ஐயா… தெரியாம செஞ்சுட்டேங்க. இதான் முதல் தடவை. எங்க அப்பா அம்மா தெரிஞ்சா அவமானத்துல செத்தே போயிடுவாங்க. தயவு செஞ்சு விட்டுடுங்கய்யா… இனிமே இந்தமாதிரி பண்னவே மாட்டேன். என் படிப்பும் வாழ்க்கையும் போயிடும்யா…’

இன்ஸ்பெக்டர் அவனுடைய கழுத்தைப் பிடித்து தள்ளினார்.

‘திருட்டு நாய்ங்க எதுதான் இப்படி பேசாம இருந்திருக்கு… சும்மா கிட… ‘

‘யோவ் ரைட்டர் எங்கய்யா… இன்னும் காணோம். அவனை இங்கே வரச்சொல்லு…. சீக்கிரம் எப்ஃஐஆர் தயார் பண்னணும்..’

‘கிழவிக்கு ஏதாச்சும் வேணுமா கேளு…’

‘ஆமா எஸ்பி எங்கய்யா.. புடிக்கவே முடியலை… வெளியூர் போயிருக்காரா என்ன ?… பழனி… அவரோட செல்நம்பர் என்ன ?’

இன்ஸ்பெக்டர் பரபரப்பாய் இருந்தார்.

பழனி எஸ்பியுடைய செல்போன் நம்பரை கிழிந்து கிடந்த பேப்பர்களிடையே இருந்து துடைத்து எடுத்து நீட்டினார்.

‘ஐயா… எஸ்பி… இருக்காருங்களா ? நான் செங்கல்பட்டு ரெயில்வே இன்ஸ்பெக்டர் தங்கதுரை பேசறேன்’

‘சொல்லுய்யா… என்ன வி?யம் ?’

‘சார்… இன்னிக்கு காலைல ஒரு தெஃட் ஐ புடிச்சுட்டோ ம் சார். சுமார் ஐம்பதாயிரம் மதிப்புள்ள பொருட்களை ரிக்கவர் பண்ணிட்டோ ம்..’

‘நல்லது… விட்டுடாதே… ஏற்கனவே உங்க ஸ்டேசன் மேல ஏகப்பட்ட பிளாக் மார்க். நிறைய கேஸ் பெண்டிங். நீங்க ரெயில்வே திருடங்களுக்கு சப்போர்ட் பண்றமாதிரி எல்லாம் புகார் வந்திருக்கு. அதனால் இந்த மேட்டரை ரொம்ப பெரிசு பண்ணு.. அப்போ தான் நம்ம டிப்பார்ட் மெண்ட் மேல கொஞ்சமாச்சும் மக்களுக்கு மரியாதை இருக்கும்’

‘ அதனால தான் பார்ட்டியை ஸ்டேசனுக்கு வரச்சொல்லி கம்ப்ளெயிண்ட் எழுதி வாங்கிட்டிருக்கேன் சார்’

‘ம்ம்… அதைப் பண்ணு முதல்ல. ஆமா… யாரு அக்யுஸ்ட். அதே ஏரியாவா ?

‘ இல்ல சார்… விருதுநகர் பக்கத்துல உள்ள ஒரு பையன்’

‘ அதானே பார்த்தேன்.. நம்ம ஏரியான்னா… உங்களால புடிக்க முடியாதே…. போன மாசம் ஏழு கேஸ் ! உங்களுக்குத் தெரியாம நடந்திருக்காது. ஆனா எனக்கு எதுவும் வரலை. நான் இங்கே திருச்சில இருக்கிறதனால எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சுடாதே…’ எஸ்பி தனக்கு மாமூல் வராத வெறுப்பை வெளிக்காட்டினார்.

‘ அப்படியெல்லாம்…. ‘

‘ போதும்யா… ரொம்ப இழுக்காதே. இந்த கேசை ஸ்டிராங்கா புரஜக்ட் பண்ணு. திருட்டு நடந்த மூணு மணி நேரத்துல திருடனைப் பிடித்து ரயில்வே போலீஸ் சாதனை ந்னு நியூஸ் குடு. …சரியா… ‘

‘அப்படியே செய்யறேங்கையா… ‘ என்று சொல்லி போனை வைத்த இன்ஸ்பெக்டர். போனைவைப்பதற்காகவே காத்திருந்தது போல, வைத்தவுடன் அந்த காவலர்களுக்கே உரிய ….பய என்னும் கெட்டவார்த்தையை மந்திரம் போல உரைத்தார்.

மதியம் மணி இரண்டைக் கடந்தபோது இன்ஸ்பெக்டர் பொன்னம்மாவை அழைத்தார்.

‘வாம்மா… வந்து இங்கே ஒரு கையெழுத்து போடு….’

பொன்னம்மா பெருவிரலை நீட்டினாள்….
‘கம்ப்ளெயிண்ட் போட்டாச்சுங்களா ஐயா… நான் இப்போ கிளம்பலாமா ?’ என்று கூறிக் கொண்டே பையைத் தொட்டாள்.

‘என்னம்மா… புரியாம பேசறே. இப்போ தான் கம்ப்ளெயிண்ட் போட்டிருக்கு… இனிமே இதை கோர்ட்டுக்கு கொண்டு போயி விசாரணை பண்ணிட்டு உங்க கிட்டே பொருளை எல்லாம் குடுப்பாங்க. நீ இப்போ போ…. போயிட்டு இரண்டு வாரம் கழிச்சு வா… என்னிக்கு கோர்ட்டுக்கு போகணும்ன்னு சொல்றேன்’ இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல இடிந்து போய் உட்கார்ந்தாள் பொன்னம்மா.

‘ஐயா… பொண்ணுக்கு கல்யாணம் வெச்சிருக்கேங்கய்யா… பணத்தையும் நகையையும் குடுத்துடுங்கய்யா.. எந்த கோர்ட்டுக்கு வேணும்ன்னாலும் நான் வரேன்’

‘என்ன புரியாம பேசறே. அதெல்லாம் ரூல்ஸ் படி தாம்மா நடக்கும்.. நீ இப்போ போயிட்டு இரண்டு வாரம் கழிச்சு வா. எல்லா நகையையும் தனித்தனியே எடை போட்டு கணக்கு எழுதணும். இருக்கிற பணத்தை எல்லாம் கணக்கு காட்டணும்… எத்தனை வேலையிருக்கு… போ…உன்பணத்தை யாரும் முழுங்கிடமாட்டாங்க’ என்று இன்ஸ்பெக்டர் சொல்ல.. எதுவும் புரியாமல் வெளியே வந்தாள் பொன்னம்மா.

அதன்பின் இரண்டு வாரங்கள் கழிந்து பொன்னம்மா செங்கல்பட்டு ஸ்டேசனுக்கு வந்து காவல் இருக்க…

‘இந்த திருட்டு நடந்தது விழுப்புரம் ஏரியாம்மா.. அதனால விழுப்புரம் ஸ்டேசனுக்கு நாங்க கேசை மாற்றியிருக்கோம். கேஸ் செலவுக்கெல்லாம் உன் கிட்டேயிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்திருக்கோம். யாரு கேட்டேலும், பத்து பவுன் நகை ஒன்பதாயிரம் ரூபாய்ன்னு சொல்லு… இல்லேன்னா உனக்கு ஒண்ணும் கிடைக்காது’ என்று இன்ஸ்பெக்டர் அவளை விழுப்புரம் அனுப்பினார்.

பொன்னம்மா… அழுதுகொண்டே விழுப்புரம் ஸ்டேசனுக்கு ஓட…
‘இன்னும் கேஸ் கட்டு இங்கே வரலேம்மா…’ என்று நாட்கணக்கில்  விழுப்புரம் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் இழுத்தடிக்க, பொன்னம்மா அங்கும் இங்கும் ஓடி ஓடி வாரங்கள் மாதங்களாக…. ஒருவழியாக கேஸ் விழுப்புரத்துக்கு வந்தது.

இன்ஸ்பெக்டர் அழுதுகொண்டிருந்த பொன்னம்மாவிடம் சலனமே இல்லாமல் சொன்னார்.
‘ அம்மா… கேஸ் முடியறதுக்கு எப்படியும் இரண்டு மூணுவருசம் ஆகும். அதுவரைக்கும் உங்க நகைகளையும் பணத்தையும் கோர்ட் லாக்கர்ல தான் வெச்சிருப்பாங்க…. நீங்க கேஸ் ஆரம்பிச்ச பிறகு உங்க சாட்சியைச் சொல்லிட்டு நகைகளை வாங்கிட்டு போயிடலாம். ஆனா அந்த நகைகளை எல்லாம் கோர்ட் எப்போ கேட்குகோ அப்போ கொண்டு வந்து காட்டணும். அதை விக்கவோ, மாற்றவோ கூடாது. பணத்தோட நம்மரை எல்லாம் நோட் பண்ணி வெச்சிருக்காங்க. அதனால பணம் எல்லாம் கோர்ட்ல தான் இருக்கும் அது கேஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் தருவாங்க….’

‘அப்போ என் பொண்ணு கல்யாணம்….. ‘ என்று ஏங்கிய பொன்னம்மா கண்கள் இருண்டு
போய், நடை தளர்ந்து ஸ்டேசன் வாசலிலேயே சாய்ந்தாள்.

பணம் இல்லாமல் பொன்னம்மாவின் மகளுடைய கல்யாணம் நின்று போனதும், அந்த அவமானம் தாங்காமல் பொன்னம்மாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டதும், ஒருவருடம் கடந்தபின்னும் இன்னும் பொன்னம்மா விழுப்புரம் கோர்ட் வாசலில் வெயிலில் அழுது கொண்டிருப்பதையும், கேஸ் என்பதே குறைந்த பட்சம் ஐந்து வருடம் என்பதை அறியாமல் வாரம்தோறும் அவள் மனசாட்சியே இல்லாத தலைமை கிளார்க்கிடம் அழுது
புலம்புவதையும் எழுதுவதற்குரிய மனவலிமை எனக்கு இல்லாததால் இந்தக் கதை இத்துடன் முடிவடைகிறது

18 மறுமொழிகள்

  1. cvalex சொன்னது,

    மார்ச் 8, 2008 இல் 4:18 நான்

    :(

    என்னத்த சொல்றது?

  2. kalyanakamala சொன்னது,

    மார்ச் 8, 2008 இல் 7:23 நான்

    கதையா இல்லை நிஜமா இது? போலீசு லட்சணத்தைச்சொல்லி விட்டீர்கள். வக்கீல் லட்சணத்தை சொல்ல ஒரு கதை எழுதுங்க சேவியர். ஒரு குடும்பத்தை பத்து குடும்பமாக ஆக்கும் வக்கீலைப் பற்றித்தான் சொல்கிறேன்!
    அன்புடன்
    கமலா

  3. madharasan சொன்னது,

    மார்ச் 9, 2008 இல் 8:50 நான்

    நல்லா இருந்துச்சி…

  4. சேவியர் சொன்னது,

    மார்ச் 10, 2008 இல் 10:36 நான்

    //என்னத்த சொல்றது?//

    ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை :(

  5. சேவியர் சொன்னது,

    மார்ச் 10, 2008 இல் 10:37 நான்

    //ஒரு குடும்பத்தை பத்து குடும்பமாக ஆக்கும் வக்கீலைப் பற்றித்தான் சொல்கிறேன்!
    //

    கதையில சொல்ல முடியற சமாச்சாரமா அது !

  6. சேவியர் சொன்னது,

    மார்ச் 10, 2008 இல் 10:37 நான்

    //நல்லா இருந்துச்சி//

    நன்றி மதராசன்.

  7. kunthavai சொன்னது,

    மார்ச் 10, 2008 இல் 2:21 பிற்பகல்

    Is it true?
    How they can behave like this?

  8. சேவியர் சொன்னது,

    மார்ச் 10, 2008 இல் 6:23 பிற்பகல்

    உண்மைக் கதை தான். கதை மாந்தர்கள் சிலர் மாறியிருக்கின்றனர், கடைசிப் பத்தியில் கொஞ்சம் கற்பனை கலந்திருக்கிறது. அவ்ளோ தான் :(

  9. Guhan சொன்னது,

    மார்ச் 10, 2008 இல் 7:33 பிற்பகல்

    நண்பர் சேவியருக்கு,

    மகாத்மா காந்தியடிகள் சொன்னார் : ” ஒரு மனிதன் நல்லவனா , கெட்டவனா என்று அறிவதற்கு அவனிடத்தில் அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள் ” என்று .
    யாராலும் தட்டிக் கேள்வி கேட்க முடியாத அளவிற்கு அரசு அதிகாரம் வழங்கி இருப்பதின் விளைவு காவல் துறை சீர்கேட்டின் முக்கிய காரணம் . காயம் பட்ட இடத்தில் இருந்து வழியும் ரத்தத்தை கூட ருசிக்கும் ஈக்களாய் தான் காவல் துறையினர் உள்ளனர் . மதுரை காவல் துறை கமிஷனர் ஆக திரு.ஜாங்கிட் இருந்த போது குற்றம் நிகழ்ந்தது எந்த இடமாக இருப்பினும் , பொது மக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள எந்த காவல் நிலையமும் செல்லலாம் . அந்த வழக்கை காவல் நிலையங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
    எந்த அளவிற்கு அவை நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது என்பதை உங்களுடைய ” உண்மை” கலந்த சிறுகதை சொல்கிறது .நல்ல அதிகாரிகளை உபயோகம் அற்ற பதவியில் உட்கார வைத்து அழகு பார்ப்பதையே தலையாய கடமையாய் செய்யும் அரசியல் புறம்போக்குகளால் உடனடியாக அவரும் எப்பொழுதோ மாற்றப்பட்டு விட்டார் . பணக்காரர்களுக்கும் , அரசியல்வாதிகளுக்கும் ரப்பரைக் காட்டிலும் வளைந்து போகும் சட்டம் , இரும்பைக் காட்டிலும் கடினமானதாக மாய தோற்றம் கொடுக்கப்பட்டு ஏழைகளின் மீதும், படிப்பறிவு இல்லாதவர்கள் மீதும் ஏவப்படுகிறது .
    மக்களுடைய வேதனை நெருப்பை அணைக்க வேண்டிய பணியில் உள்ளவர்கள் , சமூக விரோதிகளுக்கு செஞ்சோற்று கடன் நண்பர்களாக இருப்பதும் ,கடமையைச் செய்கிறேன் பேர்வழி என்று பாதிக்கப்பட்ட நபரை சட்டத்தின் பேரைச் சொல்லி அலைய விட்டு , அவர்களை மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதும் நம் நாட்டில் மிகச் சாதாரணமாக நிகழ்கின்றது என்பதை எண்ணும் போது சர்வாதிகார ஆட்சி மேல் என்று தோன்றுகிறது.ஏனெனில் . ஜனநாயகப் போர்வைக்குள் ஒளிந்து கிடக்கும் இந்த ஆயிரக்கணக்கான கொடுங்கோலர்களோடு போராடுவதைக் காட்டிலும் அந்த ஒருவனுடைய கொடுமைகளை அனுபவித்துப் போவது மிகப் பெரிய வலியை நமக்கு தந்து விடப் போவதில்லை .

    தகவல் ஒன்று இந்த பின்னூட்டத்தின் வாயிலாய் கூற விழைகிறேன்.

    நேரடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்த பின்னரும் , தங்களுடைய வழக்கு உண்மையாக இருக்கும் பட்சத்திலும் , காவல் துறையினரால் பதிவு செய்ய ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்றாலோ (அல்லது) பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலோ , அவர்கள் பின்வரும் தளத்தில் புகாரை பதிவு செய்யலாம் http://www.saferindia.com/kiranbedi/ .
    இந்த தளம் ஓய்வு பெற்ற I.P.S அதிகாரி கிரண் பேடி அவர்களால் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று . இந்த தளம் நிச்சயம் உதவிக் கரம் நீட்டும் என்று நம்பப்படுகிறது.

    அன்புடன்,
    குகன்

  10. madharasan சொன்னது,

    மார்ச் 11, 2008 இல் 7:59 நான்

    // சேவியர் சொன்னது, மார்ச் 10, 2008 இல் 10:37

    நன்றி மதராசன். //

    ஐயையோ என் பேர் மதராசன் இல்லை.

    மாதரசன்…

  11. சேவியர் சொன்னது,

    மார்ச் 11, 2008 இல் 10:19 நான்

    அன்பின் நண்பருக்கு, உங்கள் தெளிவான பார்வைக்கும் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    குறிப்பாக நீங்கள் கொடுத்திருக்கும் இந்த தகவலுக்கு நன்றி. நிச்சயம் யாருக்காவது இது பயன்படும்.

  12. சேவியர் சொன்னது,

    மார்ச் 11, 2008 இல் 10:23 நான்

    //ஐயையோ என் பேர் மதராசன் இல்லை.

    மாதரசன்…
    //

    மன்னியுங்கள். நீங்கள் மதராஸ் + ராசா ன்னு நினைச்சேன்.
    மாது + அரசன் ன்னு இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன் :)

  13. Balasubramanian சொன்னது,

    மார்ச் 14, 2008 இல் 6:42 பிற்பகல்

    There is no much difference between thief and polic they are more cruel than thief by torchering the people.

    Thanks xavier for sharing this news

    Bala

  14. சேவியர் சொன்னது,

    மார்ச் 17, 2008 இல் 8:42 நான்

    மிக்க நன்றி பாலா :)

  15. K.N.Hariharan சொன்னது,

    மே 10, 2008 இல் 3:46 பிற்பகல்

    Dear hi

    We need tamil stories based on “Gita”

    Regards
    K.N.Hariharan.

  16. சேவியர் சொன்னது,

    மே 12, 2008 இல் 10:07 நான்

    ஏற்கனவே நிறைய பேர் எழுதிட்டாங்களே ஹரி…

  17. rajahsubramanian சொன்னது,

    மே 14, 2008 இல் 4:18 பிற்பகல்

    very good. is it a story? seems a factual report..

  18. சேவியர் சொன்னது,

    மே 14, 2008 இல் 4:23 பிற்பகல்

    பெரும்பான்மைக் கதைகள் உண்மையை மெதுவாய் சொல்லும் மந்திரங்கள் தான் :)

மறுமொழியொன்றை வழங்குக