( கி. மு - விவிலியக் கதைகள் நூலில் இருந்து)
கடவுள் உலகையும், முதல் மனிதன் ஆதாமையும் படைத்து அவனுக்கு ஒரு துணையையும் அளித்து ஏதேன் என்னும் தோட்டத்தையும் அவர்களுக்காய் அமைத்துக் கொடுத்தார். ஏதேன் தோட்டம் பூமியின் சுவர்க்கமாக இருந்தது. அங்கே அனைத்து விதமான பழமரங்களும் இருந்தன.
.தோட்டத்தில் நான்கு ஜீவ நதிகள் ஓடிக் கொண்டிருந்தன. ஆதாமும் அவனுடைய துணைவியும் ஏதேன் தோட்டத்தில் தெய்வங்களைப் போல வாழ்ந்து வந்தார்கள். ஆதாம் தன்னுடைய மனைவியை ஏவாள் என்று பெயரிட்டழைத்தான். அவன் தான் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பெயரிட்டவன்.
தாலாட்டும் காற்றும், இனிமையான காட்சிகளும் நிறைந்திருந்த ஏதேன் தோட்டத்தில் அவர்களுக்கு எந்தக் குறையுமே இல்லை. கடவுள் ஏதேன் தோட்டத்தில் ஆதாமை தங்கவைத்தபோது ஒரே ஒரு கட்டளை மட்டும் இட்டிருந்தார். ‘ இங்கிருக்கும் எல்லா மரங்களின் கனிகளும் உனக்கே.
.ஆனால் தோட்டத்தின் நடுவே நிற்கும் மரத்தின் கனியை மட்டும் நீ உண்ணக்கூடாது’ என்பதே அந்தக் கட்டளை. ஆதாம் அந்தக் கட்டளையை தன் துணைவிக்கும் சொன்னான். ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திற்குள் ஓடியாடி பழங்களை உண்டு மகிழ்ந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் அந்த விலக்கப் பட்ட மரத்தின் கனியை மட்டும் உண்ணவே இல்லை.
ஒவ்வொரு முறை ஏவாள் அந்த மரத்தைக் கடக்கும்போதும் அவளுடைய உள்ளத்தில் ஓர் சலனம் உருவாகும். ‘நான் ஏன் அந்த மரத்தின் கனியை மட்டும் உண்ணக் கூடாது ? அப்படி அந்தக் கனிக்கு என்னதான் தனிச்சிறப்பு ?’. நாட்கள் கடந்துகொண்டே இருந்தன. ஏவாளின் மனதில் விலக்கப் பட்ட கனியின் மீதான விருப்பமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
ஒரு நாள் ஆதாமும் ஏவாளும் வழக்கம் போல ஏதேன் தோட்டத்தின் எழிலை ரசித்தவாறே நடந்துகொண்டிருந்தனர். நடந்து நடந்து அந்த விலக்கப் பட்ட மரத்தின் அருகே வந்தார்கள். அந்த மரத்தில் சாத்தான் பாம்பின் வடிவத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தான்.
.சாத்தான் ஏவாளின் மனதை வாசித்திருந்தான். ஏவாள் அந்த விலக்கப்பட்ட கனியின் மீது ஆசை வைத்திருப்பதை சாத்தான் அறிந்திருந்தான். சலனப் பட்ட மனசுக்குள் தானே எல்லாவிதமான சாத்தான்களும் குடியேறுகின்றன. ஒருவேளை ஆதாமிடம் தன்னுடைய சூழ்ச்சி பலிக்காது என்று சாத்தான் கருதியிருக்கக் கூடும்.
பாம்பு வடிவிலிருந்த அந்த சாத்தான் ஏவாளுடன் தன் சூழ்ச்சிப் பேச்சைத் துவங்கினான்.
‘என்ன ஏவாள்.. சவுக்கியமா ? ஏதேன் தோட்டத்தில் உங்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கின்றனவா ?’
‘ஏதேன் கடவுள் அமைத்த தோட்டமாம். அதனால் இங்கே எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை’ ஏவாள் சொன்னாள்.
‘இல்லை ஏவாள், உன்னுடைய முகத்தில் ஏதோ ஒரு ஏக்கம் இருக்கிறது. ஏதோ ஒரு குறையின் ரேகை உன் முகத்தில் தெரிகிறது. அது என்னவென்று சொல். நான் தீர்த்து வைக்கிறேன். நான் சகல சக்தியும் படைத்தவன். கடவுளால் செய்ய முடிகின்ற காரியங்களை அனைத்தையும் என்னாலும் செய்ய முடியும்’ சாத்தான் சொன்னான்.
‘ஏக்கமா ? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே…’ ஏவாள் மறுத்தாள்.
‘சரி… சரி… இந்தா… ஒரு பழம் சாப்பிடு… ‘ சாத்தான் விலக்கப்பட்டக் கனியைப் பறித்து ஏவாளிடம் நீட்டினார்.
‘ஐயோ.. வேண்டாம். இந்த மரத்தின் கனியை மட்டும் உண்ணக் கூடாது என்று கடவுள் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்’ ஏவாள் சொன்னாள்.
‘சாப்பிடக் கூடாது என்று சொன்னாரா ? இந்தப் பழத்தையா ? வேறென்ன சொன்னார் ?’ சாத்தான் அதிசயப்படுவது போல நடித்தான்.
‘அந்த மரத்தின் கனி அழிவுக்கானதாம். அதை உண்டால் நாங்கள் அழிந்து போவோமாம்’
சாத்தான் சத்தமாகச் சிரித்தான். ‘ அறிவிலியாய் இருக்கிறாயே. அந்த மரத்தின் கனியைத் தின்றால் நீ சாகமாட்டாய். அதை உண்டால் உன்னுடைய அறிவுக் கண்கள் திறந்து கொள்ளும். அந்த மரத்தின் கனியைத் தின்பவர்கள் எல்லோரும் கடவுளைப் போல ஆவார்கள்’ சாத்தான் சொன்னான்
‘உண்மையாகவா ?’ ஏவாள் உற்சாகமாய்க் கேட்டாள்.
‘ஆம்… கடவுளுக்குப் பொறாமை நீங்கள் கடவுளைப் போல ஆகிவிட்டால் கடவுளுடைய பணிகளையெல்லாம் நீங்களும் செய்யமுடியும். பின்பு கடவுளுக்கு மரியாதை இருக்காது. உங்களுக்கு மிகப் பெரிய வல்லமை கிடைக்கும்’ சாத்தான் ஆசை வார்த்தை கூறினான்.
‘அப்படியா…. ? உண்ணவேண்டும் என்னும் ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் உண்டால் செத்துவிடுவோமோ என்னும் பயமும் இருக்கிறது’ ஏவாள் இழுத்தாள்.
‘இன்னும் என்னுடைய வார்த்தைகளை நீ நம்பவில்லையா… இதோ பார். இந்தக் கனியை நான் கைகளில் வைத்திருக்கிறேன், அது என்னை ஒன்றும் செய்யவில்லையே ? நீயும் தொட்டுப் பார். ஒன்றும் சம்பவிக்காது அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். வா…. நான் கைகளில் வைத்திருக்கும் கனியைத் தொட்டுப் பார்…’ சாத்தான் பழத்தை நீட்டினான். ஏவாள் தயக்கத்தோடு தன்னுடைய விரல் நுனியினால் தொட்டாள். எதுவும் நேரவில்லை.
‘பார்த்தாயா ? நீ தொட்டபோது ஒன்றுமே நடக்கவில்லையே ! உண்டாலும் ஒன்றும் நேர்ந்து விடாது’ சாத்தான் சொல்லிக் கொண்டே பழத்தை கைகளில் வைத்துத் தடவினான். ஏவாளின் மனசுக்குள் அதை உண்ணவேண்டும் என்னும் ஆசை கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது.
‘தொட்டால் ஒன்றும் தவறில்லை என்று நினைக்கிறேன். ஆனால் உண்டால் ஏதேனும் நேரிடுமோ ?’ ஏவாள் கேட்டாள்.
‘இத்தனை சொன்னபின்னும் உனக்குச் சந்தேகமா ? இதோ பார்.. நான் இந்தப் பழத்தை உண்ணப்போகிறேன். இந்தச் சுவையை அனுபவிக்கப் போகிறேன். நீ பார்த்துக் கொண்டே இரு நான் சாகிறேனா ? இல்லையா ? என்பதை. நான் செத்துப் போனால் நீ இதை உண்ணவேண்டாம்.
.சாகவில்லையென்றால் உன்னுடைய சந்தேகம் போய்விடும் தானே ? ‘ சாத்தான் விஷமமாகச் சிரித்தான். சிரித்துக் கொண்டே அந்த கனியை உண்ணத் துவங்கினான். அவனுடைய முகம் ஒரு பேரானத்தத்தில் மூழ்கியிருப்பவனைப் போல மாறியது. அதைப் பார்க்கப் பார்க்க ஏவாளின் மனதுக்குள் தானும் அந்தக் கனியை உண்ணவேண்டும் என்னும் எண்ணம் வலுவடைந்தது.
ஏவாளின் மனதுக்குள் இருந்த எண்ணத்தை அறிந்த சாத்தான் ஒரு கனியைப் பறித்து அவளுடைய கைகளில் திணித்தான். ‘உண்ணுங்கள்.. நீங்கள் இருவரும் இதை உண்ணுங்கள். ஒன்றும் நேரிடாது. இந்தப் பழம் தான் இந்த தோட்டத்துப் பழங்களிலேயே மிகவும் சுவையானது. மிகவும் அழகானது. இதை மட்டும் உண்டால் நீங்கள் கடவுளைப் போல ஆவீர்கள். அதில் சந்தேகமேயில்லை’ சாத்தான் சொன்னான்
ஏவாள் அந்தக் கனியை சிறிது நேரம் கைகளில் வைத்திருந்தாள். பின் மெல்லக் கடித்தாள். ஒன்றும் நிகழவில்லை. ஏவாளுக்குத் தைரியம் வந்தது. அந்தப் பழத்தை முழுவதும் உண்டாள். அவளுக்கு அந்த சுவை மிகவும் பிடித்திருந்தது. அவளுடைய மனசுக்குள் பல நாட்களாக இருந்த ஆசை தணியத் துவங்கியது. அவள் ஆதாமைப் பார்த்தாள். ஆதாம் நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தான்.
.ஏவாள் சோதனைக்கு உட்படுத்தப் பட்டபோது அவளிடம் ‘வேண்டாம். கடவுளின் கட்டளையை மீறாதே’ என்று அவன் எச்சரிக்கவில்லை. ஏனென்றால் ஓரு குடும்பத் தலைவனின் கடமைகள் என்னென்ன என்பதை ஆதாம் அறிந்திருக்கவில்லை. பழத்தை உண்ணாதே என்று சொன்ன கடவுளும், ‘ஒரு நாள் சாத்தான் பாம்பு வடிவில் வந்து உன்னைச் சோதிப்பான். பழத்தை உண் என்பான். ஆனால் அந்த சோதனையில் விழுந்து விடாதே’ என்றும் சொல்லவில்லை. எனவே அந்த சூழ்நிலையில் ஆதாமின் கடமை என்ன என்பது ஆதாமுக்கே விளங்கவில்லை.
பழத்தை உண்ட ஏவாள் அதை ஆதாமுக்கும் கொடுத்தாள். ‘கவலைப்படாமல் உண்ணுங்கள். நான் உண்டேன் எனக்கு ஒன்றும் நேரவில்லை. இதுதான் நான் இதுவரை உண்ட கனிகளிலேயே சுவையானது. இனிமேல் இதை நான் தினமும் உண்ணலாம்’ ஏவாள் சொன்னாள். ஆதாம் ஏவாளின் பேச்சைக் கேட்டான். கடவுளின் கட்டளையை மீறினான். கனியை உண்டான்.
இருவரும் விலக்கப்பட்ட கனியை உண்டு முடித்தனர். தன்னுடைய திட்டம் நிறைவேறியதை அருகிலிருந்து பார்த்த சந்தோசத்தில் பாம்பு வடிவிலிருந்த சாத்தான் சிரித்துக் கொண்டே ஓடி மறைந்தான். கனியை உண்டு முடித்ததும் ஆதாமும், ஏவாளும் தாங்கள் நிர்வாணிகளாய் இருப்பதை முதன் முறையாக உணர்ந்தார்கள்.
.அதுவரை அவர்களுக்குள் திறக்கப் படாமல் இருந்த அறிவுக் கண் திறந்தது. இருவரும் வெட்கப் பட்டார்கள். ஓடிச் சென்று அத்தி இலைகளைக் கோத்து ஆடையாய் அணிந்து கொண்டார்கள். நன்மை தீமை அறியும் மரம் என்று கடவுள் காட்டிய மரம் அவர்களின் மழலைத் தன்மையை அழித்துவிட்டது.
ஃ
மெலிதான காற்று ஏதேன் தோட்டத்தில் வீசிக் கொண்டிருந்தது. கடவுள் தான் படைத்த மனிதனையும் அவனுடைய துணையையும் பார்ப்பதற்காகத் தோட்டத்துக்கு வந்தார். கடவுள் வரும் ஓசையைக் கேட்ட ஆதாமும் ஏவாளும் ஓடி ஒளிந்தனர். கடவுளின் கட்டளையை மீறிவிட்டோ மே என்னும் எண்ணம் அப்போது தான் அவர்களுக்குள் உறுத்தியது..
“ஆதாமே… நீ எங்கே இருக்கிறாய் ?” கடவுளின் குரல் தோட்டத்தில் எதிரொலித்தது.
பதில் இல்லை…
“ஆதாமே… நீ எங்கே இருக்கிறாய் ?” கடவுளின் குரல் மீண்டும் ஒலித்தது.
‘கடவுளே நான் இங்கே புதரின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறேன்.’ ஆதாம் பதில் சொன்னான்.
‘ஒளிந்து கொண்டாயா ? ஏன் ? ‘
‘ உம்முடைய குரலைக் கேட்டதும் எனக்குள் பயம் வந்துவிட்டது கடவுளே. அதனால் தான் நான் ஒளிந்து கொண்டேன். இதோ ஏவாளும் இங்கே ஒளிந்து கொண்டு தான் இருக்கிறாள்’ ஆதாம் சொன்னான்.
‘ நேற்றுவரை என்னிடம் அச்சமில்லாமல் பழகினாயே ? இன்று எப்படி உன்னிடம் புதிதாய் ஒரு அச்சம் வந்திருக்கிறது ? வெளியே வா… என்னிடம் நீ உரிமையோடும், அன்போடும் பழகவேண்டும். உனக்கு அச்சம் ஏற்படத் தேவையில்லை. வா வெளியே’ கடவுள் அழைத்தார்.
” இல்லை கடவுளே. என்னால் இப்போது வெளியே வர முடியாது ‘
‘ஏன் ?’
‘ஏனென்றால் நான் நிர்வாணமாய் இருக்கிறேன் ” ஆதாம் சொன்னான்.
நான் நிர்வாணமாய் இருக்கிறேன் என்று ஆதாம் சொன்னதும் கடவுள் கோபமடைந்தார். ‘நிர்வாணமாய் இருக்கிறாயா ? நீ நிர்வாணமாய் இருக்கிறாய் என்று யார் உனக்குச் சொன்னது ? நீ என்னுடைய கட்டளையை மீறினாயா ? நான் உண்ணக் கூடாது என்று சொல்லியிருந்த கனியை நீ உண்டாயா ? ‘ கடவுளின் குரல்
கோபத்தில் ஒலித்தது. அதுதான் கடவுள் கோபமடைந்த முதல் சம்பவம்.
“ஆண்டவரே… நான் அல்ல ஆண்டவரே. நீர் இட்ட கட்டளையை நான் மீறவில்லை. நீர் எனக்குத் துணையாக அளித்தீரே அந்தப் பெண் தான் நீர் இட்ட கட்டளையை மீறினாள். அவள் தான் எனக்கும் அந்தக் கனியைத் தந்தாள். எனவே நானல்ல கடவுளே அவள் தான் குற்றவாளி’ ஆதாம் பழியை ஏவாளின் மேல் போட்டான்.
‘ஏவாளே… நீ ஏன் அப்படிச் செய்தாய் ? ஆதாமுக்கு நான் இட்டிருந்த கட்டளை உனக்குத் தெரியாதா ?’ கடவுள் ஏவாளிடம் கேட்டார்.
‘உம் கட்டளை எனக்குத் தெரியும் கடவுளே. ஆனால் ஒரு பாம்பு தான் என்னிடம் வந்து அந்த கனியை உண்ணுமாறு கட்டாயப் படுத்தியது. அதனால் தான் நான் அதை உண்டேன். இது என் தவறில்லை கடவுளே. இது பாம்பின் தவறு தான்’ ஏவாள் சொன்னாள். செய்த தவறை ஒத்துக் கொள்ளாமல் அந்தத் தவறுகளை அடுத்தவர் தலை மேல் சுமத்தும் பழக்கத்தை அவர்கள் ஆரம்பித்து வைத்தனர்.
கடவுளின் கோபம் அதிகரித்தது. என்னுடைய சொல்லை மீறி, பாம்பின் சொல்லை நான் படைத்த மனிதன் கேட்கிறானா என்னும் சினம் அவருக்குள் பொங்கி வழிந்தது. அவருடைய கோபம் முதலில் பாம்பின் மீது திரும்பியது.
‘பாம்பே… சூட்சியின் இருப்பிடமே. இனிமேல் நீ சபிக்கப் பட்ட ஜந்துவாய் இருப்பாய். வயிறால் ஊர்ந்து ஊர்ந்து தான் உன் வாழ்க்கை இருக்கும். உன் சந்ததிக்கும், பெண்ணின் சந்ததிக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவேன். உன் தலையை அவளுடைய சந்ததி மிதிக்கும், நீ அவர்களின் குதிகாலைக் கடிப்பாய்’ என்று சாபமிட்டார் கடவுள். கடவுள் இட்ட முதல் சாபம் !
பின் கடவுளின் கோபப் பார்வை ஏவாளை நோக்கித் திரும்பியது. அவர் ஏவாளை நோக்கி, ‘ நீ என்னுடைய பேச்சை மதிக்காமல் உன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டாய். உன்னைப் படைத்த என்னை விட சாத்தானை நீ அதிகம் நம்பினாய். எனவே உனக்குத் தண்டனையாக உன்னுடைய பேறுகால வலிகளை அதிகப்படுத்துவேன். நீ மிகுந்த வேதனைப் பட்டுத் தான் குழந்தைகளைப் பெறுவாய். உன்னை நான் உன் துணைக்கு இணையாகப் படைத்தும் நீ அவனை தவறான திசைக்குத் திருப்பியதனால் அவனே இனிமேல் உன்னை ஆள்வான்’ என்றார்.
இறுதியில் கடவுள் ஆதாமை நோக்கி.’ மனிதனே. உன்னை நான் எத்தனை அதிகமாய் நேசித்தேன். உலகை அனைத்தையும் படைத்து அதை உன் கையில் ஒப்படைத்தேனே. தனியனால் இருப்பது நல்லதல்ல என்று உனக்குத் துணைவியையும் தந்தேனே. நீ நான் இட்ட ஒரே ஒரு கட்டளையையும் மீறி உன் துணைவியின் பேச்சைக் கேட்டாயே.
.எனவே இனிமேல் உனக்கு இந்த ஏதேன் தோட்டத்தின் சொகுசு வாழ்க்கை சொந்தமில்லை. உன் பாவத்தினால் பூமி சபிக்கப் பட்டு விட்டது. இனிமேல் நீ நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்தால் தான் உனக்கு உணவு கிடைக்கும் என்னும் நிலையை உருவாக்குவேன். பாடுபடாமல் எதுவும் உனக்கு இனி தரப்படாது. உன்னை மண்ணிலிருந்து தான் உருவாக்கினேன். நீ மண்ணாய் இருக்கிறாய். மண்ணுக்கே திரும்புவாய்.’ என்றார்.
பின் கடவுள் அவர்களை ஏதேனை விட்டு துரத்தி விட்டார். அவர்கள் மீண்டும் ஏதேனுக்குள் நுழையாமலிருக்க தேவ தூதர்களையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பு வாளையும் ஏதேன் தோட்டத்திற்குக் காவலாக வைத்தார்.
.






SP.VR.Subbiah சொன்னது,
மார்ச் 13, 2008 இல் 12:57 பிற்பகல்
Narration is good!
சேவியர் சொன்னது,
மார்ச் 13, 2008 இல் 2:05 பிற்பகல்
நன்றி சுப்பையா. கடந்த வாரம் இயக்குனர் மகேந்திரன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் இதே கருத்தைச் சொன்னார். கி.மு நூலை வெகுவாகப் புகழ்ந்தார். குறிப்பாக நடையை !. அதே கருத்தை மீண்டும் பெறுகையில் மகிழ்கிறேன்.
Athi சொன்னது,
ஜூலை 16, 2008 இல் 2:48 பிற்பகல்
Good NIce
சேவியர் சொன்னது,
ஜூலை 16, 2008 இல் 6:19 பிற்பகல்
நன்றி ஆதி
கி.மு விவிலியக் கதைகள் : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது « கவிதைச் சாலை சொன்னது,
April 24, 2009 இல் 2:37 மு.பகல்
[...] 2. முதல் பாவம் [...]
பிரபு சொன்னது,
ஆகஸ்ட் 1, 2009 இல் 8:04 மு.பகல்
நானும் முழுவதுமாக படிதேன்
முதலில் பிடித்திருந்தது , பிறகு ஒரே மாதிரியாக (மக்கள் தவறு செய்வது கடவுள் கோபம் கொள்வது,மக்கள் திருந்தி வருந்துவது , கடவுள் மன்னித்து காப்பது) செல்வது பிடிக்கவில்லை
பிரபு சொன்னது,
ஆகஸ்ட் 1, 2009 இல் 8:44 மு.பகல்
////
நன்மை தீமை அறியும் மரம் என்று கடவுள் காட்டிய மரம் அவர்களின் மழலைத் தன்மையை அழித்துவிட்டது.
///
அந்த புத்தகத்தில் இந்த வரிகளை படித்ததும் எனக்கு தோன்றிய கவிதையை என் பதிவில் இட்டுள்ளேன் வந்து பார்க்கவும்
http://priyamudan-prabu.blogspot.com/2009/08/blog-post.html
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:46 மு.பகல்
பார்த்தேன் ரசித்தேன். நன்றி பிரபு.
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:47 மு.பகல்
மனம் திறந்த கருத்துக்கு நன்றிகள் பிரபு.
Elango Gopal சொன்னது,
ஆகஸ்ட் 24, 2009 இல் 10:17 பிற்பகல்
Thanks XAVI bro.
I like so much your simple language format.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 1, 2009 இல் 9:26 பிற்பகல்
/Thanks XAVI bro.
I like so much your simple language format.//
நன்றி இளங்கோ சார்… வருகைக்கும், கருத்துக்கும்.
நிர்வாணம் « தமிழ் நிருபர் சொன்னது,
ஜனவரி 11, 2010 இல் 1:12 பிற்பகல்
[...] ( கி. மு – விவிலியக் கதைகள் நூலில் இருந்… [...]
seasonsali சொன்னது,
ஆகஸ்ட் 11, 2010 இல் 1:12 மு.பகல்
Religion is faith if you do not have that you can not follow any religion.
Every is fighting for the religion but not all is following according to the religion who is following.
No religion is telling to do bad hings.
Religion is the last resort.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 1, 2010 இல் 10:20 பிற்பகல்
//Religion is faith if you do not have that you can not follow any religion.
Every is fighting for the religion but not all is following according to the religion who is following.
No religion is telling to do bad hings.
Religion is the last resort.//
ஆன்மீகமே உயர்ந்தது. மதம் அல்ல !
Preety Aishu சொன்னது,
நவம்பர் 29, 2011 இல் 1:45 மு.பகல்
nice
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 10:53 பிற்பகல்
நன்றி பிரீத்தி