கி.மு : பாபேல்
ஏப்ரல் 18, 2008 இல் 5:58 பிற்பகல் (பிற)
நோவாவும் அவருடைய சந்ததியினரும் உலகில் பரவியிருந்த காலகட்டம் அது. உலகில் எங்கும் நோவாவின் சந்ததியினரைத் தவிர வேறு யாருமே இருந்திருக்கவில்லை. ஏனென்றால் கடவுள் நோவாவின் குடும்பத்தினரைத் தவிர மற்ற அனைவரையும் தண்ணீரினால் அழித்திருந்தார். எங்கும் ஒரே ஒரு சந்ததி இருந்ததனால் அவர்கள் பேசும் மொழியும் ஒன்றாகவே இருந்தது. உலகில் அப்போது வேறு மொழிகளே இல்லை.
ஒருமுறை சினயார் நாட்டில் சமவெளி ஒன்றில் மக்கள் பல இடங்களிலிருந்தும் வந்து ஒன்று கூடினார்கள். அவர்களில் ஒருவர் ‘ நாம் நம்முடைய புகழை நிலைநாட்டுவதற்காக ஏதேனும் செய்தாக வேண்டும். என்ன செய்யலாம் சொல்லுங்கள் ‘ என்று கேட்டார்.
மக்கள் பலவிதமான யோசனைகளைச் சொன்னார்கள். அதில் ஒன்று ஒரு மிகப் பெரிய கோபுரம் கட்டுவது. அந்த திட்டத்தை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
‘நாம் வானளாவ ஒரு கோபுரத்தைக் கட்டவேண்டும். அது நம்முடைய புகழை இனிவரும் தலைமுறைக்குச் சொல்லவேண்டும். இப்படி ஒரு கட்டிடம் இல்லை என்று எல்லோரும் வியப்படைய வேண்டும்’ மக்கள் கூறினார்கள்.
‘சரி கோபுரம் கட்டுவது எப்படி ?’
‘மண்ணைப் பிசைந்து கற்கள் அமைத்து அவற்றைக் கொண்டு கோபுரம் கட்டலாம்’ ஒருவர் சொன்னார்.
‘மண்ணினால் உருவாக்கிய கல் என்றால் உயரமாகக் கட்டும்போது இடிந்து விழுமே ‘
‘அப்படியானால்… நாம் மண்ணினால் உருவாக்கிய கற்களை நெருப்பில் சுடுவோம். சுடப்பட்ட கற்கள் மிகவும் பலமானதாக இருக்கும். நம்முடைய கோபுரம் வானத்தை எட்டினாலும் உறுதியாக இருக்கும்’
‘வானத்தை எட்டும் கோபுரம் கட்டி முடிக்கும் போது நாம் கடவுளைப் போல ஆவோம். எல்லோரும் நம்மைப் புகழ்வார்கள். ‘ மக்கள் குதூகலித்தார்கள். அவர்களுடைய மனம் கடவுளை மறந்து விட்டு சுய பெருமைகளில் மூழ்கியது.
அவர்கள் கோபுரம் கட்டும் பணிகளில் ஈடுபட்டார்கள். கோபுரம் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பத் துவங்கியது.
பூமியில் மக்களிடையே கர்வமும், அகந்தையும் நிரம்பி வழிவதைக் கண்ட கடவுள் கோபமடைந்தார். மக்கள் அந்தக் கோபுரத்தைக் கட்டிவிட்டால் அவர்களிடம் இறைபக்தியே இல்லாமல் போய்விடும். எதையும் தங்கள் முயற்சியினால் சாதித்து விட முடியும் என்னும் கர்வம் அவர்களுக்குள் குடியேறிவிடும்.
.அவர்கள் தனிமனித வழிபாடுகளில் விழுந்து விடுவார்கள் என்பதைக் கடவுள் உணர்ந்தார். அந்தக் கோபுரத்தைக் கட்டும் முயற்சியிலிருந்து மக்களைப் பின்வாங்க வைக்கவேண்டும் என்று அவர் முடிவெடுத்தார்.
மக்கள் எல்லோரும் ஒரே குழுவாக இருப்பதால் தானே இந்தப் பிரச்சனை. மக்கள் பிரிந்து தனித் தனிக் குழுக்களாக இருந்தால் அவர்கள் என்னை மறக்கமாட்டார்கள் என்று நினைத்த கடவுள் அவர்களை பிரிப்பது என்று முடிவெடுத்தார்.
மொழி ! அது தான் கடவுள் கையிலெடுத்துக் கொண்ட ஆயுதம். அங்கிருந்த மக்களை பல்வேறு மொழிகளால் பிரித்தார் கடவுள்.
ஒரே மொழியில் பேசிக் கொண்டிருந்த மக்கள் திடீரென வேறுவேறு மொழிகளால் பேசத்துவங்கினார்கள்.
‘ஏய்… நீ என்ன பேசுகிறாய்… எனக்குப் புரியவில்லையே’
‘என்னாச்சு உனக்கு ?’
‘அவர்கள் என்ன வேறு ஏதோ உளறுகிறார்கள்…’
மக்களிடையே மாபெரும் குழப்பம். ஒருவர் பேசுவது மற்றவருக்குப் புரியவில்லை.
‘நான் பேசுவது யாருக்கெல்லாம் புரிகிறதோ, அவர்களெல்லாம் இங்கே வாருங்கள்…’ ஆங்காங்கே மக்கள் கத்தினார்கள்.
.
ஒன்றாக இருந்த மக்கள் கூட்டம் இப்போது ஒவ்வொரு மொழிக்கும் கீழே சிறு சிறு குழுக்களாகப் பிரிந்தது. அவர்களிடையே இருந்த ஒற்றுமை உணர்வும் போய்விட்டது. தாங்கள் பேசுவது தான் நல்ல மொழி என்று ஒவ்வொரு குழுக்களும் அடுத்த குழுக்களோடு சண்டையிட்டுக் கொண்டன. மக்கள் வேற்றுமை உணர்வுடன் வேறுவேறு திசைகளுக்குப் போனார்கள்.
கடவுளின் திட்டம் பலித்தது. அவர்களுடைய அகந்தையின் சின்னம் அரைகுறையாய் நின்றது.
அது பாபேல் என்று அழைக்கப் பட்டது.







vikneshwaran சொன்னது,
ஏப்ரல் 20, 2008 இல் 9:50 நான்
கடவுளுக்கு அப்படி என்ன பொறாமை…
jaisankarj(சங்கர்) சொன்னது,
ஏப்ரல் 27, 2008 இல் 7:46 பிற்பகல்
//கடவுளுக்கு அப்படி என்ன பொறாமை//
எல்லாம் என்னை பார்த்து தான்.
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 28, 2008 இல் 10:33 நான்