அந்த காகத்தின் கூட்டிற்குள்
காரிருள் நேரத்தில்
சத்தமின்றி வந்து முட்டையிட்டுச் சென்றது
இசைக்குயில் ஒன்று.
முளைதெரியும் வரை
பூமிக்குள் விதைகளில் வித்தியாசமில்லையே,
காகத்தின் கதகதப்பில்
குயில் குஞ்சு
முட்டைக்குள் முளைக்கத் துவங்கியது.
மழையில்
ஈரமாகிப்போன இறகுகளுடனும்
வெயிலில்
கருகிப்போன அலகுடனும்
கருமைக் காகம்
குஞ்சுகளுக்கான காத்திருப்பில்
கரைந்து கொண்டிருந்தது.
நாட்கள் உடைந்து போன
ஒரு பொழுதில்
முட்டையோட்டுக்கிடையே
சின்னப்பறவைகள் சிறகுலர்த்தத் துவங்கின.
தாய்ப்பாசத்தின் தழுவல்களில்
மெல்ல மெல்ல
இமைதிறக்கத் துவங்கின.
ஒட்டுமொத்த கருப்புக் குடும்பமும்
இறகுகளால் சண்டையிட்டு
அலகுகளால் அன்பு பகிர்ந்து
மெல்ல மெல்ல வளரத்துவங்கின.
பொழுதுகளைப் பிளந்த ஓர் பொழுதில்
சுய முகம் தெளிந்த
அந்த சின்னக்குயில் மெல்ல மெல்ல
சாதகம் செய்யத் துவங்கியது.
சிரித்துக் கொண்டிருந்த
தாய்க் காகத்தின் கண்களில்
கோபத்தீ.
கூட்டுக்குள் கும்மாளமடித்த
கருப்புச் சகோதரர்கள் கையில்
கருப்புக்கொடி.
சுற்றி வளைத்த காகங்கள்
மெல்ல
அலகுகளில் கொலைவெறி தேய்த்து
கொத்தத் துவங்கின
அந்த மெல்லிசைக் குயிலை.
பறப்பதற்குப் பக்குவப்படாத அந்த
பச்சிளங் குயில்,
அங்கங்கள் முழுதும் இரத்தப் பொட்டுக்கள் வாங்கி
மெல்ல மெல்ல சாகத் துவங்கியது.
ஊமையாய் பிறக்காததற்காய்
கடைசியாய் ஒருமுறை கவலைப்பட்டது










muthuvel சொன்னது,
மே 14, 2008 இல் 11:36 மு.பகல்
anna!poo pidiththirukkirathaa? kaathal kavithai mika arumai.paravasam.enkal vaasakar vattaththirku unkalai
intha matham sirappu virunthinaraaka azaikka aasai.
mutiyumaa?
thambi muthuvel
சேவியர் சொன்னது,
மே 14, 2008 இல் 4:10 பிற்பகல்
நன்றி தம்பி
நேரில் பேசலாமே !
guhan சொன்னது,
மே 15, 2008 இல் 3:50 பிற்பகல்
கவிஞர் சேவியருக்கு ,
“காக்கைக் கூடு
குயிலுக்கு
அரசுத் தொட்டில்”
என்று மதுரையைச் சேர்ந்த ஹைக்கூ கவிஞர் ரவி எழுதியது நினைவில் பட்டது .
இது வரை வாசித்த கவிதை நடைக்கும் இந்த கவிதை நடைக்கும் வித்தியாசம் இருக்கிறதே?
இந்த நடைக்கு பெயர் தான் வசன கவிதையா ?
“முளைதெரியும் வரை
பூமிக்குள் விதைகளில் வித்தியாசமில்லையே,”
“ஊமையாய் பிறக்காததற்காய்
கடைசியாய் ஒருமுறை கவலைப்பட்டது”
நெஞ்சைத் தொட்ட வரிகள் !!!!!
வாழ்த்துக்கள் சேவியர் !!!!!!!!!!!!!!!!!!!!!!
அன்புடன்
குகன்
சேவியர் சொன்னது,
மே 16, 2008 இல் 10:54 மு.பகல்
//“காக்கைக் கூடு
குயிலுக்கு
அரசுத் தொட்டில்//
வாவ் !! அருமை. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
//இது வரை வாசித்த கவிதை நடைக்கும் இந்த கவிதை நடைக்கும் வித்தியாசம் இருக்கிறதே?
இந்த நடைக்கு பெயர் தான் வசன கவிதையா ?//
கொஞ்சம் கதை போல இருக்கிறது இல்லையா ? ம்ம்… உண்மை தான்,. கவித்துவம் குறைந்து கதைத்துவம் மிகுந்திருக்கிறது.
உங்கள் தொடரும் கருத்து ஊக்கங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் குகன்.
கீதா சொன்னது,
மே 16, 2008 இல் 9:57 பிற்பகல்
அந்தக் குயிலை எண்ணி மனம் கலங்குகிறது. கடைசி வரிகள் கலங்க வைத்து விட்டன.
கவிதைக்கு அப்பாற்பட்டு ஒரு கேள்வி
எல்லா குயில்களூம் காகத்தின் கூட்டில் தான் முட்டையிடுமா? இப்படி காகங்கள் கொத்தி இறந்துபோனால் பிறகு குயிலினம் பிழைப்பதுதான் எப்படி?
அன்புடன்
கீதா
சேவியர் சொன்னது,
மே 19, 2008 இல் 10:11 மு.பகல்
//எல்லா குயில்களூம் காகத்தின் கூட்டில் தான் முட்டையிடுமா? //
சரியா தெரியவில்லை. ஆனால் குயிலினம் அப்படிப்பட்ட ஒரு இனம் என்று வாசித்திருக்கிறேன்.
//அந்தக் குயிலை எண்ணி மனம் கலங்குகிறது. கடைசி வரிகள் கலங்க வைத்து விட்டன.//
நன்றி. இந்த கவிதையை அரசியல் பின்னணியில் வைத்து யோசிக்கவும்.
P B Muralikrishnan சொன்னது,
மே 28, 2008 இல் 3:38 பிற்பகல்
மிகவும் அருமையான பதிவு…
தங்களுக்கு நேரம் இருப்பின் கவிஞர் அறிவுமதியின் வலைபதிவில் இந்த கீழ்கண்ட இடுக்கையை காணவும்
http://arivumathi.wordpress.com/2008/05/07/15/
http://arivumathi.wordpress.com/2008/05/07/15/
சேவியர் சொன்னது,
மே 30, 2008 இல் 12:10 பிற்பகல்
நன்றி ….
சேவியர் சொன்னது,
மே 30, 2008 இல் 12:11 பிற்பகல்
நீலம்.. என்னால் பார்க்க இயலவில்லை.
வாசித்து வியந்தேன்.