கவிதை : நிழல் பூசிய நிஜங்கள்

நிஜமே அழகு !!!
இயல்பே அழகு…

தென்னைக்கு இலையும்
ஆலுக்கு விழுதும்
இயற்கை அளித்தஅற்புதப் பரிசுகள்.

தென்னையின் தலையில்
ரோஜாப்பூக்களை
கற்பனை செய்வதே
ஒத்துவரவில்லையே.

படைப்பின் மகத்துவம்
இயல்புகளில்
அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
அதை
போலிச் சாயம் பூசி
புதைத்து விட வேண்டாம்.

புல்லாங்குழலுக்குத் தான்
துளைகள் தேவை,
மிருதங்கத்துக்கு அல்ல.

அத்தனைக் கருவிகளும்
ஒரே இசை தந்தால்
இசையை மீறி
இரைச்சலே தங்கும்.

காற்றின்
அத்தனை துகளிலும்
ஆக்ஸிஜன் ஏறினால்
பச்சையம் தயாரிக்கும்
மூலப்பொருளுக்கு
பயிர் எங்கே பயணமாகும் ?

உன்
பலம் தேடிய பயணம்
தொடர்வதே சிறந்தது,
பிறர் பலம் கண்ட
பயம் அல்ல.

பூவுக்கு
இதழ் அழகென்றால்
கடிகாரத்துக்கு முள் அழகு!

சகதிக்குள் வசிப்பதே
சிப்பிக்கு வசதி!
அது
மேல் மிதக்கும்
தாமரை கண்டு
தாழ்வு கொள்தல் தகுமா ?

புரிந்து கொள்
என் பிரிய நண்பா ..

நீ
யாரையோ பார்த்து
பிரமிக்கும் அதே வினாடியில்,
யாரோ
உன்னைப் பார்த்தும்
பிரமிக்கிறார்கள்.

10 மறுமொழிகள்

  1. முகுந்தன் சொன்னது,

    ஜூலை 15, 2008 இல் 11:48 மு.பகல்

    //
    உன்
    பலம் தேடிய பயணம்
    தொடர்வதே சிறந்தது,
    பிறர் பலம் கண்ட
    பயம் அல்ல.
    //

    //நீ
    யாரையோ பார்த்து
    பிரமிக்கும் அதே வினாடியில்,
    யாரோ
    உன்னைப் பார்த்தும்
    பிரமிக்கிறார்கள்.
    //
    மிக அருமையான கருத்து.
    நம்மை நாமே மதிக்காவிட்டால் அதைவிட கொடுமை வேறில்லை.

  2. சேவியர் சொன்னது,

    ஜூலை 15, 2008 இல் 2:21 பிற்பகல்

    நன்றி முகுந்தன்…. :)

  3. ஹேமா சொன்னது,

    ஜூலை 15, 2008 இல் 3:44 பிற்பகல்

    வணக்கம் அண்ணா.கடவுள் அந்தக்காலத்து தொழில் நுட்பவியலாளர்.அப்பவே எதுக்கு எது பொருத்தம் என்று தெரிந்தே பார்த்துப் பார்த்து அழகு படுத்தியிருக்கிறார்.உண்மைதான் எல்லோருக்குள்ளும் ஒவ்வொரு வியப்புக்கள் வியாபித்திருக்கு.
    கண்டு பிடித்து செயல்படத்தான் கஸ்டமாயிருக்கு.காலம் பிடிக்குது.

  4. ஹேமா சொன்னது,

    ஜூலை 15, 2008 இல் 3:46 பிற்பகல்

    அண்ணா அந்த முன்னுக்கு இருக்கிற அந்த சின்ன படத்தை மாத்தவேணும்.பாக்கவே பயமா இருக்கு.என்ன செய்ய நான்.

  5. kunthavai சொன்னது,

    ஜூலை 16, 2008 இல் 9:37 மு.பகல்

    //நிஜமே அழகு !!!
    இயல்பே அழகு

    நீ
    யாரையோ பார்த்து
    பிரமிக்கும் அதே வினாடியில்,
    யாரோ
    உன்னைப் பார்த்தும்
    பிரமிக்கிறார்கள்.
    //

    கவிதை ரெம்ப நல்லாயிருக்கு. கருத்துள்ள வரிகள்.

    ஆனால் நம் மனது எப்போதுமே, இயற்கையாக உள்ள அற்புதங்களை எல்லாம் அற்பமானதாகவும், இயல்பில்லாத ஒன்றை பார்த்து அதிசயமாகவும் நினைக்கும். அப்படி நம் வாழ்க்கையில் ஏதாவது அதிசயம் நடந்துவிடாதா என்று தான் நம்மில் பலர் கோயிலுக்கே போகிறோம்.

  6. guhan சொன்னது,

    ஜூலை 16, 2008 இல் 9:39 மு.பகல்

    அன்புள்ள சேவியருக்கு,

    கற்பனைகளின் கட்டுமானங்கள் இல்லாமல் , தெரிந்த விஷயங்களுக்குள் ஒளிந்திருக்கும் தகவல்களை ஒற்றுமைப்படுத்தி வாசிப்பவனின் ஆறாம் அறிவுக்கு பசி ஏற்படுத்தி , அதற்கேற்ற தீனியும் போட்டு , முடிவில் சிந்தனை வெற்றிலை ஒன்றையும் கையோடு மடித்துக் கொடுத்து விட்டீர்கள் !!!!

    வாழ்த்துக்கள் சேவியர் !!!!!!!!!!!!!

    நட்புடன்
    குகன்

  7. சேவியர் சொன்னது,

    ஜூலை 16, 2008 இல் 2:08 பிற்பகல்

    //வணக்கம் அண்ணா.கடவுள் அந்தக்காலத்து தொழில் நுட்பவியலாளர்.அப்பவே எதுக்கு எது பொருத்தம் என்று தெரிந்தே பார்த்துப் பார்த்து அழகு படுத்தியிருக்கிறார்.//

    உண்மை :)

  8. சேவியர் சொன்னது,

    ஜூலை 16, 2008 இல் 2:08 பிற்பகல்

    //அண்ணா அந்த முன்னுக்கு இருக்கிற அந்த சின்ன படத்தை மாத்தவேணும்.பாக்கவே பயமா இருக்கு.என்ன செய்ய நான்//

    ஐயோ ? எந்த படத்தைச் சொல்றீங்க ? என்னோட படமா ?

  9. சேவியர் சொன்னது,

    ஜூலை 16, 2008 இல் 2:10 பிற்பகல்

    //கவிதை ரெம்ப நல்லாயிருக்கு. கருத்துள்ள வரிகள்.

    ஆனால் நம் மனது எப்போதுமே, இயற்கையாக உள்ள அற்புதங்களை எல்லாம் அற்பமானதாகவும், இயல்பில்லாத ஒன்றை பார்த்து அதிசயமாகவும் நினைக்கும். அப்படி நம் வாழ்க்கையில் ஏதாவது அதிசயம் நடந்துவிடாதா என்று தான் நம்மில் பலர் கோயிலுக்கே போகிறோம்.

    //

    நன்றி குந்தவை. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். கையில்லாதவனுக்குக் கை கிடைத்தால் வரம் கிடைத்ததாய் மகிழ்வான். ஏற்கனவே இரண்டு கையும் இருந்தால் அதை வரமெனக் கருத மாட்டான் ! இயல்பு… இயல்பை தாண்டிய மனநிலையில் சிந்தித்தால் ஒவ்வொரு வினாடியும் வாழ்க்கை வழங்கியிருக்கும் வரமே என்பது விளங்கும்.

  10. சேவியர் சொன்னது,

    ஜூலை 16, 2008 இல் 2:11 பிற்பகல்

    //கற்பனைகளின் கட்டுமானங்கள் இல்லாமல் , தெரிந்த விஷயங்களுக்குள் ஒளிந்திருக்கும் தகவல்களை ஒற்றுமைப்படுத்தி வாசிப்பவனின் ஆறாம் அறிவுக்கு பசி ஏற்படுத்தி , அதற்கேற்ற தீனியும் போட்டு , முடிவில் சிந்தனை வெற்றிலை ஒன்றையும் கையோடு மடித்துக் கொடுத்து விட்டீர்கள் !!!!

    //

    பளிச் என்று சொல்லியிருக்கிறீர்கள் குகன். நன்றி :)


மறுமொழியொன்றை வழங்குக