கி.மு : அழகு தேவதை தீனா

தீனா ! கொள்ளை அழகு என்பார்களே அதற்கு உதாரணம் வேண்டுமென்றால் தீனாவைக் கூறலாம். அவ்வளவு அழகும் அற்புதக் கட்டுடலும் கொண்டவள். அவளும் அவளுடைய தந்தை யாக்கோபும், அவளுடைய சகோதரர்கள் எல்லோரும் கானான் நாட்டிலுள்ள சாலேம் என்னும் நகரில் குடியிருந்தார்கள். அந்த நாட்டை செக்கேம் என்னும் மன்னன் ஆண்டுவந்தான்.

தீனா ஒருநாள் தன்னுடைய தோழிகளைப் பார்க்க நகருக்குள் வந்தாள். சாலைகளில் அவள் நடந்து திரிந்தபோது அந்த ஊரிலுள்ள ஆண்களின் பார்வை மொத்தமும் அவள் பின்னால் அலைந்து திரிந்தது. அவளுடைய அழகைப் பற்றிய பேச்சு மன்னன் செக்கேமின் காதுகளுக்கும் எட்டியது.

தீனாவின் மேல் அவனுக்குள் மோகம் குடியேறியது. அவன் மன்னனல்லவா!. வலுக்கட்டாயமாக தீனாவைக் கடத்திக் கொண்டு போய் அவளை பலாத்காரம் செய்து விட்டான். அத்துடன் அவனுடைய ஆசை தீர்ந்து போய்விடவில்லை. தீனாவின் அழகு அவனைக் கட்டிப் போட்டு விட்டது. அவனுடைய சிந்தனைகள் எல்லாம் அவளைச் சுற்றியே கிடந்தன.

இப்படி ஒரு அழகிய பெண்ணா ? இவளை நான் கண்டிப்பாக திருமணம் செய்தே ஆகவேண்டும். என்று மனசு அவனை நச்சரித்துக் கொண்டே இருந்தது. தீனாவின் குடும்பமோ மிகப் பெரியது. செல்வச் செழிப்பும், சகோதரர்கள், வேலையாட்கள், கால்நடைகள் என மிகவும் பெரியது. அவர்கள் அந்த ஊருக்கு சபீபத்தில் தான் வந்து குடியேறியிருந்தார்கள்.

மன்னன் தன்னுடைய தந்தையிடம் சென்றான். ‘ நீங்கள் என்ன செய்வீர்களோ , என்ன சொல்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் தீனா எனக்கு மனைவியாக வேண்டும்’ என்றான்.

இதற்கிடையில் தன் தங்கை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்று தெரிந்ததும் தீனாவின் சகோதரர்கள் அனைவரும் கொதித்தெழுந்தனர். தங்கையை அவமானப் படுத்தியவனையும் அவனுடைய இனத்தினரையும் கொன்று குவிக்க வேண்டும் என உள்ளுக்குள் உறுதி கொண்டனர். அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே மன்னனின் தந்தை அங்கே வந்தான்.
‘ வாருங்கள் அமருங்கள். என்ன விஷயம் ?’ சகோதரர்கள் விரோதத்தை மனசுக்குள் மறைத்து வைத்துக் கேட்டார்கள்.
‘ நான் உங்கள் மன்னனின் தந்தை. மன்னனுக்கு உங்கள் சகோதரி தீனா மீது கொள்ளை ஆசை. அவளையும் மனைவியாக்கிக் கொள்ள ஆசைப்படுகிறார்.  அவளை நீங்கள் அவருக்கு மணமுடித்து வையுங்கள்’

‘மன்னருக்கு எங்கள் சகோதரியை மணமுடித்து வைக்கக் கசக்குமா என்ன ? ஆனாலும்….’

‘என்ன ஆனாலும் ? ஏதாவது சொல்லவேண்டுமென்றால் மறைக்காமல் சொல்லுங்கள்
‘ நாங்கள் விருத்தசேதனம் செய்யும் இனத்தினர். நீங்களோ விருத்த சேதனம் செய்யாதவர்கள். விருத்த சேதனம் செய்து கொள்ளாத இனத்தினருக்கு எங்கள் த??கையை மணமுடித்து வைப்பது என்பது நடக்காதே….’ சகோதரர்கள் இழுத்தனர்.

‘ மன்னன் தீனாவின் மேல் பைத்தியமாக இருக்கிறார். எப்படியாவது அவருக்கு தீனாவைக் கொடுத்து விடுங்கள்’ மன்னனின் தந்தை மீண்டும் கேட்டார்.

‘அப்படியானால் ஒன்று செய்யுங்கள். நீங்களும் உங்கள் இனத்தவர் அனைவரும் விருத்த சேதனம் செய்து கொள்ளுங்கள். அப்படிச் செய்து கொண்டால் நாம் ஒன்றுக்குள் ஒன்றாகிவிடுவோம், நமக்குள் திருமணங்கள் நடத்தலாம், நாங்களும் இங்கே வியாபாரம் செய்வோம், நாம் எல்லோரும் ஒன்றாகக் கூடி வாழலாம்’  தீனாவின் சகோதரர்கள் கபடமாகப் பேசினார்கள்.

மன்னனின் தந்தை அதற்கு ஒப்புக் கொண்டார். தீனாவை எப்படியும் அடையவேண்டும் என்னும் வெறியில் இருந்த மன்னன் எதையும் யோசிக்கவில்லை. ஊரிலுள்ள அனைவரும் உடனே விருத்தசேதனம் செய்துகொள்ளவேண்டும் என்று ஆணையிட்டான். அதன்படி ஒட்டுமொத்த ஆண்களும் அன்றே விருத்தசேதனம் செய்து கொண்டார்கள்.

விருத்த சேதனம் செய்துகொண்ட மூன்றாவது நாள், ஊரிலுள்ள ஆண்கள் அனைவரும் வலியினால் அவதிப்பட்டு வீட்டுக்குள் அடைந்து கிடந்தனர். இந்த சந்தர்ப்பத்துக்காகத் தான் தீனாவின் சகோதரர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் ஊருக்குள் புகுந்து அனைத்து ஆண்களையும் வெட்டிக் கொன்றனர். ஊரையும் கொள்ளையடித்தனர். நாடு யாக்கோபின் குடும்பத்தினரால் முற்றிலும் நிர்மூலமாக்கப் பட்டது. படைவீரர்களும் விருத்த சேதனம் செய்து கொண்டிருந்தார்கள். எனவே அவர்களாலும் திறமையாகப் போரிட முடியவில்லை. தீனாவின் சகோதரர்கள் அரண்மனையை முற்றுகையிட்டார்கள்.

மன்னன் வெட்டி வீழ்த்தப்பட்டான்.

தங்கள் தங்கையைப் பலாத்காரம் செய்த மன்னனையும், அவனுடைய அரண்மனைவாசிகள் அனைவரையும் தீனாவின் சகோதரர்கள் ஈவு இரக்கமின்றி கொன்று தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர்

7 மறுமொழிகள்

  1. ஹேமா சொன்னது,

    ஜூலை 22, 2008 இல் 5:02 பிற்பகல்

    மனிதனினோடு கூடப் பிறந்த குணமோ…சகோதரமோ வஞ்சகம்!!!

  2. சேவியர் சொன்னது,

    ஜூலை 23, 2008 இல் 10:06 மு.பகல்

    ம்…

  3. SURYA MOHAN சொன்னது,

    ஆகஸ்ட் 31, 2008 இல் 3:19 பிற்பகல்

    this story is very bad

  4. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2008 இல் 10:10 மு.பகல்

    :)

  5. ஷாமா சொன்னது,

    ஜூன் 8, 2009 இல் 7:26 மு.பகல்

    யாக்கோபு(Jacob) + லேயா(Leah)வின் மகள் தீனா (Dinah)வை
    ஆமோரின் மகன் செக்கேம் கடத்திக்கொண்டு போய் பலாத்கார
    உறவு கொண்டதைக் கேள்வியுற்றுக் கோபம்கொண்ட தீனாவின்
    சகோதரர்களாகிய சிமியோன்(Simeon), லேவி(Levi), தங்கை மீது
    பலாத்கார உறவு கொண்ட செக்கேம், அவனது தந்தை ஆமோர்
    மற்றும் அனைவரையும் அழித்ததைக் கேள்வியுற்ற தீனாவின் தந்தை யாக்கோபு:-
    “இப்படி நீங்கள் செய்ததால் என்னை கானானியர்(Canaanites), பெரிசியர்(Perizzites) முன்பாக இழிவு படுத்தி விட்டீங்களே” என்று கேட்டதற்கு,
    சிமியோனும் லேவியும்:-
    “செக்கேம் மட்டும் எங்கள் தங்கையை மற்ற இனத்தவர் முன்பாக இழிவு படுத்தலாமா?” எனக்கேட்டு தந்தையை அடக்கி விட்டனர்

    இன்றும் இப்படியாக வேறு பல விடையங்களில் “பழிக்குப் பழி” நடந்தேறிய வண்ணமாகத்தான் இருக்கிறது.
    ஆனால் கடவுளின் சித்தம் வேறாக இருக்கிறது.
    xavier நீங்கள் தரும் கதைகளின் ஆக்கபூர்வ வடிவமைப்பு மிக அழகாக இருக்கிறது….
    வாழ்த்துகளும் என் நன்றிகளும்!

  6. சேவியர் சொன்னது,

    ஜூன் 10, 2009 இல் 9:53 பிற்பகல்

    /கடவுளின் சித்தம் வேறாக இருக்கிறது.
    xavier நீங்கள் தரும் கதைகளின் ஆக்கபூர்வ வடிவமைப்பு மிக அழகாக இருக்கிறது….
    வாழ்த்துகளும் என் நன்றிகளும்!///

    மனமார்ந்த நன்றிகள் ஷாமா :)


மறுமொழியொன்றை வழங்குக