கவிதை : மொட்டுக்கு மலர் வளையம்

கருக் கலைப்பு

மனிதாபிமானச் சிதைவுகளில்
நடந்தேறும் படு கொலை.

குற்றமில்லாத ஓர்
வெள்ளைப்புறாவை
வேங்கை வேட்டையாடும் வலி.

முளை விடும் வரை
விதைகளைத் தூவிவிட்டு
தலை கொய்வது
தகாத அறுவடையில்லையா ?

தொப்புள் கொடியில்
மழலைக்கு
தூக்குத் தண்டனையா ?

பன்னீர்க் கடலில்
பச்சிளம் பாலகர்க்கு
கருணைக்கொலையா ?

எந்தத் தராசுத் தட்டில்
இதை
நியாயப் படுத்துகிறீர்கள் ?

அனாதைக் குழந்தைகளோடா ?
வறுமையின் விண்ணப்பங்களோடா ?
இல்லை
அந்தஸ்தின் அலங்காரங்களோடா ?
சொல்லுங்கள்.

உங்களுக்குள் இறங்கி
வலைவீசித் தேடுங்களேன்.

விகாரத்தின்
விரல்ப்பதிவுகள்,

மோகத்தின்
அவசரப் பகிர்வுகள்,

இவைதானே
மிஞ்சிக் கிடக்கின்றன?
உங்கள் தவறுக்கு
பிஞ்சுக்குத் தண்டனையா ?

இளமையின் பலிபீடத்தில்
பிறப்புக்குச் சிரச்சேதமா ?

பதினெட்டு நாட்களில்
இதயம் துடிக்கத் துவங்கி,
ஆறு வாரப் பயணத்தில்
மூளையோடு முதல் பரிமாற்றம் செய்து,
எட்டு வாரத்தில்
ஓரிடம் எட்டிப்பிடித்து,
ஒன்பது வாரத்தில்
வலி உணருமாம் சிறு உயிர்.
இதை உணர்.

கருச்சிதைவு
மானிட வளர்ச்சியின்
படிக்கட்டல்ல.
கூண்டுக்குள் வேட்டையாடுதல்
வீரத்தின் விளையாட்டுமல்ல.

நீயும் நானும்
நிலவிலிருந்து நழுவி விழுந்தோமா.
கருவறையின் குருகுலத்தில் தானே
வளர்க்கப்பட்டோம் ?

வருமுன் காப்பது விவேகம்
வந்தபின் தீய்ப்பதோ துரோகம்.

சேவியர் கவிதைகள் காவியங்கள் நூலிலிருந்து

28 மறுமொழிகள்

  1. மங்களூர் சிவா சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 12:46 பிற்பகல்

    /
    வருமுன் காப்பது விவேகம்
    /
    இது சரி

    /
    வந்தபின் தீய்ப்பதோ துரோகம்.
    /
    கலிமுத்தி போச்சு இதெல்லாமா கண்டுக்கிறாங்க இப்ப
    :( ((

    வேதனைதான்

  2. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 12:57 பிற்பகல்

    :|

  3. aruna சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 6:33 பிற்பகல்

    வலிக்கிறது….மனம்..
    அன்புடன் அருணா

  4. kothanallur Nizam சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 7:11 பிற்பகல்

    mottukku malar valayam s………..upper.
    enn oru sottu kanneer .
    .
    .

  5. ஹேமா சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 9:28 பிற்பகல்

    மனிதம் தொலைந்து மனிதாபிமானம் செத்துக்கிடக்கையில் என்ன அண்ணா ஆயிரம் கேள்விகள்?ஏழை வறுமையால் கொலை செய்கிறான்.பணக்காரனோ பண்பாட்டிலிலிருந்து நழுவியதால் கொலை செய்கிறான்.கருக்கலைப்பில் மட்டும்தானா மனிதன் முன்யோசனை அற்று வாழ்கிறான்.இன்று வாழ்வின் அத்தனை வலிகளுமே முன் யோசனை அற்றதினால்தானே!

  6. thamizhparavai சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 10:44 பிற்பகல்

    //கூண்டுக்குள் வேட்டையாடுதல்
    வீரத்தின் விளையாட்டுமல்ல.//
    //தொப்புழ்கொடியில்
    மழலைக்கு
    தூக்குத் தண்டனையா ?//
    kavanikkappada vaeNtiya oru vaethanaiyaana vishayam…
    nalla pathivu xavior…

  7. குகன் சொன்னது,

    செப்டம்பர் 6, 2008 இல் 10:31 மு.பகல்

    அன்புள்ள சேவியருக்கு,

    “பதினெட்டு நாட்களில்
    இதயம் துடிக்கத் துவங்கி,
    ஆறு வாரப் பயணத்தில்
    மூளையோடு முதல் பரிமாற்றம் செய்து,
    எட்டு வாரத்தில்
    ஓரிடம் எட்டிப்பிடித்து,
    ஒன்பது வாரத்தில்
    வலி உணருமாம் சிறு உயிர்.”

    இத்தனை மருத்துவ உண்மைகளை எழுத்துத் தேரில் வடம் பிடித்து இழுத்துள்ளது உங்கள் முதிர்ச்சியான வாசிப்பின் அடையாளம்.

    தீப்பெட்டியில் கடைசி தீக்குச்சி மட்டுமே வைத்திருப்பவன் ,அதை மெழுகுவர்த்தியில் ஏற்றும் போது எவ்வளவு கவனத்துடன் கையாளுவானோ அதை விட பன்மடங்கு கவனுத்துடன் ஒவ்வொரு வரிகளையும் கையாண்டிருக்கிறீர்கள்.குறிப்பாக கீழ் வருவன:

    //
    குற்றமில்லாத ஓர்
    வெள்ளைப்புறாவை
    வேங்கை வேட்டையாடும் வலி.

    தொப்புழ்கொடியில்
    மழலைக்கு
    தூக்குத் தண்டனையா ?

    பன்னீர்க் கடலில்
    பச்சிளம் பாலகர்க்கு
    கருணைக்கொலையா ?

    கூண்டுக்குள் வேட்டையாடுதல்
    வீரத்தின் விளையாட்டுமல்ல.//

    இரு மெய் எழுத்து ஒன்றாக வராது என நினைக்கிறேன்.

    விகாரத்தின்
    விரல்ப்பதிவுகள்,

    “தொப்புழ்கொடியில்” என்பது “தொப்புள்கொடியில்” என்று வரவேண்டும் என நினைக்கிறேன்.

    வாழ்த்துக்கள் சேவியர் !!!!

    நட்புடன்
    குகன்

  8. மஹாலக்ஷ்மி சொன்னது,

    செப்டம்பர் 8, 2008 இல் 9:49 மு.பகல்

    அருமையான பதிவு…

    நகரங்களில் இன்று இந்தக் கொடுமைகள் குறைந்து இருக்கின்றன என்று நினைக்கிறேன்… ஆனால் இன்னும் ஒரு சில கிராமங்களில் இன்றும் இதே நிலை தொடர்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

    முதன் முறையாக உருவான கருவை சிதைத்ததனால் அதன் பிறகு மழலை பாக்கியம் கிடைக்கப் பெறாமல், தான் செய்த தவறுக்காக இன்றும் தன்னுடைய தோழி வருந்துவதாக என்னுடைய தோழி ஒருத்தி கூறியது நினைவுக்கு வந்தது.

    மெல்ல மெல்ல கிராமப்புறங்களிலும் இந்த நிலை கண்டிப்பாக மாறும் என்று நம்புவோம்!!!

  9. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 8, 2008 இல் 10:27 மு.பகல்

    //வலிக்கிறது….மனம்..
    அன்புடன் அருணா

    //

    வருகைக்கு நன்றி அருணா

  10. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 8, 2008 இல் 10:28 மு.பகல்

    //mottukku malar valayam s………..upper.
    enn oru sottu kanneer //

    நன்றி நிஸாம். இன்று இது ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வாய் உருமாறியிருக்கிறது. எனினும் எழுத்தாளர்கள், வலைப்பதிவகள் பலரும் இதற்கு எதிராய் இருப்பது மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.

  11. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 8, 2008 இல் 10:30 மு.பகல்

    //இன்று வாழ்வின் அத்தனை வலிகளுமே முன் யோசனை அற்றதினால்தானே//

    உண்மை சகோதரி … எனினும் கொலைசெய்யப்படுபவர் எதிர்த்து ஒரு விரல் கூட எழுப்பாமல் இருப்பது இங்கே மட்டுமே .. :(

  12. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 8, 2008 இல் 10:31 மு.பகல்

    ////கூண்டுக்குள் வேட்டையாடுதல்
    வீரத்தின் விளையாட்டுமல்ல.//
    //தொப்புழ்கொடியில்
    மழலைக்கு
    தூக்குத் தண்டனையா ?//
    kavanikkappada vaeNtiya oru vaethanaiyaana vishayam…
    nalla pathivu xavior…/

    நன்றி தமிழ்ப் பறவை .

  13. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 8, 2008 இல் 10:33 மு.பகல்

    //தீப்பெட்டியில் கடைசி தீக்குச்சி மட்டுமே வைத்திருப்பவன் ,அதை மெழுகுவர்த்தியில் ஏற்றும் போது எவ்வளவு கவனத்துடன் கையாளுவானோ அதை விட பன்மடங்கு கவனுத்துடன் ஒவ்வொரு வரிகளையும் கையாண்டிருக்கிறீர்கள்//

    குகன்…. அசத்திட்டீங்க குகன். உங்களுக்குள்ளே ஒரு மிகப்பெரிய எழுத்தாளன் ஒளிந்து கொண்டிருக்கிறான். :)

    //

    இரு மெய் எழுத்து ஒன்றாக வராது என நினைக்கிறேன்.

    விகாரத்தின்
    விரல்ப்பதிவுகள்,//

    ஓ… நிஜமாவா சொல்றீங்க ?

    //

    “தொப்புழ்கொடியில்” என்பது “தொப்புள்கொடியில்” என்று வரவேண்டும் என நினைக்கிறேன்.

    //

    நன்றி குகன் சுட்டிக் காட்டியமைக்கு. மாற்றி விடுகிறேன்.

    வருகைக்கும், வளமான கருத்துக்களுக்கும் நன்றிகள் பல.

  14. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 8, 2008 இல் 10:36 மு.பகல்

    //நகரங்களில் இன்று இந்தக் கொடுமைகள் குறைந்து இருக்கின்றன என்று நினைக்கிறேன்… //

    சரியாகத் தெரியவில்லை. அது உண்மையாய் இருக்குமெனில் மிகவும் மகிழ்ச்சியே. கிராமங்களில் கருக்கலைப்பு விகிதம் குறைவு என்பதே நான் கருதியிருப்பது.

    //
    முதன் முறையாக உருவான கருவை சிதைத்ததனால் அதன் பிறகு மழலை பாக்கியம் கிடைக்கப் பெறாமல், தான் செய்த தவறுக்காக இன்றும் தன்னுடைய தோழி வருந்துவதாக என்னுடைய தோழி ஒருத்தி கூறியது நினைவுக்கு வந்தது.

    //

    நமக்கு முன்னால் எத்தனையோ பேர் குழந்தை வரம் வேண்டி கண்ணீர் விடுகிறார்கள் என்பது நாம் அறிந்ததே.

  15. குகன் சொன்னது,

    செப்டம்பர் 8, 2008 இல் 11:55 மு.பகல்

    //இரு மெய் எழுத்து ஒன்றாக வராது என நினைக்கிறேன்.

    விகாரத்தின்
    விரல்ப்பதிவுகள்,

    ஓ… நிஜமாவா சொல்றீங்க ?

    //

    ஆமாம் சேவியர். . பள்ளியில் படித்த ஞாபகம் :-)
    பின்னாளில் நான் சொன்னது தப்புன்னு தெரிஞ்சா என்ன திட்டக் கூடாது. சரியா ? :-)
    “தொப்புள்கொடியில்” என்று மாற்றியதற்கு ரொம்ப நன்றி சேவியர்.

  16. Thilagar சொன்னது,

    செப்டம்பர் 8, 2008 இல் 5:36 பிற்பகல்

    ‘’முளை விடும் வரை
    விதைகளைத் தூவிவிட்டு
    தலை கொய்வது
    தகாத அறுவடையில்லையா ?’’
    மொட்டுக்கு மலர் வளையம். வாசித்தேன். அருமை. இப்படி விதைத்தவர்கள் அரை அறுவடை செய்வதே எமக்கு வேதனை தருகின்றபோது, வேண்டுமென்றே ஒரு இன தலைமுறையை அழிக்கவேண்டும் எனும் எண்ணத்தோடு அன்னையரை அழைத்துச்சென்று கருக்கலைப்பு செய்துவிடும் எத்தனைத் துன்பமாயிருக்கும்?
    மலையகத் தமிழினத்தை இவ்வாறு இனச்சுத்திகரிப்பு செய்வது பற்றித்தான் எனது படைப்பு பதிவு செய்தது.(கூடை புராணம்) (மரணத்தில் தொடங்கும் வாழ்வு)
    குடும்பத்திட்டமிடல் எனும் பெயரில் திட்டமிட்டு கொல்லப்படுகிறோம்…….. இது கொடுமையில்லையா???
    இது உலகறிய வேண்டுமென்றுதான் மலையகத்தின்கண் சிறப்புக் கண் வேண்டுமென்றேன்.
    நன்றிகள் சேவியர். வலிசொல்லும் கவிதைக்கு…..

  17. Karthick சொன்னது,

    செப்டம்பர் 8, 2008 இல் 6:23 பிற்பகல்

    Eramanamalarai irukkum endru paarka vandhean
    pindhaan
    Adhu eramalla; ungalin kaneerthuli nanaidha malar endru
    purindhu kondean……

    Karuporulukku “karu”porulin valiyai therndhu edutha ungalukku vazthukkal…

  18. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 9, 2008 இல் 7:03 பிற்பகல்

    //பின்னாளில் நான் சொன்னது தப்புன்னு தெரிஞ்சா என்ன திட்டக் கூடாது. சரியா ?
    “தொப்புள்கொடியில்” என்று மாற்றியதற்கு ரொம்ப நன்றி சேவியர்.
    //

    கத்துக் கொடுக்கிறவங்களைத் திட்ட முடியுமா என்ன ?

  19. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 9, 2008 இல் 7:04 பிற்பகல்

    //வேண்டுமென்றே ஒரு இன தலைமுறையை அழிக்கவேண்டும் எனும் எண்ணத்தோடு அன்னையரை அழைத்துச்சென்று கருக்கலைப்பு செய்துவிடும் எத்தனைத் துன்பமாயிருக்கும்?
    மலையகத் தமிழினத்தை இவ்வாறு இனச்சுத்திகரிப்பு செய்வது பற்றித்தான் எனது படைப்பு பதிவு செய்தது.(கூடை புராணம்) (மரணத்தில் தொடங்கும் வாழ்வு)
    குடும்பத்திட்டமிடல் எனும் பெயரில் திட்டமிட்டு கொல்லப்படுகிறோம்…….. இது கொடுமையில்லையா???
    இது உலகறிய வேண்டுமென்றுதான் மலையகத்தின்கண் சிறப்புக் கண் வேண்டுமென்றேன்.
    //

    உண்மை திலகரே… உங்கள் படைப்பு மலையக மக்களின் இருண்ட வாழ்வை உலகுக்கு காண்பிக்கும் ஒரு வெளிச்ச விளக்கு என்பதில் சந்தேகமில்லை.

  20. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 9, 2008 இல் 7:04 பிற்பகல்

    //Eramanamalarai irukkum endru paarka vandhean
    pindhaan
    Adhu eramalla; ungalin kaneerthuli nanaidha malar endru
    purindhu kondean……

    Karuporulukku “karu”porulin valiyai therndhu edutha ungalukku vazthukkal…
    //

    கவிதையே எழுதறீங்க சார் :)

  21. vikneshwaran adakkalam சொன்னது,

    செப்டம்பர் 10, 2008 இல் 1:15 பிற்பகல்

    :(

  22. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 10, 2008 இல் 2:37 பிற்பகல்

    :( :( :(

  23. Thilagar சொன்னது,

    செப்டம்பர் 10, 2008 இல் 3:52 பிற்பகல்

    ”’மலையக மக்களின் இருண்ட வாழ்வை””………..

    நன்றி சேவியர். மலையக மக்கள் பற்றிய உண்மையான உணர்வுடன் எழுதியிருப்பதற்கு

  24. venkatramanan சொன்னது,

    செப்டம்பர் 11, 2008 இல் 8:37 மு.பகல்

    //மொட்டுக்கு மலர் வளையம்//
    ஸேவியர்! தலைப்பே ஆயிரம் க(வி)தை சொல்லுதே!

  25. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 11, 2008 இல் 10:12 மு.பகல்

    வெங்கட்… நிஜமாவே ரொம்ப ஆனந்தம். தேடித் தேடி வைத்ததில் மனசுக்குப் பிடித்த தலைப்பு இது :) கவிதையை மட்டுமல்ல தலைப்பையும் ரசிக்கிறீங்க நன்றிகள் :)

  26. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 11, 2008 இல் 10:12 மு.பகல்

    வருகைக்கு நன்றி கவிஞர் திலகர்.

  27. ஆனந்தன் சொன்னது,

    ஏப்ரல் 14, 2009 இல் 11:29 பிற்பகல்

    ரொம்ப ஆனந்தம்

  28. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 24, 2009 இல் 4:36 மு.பகல்

    வருகைக்கு நன்றி ஆனந்தன். :)


மறுமொழியொன்றை வழங்குக