நின்னைச் சரணடைந்தேன்
இது ஒரு அக்மார்க் உண்மைக் கவிதை
காதலுக்கு முன்னுரை தேவையில்லை
.
சில கதைகள் நிஜம் போன்ற தோற்றமளிக்கும், சில நிஜங்கள் கதை போன்ற தோற்றமளிக்கும்.இது ஒரு நிஜக் காதலின் கவிதை வடிவம். என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளை அது நடை பெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே கவிதையாய் எழுதி அவனுக்குஅளித்துக் கொண்டிருந்தேன். அந்தக் காதலில் தான் எத்தனை சுவாரஸ்யமான திருப்பங்கள்!.
விருப்பங்களின் விளை நிலத்தில் களைகளா, பயிர்களா என்று கணிக்க முடியாமல் தினம் தினம் முளைத்து வளரும் தாவரங்களின் தன்மைகளை கவனித்துக் கொண்டிருப்பதில்
காதலுக்கு இருக்கும் சிலிர்ப்பும், வலியும் கணக்கிட முடியாதவை. வாய்க்கால்களில் வழிவது காதல்ப் பயிரை வளர்க்கிறதா அல்லது களைகளின் கால்களை நனைக்கிறதா என்பதைக்
கண்டு கொள்ளும்வரை காதலுக்கு இருக்கும் காத்திருப்பு அவஸ்தைகள் வார்த்தைகளில் நெய்து விட இயலாதவை.
எங்கோ விழுந்த விதை பறவையின் வயிற்றில் பயணித்து பெயர்தெரியா தேசத்தின் நிலமொன்றில் முளை விரிப்பது போல இந்தக் காதல் கண்டங்கள் தாண்டியும்
கண்டுகொள்கிறது தன்னை உடுத்திக் கொள்ளும் இரண்டு காதலர்களை. அப்படி காதலே வந்து சந்தித்துக் கொண்ட இருவர் தான் இதில் உலாவுகின்றனர்.
மழை விட்ட வானில் தங்கிச் செல்லும் வானவில்லாகவோ, மெல்லிய பூவில் தன் ஈரக்கால்களை இறக்கி வைக்கும் பனித்துளியாகவோ காதலைப் பார்ப்பது கவித்துவமானது.
ஆனால் மழையெனும் சிலிர்ப்புச் சம்பவங்களை வழங்கும் வானமாகவோ, பூவெனும் புன்னகை பிம்பங்களைத் தாங்கும் நிலமாகவோ காதலைப் பார்ப்பதே பொருத்தமானது.
காதல் காதலர்களின் ஸ்பரிசங்களையும், ஊடல்களையும் கவனித்துக் கொண்டே மெளனமாய் இருக்கிறது. நான் பார்க்காத காதலர்களா என்பது போல. இந்தக் கவிதை நூலைப் படிக்கும்
காதலர்கள் தங்கள் காதல் வாழ்வின் ஏதேனும் ஒரு பக்கத்தில் இந்த சம்பவங்களின் சாரலடித்திருப்பதை உணர்வார்கள். இந்தக் கதையில் வீசும் வெப்பத்தை பெரும்பாலான
காதலர்கள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சுவாசித்து விசும்பியிருப்பார்கள். ஏனெனில் இது நிஜக் காதல்.
இந்த நூலைப் படித்து வெகுவாகப் பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து, மற்றும் அனைத்து எழுத்தாளர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள்.
.
.சமர்ப்பணம்
தயங்காமல் காதலித்து
காதலிப்பதைச்
சொல்லத் தயங்கும் அனைவருக்கும்
.
நின்னைச் சரணடைந்தேன்
1
கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்
என்னை ஒருமுறை.
நானே தான் நினைக்கின்றேனா ?
காதல் ஒரு
புதுவிதமான உணர்வின்
பொதுவிளக்கம்.
மொத்த செல்களையும்
புலன்களாக்கும்
ஒர் புல்லாங்குழலிசை
என்னவாயிற்று எனக்கு ?
சட்டென்று எப்படி இந்த
கரிசல் பூமிக்குள்
கட்டுக்கட்டாய் கவிதைகள்
விளைகின்றன
அவள்
அனு
சென்னையில் படிக்கும்
மலேஷிய மங்கை
மனதின் ஒவ்வொரு
மில்லிமீட்டர் இடைவெளியிலும்
மின்னல் உருக்கி நிறைக்கும்
அனுபவத்துக்குச் சொந்தக்காரி
என் சுவாசத்தின் நீளம்
என் பார்வையின் தூரம்
எல்லாம் மறக்கடிக்கச் செய்யும்
என் பரவசத்தின் பொறுப்பாளி.
நினைத்துக் கூட
பார்த்ததில்லை
நான்
காதலுக்குள் அகப்படுவேன் என்று
நண்பர்கள்
நாயர் கடை ஓரத்தின்
நனைந்த பெஞ்சுகளில் இருந்து
நகம் கடிக்கும் போதெல்லாம்
நகைத்திருக்கிறேன்.
ஒரு நண்பன் ராஜ்
இப்போதுதான் சின்னத்திரைக்குள்
பெரிய திரைக் கனவுகளுக்கு
பிள்ளையார் சுழி போட்டிருக்கிறான்..
இன்னொரு நண்பன் குமார்.
உடலின் பாதியை
தொப்பைக்கு விற்றுவிட்டு
தெய்வீக நட்பை நெஞ்சில்
கொட்டி வைத்திருப்பவன்.
சில
சிலுவைகளுக்குச் சொந்தக்காரன்.
இன்னொரு நண்பன்,
கொஞ்சம் கவிதை
கொஞ்சம் கற்பனை என்று
பட்டாம்பூச்சிக் கனவுகளுடன்
படுத்துக்கிடப்பவன்.
யாரும் நம்ப மாட்டார்கள்
படமெடுக்கும் பாம்புக்கு
பல்லுத் தேய்த்துவிட்டேன்
என்றால்
நம்புவார்கள்
சூரியனின்
சிறுதுண்டு சிதறி
எங்கள் வீட்டில் விழுந்தது என்றால்
நம்புவார்கள்
ஆனால்
என் தொண்டைக்குழிக்குள்
காதல் தூண்டில்
சிக்கிக்கொண்டதென்றால்
வயிறு வலிக்கச் சிரிப்பார்கள்
விளக்கினால் நிச்சயமாய்
விழிகள் வலிக்க வியப்பார்கள்
இப்போது எதுவும் தோன்றவில்லை
தண்ணீர் வேலியிட்ட
ஓர்
தனிமைத் தீவுக்குள் குதிக்கும்
சிறு தங்கத் தவளையாய் மனசு.
மண்ணுக்கு மனுச்செய்யாமல் இதோ
சட்டென்று விழுந்துவிட்டது
ஓர் மழைத்துளி
கடலைக் கழுவும் ஆவேசத்துடன்
இப்போது
என் கட்டுப்பாட்டுக்குள்
நான் இல்லை
விளம்பரம் செய்யாமல் விழுங்குவது
மரணம் மட்டுமல்ல
காதலையும்
சேர்த்துக் கொள்ளுங்கள்
தன்னைத்தான் சுற்றுவது
பூமி மட்டுமல்ல
என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
ஒரு துளிக் காதல் விழுந்தபோது
எப்படி எனக்குள்
ஒருகோடிப் பூக்கள் சிரிக்கின்றன ?
ஒரு மூச்சுக் காற்று பட்டதும்
ஆயிரம் சிட்டுக்கள் எப்படி
சுவாசம் பெற்றன ?
ஆச்சரியங்களின்
ஏதேன் தோட்டம் தான்
காதல்
ஆதாம் முதல்
அரவிந்த் சாமி வரை
காதல் விழாத நிலம் இல்லை
நண்பன் அன்று சொன்னபோது சிரித்தேன்..
அவளை
நேற்று வரை நேசித்த விதம்
இன்று அவள் சொன்ன
ஒற்றை வார்த்தையில்
விட்டுப் போய்விட்டது
பட்டுப் பூச்சியின்
பரிணாம வளர்ச்சியாய்
பட்டென்று மனசுக்குள்
சிறகடிக்கும் ஓசை
நண்பர்களிடம் எப்படிச் சொல்வது ?
துருவித் துருவிக் கேட்பார்கள்
பெயரில் ஆரம்பிப்பார்கள்
ஆய்வுக்கட்டுரையின்
அட்டைப்படம் வரை விளக்கா விட்டால்
விட மாட்டார்கள்.
எப்படிச் சொல்வது
அவளைப் பார்த்ததில்லை என்று ?
2
தூரத்துச் சொந்தக்காரன்
துயரம் பார்க்க வருவதுபோல,
சூரியக்கதிர்கள்
எப்போதாவது எட்டிப்பார்க்கும்
அமெரிக்காவின்
ஓர்
குளிர்க்கூட்டுக்குள் நான்
விரல் நுனிகளில்
உலகை விரித்துப் படிக்கும்
கயுகத்தின்
ஓர் கைக்குழந்தை
சக்கரம் கண்டுபிடித்தபின்
உலகம் சுருங்கியது.
இணையம் இயங்கியபின் அது
ஒற்றைப் புள்ளிக்குள்
உலகைப் புதைத்துவிட்டது
எதிர்த் தெருவில்
நேற்று காரோட்டும் போது
காருக்குக் சிறிதாய் காயம் பட்டது,
படிக்கட்டில் வழுக்கியபோது
காலுக்குக் கொஞ்சம் காயம் பட்டது.
இதெல்லாய்
மதுரையின்
ஓர் ஓட்டுவீட்டுக்குள் இருக்கும்
என் அம்மாவுக்குத் தெரியும்.
காரணம் உலக வலை
கட்டுக்கட்டாய் என் கடிதங்கள்
பனிபொழியும் காலையில்
பிடித்தெடுத்த புகைப்படங்கள்
எல்லாம் சென்னையின்
எல்லையிலிருக்கும்
என் தங்கையின் பார்வைக்குள் விழும்
காரணம் உலக வலை
உலகில் விரிக்கப்பட்டு
உலகை பிடித்தெடுத்தது
இந்த வலை தான்
இந்த இணைய வலை தான்.
இந்த வலையின் ஓர் இழையில்
மனசு மரத்தும் போன
ஓர்
மாலைப் பொழுதில்
பேச்சுத்துணையானவள் தான் அனு
பொதுவாகவே வலையில் உரையாடுவது
எனக்குப் பிடிக்காது.
நல்லவேளை
அன்று பிடித்திருந்தது
அந்த குளிர்மாலைப்பொழுதில்
வெளியில் பனி பொழிந்துகொண்டிருக்க
மனதில்
கதகதப்பாய் விழுந்தது அவள் நட்பு.
பிறகு
வார்த்தைகள் அதிகமாகி,
நட்பின் இழைபின்னிய ஆடைகள்
அகலமாகி,
அவள் வராத
மாலைப் பொழுதுகளெல்லாம்
ஆக்சிஜன் கலக்காத
காற்றை சுவாசிப்பதாய்
நுரையீரல் திணறி
வந்தால் பேசுவோம்
எனும் நிலை மாறி
பேசுவதற்காய் வருவோம் என்றானது.
நாட்கள் வளர்ந்து வாரங்களாகி
வாரங்கள்
மாதங்களாய் முதுமையடைந்தபோதும்
என் நட்பு
காதலாய் வளர்ச்சியடைந்ததை நான்
உணரவில்லை.
ஏதோ ஒன்று
இனம் காண முயன்று
தோற்றுப்போன உணர்வு
படுக்கைக்குள்
சூரியன் இருப்பதாய்
மனம் சுட்ட இரவுகள்.
சாப்பிட்டேனா
என்று எனை நானே கேட்கவைத்த
உணர்வுகள்
எல்லாம்
காதலின் உளி செதுக்கிவைத்த
சின்னச் சின்ன சின்னங்கள்
அவளுக்கும் இந்த உணர்வு தானா ?
இல்லை என் நிழல் மட்டுமே
கனமாகிக் கீழே விழுந்துகிடக்கிறதா ?
என் மேகம் நீர்சுமப்பதைக் கண்டால்
அவள் தோகை விரிப்பாளா
இல்லை
விழிகளை மூடி தொலைந்துபோவாளா ?
பஞ்சுப்பொதிகளாய் கட்டிவைத்திருக்கும்
கனவு மூட்டைகள்,
ஏராளம் கற்பனைப் பெட்டிகள்,
குவிக்கப்பட்டிருக்கும் எதிர்பார்ப்பு விதைகள்,
இன்னும்
கடலுக்குள் நங்கூரம் பாய்ச்சப்படவில்லை.
முகம் பார்த்துப் பேசினால் தான்
வார்த்தைகள்
தற்கொலை செய்துகொள்ளும் என்றில்லை
இங்கும்
விரல் நுனியில் வார்த்தைகள் நசுக்கப்படும்
தொண்டைக்குழியில் தூக்கிலிடப்படும்
பாத்திரங்கள் வேறானாலும்
பரிமாறப்படுபவை ஒன்றுதான்
காதல்
நவீன ஓவியமாய்
புரியப்படாமல் இருந்த கவிதையை
அவள் தான் முடித்து வைத்தாள்
நதியைத் தேடி
கடல் ஒன்று கரை தாண்டியதாய்,
அந்த பூ தான்
வண்டின் காதில் மெல்லியதாய்
பூபாளம் என்றால் சந்தோசம் தானே ?
என்றது
கொஞ்சம் வார்த்தைகள் பேசிவந்த
குரல்
கொஞ்சும் வார்த்தைகள்
பேசத்துவங்கியது
நான் பட்டென்று
பதிலிறுக்கவில்லை
விரலுக்குள் விழுந்துவிட்ட வெண்மதியை
மெலிதாய் கொஞ்சம் சீண்டினேன்.
என்ன பேசுகிறாய் புரியவில்லையே
நட்பு தானே நமக்குள் ?
இன்று வந்தாலும்
இரண்டுநாள் தாண்டி வந்தாலும்
வானவில்லுக்கு
வண்ணம் ஏழுதானே என்றேன்.
அவள் குரலுக்குள் இருந்த
குயிலுக்கு
சட்டென்று
ஜலதோசம் பிடித்துக் கொண்டது.
நான் தான் வைத்தியம் செய்தேன்.
கண்ணீர் அடைக்கத்துவங்கிய
அவள் புல்லாங்குழலுக்குள்
தேக்கிவைத்திருந்த
ஆசை அணையை
அவிழ்த்துவிட்டேன்.
எதிர்துருவங்கள் இரண்டு
இறுக்கிக் கொண்டதாய்
இதயத்துக்குள் ஓர்
இன்ப அதிர்வு
கவனிக்கவில்லை.
பின்னால் நண்பன் சக்தி!!!
காதலா என்றான்.
சிரித்தேன் நழுவமுடியாமல்
அழுத்திப்பிடித்து விட்டான்.
வீட்டில் சொல்லிவிட்டாயா ?
பிரச்சினை ஏதும் பிறக்காதே
சட்டென்று
சிறகுகளை சிலுவையில் அறைந்ததாய்
உணர்ந்தேன்.
ஒன்றுவிடாமல் எல்லாம் வித்தியாசம்
தேடித் தேடிப் பார்த்தாலும்
ஆறு ஒற்றுமை கூட அகப்படாது
எனக்கும் அவளுக்கும்
சாதி..முதல் தேசம் வரை

3
எதையாவது
எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது தான்
அருவியாய் பாயும் காலம்
சொட்டுச் சொட்டாய் வேகம் குறைக்கும்
இன்றும் அப்படித்தான்
சென்னையில் இருக்கும்
நண்பன் குமாரிடமிருந்து
கடிதம் எதிர் பார்க்கிறேன்
நேற்றுதான்
முதன் முதலாய் சொன்னேன்
எனக்குள்
முளை விட்டிருக்கும் காதலைப் பற்றி.
அவன்
உண்மையாய் அலசி ஆராய்பவன்
இன்று காலையில் அவளைப் போய்
சந்திப்பதாய்ச் சொன்னான்.
என்ன நடந்திருக்கும் ?
என்ன சொல்லப் போகிறான் ?
எரிகல் ஒன்றை
எறியப் போகிறானா ?
பூ ஒன்றைப்
பறித்துப் போடப் போகிறானா ?
எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது ?
கசாப்புக் கடைக் கத்தியை வாங்கி
காற்றை நறுக்கிப் போடும்
அளவுக்கு வெறுமை மனசில்.
படுக்கையைச் சுற்றியே
பத்து முறை நடந்திருப்பேன்.
தலை முடியையும்
மீசையையும் அழுத்தி அழுத்தியே
உறுமீன் வரக் காத்திருக்கும்
கொக்காக
உலகக் கடலின்
இணைய வலையில் நான்
நண்பன் மேல் நம்பிக்கை இருக்கிறது
பட்டுப் பூச்சி மேல்
பட்டாக்கத்தி வீச மாட்டான்
கண்ணின் கருவிழியை
அமிலத்துள் அமிழ்த்தமாட்டான்
சிறு காயம் பட்டாலும்
அவனிடம் தான் சொல்வேன்
காதல் பட்டதையும்
அப்படித் தான் அறிவித்தேன்.
கிளை விட்டபின் ஏன் எனக்கு
இலைத் தூது விடுகிறாய்
என்று கோபித்துக் கொண்டான்
பார்க்காமல் காதலிப்பதெல்லாம்
இரண்டும நேர
திரைப்படத்தில் தான்
இயலும் என்றான்
மலேஷிய மங்கையோடு
காதல் கொள்ளும் வேகத்தில்
கலாச்சாரத்தை
கழுவித் தொலைத்தாயே என்றான்
எப்போதுமே அவன் அப்படித்தான்
என் மீது அவனுக்கு
சுய நல நட்பு.
என் பாசக்கடலின்
நீல நிறத்தை
வானம் எடுத்தாலே வருத்தப் படுவான்.
நதிக்கு வழங்கினால்
குதிக்க மாட்டானா ?
அப்படித்தான் குதித்தான்.
வெள்ளையான மேகம்
கருப்பாகி
துளியாகி பெரு மழையாகி
மீண்டும் வெள்ளையான போது தான்
எனக்குள் கொஞ்சம் வெளிச்சம் வந்தது.
இன்று ஸ்பென்சர் செல்கிறேன்
மின்னஞ்சலில் சொல்கிறேன் என்றான்.
இன்னும் வரவில்லை.
சரி
இனிமேலும் பொறுக்க முடியாது
பேச வேண்டியது தான் என்று
தொலை பேசி எடுத்த போது தான்
அவன் கடிதம் வந்தது
பரபரப்பை விரல் பரப்புகளில்
விளையாட விட்டுவிட்டு
அவசரமாய் அவசரமாய் படித்தேன்
முழுவதும்
படித்து முடித்தாயிற்று
எதுவும் தெளிவாய் இல்லை
அவள்
ரோஜா போல அழகில்லை என்கிறான்
புரிகிறது.
பூக்கள் எல்லாம் ரோஜாவாக முடியாது !!!
தாயும், காதலியும்
அழகியலுக்கு அப்பாற்பட்டவர்கள் !!!
உன் பணவிபரம் பேசினாள் என்கிறான்
நானே சொல்லியிருக்கிறேன்
நினைத்துக் கொண்டேன்
புரிதல் இல்லாமல் விரிதல்
காதலில்லையே
நேரில் பார்த்தபின் முடிவெடுக்கலாம்
என்றான்
உனக்குப் பிடித்திருந்தால்
காதலுக்கு தோள்களை மட்டுமல்ல
உயிரையும் தருவேன்
இதயத்துக்கு கொஞ்சம் இதமாய் இருந்தது
இன்னும் சில நாளில்
இந்த சந்தோசங்கள் எல்லாம்
கடப்பாரை கொண்டு
என்
கால் முறிக்கும் என்று
நான்
கனவில் கூட நினைத்திருக்கவில்லை..

4
சிறகொடிந்த கிளியின்
இரும்புக் கூண்டுக்கு
இறக்கை முளைத்ததாய்
தோன்றியது
நண்பன் ஜோ
கடிதம் அனுப்பியிருக்கிறான்
இல்லை இல்லை
கவிதை அனுப்பியிருக்கிறான்
ஆறுமாதங்களாக அமெரிக்க
பனிமிதித்துக் கிடந்த அவன் பாதங்கள்
மூன்று நாட்களுக்கு முன்தான்
சென்னையில்
சூரியனை மிதித்திருக்கிறது..
நேற்று அனுவைப் பார்த்திருக்கிறான்
என் நிலவுக்கு
நான் அனுப்பிய ஆம்ஸ்ட்ராங் அவன் !!!
என் நிழல் விழுந்த தேசத்துக்கு
நான் அனுப்பிய
செயற்கைக் கோள் அவன்
இப்போது கவிதையில்
ஒலிபரப்பு செய்திருக்கிறான்
அவன் கடிதம் இது தான்
நண்பா
இறக்கை மடக்காத விமானம்
நேற்று முன்தினம் தான்
என்னை இறக்கி விட்டது
பனித்துண்டு ஒன்றை எடுத்து
எரிமலைக்குள்
எறிந்ததாய் கரிந்து போகிறேன்
ரோஜா இதழ்களை பிரித்து
பொரியல் செய்வதாய்
எரிகிறது உடம்பு
சென்னை மாறவில்லை
நூறு ஆண்டு காலமாய் மாறாத
நம் புழுதி நகரமா
ஆறு மாதத்தில்
மாறிவிடப் போகிறது ?
இன்னும் அது
சலவை செய்யப்படவில்லை
வண்ணான்களாலேயே
அழுக்காகிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களைப் பார்த்தேன்.
மனசுக்குள் தூசி பிடித்துக் கிடந்த
குத்துவிளக்கைக் கழுவி
கொஞ்சம் கொஞ்சமாய்
ஒளியேற்றினார்கள்
அரட்டைகளின் இடைவெளியில்
பேசினோம்
பேசிப்பேசி வாய் வலித்தபோது
சாப்பிட்டோ ம்
அரட்டையடித்தபடி
மன்னித்துவிடு
மட்டை வைத்திருக்கும் உன்னிடம்
நான்
சதுரங்க விளையாட்டைப்பற்றி
பேசிக் கொண்டிருக்கிறேன்.
பார்த்தேன்
உன்
காதல்க் கவிதையின்
முதலெழுத்தைப் பார்த்தேன்
கேட்டேன்
உன் நேசக்கருவியின்
நாத ஒலி கேட்டேன்.
பேசினேன்
அவளுடைய
புல்லாங்குழல் இசைக்கிடையே
நசுங்கிக் கொண்டே பேசினேன்
அவளுடைய நேசத்தின்
ஆழம் காணும் அளவுக்கு
எனக்கு பார்வையில்லை !!!
விமானத்தில் தொலைந்து போன
உடைமைக்காக நான் கவலைப்பட்டபோது
கூடவே தொலைந்த
உன் புகைப்படத்துக்காய் மட்டுமே
உள்ளம் வருந்தினாள்
நலமா எனும்
சம்பிரதாய வார்த்தை தவிர
என்னிடம் பேசியது
உன்னைப் பற்றித்தான்
என்னிடமிருந்து
புறப்பட்ட வார்த்தைகளில்
உன் பெயர் இணைந்ததை மட்டுமே
புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள்
பேசினோம்
சாப்பிட்டோ ம்
நீ
என்ன செய்தாய் அப்படி ?
எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடேன்
மனசு மிதக்க மிதக்க
உன்னை
நேசத்துள் அமிழ்த்துகிறாள் அவள்.
எனக்குப் பிடித்திருக்கிறது
கதாநாயகியாய் நடிப்பதற்கான
கட்சிதமில்லை அவளுக்கு
உன்கூட வாழ்வதற்கான
கனமான நேசம் இருக்கிறது
போதாதா உனக்கு ?
பொறாமை விதைத்துவிட்டாள் என்னுள்
காதல்
என்னைக் கடந்து போயிருக்கிறது
அனு வின்
அணுக்களின் தான்
அது கரைந்து போயிருக்கிறது !!!
ஆனாலும் ஒன்று சொல்கிறேன்.
நீ வா
நீ முடிவு செய்
உன்னோடு நானிருக்கிறேன்
அவள் தான்
உன் இதயத்துடிப்பு என்கிறாய்..
அவளோ
இதயமே நீ தான் என்கிறாள்
அவள்
உன் மூச்சுக் காற்று என்கிறாய்
அவளோ
நுரையீரலே நீ தான் என்கிறாள்..
வாழ்த்துக்கள்
மற்றவை நேரில்
..
கடிதம் முடிந்துவிட்டது
கனவுகளைத் தொடரவிட்டு !!!
கனவுகளைக் கலைத்தது
பின்னாலிருந்து புறப்பட்ட
தொலை பேசிச் சத்தம்
எடுத்தேன்
பேசினேன்
முப்பது கோடி மின்னல் பூக்கள்
கண்ணுக்குள் கண நேரத்தில் கடந்து போனது
அம்மா தான் பேசினாள்
தங்கையின் திருமணம் முடிவாயிற்று
உடனே வா இந்தியாவுக்கு !!!

5
எப்படிச் சொல்வது ?
முட்டிக்கொண்டும் நிற்கும் வார்த்தைகளுக்கு
முட்டி உடையும் காதலித்தால்
உண்மை தான்.
தங்கையின் திருமணம் என்னும்
ஆனந்த அருவி ஒருபுறம் வழிய
அனுவைப் பார்க்கலாம் எனும்
அலைகடல் தான் மனதை மிகவும்
அலைக்கழிக்கிறது
முதன் முதலாய்
நேரில் பார்க்கப் போகிறேன்.
என்ன பேசுவது ?
இதுவரை நான் இப்படி சிந்தித்ததில்லை
வாய் திறந்தால்
வார்த்தைகள் பனிப்பாறை சொரிக்கும்
கேட்பவன் தான் பாவம்
தொப்பலாய் நனைவான்
காதலைப் பற்றி இதுவரை நினைத்திருந்த
மாயத் தோற்றம் என்பது
மறைந்தே விட்டது.
கர்ப்பமான மங்கை மாங்காய் கடிப்பதும்
காதலான மனங்கள் மெளனம் கடிப்பதும்
நீக்க முடியாத நியதிகள் என்பது
தெளியத்துவங்கியது
அவளுக்கு என்ன கொடுப்பது ?
வானவில்லை கொஞ்சம் வெட்டி
நகம் சீவ கொடுக்கலாமா ?
மேகத்தை கொஞ்சம் சுருட்டி
அவள் குளியல் தொட்டிக்குள்
நிரப்பலாமா ?
எனக்கே சிரிப்பு வருகிறது
நடக்காது என்று தெரிந்தாலும்
கனவுகளோடு நடப்பது தான்
காதலுக்குப் பிடித்திருக்கிறது !!!
அழகு சாதனங்கள்
உடைகள்..ம்ம்ம்ம்ம்..
கொஞ்சம்
மிகக் கொஞ்சமாய் தான் வாங்கினேன்
எதிர்காலம்..??
நேரில் போய்தான் முடிவெடுக்க வேண்டும்
நண்பர்களின் வார்த்தைகள்
கொஞ்சம் கொஞ்சம்
நெஞ்சில் மிஞ்சினாலும்
இனி அவளை
மறக்க முடியாது என்னும் எண்ணம்
நெஞ்சுக்குள் ஆணி அடித்து
மாட்டப்பட்டிருக்கிறது !!
அதோ இதோ என்று
நாளும் வந்தே விட்டது
இன்று மாலை
விமானம் என்னை விழுங்கி
நாளை மாலையில் சென்னையில்
துப்பப் போகிறது
அந்த உலோகப்பறவையின்
உடலுக்குள்
உட்கார்ந்திருக்கவேண்டும் எனும் கவலை
சந்திக்கப்போகும் உணர்வுகளால்
விழுங்கப்பட்டு விடுகிறது.
என்ன விந்தை இது ?
அலையடிக்கும் கரையாக
இரையும் இதயம்
மறு வினாடி மரிக்கும் நேரத்தில்
ஆழ்கடலாய் அமைதி கொள்கிறது
எரிமலையாய்
எரியத்துவங்கும் இதயம்
நிமிடங்கள் அடங்கும்போது
பனிமலையாய்
குளிரத்துவங்குகிறது
காதலில்
எதிரெதிர் துருவங்கள்
ஒரே புள்ளியில்
உற்பத்தியாகிறதா ?
நீரும் நெருப்பும்
இலக்கணமின்றி
இணைந்தே வளருமா ?
புரியவில்லை.
எனக்கு மட்டும் தான்
இவையெல்லாம் நிகழ்கிறதா ?
இல்லை இது
காதலின் பொது உடமையா ?
அனுவுக்கும்
அனுமதியின்றி கனவுகள் வருமா ?
வரும்.
வந்தாக வேண்டும்
அதுதான் காதலின் கட்டளை !
கடிகாரங்கள் கடமையை தொடர
காலண்டர்கள்
தற்கொலையைத் தொடர
சென்னையில் நான்
தரையிறங்கி விட்டேன்.
நண்பன் சொன்னது சரிதான்
சென்னை வெயில்
சுகாதாரச் சீரழிவினால்
பஞ்சுத் தோட்டம் தீண்டும் தீப்பந்தமாய்
சருமம் எரிக்கிறது
இதோ என் நண்பர்கள்
பதினோரு மாதமாய்
தொலைபேசித்
தொடர்புகளால் மட்டுமே
தொட்டுக்கொண்டிருந்த நண்பர்கள்.
இ-மெயில்
வார்த்தைகளால் மட்டுமே
விசாரிக்கப் பட்டவர்கள்.
உணர்வுகள் நெருங்க..
எலும்புகள் நொறுங்க
அணைத்துக் கொண்டேன்.
எதேதோ பேசி மனசை றைத்தேன்
இருந்தாலும்
அவள் ஓவியம் வரைவதற்காக
ஒருபக்கம் மட்டும்
வெள்ளையாகவே கிடக்கிறது
சம்பிரதாய சந்திப்புகள் முடித்து
மாலையும் மலர்ந்தது.
ஹாஸ்டல் நோக்கி என்
இரு சக்கர வாகனத்தை
இயக்கினேன்.
அனுவுக்கு
காலம் செல்லவில்லை.
சின்ன அறைக்குள்
மாரத்தான் ஓட்டம் நடத்தி நடத்தி
பாதங்கள் இரண்டும்
மரத்துப் போய்விட்டது
ஒரு சந்திப்பு
ஓராயிரம் முறை சிந்திக்கப்பட்டு
வார்த்தைகளை மனசுக்குள் பந்திவைத்து
பரிமாறக் காத்திருக்கிறது.
எல்லா நாட்களுக்குமே
இவ்வளவு நேரம் தானா ?
இல்லை
இன்றுக்கு மட்டும்
நாப்பத்தெட்டு மணி தூரமா ?
பூங்கொத்து கேட்டிருந்தாள்
பூக்கடைக்காரனை
இன்னும் காணவில்லை
நான்கு மணிக்கு பூக்காரன் வருவான்.
ஐந்து மணிக்கு காதலன் வருவான்.
இன்னும் ஒரு மணி நேரம் தான்
நிலவு ஒன்று
மாலையில் உதிக்கப் போகும் சூரியனுக்காய்
காத்திருக்கிறது.
பூ வந்திருக்கிறது.
ஹாஸ்டலில் சொன்னார்கள்
பாதங்களில் பரபரப்புக் கட்டி
அனு
அவசரமாய் கீழே ஓடினாள்
வரவேற்பறைக்குள் நுழைந்தபோது..
ஹாய் அனு
நான் தான் . உன்னுடைய .. .. ..
கையிலிருத்த ரோஜாவை நீட்டினேன்
பூவைத் தானே நீட்டினேன்.
பூகோளத்தையே கொடுத்ததாய்
பிரமிக்கிறாளா.
உ..உஉங்களை
எதிர்பார்க்கவில்லை..
இதோ வருகிறேன் என்று சொல்லி
ஒரு கொத்து வெட்கத்தை மட்டும்
என் கையில் திணித்து விட்டு
அதோ
அவள் அறையை நோக்கி ஓடுகிறாளே..

6
நிஜமாகவே என்னை
சந்தோசத்தின் இன்னொரு பக்கம்
இப்போது தான் சந்திக்கிறது
நேற்றைய நினைவுகள்
இன்னும்
மெலிதாய் சிரிக்க வைக்கிறது
அறைக்குள் ஓடியவள்
அரைமணி நேரம் காத்திருக்க வைத்தாள்
நேற்று ஹாஸ்டலில்
பிறகு வந்தாள்
வார்த்தைகளில் தெறிக்கும் வீரம்
நேரில் பார்த்தபோது காணவில்லை
வார்த்தைகளில்
வேங்கையாய் பேசுபவளா இவள் ?
நேரில் பார்க்கும் போது
மழையில் நனைந்த வெள்ளாடுபோல
மேனி சுருக்கி வெட்கம் விற்கிறாளே !!!
முகர்ந்து பார்த்தால்
வாசனையுடன் வாடிப்போகும்
அனிச்சமலரின் அவதாரமாய்
மூச்சுத் தீண்டினாலே
மூர்ச்சையாகும்
தொட்டாச்சிணுங்கியின்
தோழியாய்..
இதோ
என் விரல் தீண்டும் தூரத்தில்
என் வெண்ணிலா..
எத்தனை நேரம் தான்
வெட்கம் தின்பாய்
வேறு ஏதாவது தின்போமா ?
சாப்பிட்டோ ம்
அவள் முகத்தையும் அகத்தையும்
பதட்டத்துக்குப்
பட்டா போட்டுக் கொடுத்திருந்தாள்
நேரில் பார்த்து முடிவு செய்யலாம் என்றோம்
இன்னும் பேசவில்லை
கண்கள் சந்தித்தவுடன் காதல் சொல்வேன்
என்று எதிர் பார்த்தாள்
பார்த்தவுடன் காதலின் பூ கொடுப்பேன்
என்று காத்திருந்தாள்
இல்லை நான் நட்பின் இலைகளைத் தான்
பரிசளித்தேன்
அனு
உனது சூழல் வித்தியாசமானது.
நீங்கள் பன்னீரில் பல் துலக்கி
பழக்கப் பட்டவர்கள்
எங்களுக்கு பன்னீரே தண்ணீர் தான்.
நாங்கள் நடுத்தர வர்க்கம்
வானமும் எங்களுக்குச் சொந்தமில்லை
பாதாளமும் எங்களுக்கு பழக்கமில்லை
தினசரி மழையில்
தலை நனைத்துக் கொள்ளும்
சராசரிப் பயிர்கள் நாங்கள்
சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன்.
அனு வாய் திறந்தாள்..
நான் வானத்தோடு விளையாடிவந்த
வெண்மேகம் தான்
ஆனால் மண்ணை முத்தமிடுவது தான்
பிடித்திருக்கிறது.
உன் கட்டளைக்குக்
காத்திருக்கும்
கார்மேகம் நான்
கடலில் விழுந்து தற்கொலை செய்யவா
மண்ணில் விழுந்து மரத்துப் போகவா ?
இல்லை
உன் உள்ளங்கைக்குள் ஒளிந்து கொள்ளவா ?
நீ சொல்
என் தோற்றம் உனக்கு
ஏமாற்றம் தருகிறதா ?
அவளைப் பார்த்துக் கேட்டேன்.
சாலை கடக்கும் வழிப்போக்கனாய்
நீ இருந்திருந்தால்
உன் அழகைப்பற்றி
ஆராய்ச்சி செய்திருப்பேன்
நீ
என் அகம் கடைந்தவன்
என் இதய மலை குடைந்தவன்
உனக்குள் நாள்
சுவாசம் பகிர னைக்கிறேன்
நீயோ
நுரையீரல் பிடித்திருக்கிறதா
என்று
மூச்சுக் காற்றுக்கு வினா தொடுக்கிறாய்
விழமறுக்கும் நகத்தோடு
விரல் எழுப்பும் வினா இது
தனைத் தழுவும் இமையோடு
கண் விடுக்கும் கணை இது
என்னை யாரோ
சம்மட்டியால் அடித்தது போல்
அவமானம் கொஞ்சம்
விழுங்கித் தொலைத்தது..
வெளிக்காட்டவில்லை.
நாளை மதுரை செல்கிறேன்
தங்கையின் திருமணம்
இன்னும் நான்கு நாட்களில்
ம்ம்
எப்போ வருவீங்க ?
வருகிறேன்
இன்னும் ஒரு பத்து நாட்கள் ஓடட்டும்
பிப்ரவரி 13 இரவு சென்னை வருவேன்..
அடுத்த நாள் உன்னை சந்திக்கிறேன்
அனுவின் மனம் முழுதும் மெளனம்
பதட்டம்
காத்திருந்து காத்திருந்து
விழிகள் சந்திக்கும் போது
அவனை விழுங்கி விடும் காதல் எனக்கு
அவனோ இதோ எதிரில்,
மழையில் நனையும்
மகாபலிபுரம் சிற்பமாய் மெளனம் காக்கிறான்..
பிடிக்கவில்லையா ?
அந்த எண்ணமே
அனுவின் கண்களுக்குள்
அணைகளை உடைத்தது
தீ மிதித்துக் கொண்டிருக்கும்
ஓர்
கடல் ஆமையாய்
கால்கள் வலித்தது
இரவில் ஓர்
வேலிக்குள் சிக்கிய
வெள்ளைப்புறாவாய்
சிறகுகள் தளர்ந்தன
நான் சுற்றிலும் பார்த்தேன்
இந்த இடம் நான் பலமுறை
வந்த இடம் தான்
இன்று
புதிதாய் தோன்றுகிறது !!!
காலையில் என்வீட்டுக் கண்ணாடி கூட
கண் வலிக்கிறது என்றது
பாவம்
எத்தனை நேரம் தான்
என் பிம்பம் பார்க்கும் ?
அனு நேரமாகிறது
பத்துநாட்கள் பொறுத்திரு
சரி
என்னை நேரில் பார்த்துவிட்டாய்
ஏன்டைய எண்ண ஓட்டங்களோடு
இணைந்து கலக்க முடியும்
என நினைக்கிறாயா ?
கண்டிப்பாக
பட்டென்று பதிலிறுத்தாள்
அனு.
உன்னுடைய பாதங்களோடு பயணிக்கவும்
உன்னுடைய சுவடுகளோடு
சொந்தங் கொண்டாடவும்
உன் நிழலோடு
விளையாடவும் தான் பிடித்திருக்கிறது.
நான் எனும் நான் மறைந்து
இப்போது
நான் என்பதே நீ தான்
படபடப்பாய் பேசினாள் அனு..
ஒரு பட்டாம் பூச்சி
சிறகடிக்கும் அழகுடன்.
உங்களுக்கு.
அனுவின் கேள்வி என்னை நோக்கி விழுந்தது
ம்ம்ம்ம்
கொஞ்ச நாள் பழகினால் தான்
பதில் சொல்ல முடியும்
பதட்டமில்லாமல் பதில் சொன்னேன்
பலகோடிப் பறவைகளின்
அலகுகள் கொத்திய அவஸ்தையில்
சிரிக்க முயன்று தோற்றுப் போய்
புன்னைகைத்தாள் அனு
மீண்டும் சந்திப்போம்
நான் கையசைத்து விடைபெற்றேன்

7
அனுவுக்கு மனம் வலித்தது
கடல் கலக்கும் கனவுகளுடன்
கண்விழித்து ஓடிய நதி
அருவியில் விழுந்து குருடாகிப் போனதாய்
திக்குத் தெரியாத
முள்காட்டுக்குள் பாதைதொலைத்து
பதறி நிற்கும் புள்ளிமானாய்
குழப்பத்தின் சந்துக்குள்
தள்ளப்பட்ட ஒரு பிடி இருளாக
இதயம் கரைந்தாள்
என்னவாயிற்று இவனுக்கு ?
காத்திருந்து காத்திருந்து
மோதிரம் வேண்டி விரல் நீட்டியபோது
கரம் உதிர்ந்து போன அவஸ்தை
வீட்டிற்குச் சென்றாள்
வட்டத்துக்குள் வட்டமடிக்கும்
கடிகாரமுள்ளாய்
விட்டத்துக்குள் பார்வையை
வட்டமிட வைத்தாள்
வயிறு காலியாக இருந்தாலும்
இதயம் கனத்திருந்ததால்
உணவுக்கு பசி மட்டுமே தின்ன முடிந்தது
பேனா
முகம் கவிழ்ந்து அழத் துவங்கியது
விரல்கள் கண்ணீர்த் துளிகளை
காகிதப் பரப்புக்களில் படரவிட்டது
” வெண்மதி வெண்மதியே ல்லு
நீ.. வானுக்கா மேகத்துக்கா சொல்லு”
மின்னலே படப்பாடல்
வெண்மதியின் வாயிலிருந்து
தொடர் மின்னலாய்
தெறித்துக் கொண்டிருந்தது.
நட்புவேலி தாண்டி
காதல் கொடி படர்ந்து விட்டபிறகு..
கிளைகளைக் கிள்ளி உலர விடுவானோ ?
புரியவில்லை
கண்விழித்துப் பார்த்திருந்த
கனவுகள் எல்லாம்
பலிக்காத பகல் கனவாகிப் போய்விடுமோ ?
என் கூரையை மட்டும்
வானமழை வட்டமிட்டுவிட்டு
தொட்டு விடாமல் தூரம் போய்விடுமோ ?
இடம் பொருள் ஏவல் இன்றி
ஐம் புலன்களுக்குள்ளும் ஐக்கியமான
உன் பிம்பத்தை
எப்படி நான் பிரித்தெடுப்பது ?
விரல் கிழித்து இரத்தம் தொட்டு
காதல் எழுதினாள்
ஏன் நான் காதலித்தேன் ?
கடலில் வலை விரிப்பவனும்
காதலுக்குள் அகப்படுபவனும்
கன்னங்களில்
உப்புத்தண்ணீர் உருள்வதை
தடுக்கவே முடியாதா ?
உன்னை
சுவாசமென்று சொல்லவில்லையே
ஏன்
வெளியேறிப் போகிறாய்
மனசே லவ் பிளீஸ்.
ஒரே ஒருமுறை சொல்லிவிடேன்
என்னை காதலிப்பதாய்
வலிக்கும் என்
இதயத்தின் இதழ்களுக்குள்
ஒரே ஒரு
ஆறுதல் முத்தம் அளித்துப் போ
காதல் கத்தியால் ஏன் வெட்டுகிறாய் ?
ஒரு வார்த்தை..
ஒரே ஒரு வார்த்தை சொல்லி
என் கவிதையை
முடித்துவிட்டுப் போயேன்..
தொடரும் என்று..
தவணைமுறையில் கோர்த்து வைத்த
காதல்
மொத்தமாய் தொலைந்துவிடுமோ
எனும் கவலையில்
இரவுகள் கூட அவளோடு விழித்திருந்தன.
இரவின் நிறம் கறுப்பு என்பதும்
அது பகலை செரிக்கப்
படுத்துக் கிடக்கிறது என்பதும்
காதலிக்கும் அனைவருக்கும் புரியும்..
அனுவுக்கும் புரிந்தது..
ஒரு நாள்..
மறு நாள்
யுகங்களைத் திணித்த யுவதியாய்
மெள்ள மெள்ள பயணித்தன நாட்கள்..
என்ன செய்வதென்று புரியாமல்
அமெரிக்காவில் அவன் தோழர்கெல்லாம்
தொலைபேசி தொட்டு
காரணம் கேட்டாள்
ஒருவழியாக வாரம் ஒன்று கடந்துவிட்டது.
இதோ நாளை வருவான்
நாளை சொல்லிவிடவேண்டும்
கேட்பதற்காய் காதுகள்
காத்திருக்கும் போது
மெளனம் வழங்கப்படுவது தான் வலி !!
நாளைக்குப் பேசிவிட வேண்டும்
மனதுக்குள் எழுதிக் கொண்டாள்
என்னை காதலிக்கவில்லையா ?
கவலையில்லை
என் கண்ணீரில்
நான் குளித்து முடிக்கிறேன்.
தோழியாய் என்னை ஏற்றுக் கொள்ள
தயவுசெய்து தயங்கிவிடாதே
கடிகார அலாரம் கண் சிமிட்டிக்
கண் சிமிட்டி
காலை வணக்கம் சொன்னது
இன்று
காதலர் தினம்
உற்சாகங்கள் எல்லாம்
உறக்கம் தொலைக்கவில்லை
கனமான கவலை இமைகளால்
தாழ்ப்பாள் இடப்பட்டுக் கிடக்கிறது
இதயம்.
தொலைபேசியில்
அவனுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும்
யோசனையுடன் வரவேற்பறை தொட்டாள்
இனிய
காதலர் தின வாழ்த்துக்கள் கண்மணி
சட்டென்று சுவாசம் கடிவாளம் போட்டு
உயிரை நிறுத்த
திருப்பிப் பார்த்தாள்
பாலைவனத்தில்
குடிக்கத் தண்ணீர் தேடியவனை
குற்றால அருவிக்குள் நனைத்ததாய்
மொத்தமழையும் உச்சந்தலையில்
முத்தமிட்டதாய்
இதயக்கூட்டுக்குள் ஒர்
இமயமலை வெடித்தது அனுவுக்கு
ஐ லவ் யூ.
கரங்களில் பூவும்..
கண்களில் காதலுமாய்
நான்

8
சந்தோசம் இலவம் பஞ்சாகி
உயர உயரப்
பருந்துக் கூட்டம் போல
பறந்து கொண்டிருந்தது
எனக்கும்
அனுவுக்கும் இடையே
இடைவெளிகள் குறைந்தன
பரிசளிப்புகள்..
கடிதக் கட்டுகள் பரிமாறி
காலை முதல்
காலையைத் தின்னும் மாலை வரை
கண்களுக்குள் கவிதை மொழிபெயர்த்தோம்
சில கணங்களின் இடைவெளியில்
சில கிரகணங்களை செலுத்தி
சில பிரபஞ்சங்களுக்கு இடையில்
புதிதாய் பிறந்து
புரியாத மொழியில் பேசி
பிடித்தமான விதத்தில் அதை
அர்த்தப் படுத்திக் கொண்டு.
நாட்கள்
அர்ஜுனனின் அம்பாய்
அலறிப் பாய்ந்தது
என்னுடைய விடுமுறை முடியப் போகிறது
எனும் கவலை
மனசில் முடிச்சு இட்டது
சந்தோஷத்தின் எல்லைகளில்
சப்தமிட்டு
தனித்தீவுக்குள் தங்கிக் கிடக்கும்
பனிப்பூக்களை
மனமெங்கும் நிரப்பியதாய்
மனசு மணக்க
நாட்கள் ஓடின..
அன்று.
சின்ன நிலநடுக்கம்
என் மனசில்..
வழக்கம் போல வீடு வந்த என்னை
காத்திருந்து சந்தித்தான் நண்பன்.
ஏற்கனவே மகிழ்ச்சியில் மூழ்கிக்கிடந்த
நான்
மீண்டும் மிதக்கத் துவங்கினேன்
பேசிக் கொண்டிருந்த அவன்..
சட்டென்று அழ ஆரம்பித்தான்
எனக்குப் புரியவில்லை
கேட்டேன்
சொன்னான்
இப்போதெல்லாம்
நான் நண்பர்களைக்
கண்டு கொள்வதில்லையாம்
ஒரு மின்னல் கண்ட உடன்
வானத்தை விட்டு விட்டாயே
ஒரு பூ வாங்கும் வேகத்தில்
இந்த மரங்களை விற்று விட்டாயே
எனக்கு என்ன
சொல்வதென்று புரியவில்லை
இந்த உறவில்
நம் நண்பர்கள் யாருக்குமே
மகிழ்ச்சியில்லை.
நீ துடுப்புக்களை துறந்து விட்டுத்தான்
ஓடம் ஓட்டுவாயோ ?
வற்றிக் கிடக்கும்
வைகையாற்றின் மீது
வாய் வறண்டு நிற்கும் ஆடுகள் தான் நாங்கள்
ஏன் வற்றி விட்டாய் என்று கேட்கக் கூட
என் நாவில் ஈரமில்லை
நண்பன் தழுதழுத்தான்.
எனக்குப் புரியவில்லை
நண்பா
உன்னை நான் மறந்து விட்டேனென்று
ஏன் நினைக்கிறாய் ?
பிறகு ஏன் என்னை நினைக்க
மறந்தாய் ?
மறக்கவில்லையே.
சொஞ்சம் வேலைப்பழு அதிகம்
அதான்ன். இழுத்தேன்
வேலைப் பழு!!!
அதனால் உனக்கு வேளை இல்லை.
உன் சுற்றுப்புறமும்
சொந்தமும்
நண்பர்களும்.
எல்லோரையும் விழவைத்துத் தான்
நீ வாழப் போகிறாயா ?
மலேஷியா வின்
கலாச்சாரம் என்ன என்பதாவது தெரியுமா?
ஏன் ??
ஏன் இதெல்லாம் ?
நண்பன் பட படவென்று பேசினான்.
புரிந்தது..
எல்லா நண்பர்களுக்கும்
பிரதிதியாய் தான் இவன்
பேசுகிறான்.
என் பதில் பாதிவழியில்
படுத்துக் கொண்டது
மெளனமாய் சென்று படுத்துக் கொண்டேன்.
சிந்தித்தேன்.
காதல் வெற்றியடைவது
காதலர்களின் சம்மதத்தில் இல்லையா ?
செடிகள் பூக்கவேண்டுமென்றால்
வேலிகளிடம்
வரவேற்புப் பத்திரம் வாங்க வேண்டுமா ?
ஏன் என்னை புரிய மறுக்கிறீர்கள் ?
இது என் வாழ்க்கை
நான் முடிவெடுக்க முடியாதா ?
தீர்ப்புக்கள் எழுதியபின் வாதிட்டு என்ன
நடக்கப்போகிறது ?
பல்வேறு சிந்தனைகள் வட்டமிட
தூங்கிப் போனேன்
அரைத் தூக்கத்தின் இடையே
உள் உணர்வில் பேச்சுக் குரல் கேட்டது..
நண்பன் தான்..
அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறான்
அம்மா.
ஒரு நல்ல பெண் பார்க்க வேண்டும்.
தங்கை திருமணம் முடிந்துவிட்டது.
இனி மேல்
இவனுக்குத் தானே
பார்க்கும் பெண்
நம் சமூகத்தை
சாதியை சார்ந்திருக்கட்டும்..
திடுக்கிட்டுத் திரும்பினேன்
நண்பன் எதுவும் தெரியாதது போல்
சிரித்துக் கொண்டிருந்தான்

9
தொடர்ந்து வந்த நாட்கள்
என்னை ஏதோ ஒரு
எல்லைக்கோட்டுக்குள்
போட்டுப் பூட்டுவதாய் எனக்குத் தோன்றியது
எங்கும்
என் காதலுக்கு வரவேற்பில்லை
ஒரு நண்பன் மட்டும் எதிர்க்கவில்லை
ஆதரித்தான்.
இலக்கியங்களிலும்,
திரைப்படங்களிலும்
தேவதைக்கூட்டத்துக்கிடையே
இளைப்பாறிக் கொள்ளும் காதல்
நிஜவாழ்க்கையில்
களைப்படைந்துக் கிடக்கிறது.
என் காதலுக்கு ஊட்ட என்னிடம் கூட
ஊட்டச்சத்து இல்லை
வெளிறிப் போன வெள்ளெலியாய்
இரத்தம் தொலைத்துக் கிடக்கிறது மனசு.
அவளை மறப்பது என்பது
நினைப்பதில் கூட சாத்தியமில்லை
அம்மாவுக்குத் தெரியாது
என் காதல் பற்றி.
தெரிந்தால் கண்ணீர் நிச்சயம்.
முதலுதவிப் பெட்டிக்கு
முதுகெலும்பு உடைந்ததாய் தோன்றியது
நண்பர்கள் எதிர்த்தபோது
என் காதல் கொடி படர
கொழுகொம்பு அவர்களின் தோள்கள் என்று
நம்பியிருந்தேன்.
முளைக்கு நிழல் தரவே மறுக்கிறார்கள்.
அனுவின் வீட்டில் விஷயம் கேள்விப்பட்டபோது
அதிர்ந்து போனார்கள்.
மலேஷிய நகர்முழுதும்
பணம் விற்கும் பணக்காரர் அவர்.
சாலையைக் கடக்கவே
கார் பயன் படுத்தும் கனவான்.
வழக்கமான எதிர்ப்பு
ஆனால் அவர்களை
சமாதானப் படுத்திவிடலாம் எனும் எண்ணம்
நிறையவே இருந்தது.
நாட்கள் ஓடின
நடக்கமுடியாதபடி விலங்குகள்
பேசமுடியாதபடி பூட்டுகள்
பறக்க முடியாதபடி சிறைகள்
என்ன செய்வதென்று
புரியவில்லை.
மாலையில் சந்தித்தோம்
கடற்கரையில் மங்கலான நீல ஒளியில்.
அனுவின் பார்வையில்
வழக்கமான ஒளி இல்லை..
பேசினாள்
எனக்காக நீங்கள்
எல்லா பக்கமும் நெருக்கப் படுகிறீர்கள்
அதற்கு மேல் அவள் பேசவில்லை
கையிலிருந்த
ஒரு கடிதத்தை நீட்டினாள்
அதில்
பிரியமே
இரத்தம் சிவப்புதானே என்றால்
அதிலும்
பாசிட்டிவ் தேடுவார்கள்
நெகட்டிவ் வாதிகள்
மண்ணுக்கும் வேருக்கும்
இருக்கும் இறுக்கம்
வேலிகளுக்கு புரிவதில்லை
சொட்டுச் சொட்டாய்
இரத்தம் வடித்தாலும்
கொட்டோ கொட்டென்று
கண்ணீர் வடித்தாலும்
பலரும் பயம் கொள்வதெல்லாம்
பார்வையாளர்களைப் பார்த்துத் தான்..
நான் மகிழ்கிறேன்
உன் வலிமை வாய்ந்த இதயத்துக்குள்
இடம் பிடிக்க முடிந்ததில்
நேசம் பெய்யும் நெஞ்சுக் கூட்டில்
ஒதுங்க முடிந்ததில்.
இன்னும் உன் எண்ணச் சிறகுகளில்
சிக்கிக் கிடப்பதில்
உண்மையாகவே மகிழ்கிறேன்.
உனக்குத் தெரியும்
நான் உன்
நிழலைக் கூட காதலிக்கிறேன்.
என் கண்களில்
நீ சொல்லியதும்
நீ படித்ததுமான கவிதைகள் தான் அதிகம்
நம்
தேனிலவுக் காலத்தின்
ஓர்
தேய் நிலா வெளிச்சத்தில்
உனக்கு என்
காதலைச் சொல்லவேண்டும்
சுற்றிலும் கடல் வேலியிட்ட
ஓர்
தீவுக்குள்
உன்னைக் கொஞ்சம் கொஞ்ச வேண்டும்.
குளிர் வந்து கதவு திறக்கும்
விடியல் பொழுதுகளில்
நம் விழிகள் சந்தித்து
காலை வணக்கம் சொல்லவேண்டும்
கொஞ்சமாய் ஊடல்
நிறையவே கூடல்
என்று
என் செல்களெங்கும்
செதுக்கி வைத்திருந்த ஆசைகள்
சீனப் பெருஞ்சுவரைச் சிறிதாக்கும்
நான் வேண்டும் வரமெல்லாம்
ஒன்றுதான்
ஜென்மங்கள் மேல் எனக்கு
நம்பிக்கை இல்லை.
அப்படி ஒன்று இருந்தால்
வினாடி நேரமும் பிரியாத உறவாய்
நீ எனக்கு வேண்டும்.
எனக்கு மட்டுமாய்.
அன்புடன்..
அனு
படித்து முடித்தவுடன்
பேச முடியவில்லை
அனு.
காதலின் வெற்றி என்று
எதை னைக்கிறாய் ?
தோற்காத காதலை
சொல்லிவிட்டுச் சிரித்தாள்
செல்லமாய் கிள்ளிவிட்டுச் சொன்னேன்
என் மனசுக்குள் நீ யும்
உன் மனசுக்குள் நானும் இருப்பது தான்
காதலின் வெற்றி
உன்னை மறக்கவோ மறுக்கவோ
நினைக்கும் போது
இதயம் பாரமாகிப் போய்
கண்கள் கசிகிறதே அதுதான் காதல்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
இருக்கும் காதல்.
உன்னையும் என்னையும்
பிரிந்து விடாது கவலையை விடு
அனுவின் விழிகள் நனைந்தன
உண்மை தான்
காதல் ஒரு நந்தவனம்
அதில் நடந்த நாட்கள் தான் குறைவு
எனக்கு மனமில்லை
இந்த ஏதேன் தோட்டத்தை விட்டு விட்டு
ஏதோ ஓர் தோட்டத்துக்குள் நடப்பட
சொல்லிவிட்டுக்
கண்களைத் துடைத்துக் கொண்டாள்
நிமிர்ந்து அவளைப் பார்த்தேன்.
ஒரு முல்லைப் பூவை
ரயில் வண்டி மிதிக்கக் கூடாது
வாசல் வந்த ரோஜாப் பூவை
வெள்ளாவிக்குள் வீசக் கூடாது
ஒவ்வொரு சொட்டுக் கண்ணீருக்குள்ளும்
உறைந்திருக்கும் என் பிம்பம்
உடைந்து விடக் கூடாது
முடிவெடுத்தேன்
மெதுவாய் அவள் கரம் பற்றினேன்
கிளைகளில் கிளிகள் உட்கார்ந்ததற்கே
கவலைப்படுகிறாயே.
சந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது
பாதை முடியும் வரை பயப்போம்
வா
என் கரங்களுக்குள் அவள்
தோள்களில் அவள் முகம்
பேரரசை பிடித்துவிட்ட பெருமிதமும்.
ஒரு யுகம் வாழ்ந்த புன்னகையும்
என் முகத்தில்.

10
என்னுடைய நம்பிக்கை
வார்த்தைகள் விழுந்தபின்
அனுவின் உள்ளே
ஏராளம் விதைகள் முளைத்தன.
சிரித்தாள்,
உன் நம்பிக்கை மொட்டுகளுக்குள்
நான்
இன்னொரு செடியாய்
மலர்வேன்.
சுட்டெரிக்கும் சூரியன்
விழாது எனும் நம்பிக்கையில் தான்
பூமியே
சற்றும் சளைக்காமல்
சுற்றிக் கொண்டிருக்கிறது,
நீயும், நானும்
பற்றிக் கொண்டிருக்கிறோம்.
வானம் வழுக்கி விழாது,
பூமியின் அடிப்பாகம் உடைந்துவிடாது,
நட்சத்திரங்கள் கழன்று விழாது
என்னும்
நம்பிக்கைகள் தானே
இயற்கைக்கு ஆதாயம்.
மனசின் நம்பிக்கை தானே
வாழ்க்கைக்கு ஆதாரம்.
மெல்லச் சிரித்தேன்.
அனு,
உன் புன்னகைக்காக
என் உறவினரோடெல்லாம்
சுண்டெலிச் சண்டைகள்
போட்டிருக்கிறேன்
“சுண்டெலிச் சண்டையா ? “
என்ன அது
வியப்பை விரித்த விழிகளால்
மெல்ல என்னைச் சுருட்டி
ஆழமாய் பார்த்தாள் அனு.
எத்தனை முறை
அடுக்கிவைத்தாலும் கலைந்துவிழும்
அடுக்களைப் பாத்திரங்களாய்,
உன்னைப் பற்றி
அவர்கள் சொல்வதை எல்லாம்
கலைத்துக் கொட்டுகிறேனே
அங்கும் இங்கும்
போக்குக் காட்டி
உன்னை எங்கேனும் சந்திக்க
சுரங்கம் தோண்டுகிறேனே.
இதெல்லாம்
சுண்டெலிச் சண்டைகள் இல்லையா ?
அனு சிரித்தாள்
பிடிக்க வைத்த பொறிகளை எல்லாம்
பொறி வைத்துப் பிடிக்கலாம்.
நீ என்னோடு இருந்தால்
இனி
ஓசோனின் ஓட்டைக்கெல்லாம்
ஒப்பாரி வைக்க மாட்டேன்.
நீ,
சொல்லும் இடங்களிலெல்லாம்
என் மனசு
தங்கி இருக்கும்,
நீ
செல்லும் இடங்களிலெல்லாம்
என் மனசும்
சுவடாய் தொடரும்
நீயும் நானும்
இனி
கற்பனை விழுங்கிய காதலரல்ல
நிஜத்தை ஜீணரத்த காதலர்.
உன் எல்லைகளும்
எல்லைகளும்
ஒற்றை கோட்டுக்குள்
ஒடுங்கியே கிடக்கும்.
உன் சிந்தனைகளும்
என் சிந்தனைகளும்
ஒரே பறவையின்
இருசிறகுகளாகும்.
அனுவின் முகத்தில்
மெல்லியதாய் படர்ந்தது
தொலைந்து போயிருந்த
ஆசுவாசம்.
மழலையின் சிரிப்பில்
முந்தானைக் கவலை மறக்கும்
தாயாய்,
மெல்ல அணைத்துக் கொண்டேன்.
அந்த அணைப்பிற்குப் பின்
எனக்குள்
விடாமல் எரிந்து கொண்டே
இருந்தது,
காதலை காரணம் காட்டி
என்னை விட்டுச் சென்ற நண்பர்கள்
நினைவு.
11
போய்த் தான் ஆகவேண்டுமா ?
விமான நிலையம் வந்து
விழிநீர் கடித்து,
உதடுகளை வாய்க்குள் புதைத்து
விசும்பலை
விழுங்கியே கேட்டாள் அனு.
இதென்ன அனு.
அமெரிக்கா என்ன
எஸ்கிமோக்களின் தேசமா ?
இல்லை அது
எட்டாவது கிரகமா ?
ஒரு தொலைபேசித் தூரம்.
ஓரு நாள் பயணத்தின்
நேரம்.
கவலைப் படாதே.
ஆலய மணிச் சத்தத்தில்
கோபுரக் குருவிகள் படபடக்கும்
ஆனால்
சத்தம் செத்ததும் மீண்டும்
சத்தமில்லாமல் சென்றமரும்.
மனசும் அப்படித்தான்.
கடைந்து கொண்டே இருந்தால்
கலைந்து கொண்டே இருக்கும்
கொஞ்சம் அதைத்
தெளிய விடு.
நிகழ்வுகளை நடக்கவிடு.
ழலைப் பிய்த்தெறிந்துவிட்டு
கால்கள்
தனியாய் போக இயலாது.
பொருளாதாரப் பொதிகளில்லாமல்
இங்கே
கழுதைகளுக்கே காகிதம்
தின்னத் தரமாட்டார்கள்.
கண்களைத் துடைத்துக் கொள்.
கண்ணீர் துளிகளை உறையவைத்து
பார்வை தேவதையை
குருடாக்கி விடாதே.
உன் இதயம் துடிக்கும்
வினாடிகளைக் கணக்கிட்டே
என்
மூச்சுக் காற்று
நிம்மதிப் பெருமூச்சு விடும்.
மின்னல் வேகத்தை மிஞ்சட்டும்
உன்
மின்னஞ்சல் பிரயோகம்.
ஆறுதல் சொல்வது எளிது தான்
ஆனால்,
எனக்கு யார் ஆறுதல் சொல்வது ?
ஆலயத் தூண்கள்
அறுந்து விழுந்ததாய்,
ஆறுதல் நண்பர்கள் விலகினர்.
ஓடுபாதை விலகிய விமானமாய்
மனம்
நட்புச் சுவரில் மோதி
அழுகிறது.
வழக்கமான பயணம் தான்
இந்தமுறை
வழக்கத்துக்கு மாறாய் வலிக்கிறது.
நெஞ்சுக்குள் நெருஞ்சிக் காடு
நெரிபட்டதாய்,
சுவாசப் பைகள் எல்லாம்
ஒழுகுவதாய்,
இரத்தக் குழாய்கள் எல்லாம்
கசங்கியதாய்,
மனசைப் பிசைந்தது வலி.
வேறு வழி இல்லை.
இதோ
கடமை தவறாத கடிகாரம்
விமானத்துக்குள் என்னை
இருத்தியும் விட்டது.
யாரேனும் காலத்தை
கொஞ்சநேரம்
கட்டிப் போடமாட்டார்களா
என்னும் எண்ணத்தோடு
இருக்கைப் பட்டை அந்தேன்.
ஒரு அதிர்ச்சிச் செய்தி
எனக்காய்
அமெரிக்காவில் காத்திருந்தது.

12
நிறையவே ஆச்சரியங்கள்.
எத்தனையோ பொழுதுகள்
இந்த
ஒற்றைப் படுக்கையில்
புரளாமல் படுத்திருக்கிறேன்.
படுத்தவுடன் பட்டென்று
தூங்கிப் போயிருக்கிறேன்,
இப்போது
எல்லாம் மாறிவிட்டது.
அலாரம் எழுப்பி விடுவது முதல்
ஏதோ ஓர் ஜாமத்தில்
என்னையறியாமல்
தூங்கிப் போவது வரை
அவள் நினைவுகள் அலைக்கழிக்கின்றன.
சிந்தனைகள் ஏதுமின்றி
கடிகாரம் பார்த்த காலங்கள்
இனி இல்லை,
கடிகாரம் பார்க்காமலேயே
சிந்தித்துக் கரையும் நாட்கள் தான்
இனி மிச்சம்.
கையடக்கத் தொலைபேசி
என்
கொஞ்ச நேரத்தையும்
விழுங்கிச் சிரித்தது.
மின்னஞ்சல் தேருக்காய்
இணையச் சாலை
தூக்கம் தின்று விழித்திருக்கிறது.
முன்பெல்லாம்
ஏதேனும் அழகிகளைக் கண்டால்
அனு நினைவுகள் எழும்,
இப்போது
அவள் நினைவுகளோடு நடப்பதால்
அழகிகளைக் காண்பதில்லை.
கவிதை நண்பனும்
ஓர் கலாட்டா நண்பனும் தான்
மிச்சம் இருக்கிறார்கள்
பேச்சுத் துணைக்காய்.
காதல் என்ன சிறையா ?
ஒற்றை இடத்தில் மனசு தங்குதே.
இல்லை
அது சிறையல்ல,
அந்த ஒற்றை இடத்திலே
உலகை இருத்துதே.
கிடைக்குமிடத்தில் தாளம் போட்டே
இறந்தகாலம்
இசையாய் கிடக்கிறது,
ஒரு
பச்சைக்கிளி மனசில்
படபடத்த பின்
இசைத்தவை எல்லாம் இறந்தே விட்டதே.
அனு
நீ,
ஆச்சரியங்களின் ஏதேன்.
இல்லை இல்லை
நீதான் ஏதேனின் ஆச்சரியம்.
இல்லை இல்லை
நீ தான் ஏதேன்..
காதல் வந்தபின் எதையும்
ஒருமுறை சிந்தித்து முடிவெடுக்க
முடிவதில்லை.
முடிவில்லா சிந்தனைகள்
இல்லையேல்
சிந்தனைகளே இல்லா முடிவுகள்.
இரண்டில் ஒன்றே சாத்தியம்.
பிடித்திருக்கிறது.
கடலில் குளித்தாலும்
காதலுக்குப் பின்
குடிக்கும் தண்ணீர் உவர்ப்பதில்லை.
உள்ளங்கையில் இருந்தாலும்
நான்
தேடும் பொருள் கிடைப்பதில்லை.
காதலின் காற்றடித்து
என் நாட்கள் மெல்ல மெல்ல
நகர்ந்து கொண்டிருந்தது.
காதலைத் தவிர எதையும்
காதில் வாங்காத எனக்கு
ஓர்
அதிர்ச்சி இடி மின்னஞ்சலில்
மின்னலில்லாமல் வந்திறங்கியது.
ஆரம்பப் பள்ளியின்
அரை டிராயர் பையனாய்
எழுத்துக் கூட்டி மீண்டும் படித்தேன்.
பிழையில்லாமல் இருந்தது
பிழையான அந்த கடிதம்.
எனக்குள் பூத்து நின்ற
அத்தனை மலர்களும்
சட்டென்று கண்மூடின,
வழக்கத்துக்கு மாறாய்
தாமரைகளும் தண்ணீரில்
தலைமறைவாயின.
எச்சரிக்கை முரசு கொட்டப்படாமல்
எப்படி வந்தது இப்படி ஒன்று ?
வந்த செய்தி
இந்த செய்தி தான்.
அமெரிக்க வேலை இனியில்லை
இந்தியாவுக்கு போ.
0

13
என்ன செய்வதென்று தெரியவில்லை.
ஆகாயத்தில்
விமானம் ஒன்று
இறக்கை முறித்துக் கொண்ட
இக்கட்டான அவஸ்தை.
அனுவோடு
அனுதினமும்
இந்த சாலைகளில்
பனிச்சறுக்கும் கனவுகளில்
வழுக்கிய மனசு,
தீமிதித்ததாய் துவண்டது.
எதுவும் நிரந்தரமில்லை என்பது
இப்போது தான்
புரிய வருகிறது.
கடல் வற்றுமா எனும் கேள்விக்கு
எது கடல் எனும் கேள்வி
விடையாய் வந்து நிற்கிறது.
சோகம் கப்பும் மனசோடு
அனுவை
தொலைபேசினேன்.
புள்ளி வைத்து பேசத் துவங்கினேன்
வேலை இனி இங்கில்லை.
எதிர் முனையிலிருந்து
அதிர்ச்சிக் குரலை
காத்திருந்த எனக்கு
அவள் ஆரவாரக் குரல்
ஆச்சரியக் கிளை முறித்தது.
என் புள்ளிகள் முடியும் முன்
புள்ளி மானாய் குதித்தாள்.
நான்
உன்னை சந்திக்கப் போகிறேனா ?
உன் விரல்களுக்குள்
விரைவில்
விழுந்து விடுவேனா ?
பஞ்சு மிட்டாய் கண்ட
பிஞ்சுக் குழந்தையாய் புரண்டது
அவள் குரல்.
அவள் குதூகலத்தில்
என்
சோகம் உடைந்து சிதறியது.
நான்
மலையாய் சுமந்ததே
அவளுக்கு
மாலையாய் அமைந்ததே.
காயப் போட்ட நெல்லை
மழை நனைக்குமோ எனும் கவலை
சிலருக்கு,
விதைத்து வைத்த விதையை
மழை நனைக்காதோ
எனும் கவலை சிலருக்கு.
இப்போது
என் கவலை மலைகள்
இடம் பெயர்ந்து கடலில் விழுந்தன.
ஓர்
சந்தோச வெற்றிடம் உள்ளே
உருவாகி,
அவளை இழுத்து நிரம்பியது.
யாருக்குமே
கவலை இருக்கவில்லை.
அம்மா, தங்கை மகிழ்ந்தார்கள்.
ஒரு வேளை
இதைத் தான் வேண்டினார்களோ ?
அவர்கள் தேவைகளெல்லாம்
என் அருகாமையும்
என் எதிர்பார்ப்பு மட்டும்
பெரும் வருவாயுமா ?
கவிதை நண்பன்
கவிதையில் கலங்கினான்,
கலாட்டா நண்பன்
சிரிப்பதை நிறுத்தி
அடைபட்ட வழிகளில்
ஓட்டைகள் இருக்கிறதா என
உற்றுப் பார்த்தான்.
எனக்கு இப்போது
பயணம் பாரமாயில்லை.
எல்லாவற்றுக்கும் அனு தான் காரணம்.
அவள் தான்
என் பனிப்பாறை மூட்டைகளை
காதல் மூச்சால்
கரைய வைத்தவள்.
என் கவலைகள் இங்கே
சிறகு விரிக்க துவங்கிய போது.
அங்கே
அனு
ஆடம்பர வாழ்க்கை இனி
சாத்தியமில்லையா என்று
முதல் முறையாய் கவலைப் பட்டாள்.
அந்தக் கவலைப் பொறியே
காதலுக்குக் கீழ்
எரிமலையாய் பரவப் போவதை
அனுவே அப்போது
அறிந்திருக்கவில்லை.
0

14
நான் சென்னைக்கு
வந்திறங்கிய போது
கடிகாரம் மணி
மூன்றை முத்தமிட்டிருந்தது.
சூரியன் இன்னும்
கண்விழிக்கவில்லை.
பூமி
இன்னும் பல் துலக்கவில்லை.
வரவேற்க வழக்கமாய் வரும்
நண்பர்களைக் காணவில்லை.
ஆர்வ விழிகளோடு
அனு மட்டுமே அங்கிருந்தாள்.
நிலவு இருக்கும் வானம்
நட்சத்திரம் இல்லாததை
நட்டம் என்று கருதுமா ?
காதல் புகுந்த தேகத்தில்
காயம் தருவது காதலாய் மட்டுமே
இருக்க இயலும்.
சென்னை !
ஓர் பனிக்காலப் பறவை
பிரியாணிச் சட்டிக்குள்
பொரிக்கப்படும் அனல்.
இரவு மட்டும்
இல்லாதிருந்தால்
இரும்பும் கூட இளகிவிடும்.
சூரியனுக்கு சென்னை மீது
என்ன விரோதமோ ?
தீக்கனல் எறிந்து
விளையாடிக் களிக்கிறதே.
பூமிக்குக் கீழும் ஓர்
சூரியன் புதைந்திருப்பதாய்
சாலைகள்
கொல்லன் ஆலை தீக்குழியாய்
கொதிக்கிறது.
பாவம்,
சாலைப் பணியை சார்ந்திருப்போர்,
தபால் கட்டுக்களோடு
வெயில் மிதித்தும் சுமந்தும்
வீதிகளில் வலம் வருவோர்,
கட்டுமானப் பணியாளர்.
இப்போது நினைத்தால்
அதிர்கிறது இதயம்.
இதமான குளிர்காற்று
கன்னங்களில் தவழ
கணிப்பொறி முன் சோம்பிக் கிடக்கும்
சொர்க்க வாழ்க்கை
எத்தனை பேருக்கு ?
சாலைச் சந்திப்பில்
வெந்து போகும்
போக்குவரத்துக் காவலர்க்கு
அது
நகர நடுவில் வந்திறங்கிய
நரகத்தின் அக்கினிச் சூளைதானே.
எனக்கும்
இரண்டே நாளில்
முகத்தின் வீதிகளில்
சூரியன் சுட்ட வடுக்கள்.
இந்த தண்ணீர் பஞ்சமும்
கருணை இல்லா வெயிலும்
விலகினால்,
சென்னை ஓர்
சின்ன சொர்க்கம் தான்.
பசிக்கு உண்டு பழகிய
வயிறு,
ருசிக்காகவும் உண்ணும்.
ஆங்கிலம் கேட்டுக் கேட்டுச்
சலித்த செவிகள்
தமிழ் வழிய வழிய சிலிர்க்கும்.
அத்தனை புத்தகக் கடைகளும்
ஆர்வமாய் இழுக்கும்,
தமிழ் திரைப்படம் பார்ப்பது
எளிதாய் இருக்கும்.
அம்மாவின் சமையல்,
தங்கையின் புன்னகை
அவளின் கைக் குழந்தை
நெருக்கி நிறைத்த நேசம்
அடுக்கடுக்காய் அன்பு
பாத்தி கட்டி சேமித்திருக்கும்
பாசம்.
இப்போது,
எல்லா சிந்தனைகளையும்
முந்திக் கொண்டு நிற்கும்
என் அனு.
காலையில் விழித்து
அனுவைச் சந்தித்து சிரித்து,
வேலையில் விழுந்து
தொலைபேசி தீண்டி,
ஆறு மணி அடிக்கும் முன்
அவசர கனவுகள் ஆடை மாற்றும்.
அனுவைச் சந்திக்க.
அனு,
நீ மட்டும் இல்லையென்றால்
இந்த வாழ்க்கை
என் ஒவ்வோர் சுவடுகளிலும்
ஒவ்வோர் கல்லறை கட்டுமே.
இன்னும்,
அம்மா முழுதாய்
சம்மதிக்கவில்லையே,
என் தங்கை
மங்கையை வரவேற்கவில்லையே.
அம்மா அனுமதி சாத்தியமா
தங்கை சம்மதம் வாய்த்திடுமா
மனம்
கவிதையில் சிந்தித்தது.
ரோஜாக்களின் முகவரிகள்
மொட்டுக்களின் முன்னுரைகள்
என்று
ஓர் பூங்காவனப் பயணம்
புயலாய் மலர்வனத்தில்
மையம் கொண்டிருந்தது.
காதல்,
இரு எல்லைகளின்
ஒரு புள்ளி.
பருவங்கள் பயிரானபின்
துருவங்கள் சந்தித்துக் கொள்ளும்
ஓர்
சந்து தான் காதல்.
சில நேரம்
காலத்தை விரைவாய் நகர்த்தும்.
சிலநேரம் அதுவே
கால் வெட்டி
கடந்து போகும்.
மாதங்கள் இரண்டு ஓடின.
காதல் நெருக்கங்களில்
எங்கள்
வெட்கத்தின் முனைகள் கூட
கொஞ்சம் மழுங்கி விட்டன.
ஒரு நாள்
வழக்கமாய் சந்திக்கும் அந்த
பூக்களில்லா பூங்காவின்
காங்கிரீட் இருக்கையில்
காத்திருந்தாள் அனு.
விரைவாய் வா என்று
தகவல் தந்து விட்டு.
பதட்டம் பிய்த்துத் தின்ன,
வண்டியை விரட்டினேன்.
அடிபட்ட சாலைகளும்,
நசுங்கிய காற்றும்,
போட்ட சத்தத்தைப் புறக்கத்து
அவளை அடைந்தேன்.
அதிர்ந்தேன்
அனுவின் கண்கள்
சிவப்புச் சாயம் பூசியிருந்தன.
என்னவாயிற்று அனு ?
என் குரலுக்காய் காத்திருந்தவளாய்,
நழுவி விழுந்த
கண்ணாடிச் சீசாவாய்
மடியில் விழுந்து
உடைந்துச் சிதறினாள்.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
என்னவாயிற்று உனக்கு ?
யாரிந்த புறாவை
நங்கூரத்தில் பூட்டியது?
கூவிக் களித்த குயிலின் குரலில்
கூரிய கத்தியை வைத்ததார் ?
புன்னகை பறித்து நடந்த
நீ
ஏன் இன்று
விழிநீர் இறைக்கிறாய் ?
கன்னங்களுக்கு ஏன் தொடர்
கண்ணீர் பாசனம் ?
சொல் அனு.. சொல்
என்ன நடந்தது ?
அனு வாய் திறந்தாள்.
உங்க அம்மா தொலைபேசியில்
அழைந்திருந்தார்கள்.
வாழ்வில்
முதன் முதலாய் நான்
சகித்துக் கொள்ள இயலா அளவு
சாபம் வாங்கினேன்,
என்
காதுகளின் திணிக்கப்பட்டிருக்கிறது
உன் அம்மாவின் திட்டு.
சொன்னவள்
மீண்டும் அழுதாள்.
நான்
தூண்டில் விழுங்கிய
கெண்டை மீனாய்
தொண்டை அடைந்து நின்றேன்.
0

15
ஏதேனும் ஓர் காதல்
பிரச்சாரம் முடிந்தபின்னும்
பிரச்சனைகளில்லாமல்
படர்ந்திருக்கிறதா ?
அப்படி இருந்தால்
பார்த்துச் சொல்லுங்கள்
அவர்கள் இன்னும்
காதலிக்கிறார்களா என்பதை.
அம்மாவை கொஞ்சம் கொஞ்சம்
சம்மதிக்க வைப்பதே
உலகப் போராய்
உயிர் களைக்க வைக்கிறது.
ஒன்றை அடுக்கி வைத்தால்
அடுத்தது
வர்த்தகக் கட்டிடம் போல்
அடியோடு விழுகிறது.
எங்கள் மீது பாசம் இல்லையா
அனுவை தொடர்வதே
உந்தன் வேலையா ?
இனி நான் என்ன
இரண்டாம் பட்சமா ?
நேற்று வந்தவள் தான்
உனக்கினி உச்சமா ?
அம்மாவின் பாசம்
அனலாய் கண்வழி வந்தது.
தங்கை அதற்கும் மேல்,
மலேஷியக் கலாச்சாரம்
மலட்டுக் கலாச்சாரம்,
அங்கே
பொருளாதாரத் தராசுகளில்
அன்பு அளக்கப்படும்
விலகிவிடு,
அவளை விலக்கிவிடு.
திரும்பத் திரும்ப
கீறல் விழுந்த இசைத்தட்டானாள்
அவள்,
காதல் பற்றி பாடும் போதெல்லாம்.
கொஞ்சம் கொஞ்சம்
பொய்கள் சொன்னால் தான்
இனி
சண்டை குறையும் சாத்தியம்.
சொன்னேன்,
அவளைச் சந்திப்பதை
அவ்வப்போதென்று ஆக்குகிறேன்.
திருமணப் பேச்சை
தள்ளியே வைக்கிறேன்.
அவர்களுக்கே தெரிந்திருக்கும்,
நான்
பொய்சொல்கிறேன் என்று.
நம்புகிறார்கள் என்றால்
நான்
அவர்களின் நம்பிக்கைகளை
சிலுவையில் அறையும்
சர்வாதிகாரி ஆகிறேன்.
சில நாள் மீண்டும்
பொய்களில் நடந்தது.
இருட்டுச் சுவரோரம்
திருட்டுத் தம் அடிக்கும்
சிறுவர்கள் போல,
எங்கள்
காதலும் தொடர்ந்தது.
விலகிய நண்பன் இன்னும்
என்னை சீண்டவில்லை.
இத்தனைக்கும்
அவன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும்
கூடிப் போனால்
கூப்பிடு தூரம் தான்.
பரவாயில்லை,
இப்போது அனுவும் அம்மாவும்
ஓரளவு
இணங்கி விட்டார்கள்
என் சிந்தனை வலுவாகும் முன்
மீண்டும் விழுந்தது அடி.
அம்மாவும் அனுவும்
வாக்குவாதம்,
தங்கையோடு அனு
தொலைபேசித் தர்க்கம்.
இத்தனைக்கும் காரணம்
விலகிய நண்பனா ?
அனுவா, அம்மாவா ?
கேள்விகள் என்னை
பாதாளக் கரண்டியாய் கிழித்தன.
இனிமேல் முடியாதென
முடிவெடுத்தேன்.
வண்டியை எடுத்துக் கொண்டு
அனுவின் இடம்நோக்கி
விரைந்தேன்.
.
.
.
அன்று,
வீட்டுக்குச் செல்லும் போது
இருட்டு வாசலில் விழித்திருந்தது.
அம்மா கேட்டாள் ?
என்ன அனுவோடு அலைச்சலா ?
சொன்னேன்.
ஆம் அம்மா
இன்று தான்
நானும் அனுவும்
பதிவுத் திருமணம் செய்து கொண்டோ ம்.
0

16
பெற்றவளிடம்
பொய் சொன்னது
இதயத்தை கொஞ்சம்
இறுக்கமாய் கசக்கியது.
‘பொய்மையும் வாய்மையிடத்து’
வள்ளுவனை
துணைக்கழைத்தேன்.
சிறு கவலைக் கற்களால்
ஓர்
கலவரம் ஓய்தல்
சரியெனப் பட்டது எனக்கு.
முறையான திருமணம்
முடியும் வரை,
நம் முற்றம் முழுதும்
சுற்றம் நிற்று சம்மதிக்கும் வரை,
சற்றும் தளராமல்
பொறுத்திருப்பேன்.
எனக்கு
எல்லோருமே வேண்டும்.
கிளைகளை வெட்டி விட்டு
கனிகளை
கொய்ய நினைப்பவனல்ல நான்.
வேர் வெட்டியபின்
மரச்சீனியால் பயனென்ன ?
அம்மா அழுதார்கள்,
வலது கண் வலிக்கிறதென்றால்
இடது கண்ணில்
அமிலம் பூசுகிறாயே.
உன் அப்பா மட்டும்
உயிரோடிருந்திருந்தால்
அனலாய் பேசுவாயா ?
நான்,
உன்னைச் சார்ந்திருப்பதால்
நீ
என்னை சாயவைக்கிறாயா ?
அம்மாவின் அழுகை
உள்ளுக்குள்
உலக்கை இடியாய் விழுந்தது.
ஆனாலும்
அனுவுக்காய்
அழுகை கடித்து அமைதியானேன்.
அவள் தான் சொன்னாள்
இப்படி ஓர் பொய்யை
எப்படியாகிலும் சொல்லிவிட.
நிஜத்திலும்
நிறையமுறை கேட்டிருக்கிறாள்.
பதிவுத் திருமணம்
பண்ணிக்கொள்வோமா ? என்று.
அம்மாவின் அருகாமையின்றி
மணம் செய்ய
எனக்குத் தான் மனம் இல்லை.
அவளுடைய
மலேஷியப் பெற்றோர்
மறுப்புரை எழுதவில்லை.
அந்த
சங்கமம் எனக்கு
சம்மதம் இல்லை.
மனித வாசனை
மரத்துப் போன
தனித்தீவில்
ரோஜாவாய் பூப்பதைவிட,
மக்கள் கூட்டத்தில்
வாசம் வீசா
வாடா மல்லியாயிருப்பதே
விருப்பமாயிருக்கிறது எனக்கு.
பொய்க்குப் பின்
போராட்டம்
மெல்ல மெல்ல ஓய,
மெய்கொஞ்சம் ஓய்வெடுத்தது.
அதற்குப் பின்
அலைகளைத் தாண்டிய
கட்டுமரமாய்
நிதானத்துக்கு வந்தது
மனசு.
பொய் சொன்னேனென்ற
உறுத்தல் கூட,
ஓய்ந்த போராட்டத்தோடு
காய்ந்து போனது.
மீண்டும் எனக்கோர்
நந்தவனப் பயணம்.
எனக்காய் பூத்திருந்தன மலர்கள்,
கால்களிலும் வாசனை
கட்டிக்கொண்டு.
காகிதங்களில் கூட
ஓவியங்கள் மிதந்தன
அவள் எழுத்துக்கள்
விழுந்தபோது.
அவள் புன்னகையில்
இதயத்தில் விழுந்த பள்ளம்
அவள்
சிரித்தபோது
நிறைந்து வழிந்தது.
அவள் வெட்கத்தில்
உருவான துருவங்கள்
அவள் தீண்டலில்
உருகித் தெறித்தது.
காதல்
அது ஒரு அற்புதங்களின்
அதிசயக் கலவை.
பூமிக்கு புலன்கள்
பரிசளித்த
பிரமிப்பான வானவில்.
நானும் கரைந்தேன்,
நானும் நனைந்தேன்,
நாட்கள்
வாரங்களை விழுங்கி
ஏப்பமிட்ட ஒரு பொழுதில்
அனு ஓர்
விண்ணப்பம் அவிழ்த்து வைத்தாள்.
அந்த விண்ணப்பத்தின்
வெப்பத்தில்
எனக்குள் இருந்த
காதல் முயலுக்கு
காய்ச்சல் அடித்தது.
உள்ளுக்குள்
படபடத்த வெள்ளைப் புறாவுக்கு
சிறகுகள் வெடித்தன.
நான்,
அதிர்ச்சிக் கரைகளில்
சிப்பியாய் ஒதுங்கினேன்.

17
பூக்காடு ஒன்று
திடீரென
தீக்காடாய் மாறியதை
என்னால் நம்ப முடியவில்லை.
இன்னொரு முறை சொல்
என்ன சொன்னாய் ?
அனு
அழுத்தமாய் சொன்னாள்.
“இந்திய வாழ்க்கை
இனிமேல் இயலாது என்னால்.
மலேஷிய மண்ணில் தான்
மீதி வாழ்க்கை”
இதெப்படி சாத்தியம் ?
எனக்கு எல்லாமே
இங்கே தானே இருக்கின்றன?
கடல் மீன் எப்படி
காட்டில் நடமாடும் ?
சாதிக்க முடியாதைப் பற்றி
வாதிக்க வேண்டாம்.
சொன்னேன்.
சட்டென்று
அவள் கண்களின் ஓரம்
ஒரு
நீர்த்துளி நழுவியது.
பெண்களுக்கு மட்டும்
எப்படி
கட்டளைக்குக் கட்டுப்பட்டு
கண்ணீர் குதிக்கிறதோ ?
கண்ணீரோடு தொடர்ந்தாள்,
உனக்குப் பாசம் எல்லாம்
உன்னைச் சார்ந்தவர்களோடு தான்.
பிரியத்துக்குரிய
என் பெற்றோரை
நான் பிரியவேண்டும்
உன் அம்மாவை
நீ விலக மாட்டாயா ?
நடக்காத விஷயங்களை
மனசில்
நடக்கவிடாதே.
எனக்கு வேலை
இந்தியத் தெருவில் தான்
மலேஷிய மண்ணில் அல்ல.
இந்த மண் எனக்குச் சொந்த மண்,
பெண்கள்
புகுந்த வீடு செல்வதுதான்
இந்தியக் கலாச்சாரம்.
நீ
இந்தியக் கலாச்சாரத்தில்
வந்து விடு.
அது தான் நியாயம்
சொல்லி முடித்ததும்
அனு அணுகுண்டானாள்.
இதென்ன
நீ சொல்வதற்கு சம்மதித்தால்
நான் நல்ல பெண்,
இல்லையேல்
கலாச்சாரக் குதறலா ?
என்
மெர்சிடிஸ் வாகனக் கனவையும்
மாட
மாளிகைக் கனவையும்
சன்னல் திறக்காமலேயே
மூடிவிட்டாய்.
இப்போது
கலாச்சாரத்தில் கீறுகிறாய்
சீறினாள் அனு.
நீ,
நல்ல பெண் இல்லை என்று
நான் வாதம் செய்யவில்லை.
மலேஷிய வாழ்க்கை
இயலாதென்கிறேன்
இறுதியாய் உறுதியாய்,
முடிவாய் முடியாதென்கிறேன்.
அனு பேசவில்லை.
அவளுக்குள் ஓர்
பைசா கோபுரம்
பையப் பைய சாய்ந்ததாய்,
சீனச் சுவர்
சற்றே சரிந்ததாய்,
பிரமிடு ஒன்று
பிரிந்து விழுந்ததாய்
ஏனோ எனக்குத் தோன்றியது.
அப்படியானால்
அமெரிக்க வாழ்க்கைக்கு
ஆயத்தமாகலாம்.
உன் தேசமும் வேண்டாம்
என் தேசமும் வேண்டாம்
புதிய இடத்தில்
பழுதின்றி வாழலாம்.
இதென்ன இவள் ?
ஒவ்வொரு முருங்கை மரமாய்
தாவித் திரியும்
வேதாளமா ?
இல்லை என்
பொறுமைக் கரையை
விடாமல் உரசும்
விவாத அலையா ?
அமைதியாக சொன்னேன்.
அமெரிக்க வாழ்க்கை
அமையுமா ?
அமைந்தாலும் நிலைக்குமா ?
இதெல்லாம்
விடைகளை விழுங்கி நிற்கும்
கேள்விகள்.
பிரசவிக்க முடியா கிழவிகள்.
சொல்,
இந்திய வாழ்க்கைக்கு
என்ன குறைச்சல்?
உன் நேசத்தின் கண்ணாடியில்
நான்
கீறல் ஏதேனும் வரைந்தேனா ?
இல்லை
கறை பூசி குறையாக்கினேனா ?
ஏதேனும்
நடைமுறை சாத்தியங்களோடு
உரையாடேன்
என் பொறுமை குரல் தாழ்த்தியது.
சரி,
அப்படியானால்
அதுவரை
பெங்களூரில் வசிக்கலாம்.
சென்னை வேண்டாம்.
அனு
அடுத்த வட்டத்துக்குத் தாவினாள்.
என்ன அனு,
கடைவீதிக் குழந்தையாய்
ஒன்றை விட்டால்
இன்னொன்று கேட்டுக் கேட்டே
பிடிவாதம் பிடிக்கிறாய் ?
நிறைவு என்பது
ஓடும் போது கிடைப்பதில்லை.
ஓரிடத்தில்
உட்காரும்போது தான்
கிடைக்கும்.
மனசை ஓட விடாதே
திருப்திக் கரையில்
கொஞ்சம்
இருக்க விடு.
கொஞ்சம் அழுத்தமாய் சொன்னேன்.
நான் என்ன சொன்னாலும்
எதிர்ப்பதே உனக்கு
வாடிக்கையாகி விட்டது.
என் காதல் மீது
உனக்கு சலிப்பா ?
இல்லை என்மீதேவா ?
இத்தனை கேட்டேனே ?
ஒன்றேனும் சரியென்றாயா ?
என்ன அனு,
நிலவைக் கொடு,
இல்லையேல் நான்கு நட்சத்திரம் கொடு,
அதுவும் இல்லையேல்
அரை மீட்டர் மின்னல் கொடு என்கிறாய்.
எப்படிச் சாத்தியம்
இடியை எப்படி
இடுக்கிக்குள் பிடிப்பது ?
ஏன் உனக்கு
சென்னை வேண்டாம் என்கிறாய் ?
வேறு இடமென்றால்
அம்மா வர கஷ்டப் படுவார்களே.
அப்பா இருந்திருந்தால்
பரவாயில்லை.
தனியாய் இருக்கும் அம்மாவை
சம்மதிக்க வைக்கவேண்டுமே.
அனு
அடுத்த அணுகுண்டை
வீசினாள்.
“
அவளைப் பிடிக்கவில்லை
அவளை விட்டு விலகத்தானே
சென்னை வேண்டாமென்று
சபதம் எடுத்தேன்
“
அம்மாவிடம் இத்தனை வெறுப்பா
என் தொண்டை
வார்த்தை இறுகி
மூர்ச்சையானது.
அவள் வீசிய குண்டு
வெற்றிகரமாய் எனக்குள்
வெடித்துச் சிதறியது,
இதயம்
போக்ரான் நிலமாய்
பொத்தல் காடானது.
0

18
இலகுவாய் இருந்த இதயம்
அனுவின்
ஒரே வார்த்தையால்
சஞ்சீவி மலையாய் கனத்தது.
அரபிக் கடலுக்குள்
விழுந்து விட்ட
ஆட்டுக் குட்டியாய்
மனம் தத்தளித்தது.
என்ன சொல்கிறாய் அனு ?
இதெல்லாம்
சத்தியமாய் சாத்தியமில்லை.
என் அம்மாவை
பாதுகாக்கும் பாசமும்
கவனிக்கும் கடமையும்
எனக்கிருக்கிறது.
கோயில் தேரை
கால்வாய்க்குள் விட்டுவிட்டு
கால்கழுவி வருவேன் என
நினைத்தாயா ?
அப்படியென்றால் மன்னித்துவிடு.
நீ,
காதலிக்கத் துவங்கும் போதே
உனக்குத் தெரிந்ததுதான்
எல்லாமே.
அப்போது சம்மதித்தாய்
இப்போது ஏனடி
சம்மட்டி எடுக்கிறாய் ?
காதல் கைகூடும் வரை
காதல் தேவை,
பிறகு உன் சுயநல தேடல்களா ?
முடியாது,
உன் முட்டாள் தன முடிவுகளுக்காய்
நான்
சிரச்சேதம் செய்துகொள்ள முடியாது.
அனுவும் குரல் உயர்த்தினாள்,
நம் வீட்டில்
அவள் வந்தால்
வேலைக்காரியின் வேசம் தான்
என்னிடமிருந்து
துளி பாசமும் வழியாது.
எனக்கு கோபம்
இராவண தலையாய்
பத்து மடங்கானது.
அனு,
வார்த்தைகளை வீணாய்
வெளித்தள்ளாதே.
மரியாதை தோய்த்து பேசு,
அம்மாவை அவமதிக்காதே.
உன் அம்மாவை
நான்
என் அம்மாவாய் காணும் போது
என் அம்மாவை
நீ
உன் அம்மாவாய் ஏன்
பார்க்க முடியவில்லை ?
கொஞ்சம் மெதுவாய்
தான் பேசினேன்.
ஆனால்
அனு நிறுத்தவில்லை,
அம்மாவும் தங்கையும்
அவளுடைய
எரிச்சல் அழுக்குகளால்
பிழியப் பட்டார்கள்.
என் காதுகள்
கதவடைக்குமளவுக்கு
கூர்மையான வசைகள்
என் முகத்தில் விழுந்தன.
என் பொறுமை
எல்லைகளை நோக்கி
எறியப்பட்டது.
அனு தொடர்ந்தாள்,
உன்னைப் பற்றியும்
உன் குடும்பம் பற்றியும் நீ
பேசுகிறாயே,
என்னைப் பற்றிய கவலை
ஏதேனும் இருக்கிறதா உனக்கு ?
நான் என்ன
சலவைச் சாரலுக்காய்
சன்னல் திறக்கும்
சாரளக் கிளியா ?
நான் சிறகுகள் கேட்டால்
நீ
கூண்டுகள் பரிசளிக்கிறாய்.
நான்
சாவிகள் கேட்டால்
நீ பூட்டுகள் தருகிறாய்.
இதோ,
என் மருத்துவ பரிசோதனை
முடிவு.
கோப்பு ஒன்றை எடுத்து
என் முன் வைத்தாள் அனு.
அப்போது தான்
நினைவுக்கு வந்தது.
கடந்த வாரம் அனுவுக்கு
மருத்துவ சோதனை நடந்த விஷயம்.
அமைதியாய் அதை
விரித்துப் பார்த்தேன்.
ஒட்டுமொத்தமாய்
அதிர்ந்தேன்.
0

19
அனுவுக்கு
‘டியூபர் குளோசிஸ்?’
என்று
ஆங்கிலம் நாக்கு சுழற்றி அழைக்கும்
எலும்புருக்கி நோய்.
எனக்குள்
அதுவரை இருந்த ஆத்திரம்,
அவள் மேல் இருந்த
கோபம் எல்லாம்
எரிமலை மேல் விழுந்த
பனித்துளியாய் பறந்து விட்டது.
நோயின் நாக்குகள் தான்
அனுவின்
அகத்திலிருந்து
குரல் கொடுத்தனவா ?
அவள் பதட்டத்தின் சிறகுகள்
படபடத்ததை
நான் தான்
அவசர அவசரமாய்
பிழையாய் மொழி பெயர்த்தேனோ?
இவள் கொட்டிய வார்த்தைகள்
இயலாமையின்
இடமாற்றங்களா ?
வெறும்
வேதனையில் வெளித்தள்ளல்களா ?
எனக்கு
காரணங்களை பற்றுவதை விட
அவள் கரம் பற்றுவதே
அவசியமாய் பட்டது அப்போது.
ஆறுதலுக்காய்
வாசல் வருபவனிடம்
பிரேத பரிசோதனை கூடாது.
ஒரு
பூவின் கால்களை
யானை மிதித்தால்
பூ
என்ன சொல்லிக் கதறும் ?
அப்படித் தான் அமைந்தனவா
அனுவின்
பிதற்றல்கள் ?
முட்கள் எரிந்ததனால்
தளிர்கள் இட்ட சத்தம் தான்
தாய் மேல் விழுந்த திட்டுக்களா ?
எனக்குள்
ஆயிரம் கேள்விகள்.
அமைதியானேன்.
ஆனால்,
தொடர்ந்த நாட்களிலும்
அவள் கோபமும்
சாபமும் நீண்டது.
நானோ
காயம் பட்ட நெஞ்சில்
ஈயம் காய்ச்ச வேண்டாம் என்று
இறுக்கமாய் இருந்துவிட்டேன்.
சில நாட்களுக்குப் பின்
சட்டென்று ஒரு கடிதம்
கணிப்பொறியில் கண்ணடித்தது
அனுவின்
அண்ணனிடமிருந்து.
அம்மா அனுவை
அனுசரிக்கவில்லை,
சென்னை தூசு
அனுவின் நோயைக் குணப்படுத்தாது,
மீண்டும்
பூவை செடியில் விட்டுவிடு.
எனக்குள் குழப்ப வலிகள்.
காதல் என்பது பூ,
பறித்தபின் எப்படி
ஒட்ட வைப்பது ?
கட்டினாலும் ஒட்டுமா ?
முட்டைக்குள் போவென
குஞ்சுகளுக்குக்
கட்டளையா ?
மழையை எல்லாம்
ஆவியாக்கி
மேகத்துக்கே
அனுப்பி வைக்க ஆயத்தம்
செய்கிறார்களா ?
நான்
பதில் அனுப்பவில்லை.
அனுவின் ஆடம்பர வாழ்க்கைக்
கனவும்,
அம்மா மீதான
வெறுப்பின் நினைவுகளும்,
அவள் காதலின் இமைகளை
ஆழமாய்
கருணையின்றி கத்தரித்து விட்டதாய்
தோன்றியது எனக்கு.
சில நாட்களாக
அவளும் என்னை சந்திக்கவில்லை.
தொலைபேசியிலும்
என் குரலுக்கு கதவடைத்தாள்.
வாரம் ஒன்று
ஓரமாய் போனபின்
தூரமாய் ன்று
தொலைபேசினாள்.
நாளை நான்
மலேஷியா போகிறேன்.
மன்னித்து விடு
உன்னை
நீயே
உன் தவறுகளுக்காய்.
அன்னைக்காய் ஓர்
அன்பு ஜீவனின் ஆசைகளை
கடலுக்குள் நீ
கட்டி இறக்கியதற்காய்,
நம்பிக்கைகளின் மேல்
நகர்த்த முடியா பாறை ஒன்றை
இறக்கி வைத்ததற்காய்,
நீ
உன்னையே மன்னித்துக் கொள்
நான்
உன்னை மன்னிக்குமளவுக்கு
இன்னும் மலரவில்லை.
ஆரம்பம் முதல்
அதிர்ச்சிகளை தாங்கி
இப்போது மனசு பலிபீடமாய்
கிடந்தது எனக்கு.
யாரை யார்
எங்கே பலியிட்டார்கள்
எங்கும் குருதி வாசனை.
நான்,
என்ன தவறு செய்தேன்?
புல்லாங்குழல் ஒன்றுக்காய்
மூழ்கிக் கிடந்த
மூங்கில் காட்டை எரிக்காததா ?
இல்லை,
மூங்கில் காட்டை நேசிக்க
புல்லாங்குழலுக்கு
பாடம் சொன்னதா ?
எது தவறு ?
புரியவில்லை.
ஆனால்
ஒரு சிறு நிறுத்தம் தேவைப்பட்டது.
நிற்காமல் ஓடிக் களைத்த
இந்த
பந்தயக் குதிரைக்கு.
ஆனால் அந்த இடம்
நிறுத்தமாய் இருக்கவில்லை.
0

20
பிரிவில் தான்
காதல் படரும் என்பதை
பத்தே நாள் பிரிவு
பளிச்சென்று விளக்கிவிட்டது.
நியூட்டனின் விதி
இங்கே கொஞ்சம்
இடிக்கிறது,
‘இங்கே ஓர் சமமில்லா எதிர் விசை’
இதயத்துக்குள் எழுகிறது.
அருவியாய் விழ ஆசைப்பட்ட
நதி
பாறையில் மோதி
இறந்து போனதாய்
இருந்தது பிரிவு.
காற்று இல்லையேல் மட்டுமே
சுவாசம் பற்றி
சிந்திக்கத் தோன்றுமோ ?
ஓட்டை விழுந்தபின் தானே
ஓசோன் கூட
சிந்திக்கப்பட்டது?
காதல்
என் நிழலைக் கொத்தி
பறந்து போனபின்,
என்
நிஜம் நிர்வாணமாகிவிட்டது.
போர் முரசு ஒலித்தபின்
கவசங்கள்
கழன்று வீழ்ந்த நிலை.
யாராரோ போடும்
போரில்
தோல்விகள் மட்டும்
என் முகவரிக்கு அனுப்பப்படுகிறதா ?
என்
மகிழ்ச்சிகளை எல்லாம்
தேயிலை தோட்டக் காரிகள்
முளை கிள்ளி
கூடையில் போட்டார்களா ?
சூரியன் சுடர்தர
சம்மதிக்காததால்
அண்டவெளியில் எங்கோ
நிலவு
நிலைகுலைந்து நிற்கிறதா ?
பூக்களையும்
வண்டுகளையும்
வடமிட்டுக் கட்டி
தனித் தனிச் சிறையில்
தள்ளிய அவஸ்தை எனக்கு.
என் காதல்
கவலைப் பட்ட அதே வினாடியில்
அனுவும் அங்கே
அழுதிருக்கிறாள்.
என்
சோகக் கயிறுகள்
என்னை வலைக்குள்
திணித்தபோது
வந்து நின்றது
என்
கவிதை நண்பனின் கடிதம்.
0

21
என்
இறந்த காலமும்
நடக்கும் காலமும்
நன்கறிந்த நண்பன் அவன்.
அவன் கடிதம்
கோபமும் நட்பும் கலந்து
கவலை வார்த்தைகளால்
ஆறுதல் சொல்லியிருந்தது.
நண்பா,
வாடிப்போன இலைகளில்
சூரிய ஒளி பாய்ச்சி
பச்சையம் புகுத்தல்
நிச்சயம் இல்லை.
பேசியோ
பேசாமலோ நீங்கள்
பிரிவதே சரியென்கிறேன்.
உன்
குடும்பத்தின் மீது
அனுவுக்கு இருந்த
குறைந்த பட்ச அன்புகூட
மறைந்துவிட்டது.
காதலின் ஆழத்தை
மோகத்தின் வண்ணம்
தீர்மானிக்க முடியாது.
வானத்தோடு
வழக்கிட்டால்
நட்சத்திர வாழ்க்கை இயலாது.
எத்தனை முறை தான்
நீ
பொறுமை நங்கூரத்தை
பிடித்துக் கொண்டிருப்பாய் ?
எப்போதேனும்
அது அறுந்து விட்டால்
தண்ணீர் காட்டில் தனியாவாயே.
இப்போது
வழிகாட்டா அனுவின் பெற்றோர்
பின்
விவாகரத்து கேட்டால் கூட
வேண்டாம் என்பார்களா ?
அனுவுக்காய் நீ
அனைவரையும் எதிர்க்கிறாய்.
இப்போது
அனுவே உன்னோடு
அனுசரிக்க வில்லையேல்
கூடிழந்த புறா
காலிழந்தது போலாகாதா ?
உன் அம்மாவின்
நம்பிக்கை மலைகளை
ஏமாற்ற உளிகள்
எடுத்தெறியலாமா ?
உன்
அமெரிக்க வேலை
இடம் மாறியதும்,
அவள் காதல் கொஞ்சம்
தடம் மாறி இருக்கிறதோ
எனும் சந்தேகம் எனக்கு.
ஆடம்பரம் மேல்
ஆசைவைக்கும் காதல்
கரையில் உன்னை எறியும்
கடலலை அல்லவா ?
தண்ணீர் மீது
வெறுப்புக் கொண்டவள்
கடல் அலையை எப்படி
காதலிக்க இயலும் ?
நான்
உன் காதலை
எப்போதுமே எதிர்க்கவில்லை
ஆனால்
விரல் வெட்டினால் தான்
பேனா பரிசென்றால்
எதற்கு கவிதை ?
மன அமைதியைத் தானே
மனித மனம் தேடும்.
அது
அன்னையும்
மனைவியும் தானே
எல்லையின்றி தர இயலும் ?
இருபக்கமும் அன்பென்றால்
அது
சுவர்கத்தின் சின்ன உருவம்.
இருபக்கமும்
வலி தந்தால்
அது
வாலிலும் தலையிலும்
தீப்பிடித்த எலிபோல.
ஓரிடமும் நிற்காமல் ஓடும்.
என் வார்த்தைகள்
உன்னை காயப்படுத்தினால்
அவை
நட்பின் நிஜமுகம்
என்பதை புரிந்துகொள்.
மன்னிக்க வேண்டாம்
ஏனெனில்
நட்பில் தண்டனைகள் கூட
மன்னிப்புகள் தான்.
அவன் கடிதம்
அத்தோடு முடிந்து போனது.
ஆனால் எனக்குள்
ஏராளம் கேள்விகள்
ஆரம்பமானது.
அந்த கேள்விகள்
முடியும் முன்,
மின்னஞ்சல் ஒன்று
மூக்கு நீட்டியது.
“மன்னித்து விடு”
எனும் தலைப்புச் செய்தியோடு
அனுவிடமிருந்து.
0

22
தனிமை அனுவை
வறுத்தெடுக்கிறது
வார்த்தும் எடுக்கிறது.
அனு ஆரம்பித்திருந்தாள்.
விலகிய பின்புதான்
இல்லாமையிலிருந்து
இயலாமை
விசுவரூபம் எடுக்கிறது.
தனி வாழ்க்கை போதும்
இனி வாழ்க்கை
உன்னோடு தான்.
உன் அம்மாவோடு
இனிமேல்
சமாதானம் மட்டுமே
சம்மதம்.
உன் குடைகளின் கீழ்
கம்பியாவேன் என்று
நம்பியே
இக்கடிதம்.
என்னை தூண்டியதும்
மன்னிக்க வேண்டியதும்
உன்
நேசத்தின் தீண்டல் தான்.
உன்னோடு,
உன் அந்தஸ்தின்
தாழ்வாரத்தில் கூடுகட்ட
எனக்கு சம்மதமே.
உன் வலிகளின்
விளை நிலமாய் நான் இருந்தேன்.
என்
வலிமைகளை காதல்
உடைத்துப் போட்டது.
மன்னித்து விடு.
இனிமேல் உன்
மன்னிப்போ தண்டனையோ
உன் காதல் கொண்டு வரும்
எதையும்
பெற்றுக் கொள்ள நான்
காத்திருக்கிறேன்.
அன்புடன்
அனு.
கடிதம் ஓர்
கண்ணீர் துளியோடு
முடிந்திருக்கும்
என்று தோன்றியது எனக்கு.
இரு நாட்களை
மெளனத்துக்கு
அன்பளிப்பாய்க் கொடுத்தேன்.
மீண்டும் ஓர் மழலையாய்
அம்மாவிடமும்,
அண்ணனாய்
என் தங்கையிடமும்
இரு நாட்களை செலவழித்தேன்.
அவர்கள்
புன்னகையில்
புகலிடம் கண்டேன்.
அனுவுக்கு
ஓர்
கடிதம் அனுப்பினேன்.
அன்புள்ள அனு.
மழையில்
நனைந்து கொண்டே
தலை துவட்ட இயலாது.
உன் அஸ்திவாரங்கள்
ஏற்கனவே
போடப்பட்டு விட்டன.
அதன்மேல்
இனிமேல்
குடிசையெல்லாம் நிற்காது.
உன்
பிடிவாதப் பிணக்குகள்
காதலுக்கு கற்கண்டாகலாம்.
ஆனால்
வாழ்க்கைக்கு அவை
வேம்பாய் கசக்கும்.
என்னை நீயும்
உன்னை நானும்
ஆத்மார்த்தமாய் நேசிக்கிறோம்.
அதை நான்
இக்கணமும்
இல்லையென்று சொல்லவில்லை.
நீ
கூடு கட்டுவதால் என் கிளைகள்
சந்தோசம் இசைத்துக் கிடந்தது
ஆனால்
நீ
ஆவேரை காய வைத்து
கூரை போட சொன்னாய்.
எனக்கு
மலர்களோடு நேசம் இருக்கிறது
அதை விட
மண்ணோடு மரியாதை
இருக்கிறது.
பூமியில்
ஆணிவேர் விட்டு நிலைத்தபின்,
பூமியை
ஆணியால் அறைவதில்
உடன்பாடில்லை எனக்கு.
தீவுகளில் வாழ்தல்
தீர்வல்ல.
உனக்கு நானும்
எனக்கு நீயும்
எல்லாமென்றாலும்,
உன்னைச் சுற்றியும்
என்னைச் சுற்றியும் இருப்போரை
அறுத்தெறிதல் ஆகாது.
உன் காதல்
இப்போது மன்னிப்பு விடுக்கும்.
நாளை
மீண்டும் அது சுயமுகம் நீட்டும்.
அது
உன் குற்றமல்ல.
ஆலம் விதைகளில்
தாழம் செடிகள் எப்படி
தழைத்துவரும்.
உன் அடிமன எண்ணங்கள்
என்னை நேசிக்குமளவுக்கு
என்
அன்னையை வெறுக்கின்றன.
பிரமிடு கணக்காய்
பிணக்குகள் வைத்திருக்கிறாய்.
காதலுக்கு வெளியே நின்று
காதலை பார்.
நீயும் நானும்
இணைத்துக் கொண்டாலும்
இரு துருவங்களே.
யார் தவறியதென்று
தகராறுகள் வேண்டாம்.
காதல்
திருமணத்தில் முடியாதது
தோல்வியல்ல.
ஒரு வெற்றி
ஒரு தோல்வியை
பரிசாய்ப் பெறக் கூடாது.
இதில் தோல்வி என்பது
திருமணமல்ல.
வாழ்க்கை.
நம் காதலின் அனுபவங்கள்
நாளை
உன் பாதைகளை
ஒப்பீடு செய்ய உதவும்.
நான்
இங்கே ஓர்
முற்றுப் புள்ளி இட விரும்புகிறேன்.
ஆனால்
இது
இதயத்தில் இருக்கும்
என் காதலுக்கல்ல.
நம்
கடிதத் தொடர்புக்கு.
எழுதி முடித்தபோது
இதயம் கனத்திருந்தது.
‘மன்னித்து விடு’ என்று
ஏனோ
கடிதத்துக்குத் தலைப்பிட்டேன்.
.
23
என் கவி நண்பன்
என்னைப் பார்த்த பார்வையில்
ஆச்சரியமும், குழப்பமும்
இரண்டு கப்பல் அளவுக்கு
இருந்தது.
என் கழுத்திலிருந்த மாலையில்
புத்துணர்ச்சியோடு
படர்ந்து கொண்டிருந்தது
கல்யாண வாசனை.
வரவேற்பு நிகழ்ச்சிக்காய்
சிரித்துச் சிரித்தே
கோணலாகிப் போன வாயுடன்
என் அருகே
என் மனைவி. அனு !
அனுவின் கண்களில்
புதிதாய் கண்ணாடித் தட்டில் போட்ட
பாதரசத் துளியின்
பரபரப்புப் பயணம்.
நண்பன்
சிரித்துக் கொண்டே
கை குலுக்கினான்,
ஓரமாய் அழைத்துக் காது கடித்தான்.
என்னவாயிற்று ?
கரைகடந்த புயலை மீண்டும்
மையத்துக்குள்
கொண்டு வைக்க முடியாது என்றாய்,
எரிமலை வெளிவந்தபின்
உள்ளுக்குள்
வழியனுப்புதல் சாத்தியமில்லை என்றாய்.
இப்போது எப்படி
அனுவோடு மீண்டும் காதல் ?
கேள்விகளில் கொஞ்சமாய்
குழப்பமும்,
கேலி கலக்காத புன்னகையும்.
நான் சிரித்தேன்.
நண்பா,
இலக்கணங்கள் வரைமுறைகள்
எல்லாம்
நீ எழுதும் கவிதைகளுக்கானது.
வெண்பாக்களுக்குள் அடங்காது
பெண்பாக்கள்.
விருத்தங்களால் முழுமை அடைவது
மரபுக் கவிதை,
விருப்பங்களால் முழுமை அடைவதே
காதலெனும் கவிதை.
தவறுகளின் கோப்பைகளில்
ஊற்றி வைத்தவை
புரிதலில் வாய்க்காலுக்குள்
கொட்டப்பட்டு விட்டது.
யாரும்,
தவறுகள் செய்யாமல் திருந்த முடியாது.
திருந்தியவர்களை
விரும்பாமல் இருக்கவும்
என்னால் இயலாது.
அனு சில தவறுகள் செய்தாள்,
அவை
என்மேல் கொண்ட
உச்ச பட்சக் காதலில்
மேல் நாட்டிய சிவப்புக் கொடிகள்.
கொடிகள் பிடிக்கவில்லையென்பதற்காய்
கொடி நாட்டியவர்களை
கொல்வதா நல்லது ?
வேறு சில
கொடிகளைக் கொண்டு
கொடியிடையாளை வெல்வதே நல்லது.
நான் செய்த தவறுகள்
நீ அறிவாய்,
அதற்கெல்லாம்
அரிவாள் வெட்டை
அளித்திருந்தால்,
என் அங்கம் முழுதும்
வெட்டுக் காயங்கள் மட்டுமே
கூட்டுக் குடும்பம் நடத்தியிருக்கும்.
தவறிழைக்காதவர்கள் யாருமே
இருந்ததில்லை.
பிறரோடு, இல்லையேல் தன்னோடு.
காதல் பூவாக இருந்தால் மட்டுமே
பூஜிப்பேன் என்றால்,
அது சருகானபின் சங்கடமே மிஞ்சும்.
காதலை
செடியாகப் பார்க்க வேண்டும்.
அப்போது தான்
பூக்களையும் முட்களையும்
கிளைகளையும் இலைகளையும்
ஒருசேர
விரும்ப இயலும்.
அனு ஒரு கொடி.
அவள் புன்னகையில் பூப்பறிக்க
பூக்கூடையோடு
அலைவது மட்டுமே என் வேலையல்ல.
கிளைகளைக் கழிப்பதும்,
என் வேலைதான்,
செடியை நேசிப்பவனுக்கு
செடியே
பூக்களைப் பரிசளிக்கும்.
பூக்களை மட்டுமே நேசிப்பவனை
செடிகளே நிராகரிக்கும்.
எல்லாவற்றையும் விட
காதல்
எதையும் மன்னிக்கும்,
கேட்டுக் கொண்டே இருந்த
நண்பன் சிரித்தான்.
நீ
காதலினால் எதைப்
பெற்றுக் கொண்டாயோ இல்லையோ
கவிதை எழுதக்
கற்றுக் கொண்டாய்.
சொல்லிக் கொண்டே
கைகுலுக்கினான் மீண்டும்.
கரங்களின் அழுத்தத்தில்
அவனுடைய நட்பு வலுவாய்த்
தெரிந்தது.
புன்னகைத்துக் கொண்டே சொன்னான்,
அனுதினம் உன் அருகிலே – இனி
“அனு” தினம் உன் அருகிலே.
அனுசரி இனி அனுதினம் – நீ
“அனு” சரி என அனுமதி.
அவன் சிரித்துக் கொண்டே நகர
மனசுக்குள் இருந்த
பாரம் எல்லாம் விலகியது போல
உணர்ந்தேன்.
தூரத்தில் அனு யாருடனோ
சிரித்துப் பேசி
சில பூக்களைச் சிந்திக் கொண்டிருந்தாள்,
நான் அவற்றை
என் இதயக் கட்டிலில்
சேகரிக்கத் துவங்கினேன்.
0







bala said,
September 19, 2008 at 1:04 pm
xavier intha kavithai thogupai naan munnamay padithu irukirean .mendum padika theydiyapothu kidaikavillai.ipothu thaan kidaithathu.
neengal intha thogupill “aval” “avanai” privatharku sonna karanathin alutham kuraivu enru ninaikirean.
aayinum thangal kavithayil uvamai matrum uruvagangalin atchi arumai.
thayavu seithu thaangal enaku minangal anupumaru vizhaikirean.thangal natpai virumbum BALA.
சேவியர் said,
September 19, 2008 at 3:28 pm
அன்பின் பாலா, இந்தப் படைப்புக்கு வந்த முதல் பின்னூட்டம் மனதுக்கு நிறைவளிக்கிறது. இந்த கவிதை நூலை பிடிஎஃப் ஆக வைத்திருந்தேன். அது சுற்றிச் சுற்றி உங்களைச் சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன்
xavier . dasaian at gmail . com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு கடிதம் அனுப்புங்கள். உங்கள் நட்பில் மகிழ்கிறேன்.
Karthick said,
September 19, 2008 at 3:33 pm
Nandra irundhadhu nanbar xaviere,
Adhillum naan rasitha varigal niraya niraya.
Avaigalil sila,
%
மண்ணுக்கு மனுச்செய்யாமல் இதோ
சட்டென்று விழுந்துவிட்டது
ஓர் மழைத்துளி
கடலைக் கழுவும் ஆவேசத்துடன்
%
Vaittril karu uruvaavadhai kuda kannikalaam
Kadhal uruvaavadhai??????????? arumaiyaana varathaigal….
%
கிளை விட்டபின் ஏன் எனக்கு
இலைத் தூது விடுகிறாய்
என்று கோபித்துக் கொண்டான்
%
Nanbargalin nakkal varigal-aanal
Neyamaana varaigal
%
தாயும், காதலியும்
அழகியலுக்கு அப்பாற்பட்டவர்கள் !!!
%
Sathiyamaana varthaigal…..
%
எனக்குப் பிடித்திருக்கிறது
கதாநாயகியாய் நடிப்பதற்கான
கட்சிதமில்லை அவளுக்கு
உன்கூட வாழ்வதற்கான
கனமான நேசம் இருக்கிறது
போதாதா உனக்கு ?
%
Ulaga azhaigiyai kadhaliyaar paarpavarukkum
Kadhaliyai ulaga azhagiyaai paarpavarukkum
ulla vidhyasathai-angulam
Ondrum vidamal uraikiradhu indha varthaigal……..
%
கர்ப்பமான மங்கை மாங்காய் கடிப்பதும்
காதலான மனங்கள் மெளனம் கடிப்பதும்
நீக்க முடியாத நியதிகள் என்பது
தெளியத்துவங்கியது
%
Kadhalin illakanum andro!!!!!!!!!!!!!!!
%
கடிகாரங்கள் கடமையை தொடர
காலண்டர்கள்
தற்கொலையைத் தொடர
%
kadhalanin kavalayai
karpanaiyodu ullavitturukireergal……
%
என் தோற்றம் உனக்கு
ஏமாற்றம் தருகிறதா ?
அவளைப் பார்த்துக் கேட்டேன்.
சாலை கடக்கும் வழிப்போக்கனாய்
நீ இருந்திருந்தால்
உன் அழகைப்பற்றி
ஆராய்ச்சி செய்திருப்பேன்
நீ
என் அகம் கடைந்தவன்
என் இதய மலை குடைந்தவன்
உனக்குள் நாள்
சுவாசம் பகிர னைக்கிறேன்
நீயோ
நுரையீரல் பிடித்திருக்கிறதா
என்று
மூச்சுக் காற்றுக்கு வினா தொடுக்கிறாய்
விழமறுக்கும் நகத்தோடு
விரல் எழுப்பும் வினா இது
தனைத் தழுவும் இமையோடு
கண் விடுக்கும் கணை இது
%
kadhalukkum azhagukkum sambandham irukkumo endra kadhalin unnarvukku kadhaliyin badhilgal miga arumai nanbare……
%
இதோ நாளை வருவான்
நாளை சொல்லிவிடவேண்டும்
கேட்பதற்காய் காதுகள்
காத்திருக்கும் போது
மெளனம் வழங்கப்படுவது தான் வலி !!
%
edhirpaarpukalin yemaatradhai arumaiyaai sollkiradhu….
%
அதில்
பிரியமே
இரத்தம் சிவப்புதானே என்றால்
அதிலும்
பாசிட்டிவ் தேடுவார்கள்
நெகட்டிவ் வாதிகள்
%
suyanala ulagathin
suyarubam!!!!!!!!!!!!!!!!!!!
%
“சுண்டெலிச் சண்டையா ? “
என்ன அது
வியப்பை விரித்த விழிகளால்
மெல்ல என்னைச் சுருட்டி
ஆழமாய் பார்த்தாள் அனு.
எத்தனை முறை
அடுக்கிவைத்தாலும் கலைந்துவிழும்
அடுக்களைப் பாத்திரங்களாய்,
உன்னைப் பற்றி
அவர்கள் சொல்வதை எல்லாம்
கலைத்துக் கொட்டுகிறேனே
%
ungal pena thoorigaikku enadhu muthangal thozhare……….
%
காதல் வந்தபின் எதையும்
ஒருமுறை சிந்தித்து முடிவெடுக்க
முடிவதில்லை.
முடிவில்லா சிந்தனைகள்
இல்லையேல்
சிந்தனைகளே இல்லா முடிவுகள்.
இரண்டில் ஒன்றே சாத்தியம்.
%
kadhalil mattume muttal thanamum meanmaiyai karudha padum!!!!!
%
யாருக்குமே
கவலை இருக்கவில்லை.
அம்மா, தங்கை மகிழ்ந்தார்கள்.
ஒரு வேளை
இதைத் தான் வேண்டினார்களோ ?
அவர்கள் தேவைகளெல்லாம்
என் அருகாமையும்
என் எதிர்பார்ப்பு மட்டும்
பெரும் வருவாயுமா ?
%
Uravugalin thevaiyai
Unaraadhadhai miga nandrai vivarithrukireergal….
%
நான்,
உன்னைச் சார்ந்திருப்பதால்
நீ
என்னை சாயவைக்கிறாயா ?
%
Thaaimaiyin nejamaana vedhanai varthaigal….
%
நிறைவு என்பது
ஓடும் போது கிடைப்பதில்லை.
ஓரிடத்தில்
உட்காரும்போது தான்
கிடைக்கும்.
%
Thathuva varthaigal-endrum
Thapadha varthaigal
%
யாராரோ போடும்
போரில்
தோல்விகள் மட்டும்
என் முகவரிக்கு அனுப்பப்படுகிறதா ?
%
Virathiyin vellai arikkai….
%
பூமியில்
ஆணிவேர் விட்டு நிலைத்தபின்,
பூமியை
ஆணியால் அறைவதில்
உடன்பாடில்லை எனக்கு.
%
nalla varthaigal……..
%
நான் சிரித்தேன்.
நண்பா,
இலக்கணங்கள் வரைமுறைகள்
எல்லாம்
நீ எழுதும் கவிதைகளுக்கானது.
வெண்பாக்களுக்குள் அடங்காது
பெண்பாக்கள்.
விருத்தங்களால் முழுமை அடைவது
மரபுக் கவிதை,
விருப்பங்களால் முழுமை அடைவதே
காதலெனும் கவிதை.
%
Sila nerangalil illakkana pizhaigal
kadhalukkum azhagu
kavidhaikkum azhage…….
%
காதல் பூவாக இருந்தால் மட்டுமே
பூஜிப்பேன் என்றால்,
அது சருகானபின் சங்கடமே மிஞ்சும்.
காதலை
செடியாகப் பார்க்க வேண்டும்.
அப்போது தான்
பூக்களையும் முட்களையும்
கிளைகளையும் இலைகளையும்
ஒருசேர
விரும்ப இயலும்.
%
Anaivarume kadhalai sediyaai paarkatume…..en nabar xavierai pola……..
Jebez said,
September 19, 2008 at 5:47 pm
Nanbare,
Migavum Nalla Padaippu.
Vazhthukkal..
top10shares said,
September 20, 2008 at 11:27 am
அண்ணன் சேவியர் அவர்களுக்கு,
எழுத்துலகின் சிகரத்தை தொட்டுவிட காத்திருக்கும் உங்களை…. நடை பயிலும் நான் வாழ்த்துவது அழகில்லை..
10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முழுகவிதை தொகுப்பை படிக்கிறேன்.. அதுவும் ஒரே மூச்சில் கலை 8.00 மணி முதல் – ஒவ்வொரு வரியையும் கவிதையரங்கில் வாசிப்பது போல் இரண்டு இரண்டுமுறை வாய்விட்டு வாசித்தேன் இரண்டு அத்தியாயம் சத்தமாக படித்த உடன் – என்ன இவருக்கு ஆனது சென்செக்ஸை-யும் லேஹ்மென் பிரதர்ஸையும் பற்றி புலம்பும் ஆளுக்கு என்று அருகில் வந்து எனது துணையும் அருகில் வந்தமர்ந்து சத்தமாகவே வாசிங்க நானும் கேட்கிறேன் என்று சொல்ல இன்னும் உற்சாகமாக
அனுபவித்து படித்தேன்….
பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்… பரவசமடைந்தேன்..
வலித்தது என்னவோ வாய்… பசித்தது என்னவோ வயிறு… ஆனாலும் – இயந்திர வாழ்க்கையில் எப்போதும் ஏதோ ஒரு பயத்துடன் ஓடிகொன்டிருக்கும் மனசின் வலி குறைந்தது… மறைந்தது… ரசனைகளை பூட்டி விட்டு நிம்மதியை தேடி அலைகின்றோம் என்று உணர்ந்தேன்.
எளிமையான வார்த்தை பிரயோக வித்தைகளை / விளையட்டுகளை ரசிக்கும் இன்னொருவனின் பசிக்கு நல்ல விருந்தாக அமைந்தது தங்களின் பல வரிகள்…
எந்த புத்தகத்தை படித்தாலும் அடிகோடிடும் பழக்கம் உண்டு.. அடிகோடிட்ட வரிகள அனைத்தையும் இங்கு குறிபிட்டால் பின்னுட்டம் தொடர் ஓட்டமாக மாறிவிடும் காரணத்தால் இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன்.
//கதாநாயகியாய் நடிப்பதற்கான
கட்சிதமில்லை அவளுக்கு
உன்கூட வாழ்வதற்கான
கனமான நேசம் இருக்கிறது
போதாதா உனக்கு ?//
//இரத்தம் சிவப்புதானே என்றால்
அதிலும்
பாசிட்டிவ் தேடுவார்கள்
நெகட்டிவ் வாதிகள்//
நான் நெகடிவ் தான் அதனால் தான் என்னவோ தேடுவது எல்லாம் பாசிட்டிவாக இருகிறது… ஆஹா..
//காயப் போட்ட நெல்லை
மழை நனைக்குமோ எனும் கவலை
சிலருக்கு,
விதைத்து வைத்த விதையை
மழை நனைக்காதோ
எனும் கவலை சிலருக்கு//
அண்ணே – அன்றைக்கு நம்ம வீட்டுக்கு பொசுக்குனு வந்துட்டு போயிட்டிஙக, காபி தண்ணி கூட குடிக்காம… அடுத்த முறை வந்தா விருந்து சாப்பிட்டு தான் போகனும் ஆமா சொல்லிபுட்டேன்..
தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி… தங்களின் பாரட்டு மோதிர கையால் தட்டி கொடுத்ததை போல்….
(குட்டினாலும் / குத்தினாலும் தாங்க மாட்டேன் அழுதுடுவேன் – ஏன்னா பில்டிங் வீக்….)
நேரம் இருந்தால் …. வாங்க ….
http://top10shares.wordpress.com/2008/09/15/anna/
நன்றி
சாய் கணேஷ்…
top10shares said,
September 20, 2008 at 11:37 am
இறுதி அத்தியாயங்களில் வலி கூடியது…. கற்பனை என்றால் சந்தோஷங்களை தூக்கலாக சொல்லியிருக்கலாம் … உண்மை சம்பவம் என்பதால்… அது இயலாமல் போனது.. வருத்தம் தான்
உண்மை எப்போதும் கசக்கதான் செய்யும்……
RAVI KUMAR (Kuwait) said,
September 20, 2008 at 2:33 pm
///Reading could’t finish yet good luck //
//supper//
விக்னேஷ்வரன் said,
September 20, 2008 at 3:12 pm
//சாலை கடக்கும் வழிப்போக்கனாய்
நீ இருந்திருந்தால்
உன் அழகைப்பற்றி
ஆராய்ச்சி செய்திருப்பேன்//
நான் இருந்திருந்தால்
என போட்டிருந்தால் மிக பொருந்தும் என்பது என் கருத்து. கொபிக்க வேண்டாம் மனதில் பட்டதைச் சொன்னேன்.
விக்னேஷ்வரன் said,
September 20, 2008 at 3:27 pm
//வயிறு காலியாக இருந்தாலும்
இதயம் கனத்திருந்ததால்
உணவுக்கு பசி மட்டுமே தின்ன முடிந்தது//
இது ‘பச்சக்’னு நெஞ்சில் ஒட்டும் வரி. உணவாக பசியை சாப்பிடுவது ரசனையாக இருக்கிறது.
புனிதா said,
September 20, 2008 at 4:33 pm
இந்தக் கவிதையை முன்பு காதல்.காம்மில் படித்து வந்தேன்…. ஆனால் முடிவை தெரிந்துக் கொள்ள முடியாமல் ஏதோ அந்த வலைப்பக்கத்தில் கோளாராகிவிட்டது…மீண்டும் படிக்க கிடைத்த வாய்ப்புக்கு நன்றி!
விக்னேஷ்வரன் said,
September 20, 2008 at 5:45 pm
அண்ணா குருவி சாப்பாடு சேர்ப்பது போல் வேலை இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் படித்து முடித்தேன். நன்றாக இருக்கிறது. அந்த கவிதை நண்பன் நீங்களா? அனு எங்கே இருக்கிறார் இப்போது?
ஹேமா said,
September 21, 2008 at 7:02 pm
அண்ணா…மூன்று நாட்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து முடித்தேன்.எந்த வரி அழகு.எந்த வரி அர்த்தம் என்று சொல்ல முடியாமல் இருக்கிறது.கதையாய் புரிந்துகொள்ளும் காதல் கருத்தான்.என்றாலும் அது எவ்வளவு வர்ணனை வர்ணம் பூசிக்கொண்டு ஒரு ஓவியக் கவிதையாய்.எந்த வார்த்தையைச் சொல்லிப் பாராட்ட?ஒவ்வொரு வரிகளுமே திருப்பித் திருப்பிப் படித்தாலும் புதுமையாய்த் தெரிகிற வர்ணனை வரிகள்.ஆகா இந்த வரி இவ்வளவு நல்லாயிருக்கே என்று வாசித்தால் அடுத்த வரி அதைவிட இன்னும் அருமையாய்.என்ன அண்ணா இப்படி அள்ளிக் கொட்டி விட்டிருக்கிறீர்கள்.நிறைந்த கைதட்டல் என் திசையில் இருந்து.கேட்குதா!
சேவியர் said,
September 22, 2008 at 10:17 am
அன்பின் கார்த்திக். ஆனந்தத்தில் மிதந்தேன் உங்கள் விரிவான பின்னூட்டம் கண்டு. வரி வரியாய் வாசித்து மகிழ்ந்தமைக்கும், நீங்கள் வாசித்த வரிகளைக் கோடிட்டுக் காட்டி அவற்றை உங்கள் அழகிய வரிகளால் அழகுபடுத்தியமைக்கும் நன்றிகள் பல.
பொறுமையாய் படித்தமைக்கும், விரிவாய் எழுதியமைக்கும் கோடி நன்றிகள்.
சேவியர் said,
September 22, 2008 at 10:18 am
/Nanbare,
Migavum Nalla Padaippu.
Vazhthukkal..
//
நன்றி ஜெபஸ். அடிக்கடி வாருங்கள்.
சேவியர் said,
September 22, 2008 at 10:27 am
அன்பின் சாய் கணேஷ்.
புல்லரிக்க வைத்து விட்டீர்கள். ஒரு படைப்பை எழுதும் படைப்பாளிக்கு இதை விடப் பெரிய மகிழ்ச்சி வேறில்லை
/
நடை பயிலும் நான் வாழ்த்துவது அழகில்லை..
//
அட ! இன்னொரு தளத்தில் அசத்திக் கொண்டிருக்கிறீர்கள் நண்பரே. நாம அதுல செம வீக்
//
10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முழுகவிதை தொகுப்பை படிக்கிறேன்.. அதுவும் ஒரே மூச்சில் கலை 8.00 மணி முதல் – ஒவ்வொரு வரியையும் கவிதையரங்கில் வாசிப்பது போல் இரண்டு இரண்டுமுறை வாய்விட்டு வாசித்தேன் //
மிகவும் ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம்…
ரொம்ப நன்றி.
//
இரண்டு அத்தியாயம் சத்தமாக படித்த உடன் – என்ன இவருக்கு ஆனது சென்செக்ஸை-யும் லேஹ்மென் பிரதர்ஸையும் பற்றி புலம்பும் ஆளுக்கு என்று அருகில் வந்து எனது துணையும் அருகில் வந்தமர்ந்து சத்தமாகவே வாசிங்க நானும் கேட்கிறேன் என்று சொல்ல இன்னும் உற்சாகமாக
அனுபவித்து படித்தேன்….
பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்… பரவசமடைந்தேன்.. //
நன்றி நன்றி நன்றி. கோடி நன்றிகள். படித்தமைக்கும், ரசித்துப் படித்தமைக்கும்
//
வலித்தது என்னவோ வாய்… பசித்தது என்னவோ வயிறு… ஆனாலும் – இயந்திர வாழ்க்கையில் எப்போதும் ஏதோ ஒரு பயத்துடன் ஓடிகொன்டிருக்கும் மனசின் வலி குறைந்தது… மறைந்தது… ரசனைகளை பூட்டி விட்டு நிம்மதியை தேடி அலைகின்றோம் என்று உணர்ந்தேன்.
//
ஒரு கவிதையாகவே எழுதியிருக்கிறீர்கள்
//
எளிமையான வார்த்தை பிரயோக வித்தைகளை / விளையட்டுகளை ரசிக்கும் இன்னொருவனின் பசிக்கு நல்ல விருந்தாக அமைந்தது தங்களின் பல வரிகள்…
//
நன்றி நண்பரே !
//
எந்த புத்தகத்தை படித்தாலும் அடிகோடிடும் பழக்கம் உண்டு.. அடிகோடிட்ட வரிகள அனைத்தையும் இங்கு குறிபிட்டால் பின்னுட்டம் தொடர் ஓட்டமாக மாறிவிடும் காரணத்தால் இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன்.
//
ஒரு பெரிய பின்னூட்டத்தை இட்டு இன்றைய பொழுதை இனிமையாக்கியமைக்கும், ஆழமாய் ரசித்தமைக்கும் நன்றிகள் மீண்டும்.
தொடர்வோம், வாசிப்பையும், நட்பையும்
சேவியர் said,
September 22, 2008 at 10:36 am
//இறுதி அத்தியாயங்களில் வலி கூடியது…. கற்பனை என்றால் சந்தோஷங்களை தூக்கலாக சொல்லியிருக்கலாம் … உண்மை சம்பவம் என்பதால்… அது இயலாமல் போனது.. வருத்தம் தான்
உண்மை எப்போதும் கசக்கதான் செய்யும்……//
நன்றி சாய்கணேஷ். கதையின் இரண்டாம் பாகம் பரபரப்பானது. ஆனால் அதை எழுதவேண்டாம் என நண்பன் கேட்டுக் கொண்டதால் எழுதவில்லை
சேவியர் said,
September 22, 2008 at 10:37 am
/////Reading could’t finish yet good luck //
அப்புறம் படிங்க
//supper//
சேவியர் said,
September 22, 2008 at 10:38 am
////சாலை கடக்கும் வழிப்போக்கனாய்
நீ இருந்திருந்தால்
உன் அழகைப்பற்றி
ஆராய்ச்சி செய்திருப்பேன்//
நான் இருந்திருந்தால்
என போட்டிருந்தால் மிக பொருந்தும் என்பது என் கருத்து. கொபிக்க வேண்டாம் மனதில் பட்டதைச் சொன்னேன்.
//
சட்டென யாராச்சும் நம்மைக் கடந்து போனால், அடடா என்ன ஒரு அழகு என வியக்கும் மனநிலையைச் சொல்ல நினைத்தேன்.
கோபிக்க என்ன இருக்கிறது தம்பி, திட்டக் கூட உனக்கு உரிமை இருக்கிறது !
சேவியர் said,
September 22, 2008 at 10:39 am
////வயிறு காலியாக இருந்தாலும்
இதயம் கனத்திருந்ததால்
உணவுக்கு பசி மட்டுமே தின்ன முடிந்தது//
இது ‘பச்சக்’னு நெஞ்சில் ஒட்டும் வரி. உணவாக பசியை சாப்பிடுவது ரசனையாக இருக்கிறது.
/
நன்றி தம்பி
சேவியர் said,
September 22, 2008 at 10:40 am
//இந்தக் கவிதையை முன்பு காதல்.காம்மில் படித்து வந்தேன்…. ஆனால் முடிவை தெரிந்துக் கொள்ள முடியாமல் ஏதோ அந்த வலைப்பக்கத்தில் கோளாராகிவிட்டது…மீண்டும் படிக்க கிடைத்த வாய்ப்புக்கு நன்றி!/
நன்றி புனிதா. காதல்.காமில் கொஞ்சம் போட்டிருந்தேன்
சேவியர் said,
September 22, 2008 at 10:42 am
//அண்ணா குருவி சாப்பாடு சேர்ப்பது போல் வேலை இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் படித்து முடித்தேன். நன்றாக இருக்கிறது. அந்த கவிதை நண்பன் நீங்களா? அனு எங்கே இருக்கிறார் இப்போது?
//
ஆமா
சிங்கப்பூரில் இருக்கிறார்கள். அனு, உன் ஊர் தான்
மலேஷியா !
சேவியர் said,
September 22, 2008 at 10:44 am
/அண்ணா…மூன்று நாட்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து முடித்தேன்.எந்த வரி அழகு.எந்த வரி அர்த்தம் என்று சொல்ல முடியாமல் இருக்கிறது.கதையாய் புரிந்துகொள்ளும் காதல் கருத்தான்.என்றாலும் அது எவ்வளவு வர்ணனை வர்ணம் பூசிக்கொண்டு ஒரு ஓவியக் கவிதையாய்.எந்த வார்த்தையைச் சொல்லிப் பாராட்ட?ஒவ்வொரு வரிகளுமே திருப்பித் திருப்பிப் படித்தாலும் புதுமையாய்த் தெரிகிற வர்ணனை வரிகள்.ஆகா இந்த வரி இவ்வளவு நல்லாயிருக்கே என்று வாசித்தால் அடுத்த வரி அதைவிட இன்னும் அருமையாய்.என்ன அண்ணா இப்படி அள்ளிக் கொட்டி விட்டிருக்கிறீர்கள்.நிறைந்த கைதட்டல் என் திசையில் இருந்து.கேட்குதா//
பிரிய தங்கையே… கைத்தட்டல் ரொம்பவே கேட்குது
ரொம்ப ரொம்ப நன்றி.
ஆழமாய், மனப்பூர்வமாய் பாராட்டியமைக்கு. மனம் சிலிர்க்கிறது. உங்கள் ரசிப்புக்கும், நட்புக்கும் மனமார்ந்த நன்றிகள்.
muthu said,
September 24, 2008 at 5:34 pm
ஆழமாய், மனப்பூர்வமாய் பாராட்டியமைக்கு. மனம் சிலிர்க்கிறது. உங்கள் ரசிப்புக்கும், நட்புக்கும் மனமார்ந்த நன்றிகள்
tamilselvi said,
October 1, 2008 at 7:26 pm
really nice xavier
kadhalin valiyum vedhanaiyum arumaiaga sollapatu ullathu
kavithai thokupu patri enaku therivtha enn nanbar bala ku nandri
சேவியர் said,
October 3, 2008 at 12:13 pm
//ஆழமாய், மனப்பூர்வமாய் பாராட்டியமைக்கு. மனம் சிலிர்க்கிறது. உங்கள் ரசிப்புக்கும், நட்புக்கும் மனமார்ந்த நன்றிகள்
//
வருகைக்கு நன்றி முத்து
சேவியர் said,
October 3, 2008 at 12:30 pm
//really nice xavier
kadhalin valiyum vedhanaiyum arumaiaga sollapatu ullathu
kavithai thokupu patri enaku therivtha enn nanbar bala ku nandri
//
நன்றி தமிழ்செல்வி. கூடவே நன்றி முத்து !
Muruganantham said,
January 31, 2009 at 2:22 pm
Naan oru software engineer….free irukkum podhu office la sila nerangalil tamil kathaigal,kavithaigal ennaiyathalathil thedi padippaen..ungaludaiya endha padaippu miga,miga arpudham ennudaiya vaelaigal annaithaiyum vittu ,sumar 2 mani naeram rasithu padithaen,naan endha kadhai..in nayangam pol unardhaen…mikka nanri……
சேவியர் said,
February 3, 2009 at 6:37 pm
அன்பின் முருகானந்தம். உங்களைப் போன்றவர்களின் மடல்கள் தொடர்ந்து எழுத வைக்கின்றன. நன்றி.