ஒரு ஜனனம் வேண்டும் எனக்கு.
நானாய்
ஜனிக்கும் ஜனனம்.
எனக்குள் ஏராளம்
சிலந்தி வலைச் சிந்தனைகள்,
அறுக்க அறுக்க
அனுமார் வாலாய்,
வெட்ட வெட்ட
இராவணத் தலைகளாய்
சளைக்காமல் முளைக்கின்றன.
என் ஜனனத்தின் ஜன்னலோரம்
நான்
கண்விழித்தபோதே
இமை மூடிக் கிடந்தது
எனக்கான வாழ்க்கை.
என் பால்ய வயதுப் பருவத்தின்
அரை டிராயர்
அவசர காலங்களில்,
என் கால்களுக்குக் கீழே
ஒட்ட வைக்கப்பட்டிருந்தன
எனக்கான பாதைகள்.
என்
கல்லூரி கால
நிறச் சாலைகளில்
என் சிறகுகளுக்கான சாயம்
தனிக்
குடுவைகளில் காத்திருந்தது.
சிறகுகளை வாங்கி வந்து
பின்
பறவைகளைப் பெற்றெடுத்ததாய்,
எனக்கான கவசங்களுக்குள்
நான்
பிரசவிக்கப் பட்டிருந்தேன்.
என் குணம் அரிதென்றும்
என் இனம் பெரிதென்றும்
நான்
வாயாடிய தருணங்களுக்காய்
வெட்கப் படுகிறேன்.
எதுவும் என் கவசத்துக்கு வெளியே
நானாய் கண்டெடுத்ததில்லை.
மரணம் நோக்கி நான்
தலை தெறிக்க ஓடும் ஓடல்களில்
எனக்கு
இன்னோர் ஜனனம் தேவைப்படுகிறது.
ஈரமாய்.
இனிமேல்
உடைகளுக்காய் யாரும்
குழந்தைகளை தயாரிக்க வேண்டாம்.
பொருளாதார எல்லைகளை
இலட்சியங்கள் என்று சொல்லி
வார்க்கச்சைக்குள் வாழ்க்கையை
தூக்கிலிடவும் வேண்டாம்.
மழலைகளிடம் செல்லுங்கள்,
மனிதத்தை இலட்சியமாக்கச்
சொல்லுங்கள்.
இல்லையேல்
எல்லோருக்கும் தேவைப்படும்
பயணத்தின் பாதையில்
இரண்டாம் ஜனனம்.










ஹேமா சொன்னது,
செப்டம்பர் 25, 2008 இல் 4:25 மு.பகல்
அண்ணா கவிதை வரிகள் எப்பவும் போல வர்ணித்து அழகாய்…
ஆனால் குழப்பமாய்….
aruna சொன்னது,
செப்டம்பர் 25, 2008 இல் 8:38 பிற்பகல்
//இனிமேல்
உடைகளுக்காய் யாரும்
குழந்தைகளை தயாரிக்க வேண்டாம்.//
ரொம்ப யோசிக்க வைத்தது….இந்த வரிகள்…
அன்புடன் அருணா
விக்னேஸ்வரன் சொன்னது,
செப்டம்பர் 25, 2008 இல் 9:01 பிற்பகல்
அழுத்தமான நிதர்சன உண்மையை வாழைப்பழத்தில் ஊசியை போல் ஏற்றியுள்ளீர்கள் அண்ணா… மிகவும் உண்மை… பாவம் நாம் சென்று கொண்டிருக்கும் எதிர்காலம்…
பி.கு: இப்போதெல்லாம் மொக்கை போட ஒரு பதிவும் சிக்க மாட்டுதே…
))
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 26, 2008 இல் 2:33 பிற்பகல்
//அண்ணா கவிதை வரிகள் எப்பவும் போல வர்ணித்து அழகாய்…
ஆனால் குழப்பமாய்….
//
நன்றி தங்கையே ! இரண்டாம் ஜனனம் என்பது நம்மை உணர்ந்து நாமே புதிதாய் பிறப்பது …
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 26, 2008 இல் 2:34 பிற்பகல்
////இனிமேல்
உடைகளுக்காய் யாரும்
குழந்தைகளை தயாரிக்க வேண்டாம்.//
ரொம்ப யோசிக்க வைத்தது….இந்த வரிகள்…
அன்புடன் அருணா/
நன்றி அருணா
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 26, 2008 இல் 2:36 பிற்பகல்
//அழுத்தமான நிதர்சன உண்மையை வாழைப்பழத்தில் ஊசியை போல் ஏற்றியுள்ளீர்கள் அண்ணா… மிகவும் உண்மை… பாவம் நாம் சென்று கொண்டிருக்கும் எதிர்காலம்…//
மிக்க நன்றி விக்கி
//
))
பி.கு: இப்போதெல்லாம் மொக்கை போட ஒரு பதிவும் சிக்க மாட்டுதே…
//
ஆஹா.. எதுல வேணா போடலாமே தம்பி. இது உன்னோட உரிமை இல்லையா ?
சரி நம்ம வி.கோ இன்னும் ஹனிமூன்ல இருந்து இறங்கி வரலையா ?
Bubesh சொன்னது,
அக்டோபர் 20, 2008 இல் 10:23 பிற்பகல்
//பொருளாதார எல்லைகளை
இலட்சியங்கள் என்று சொல்லி
வார்க்கச்சைக்குள் வாழ்க்கையை
தூக்கிலிடவும் வேண்டாம்.//
mihavum unmaiyana varigal.
சேவியர் சொன்னது,
அக்டோபர் 21, 2008 இல் 6:43 பிற்பகல்
நன்றி பூபேஷ்.