பெண்ணே நீ கட்டுரை : கனாக் காணும் பதின் வயது

டாக்டர் எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. கடந்த இரண்டு நாட்களா தற்கொலைசெய்தே ஆகவேண்டும் எனும் உந்துதலும், மன உளைச்சலும் மனசு முழுக்க நிரம்பி
இருந்தது. இரயில்வே கேட்டைக் கடக்கும்போது ரயிலுக்கு இடையே குதிக்க வேண்டும் என்றும், சாலையோரம் நிற்கும் போது சட்டென காருக்கு இடையே குதித்து விட வேண்டுமென்றும் மனம் நினைக்கிறது. இன்று அப்படி எந்த எண்ணமும் வரவில்லை. இப்படி அடிக்கடி மனம் அழுத்தமடைகிறது என கண்ணீரோடு தன்னைப் பார்க்க வந்த ஒரு பதின் வயதுப் பெண் சொன்னதாகச் சொல்கிறார் “TeTeenager’s Guide to the Real World” எனும் நூலின் ஆசிரியர் பிரைன் மார்ஷல்.

teen என்னை எப்போதும் அவர்கள் சந்தேகக் கண்கொண்டு மட்டுமே பார்க்கிறார்கள். நான் கல்லூரியில் படிக்கிறேன். கெட்ட பழக்கங்கள் எதுவுமே கிடையாது. ஆனாலும் என்னை அவர்கள் நம்புவதில்லை. எந்த ஒரு சுதந்திரமும் எனக்குத் தராமல் ஒரு ஒன்பது வயதுக் குழந்தையைப் போல நடத்துகிறார்கள். எனக்கு இந்த வாழ்க்கையின் மீதும், பெற்றோரின் மீதும் மிகப்பெரிய வெறுப்பு வந்துவிட்டது. என்ன செய்யவேண்டும் என தன்னிடம் பல பதின் வயதுப் பெண்கள் வந்து அழுவதாகக் கூறுகிறார் மருத்துவர் டாக்
ஜெர்ரி.

பதின் வயதுப் பருவம் கலவை உணர்ச்சிகளால் வனையப்பட்ட ஒரு மண்பாண்டம் போன்றது. இந்த பருவத்தில் தான் கிளர்ச்சி, வளர்ச்சி, பயம், தைரியம், ஆர்வம் என என்னென்ன உடலியல், உளவியல் மாற்றங்கள் உண்டோ அவை அனைத்துமே வந்து பற்றிக் கொள்கின்றன எனலாம்.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இந்தப் பதின் வயது என்பது கண்ணாடிக் குடுவை போன்றது. கர்வமும், அதீத துணிச்சலும் அவர்களை ஆட்கொள்ளும் அதே வேளையில் சமூகத்தின் வல்லூறுக் கண்களுக்கும் அவள் தப்பிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறாள்.

பதின் வயதுப் பருவத்தில் தான் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மன அழுத்தம் கொள்வதும், தற்கொலை செய்து கொள்ளவேண்டும் எனும் எண்ணம் அடிக்கடி தலை தூக்குவதும் அதிகம் என்கிறார் மார்ஷல் பிரைன் எனும் உளவியலார்.

இந்த எண்ணங்கள் அதிக காலம் நீடிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு நாள் தற்கொலை செய்ய வேண்டும் என மன அழுத்தம் அலைக்கழிக்கும், ஆனால் மறு நாள் தெளிந்த வானம் போல எல்லாம் மறைந்து விட்டிருக்கும். இவையெல்லாம் இந்த வயதுக்கே உரிய இயல்பான மாற்றங்கள் என்பதை பெண்களும், பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த பருவத்தைக் கையாள என்பது இருபுறமும் கூர்மையான வாளைக் கையாளும் லாவகம் தேவை.  ஏனெனில் இந்த பருவம் தான் பாதையைத் தேர்வு செய்யும் பருவம். போதைக்கு அடிமையாகும் மக்கள் தங்களுடைய முதல் சுவடை பதின் வயதில் தான் பதிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. சரியான வழிகாட்டுதலும், பெற்றோரின் கண்காணிப்பும் பதின் வயதினருக்கு மிக முக்கியமாகிப் போனதன் காரணம் இது தான்.

வாழ்க்கையில் பல விஷயங்களின் “முதல் சுவடு” இங்கே தான் வைக்கப்படுகிறது.  அந்த முதல் சுவடை லாவகமாய் வகைப்படுத்துவது தான் பெற்றோரின் கவலைக்குரிய பணியாக இருக்கிறது.

பெண்களின் உடல் ரீதியான வளர்ச்சியும் அவர்களை பல வேளைகளில் மன அழுத்தத்துக்கும், பயத்துக்கும், குழப்பத்துக்கும் இட்டுச் செல்கிறது. காரணம் பாலியல் ஹார்மோன்கள் உடலுக்குள் பாய்வது அந்தப் பருவத்தில் தான். இயற்கையின் இந்த மாற்றம் உடலுக்கும் மூளைக்குமிடையேயான தகவல் பரிமாற்றங்களை இன்னோர் தளத்துக்கு மாற்றி வைக்கிறது.

இரவில் தூக்கமில்லாமல் புரள்வதோ, அல்லது விடிந்தபின்னும் எழும்பாமல் தூங்குவதோ என இவர்களுக்குள் இனம் புரியாத மாற்றங்களை இந்த மாற்றங்கள் விதைத்து விடுகின்றன.
அதீத கோபம் சிலரை ஆக்கிரமித்துக் கொள்கிறது. யார் என்ன செய்தாலும், பேசினாலும் கோபமடைவது இந்த பருவத்தில் பலருக்கும் வரக்கூடிய நிலை மாற்றம். தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபட வைக்கலாம். இல்லையேல் குறைந்த பட்சம் அவர்களுடைய கோபத்தைப் புரிந்து கொள்ள முயலலாம்.

புதியதை அறியும் ஆர்வம் சிலருக்கும், புதியதால் விளையும் பயம் மற்றவர்களுக்கும் என இந்த வளர்ச்சி மாற்றங்கள் பதின் வயதுப் பெண்களை அலைக்கழிக்கின்றன.

பன்னிரண்டு வயதுக்குப் பிறகு தான் மூளை முதன் முதலாக ஒரு சிறுமியை பெண்ணாக மாற்றுகிறது என்கின்றனர் உளவியலார்கள். இந்த காலகட்டத்தில் தான் இவர்கள் சமூகத்தின் தவறான கவர்ச்சிகளால் ஈர்க்கப்படுகின்றனர். ஊடகங்கள், திரைப்படங்கள், இணையம் என இவர்களுக்காய் தூண்டிலுடன் காத்திருக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

அதுவரை மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லை என அலையும் களங்கமற்ற ஒரு சிறுமி, சட்டென்று அழகு குறித்த கவலையும், அடுத்தவர்களின் அபிப்பிராயங்களின் மீதான கவலையையும் கொள்கிறாள்.

எனவே பதின் வயதுப் பெண்ணை எந்தக் காரணம் கொண்டும் மற்றவர்கள் முன்னிலையில் தரக் குறைவாகப் பேசவே பேசாதீர்கள். அவர்களுடைய நடவடிக்கை, தோற்றம், திறமை எதைக் குறித்தும் இருக்கலாம் இந்த உரையாடல்.

தன் எடை மீதான கவலை பெண்களை பற்றிக் கொள்ளும் காலமும் இது தான். ஆரோக்கியமான வழிகளை யோசிப்பதை விட, தனது எடை அதிகரித்து விட்டதே அல்லது குறைந்து விட்டதே என பெண்கள் வருந்துவது பதின் வயதின் படிகளில் தான்.

கண்ணாடிகளில் அதிக நேரம் செலவிடும் இந்த பதின் வயதினர் தாங்கள் அழகாய், அங்கீகரிக்கப்படும் விதமாய் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமென எப்போதும் நினைப்பார்கள். எனவே இவர்களை எந்தக் காரணம் கொண்டும் அவர்களுடைய தோற்றத்தைக் குறித்து கிண்டலடிப்பதே கூடாது! அது அவர்களுடைய தன்னம்பிக்கையையும், நிம்மதியையும் குலைத்து வாழ்க்கையையே மாற்றியமைத்துவிடக் கூடும்.

பல பதின் வயதினர் தோல்விகளை எளிதாய் எடுத்துக் கொள்வதில்லை. தேர்விலானாலும் சரி, காதலில் ஆனாலும் சரி, போட்டிகளில் ஆனாலும் சரி தோல்வி வந்தால் துவண்டு சட்டென உடைந்து போகும் மனம் பதின் வயதுக்கு உரியது. இதைப் பெற்றோர் உணர்ந்து செயல்படுதல் அவசியம். தோல்வியோ, வெற்றியோ எதுவானாலும் நீங்கள் குழந்தையை முழுமையாய் அங்கீகரித்துக் கொள்கிறீர்கள் எனும் நம்பிக்கையை அவர்களிடம் ஊட்ட மறவாதீர்கள்.

குறிப்பாக மகளிடம் அவளுடைய பள்ளிக் கூட நிகழ்வுகளையும், அன்றைய தினம் நடந்தவற்றையும் பகிரச் சொல்லிக் கேளுங்கள். அவர்கள் பேசினால் முழுமையாய் ஈடுபாட்டுடன் கேளுங்கள். பெற்றோர் மகளுக்கிடையேயான உறவு வளர்ச்சிக்கும், மகளுக்கு எங்கேனும் ஏதேனும் உதவி தேவையா என்பதைப் பெற்றோர் புரிந்து கொள்ளவும் இந்த வெளிப்படையான உரையாடல் வழிவகுக்கும்.

வீடுகளில் ஏதேனும் விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியிருந்தால் உங்கள் பதின் வயது மகளின் அபிப்பிராயத்தையும் கேளுங்கள். தன்னை பெரியவளாய் கவனிக்கிறார்கள், தனது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்பதே உங்கள் பதின் வயது மகளை உற்சாகத்துக்கும், தன்னம்பிக்கையான மனநிலைக்கும் இட்டுச் செல்லும்.

பதின் வயதுப் பருவம் பக்குவம் வந்த தங்களைப் போல எதையும் ஒழுங்குடனும், திட்டமிட்டும் செய்யும் வயதல்ல என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும். சீப்பை இடம் மாற்றி வைப்பதற்கெல்லாம் சத்தமிட்டுக் கொண்டிருப்பதை விடுத்து, சில குறைகளை ஏற்றுக் கொண்டு பக்குவமாய் அவர்களைப் பழக்கவேண்டும்.

அதை விடுத்து குழந்தைகள் தங்களிடம் குறைகள் இருப்பதாகப் பேசினால், அவற்றுக்கு மாறாக மிகவும் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவே பேசவேண்டும். சலிப்பு ஏற்படும் வரை குழந்தைகள் கேட்டால், சலிப்படையாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்பதே சூட்சுமம்.

இந்த மாற்றமும், இது தரும் கவலையும் இலட்சியங்களின் மீதான பார்வையை விலக்கி விடும் அபாயமும் உண்டு. எதிர்காலத்தைக் குறித்த பயமற்றுத் திரிவது, எதிர்காலத்தைக் குறித்து பயந்து நடுங்குவது என இருவேறு மனநிலை இவர்களை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

அதீத ஈகோ இந்த வயதில் இந்த வயதினரை ஆக்கிரமித்திருக்கும். சிலருக்கு தான் எதற்கும் பயனற்றவள் எனும் சிந்தனை மேலோங்கியிருக்கும். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் பதின் வயதினரை எள்ளி நகைக்காமல் இருப்பதே நல்லது.

அடிக்கடி பதின் வயதினரை பாராட்டுவதும், அவர்களுடைய தோற்றத்தைக் குறித்துப் பாராட்டுவதும் என தன்னம்பிக்கையை பெற்றோர் ஊட்ட வேண்டும். அவர்கள் ஏதேனும் நல்ல செயல் செய்யும் போதெல்லாம் வெகுவாய் ஊக்கப்படுத்தி அவர்களை நெறிப்படுத்த வேண்டும்.

இந்தக் காலகட்டம் அதீத தன்னம்பிக்கையையும், உயர்வு உணர்வையும் பெரும்பாலும் பதின் வயதுக்குள் புகுத்தி விடுகின்றன. இன்னும் குறிப்பாக பதின் வயதின் கடைசிக் கட்டத்தில் பெற்றோருக்கு எதுவுமே தெரியாது என்றும், தான் முடிவெடுப்பதெல்லாம் வெகு சரியான முடிவுகள் எனவும் அசைக்க முடியாத ஒரு உறுதி இவர்களுக்குள் முளைவிடும்.

தன்னோடு அன்பாகப் பழகிய மழலை சட்டென தன்னை வெறுக்கிறாளோ எனும் நினைப்பே பெற்றோரின் உள்ளத்தில் ஆழமான காயத்தை உண்டு பண்ணி விடுகிறது. இந்த காலகட்டத்தில் தான் பெற்றோரின் கவனமான அணுகுமுறை அவசியப்படுகிறது.

உண்மையில் தன் மகள் தன்னை வெறுக்கவில்லை. அவள் தனது வாழ்வில் பதட்டமான ஒரு பாதையைக் கடந்து கொண்டிருக்கிறாள் என உணர்ந்து கொள்ளவேண்டும். நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டிய காலம் இது என்பதைப் புரிந்து கொள்ளல் வெகு அவசியம் என்கிறார் அட்லாண்டா மன நல மருத்துவர் நாடின் காஸ்லோ. ஆற்றோடு நீந்தி ஆற்றின் போக்கை மாற்ற வேண்டுமே தவிர ஆற்றுக்குக் குறுக்கே வலுக்கட்டாயமாய் அணைகள் கட்டுதல் கூடாது. அவை  இழப்புகளைச் சம்பாதித்து விடக் கூடும்.

குறிப்பாக பல்வேறு விதமான தகவல்களைக் கேட்கிறது பதின் வயது. ஆனால் கடைசியில் எது சரியானது என்பதைத் தேர்ந்தெடுப்பதில் குழம்புகிறது. நண்பர்கள் செய்கிறார்கள் என்பதனாலேயே பல பழக்கங்களுக்கு அடிமையாவது இந்த இடத்தில் தான். உதாரணமாக 80 விழுக்காடு மக்கள் புகைப் பழக்கத்தை ஆரம்பிப்பது பதின் வயதில் தான் !

அமெரிக்காவில் உடலுறவு கொள்ளாமல் பள்ளி இறுதியாண்டை முடிப்பது என்பது அவமானச் செயலாக பள்ளி மாணவர்களால் பேசப்படுகிறது. இந்தத் தவறான பழக்கம் பெண்களை பெரிதும் பாதித்து பலரை ஏதும் அறியாப் பருவத்திலேயே தாய்மையடையவும் வைக்கிறது.

இன்றைய நவீன உலகம் நமது படுக்கையறைகளில் கூட கணினியை கொண்டு வைத்திருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரமும் கைகளில் ஒரு ஆறாவது விரலாய் கைப்பேசியும் தொங்கிக் கொண்டிருக்கிறது. பதின் வயதுப் பருவம் இந்த நவீனத்தின் மூலம் தவறான வழிகளுக்குள் வழுக்கும் அபாயம் நிறையவே இருக்கிறது.

கணினி பயன்படுத்தும் நேரத்துக்கு வரையறைகள் விதிப்பதும், கணினியை எப்படி செலவழிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் என பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
அதேபோலதான் தனது பதின்வயதுக் குழந்தையின் நண்பர்கள் குறித்த விழிப்புணர்வும். பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளையின் நண்பர்கள் மோசமானவர்களாக இருப்பதாக கவலைப்படுகின்றனர். பதின் வயதுப் பிள்ளைகள் தங்கள் நண்பர்களை பெற்றோரே கூட திட்டுவதை விரும்புவதில்லை என்கிறார் உளவியல் நிபுணர் பார்டெல். தன் குழந்தையின் நலனில் அக்கறை கொள்கிறோம் என்பதையே முதன்மைப் படுத்தி குழந்தைகளிடம் பேசவேண்டும் என அறிவுறுத்துகிறார் அவர்.

பதின் வயதுப் பருவம் குழப்பங்களும், பதட்டங்களும் நிறைந்த பருவம். இந்த பருவத்தினர் கவனிக்க வேண்டியவை.

பதின் வயதினர் தங்கள் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

குழப்பங்கள் அலைக்கழித்தால் நம்பிக்கைக்குரிய, பக்குவம் வாய்ந்த ஒரு நபரிடமோ, மருத்துவரிடமோ தனது குழப்பங்களைப் பேசலாம். அவர்கள் உங்களுக்கு நிச்சயம் தெளிவைத் தர முடியும்.

மனம் குழப்பத்தில் இருக்கும் போது எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஒரு டைரியை எடுத்து நீங்கள் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, எந்தெந்த அழுத்தங்களில் இருக்கிறீர்களோ அவற்றையெல்லாம் எழுதுங்கள். எழுதும் போது மூளை தெளிவடையும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

நடங்கள். ஒன்றோ இரண்டோ கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து நடந்துவிட்டு திரும்பி வாருங்கள். உங்கள் மனம் தெளிவடைந்திருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஏதாவது வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். கடினமாய் உழையுங்கள். அல்லது நீண்ட நேரம் உழையுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலையாய் இருந்தால் மிகவும் நல்லது. இது உங்கள் கவனத்தை முழுக்க முழுக்க மாற்றிவிடும்.

பிறருக்கு உதவுங்கள். அடுத்தவர்களுடைய குறைகளைக் கேட்பதும், தேவைகளை நிறைவேற்றுவதும் உங்கள் பிரச்சினையிலிருந்து உங்களை விடுவிக்கும்.

20 மறுமொழிகள்

  1. bala சொன்னது,

    நவம்பர் 9, 2008 இல் 1:06 மு.பகல்

    ellaam correcta thaan solreenga aana rompa late aa solreenga (neenga pathivu potu 10 naal aguthu .diwali ku vantheenga pola )

    rompa busya?

    payanulla pathivu

    bala

  2. விக்னேஸ்வரன் சொன்னது,

    நவம்பர் 9, 2008 இல் 6:52 மு.பகல்

    அண்ணா இளையோரின் சுதந்திரம் முக்கியமென ஆரம்பத்தில் கூறி இறுதியில் வரும்போது அவர்களை கட்டுபடுத்துதலும் முக்கியம்னு சொல்லிபுட்டிங்களே :(

  3. சேவியர் சொன்னது,

    நவம்பர் 9, 2008 இல் 11:55 மு.பகல்

    அலுவல் நிமித்தமாய் அமெரிக்கா வந்திருப்பதால் மிகத் தாமதமாய் வருகிறது இந்தப் பின்னூட்டம். :

    ஆனாலும் தொடர்ந்து நேசிக்கும் தம்பிகளுக்கு நன்றிகள் பல :)

  4. kunthavai சொன்னது,

    நவம்பர் 9, 2008 இல் 4:02 பிற்பகல்

    என்ன அண்ணா பயங்கர பிசியா?
    (அதென்ன தம்பிகளுக்கு மாத்திரம்?)

  5. நவம்பர் 12, 2008 இல் 1:22 பிற்பகல்

    இந்த கட்டுரையை படித்த போது என் 14 வயது மகனுக்கு நடந்த சம்பவத்தை பதிய விரும்புகிறேன், சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மன அழுத்தம் கொண்டும், கூடவே பயப்ப்ட்டும் இறுதியில் பெற்றவர்களைக் கூட நினைவுபடுத்த முடியாமல் ஞாபகங்களை மொத்தமாக இழந்து நின்றான். சென்னையில் டாக்டர் ஷாலினி அவர்களின் கலந்துரையாடலுக்குப் பிறகு மெல்ல மெல்ல இழந்த ஞாபகங்கள் திரும்ப கிடைத்தது.
    நல்ல பயனுள்ள கட்டுரையை பதிந்தமைக்கு நன்றி

  6. ஹேமா சொன்னது,

    நவம்பர் 15, 2008 இல் 2:49 மு.பகல்

    அண்ணா சுகமா?

  7. uumm சொன்னது,

    நவம்பர் 19, 2008 இல் 7:05 பிற்பகல்

    அருமையான..தேர்வு..என்..வாழ்வில்…நான்..மிக..மிக..நேசிக்கும்..பகுதி..அந்த..பதிமூன்று..தான்..எத்தனையோ..தொலைத்தவைகள்..இருந்தாலும்..தொலைப்பதற்க்கான..தைரியம்..அப்போது..இருந்தது…இன்று..எல்லாவற்றிற்க்கும்..யோசிப்பு…எல்லாவற்றிற்க்கும்..கணக்குபோடுகிறது..மனசு..

  8. uumm சொன்னது,

    நவம்பர் 19, 2008 இல் 7:07 பிற்பகல்

    அருமையான..தேர்வு..என்..வாழ்வில்…நான்..மிக..மிக..நேசிக்கும்..பகுதி..அந்த..பதிமூன்று..தான்..எத்தனையோ
    ..தொலைத்தவைகள்..இருந்தாலும்..தொலைப்பதற்க்கான.
    .தைரியம்..அப்போது..இருந்தது…இன்று..எல்லாவற்றிற்க்கும்
    ..யோசிப்பு…எல்லாவற்றிற்க்கும்..கணக்குபோடுகிறது..மனசு..

  9. ஏகலைவன் சொன்னது,

    நவம்பர் 22, 2008 இல் 9:57 மு.பகல்

    உங்கள் கவிதைகள், கட்டுரைகள், அவற்றிற்கு வெளியிடும் படங்கள் எல்லாமே அழகாய் உள்ளன. வாழ்த்துகிறேன்.

  10. ramki சொன்னது,

    நவம்பர் 28, 2008 இல் 5:06 பிற்பகல்

    use full msg

  11. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 7:42 பிற்பகல்

    நன்றி ராம்கி.

  12. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 7:48 பிற்பகல்

    நன்றி ஏகலைவன் :)

  13. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 7:52 பிற்பகல்

    நன்றி சகோதரி உமா…

  14. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 7:54 பிற்பகல்

    சுகம் தங்கையா… நீங்க :)

  15. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 7:55 பிற்பகல்

    ஆமா குந்தவை……

  16. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 7:57 பிற்பகல்

    நன்றி சகோதரரே… உங்கள் மனம் திறந்த மடலுக்கு..

  17. சுதர்சன் சொன்னது,

    ஜனவரி 3, 2009 இல் 10:28 மு.பகல்

    உண்மையை சொல்லியிருக்கிறீங்கள்.

  18. malar சொன்னது,

    ஜனவரி 7, 2009 இல் 9:53 மு.பகல்

    நன்றி சகோதரரே… உங்கள் மனம் திறந்த மடலுக்கு..

  19. சேவியர் சொன்னது,

    ஜனவரி 8, 2009 இல் 7:16 பிற்பகல்

    நன்றி சுதர்சன், மலர்…

  20. மார்ச் 17, 2009 இல் 7:01 பிற்பகல்

    [...] பொருந்தும். முழுசா படிக்க இங்கே [...]


மறுமொழியொன்றை வழங்குக