
வாருங்கள்…
ஏதேன் தோட்டத்துள்
ஏதேதோ தேடி
கல்லறத்தோட்டம் வந்தவர்களே
வாருங்கள்.
சுமை சுமந்து
சோர்ந்துபோனவர்களுக்கு
நித்திய சமாதானம்
தருவது என் தோட்டம் தான்.
மனிதனுக்கு ஆயிரம் முகங்கள்
ஆனால்
என் வீட்டுக்கு வந்தபின்
சந்தனமானாலும் விறகானாலும்
மிஞ்சுவது சாம்பல் மட்டும் தான்.
உயிரோடிருக்கும் போது
கற்றுத் தெளிந்த
மானுடம்
இங்கு வந்து எனக்கு கற்றுத்தருகிறார்கள்.
ஆயிரம் பேர் சூழவரும்
பெரும் புள்ளிகளின்
சம்பிரதாய கண்ணீர்துளிகளில்
சிதை வற்றியதாய் சரித்திரமில்லை.
சில எழுத்தாளர்களின் சடலம்
அவர்களின்
நிறைவேறாத
கதைகள் சொல்வதுண்டு…
கல்லைறைகளிலும்
கருவறைகளிலும் சிதைந்துபோன
கானல்க் கனவுகளுடன் தான்
கனல் சுமக்க வருகிறார்கள் பலர்.
சில காதல் மரணங்கள்
எனக்குள்
ரணங்களை விட்டுச் செல்லும்..
வெந்து தணிந்த சிதையில்
தன்
உயிர்க்காதலியின்
கொலுசுதேடிய ஒருவனின் கண்ணீர்
இன்னும் எனக்குள் சத்தமிடுகிறது.
பல வேலைகளில்
அவர்களின் இயலாமை மீது எனக்கு
சுட்டெரிக்கும் கோபம் வருவதுண்டு.
ஒரு நாள்
தன் ஒற்றைக் குழந்தையைப்
பற்றிக்கொண்டுவந்த
அந்தத் தாயின் அலறல் ஒலியில்
பிணங்கள் கூட பரிதாபப்பட்டிருக்கும்.
பதுக்கிவைத்திருக்கும் பாசமும்
முகத்திரை போர்த்தி வைத்திருக்கும் பாசமும்
உடைபடுவது
இந்த மனிதவிறகு எரியும் வினாடிகளில் தான்.
சில உறவுகள்
கண்ணீர் விட்டு கதறிப் புரண்டு
மோதிரத்தைக் கழற்றியபின்
ஓரத்தில் அமர்ந்து
மௌனமாகும்.
சிதைக்குத் தீயிடுவது யார் ?
யார் கடனை தீர்த்துவைப்பது ?
இனி இவனிடத்தில் யார் ?
சண்டைகள் பலவேளைகளில்
செத்துப்போனவனை பெருமூச்சு விட வைக்கும்.
செத்துப் போன வினாடியில்
விட்டுப் போன உயிர்
சுற்றிக்கொண்டிருக்கும் என்று
மூடநம்பிக்கையைப் பற்றிக்கொண்டிருப்பவர்கள்
இன்னும்
ஆவிக்கு நிலத்தில் ஆணி அறைகிறார்கள்.
முதுமை மரணங்கள் பெரும்பாலும்
சிரிப்பிலும் அரட்டையிலுமாய் தான்
நடந்தேறும் ….
ஆனாலும் சில சுருக்கங்கள்
சத்தமின்றி அமர்ந்து வேதனைப்படும்.
பலருடைய நேசம்
அங்கீகரிக்கப் படுவதும்….
சொந்தத்தின் அடர்த்தியை வைத்து
அங்கிகள்
பங்கிடப்படுவதும் சாவுகளில் தான்.
நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்.
என் சிதை எரியும் போது
எத்தனை விழிகள் கண்ணீர் சரிக்கும் என்பதில் தான்
என் வாழ்க்கை
எடையிடப்படும்…
சுற்றிப் பார்க்கிறேன்….
ஓரத்தில் இருக்கும்
என் ஒற்றைக் குடிசையைச் சுற்றி
மருந்துக்குக் கூட மனிதவாசம் இல்லாத,
பொட்டுக் குடிசை கூட தட்டுப்படாத
பெரும் பொட்டல்க் காடு.





மாதரசன் சொன்னது,
பெப்ரவரி 1, 2009 இல் 7:46 மு.பகல்
முற்றிலும் உண்மை…. ஆனால் உண்மை கசக்கத்தான் செய்கிறது…
Ravi kumar ( Kuwait ) சொன்னது,
பெப்ரவரி 2, 2009 இல் 2:07 பிற்பகல்
/// I can belive more alive people in garden ///
ஹேமா சொன்னது,
பெப்ரவரி 2, 2009 இல் 9:52 பிற்பகல்
//முதுமை மரணங்கள் பெரும்பாலும்
சிரிப்பிலும் அரட்டையிலுமாய் தான்
நடந்தேறும் ….
ஆனாலும் சில சுருக்கங்கள்
சத்தமின்றி அமர்ந்து வேதனைப்படும்.//
அண்ணா,மனிதனின் போலியான வாழ்வின் முகமூடி கிழித்து எழுதியிருக்கிறீகள்.வாழ்வின் அடிப்படை பாசம் மட்டுமே.எல்லா வரிகளுமே எப்பவும்போல தத்துவத்தோடு வர்ணித்து தமிழ் தெளித்து அழகாயிருக்கிறது.
anand சொன்னது,
பெப்ரவரி 2, 2009 இல் 11:06 பிற்பகல்
கவிதைகளும் வருமோ? அண்ணா உங்களுக்கு உள்ளமார பாராட்டுகிறேன் . வாழ்க வளமுடன் .சிறக்கட்டும் உன் பணி. நன்றிகள்பல .
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 3, 2009 இல் 6:33 பிற்பகல்
நன்றி ஆனந்த்..
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 3, 2009 இல் 6:34 பிற்பகல்
நன்றி ஹேமா…
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 3, 2009 இல் 6:34 பிற்பகல்
என்ன ரவி……
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 3, 2009 இல் 6:35 பிற்பகல்
நன்றி மாதரசன்.