கி.மு : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது

mozes_slangen1இஸ்ரயேல் மக்களின் கானானை நோக்கியப் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவர்கள் காதேஸ் என்னும் ஊரை வந்தடைந்தார்கள். அந்த நாட்டில் ஏதோம் என்னும் மன்னன் அரசாண்டு வந்தான். இஸ்ரயேல் தலைவர்கள் சிலர் ஏதோம் மன்னனிடம் சென்றனர்.

‘அரசே வணக்கம்’

‘நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள் ?’

‘நாங்கள் இஸ்ரயேல் குலத்தினர். எகிப்து நாட்டில் நானூறு ஆண்டுகள் அடிமைகளாய் இருந்த எங்களைக் கடவுள் மீட்டு வழி நடத்தி வருகிறார். இப்போது நாங்கள் கானானை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.’

‘ஓ.. கடவுள் உங்களை மீட்டாரா ? நல்லது நல்லது ? அதை ஏன் என்னிடம் வந்து தெரிவிக்கிறீர்கள் ?’ ஏதோம் மன்னன் நக்கலாய்ச் சிரித்தான்.

‘உங்கள் நாடு வழியாகக் கடந்து போனால் நாங்கள் விரைவிலேயே கானானை அடைந்து விடுவோம். அதனால் தான் உங்கள் அனுமதி கேட்டு வந்திருக்கிறோம்’

‘நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள் ?’

‘நாங்கள் பல இலட்சம் பேர் இருக்கிறோம்’

‘பல இலட்சம் மக்கள் என்னுடைய தேசம் வழியாகக் கடந்து போனால்… என்னுடைய தேசத்தின் விளைச்சல்கள் எல்லாம் மிதிபட்டு அழிந்து போகும் என்பது உங்களுக்குத் தெரியாதா ? இதை நான் அனுமதிக்க மாட்டேன்’ மன்னன் சொன்னான்.

‘அரசே. உங்கள் தானியங்களில் எங்கள் கைவிரல் நுனிகூடப் படாது. உங்கள் வளங்கள் எதையும் எங்கள் கால்கள் மிதித்து அழிக்காது. இதற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம். மறுக்காமல் எங்கள் விண்ணப்பத்தை அங்கீகரியுங்கள் ‘ இஸ்ரயேல் தலைவர்கள் பணிந்தார்கள்.

‘இல்லை. நான் முடியாது என்றால் முடியாது தான். என் முன்னால் நிற்காதீர்கள். என் நாட்டில் எந்த இஸ்ரயேலனின் காலும் நுழையக் கூடாது. இது அரச ஆணை’ ஏதோம் மன்னன் உறுதியாகச் சொன்னான். இஸ்ரயேலர்கள் வருந்தினர்.

மோசே மக்கள் கூட்டத்தைப் பார்த்து,’ வருந்தாதீர்கள். நாம் மனம் தளராமல் நம்முடைய இலக்கை நோக்கிப் பயணிப்போம். நேரடியாகச் செல்ல முடியாதெனில் சுற்றுப் பாதை வழியாகச் செல்வோம். வருந்தாதீர்கள். வாருங்கள் ‘ என்றார்.

‘பயணத்திலேயே எல்லோரும் மடிந்து போகப் போகிறோம்…. ‘

‘கடவுளாம் கடவுள்… நம்முடைய பணிகளை கடினப்படுத்திக் கொண்டே இருக்கின்ற கடவுள்…’

‘நாம் எகிப்திலிருந்து வந்தது தான் மிகப் பெரிய தவறு….’

மக்கள் அனைவரும் மீண்டும் கடவுளுக்கு எதிராகவும் மோசேக்கு எதிராகவும் முணுமுணுத்தார்கள். கடவுள் மீண்டும் அந்த மக்கள் மீது கோபமடைந்தார்.

அவர்கள் ஒரு மலைப்பாதை வழியாகச் சென்றபோது. கடவுள் கொள்ளிவாய்ப் பாம்புகளை அவர்களுக்கு எதிராக அனுப்பினார்.

திடீரென கொள்ளிவாய்ப்பாம்புகள் மலையிடுக்குகளிலிருந்தும், மரங்களிலிருந்தும் வெளிவந்து இஸ்ரயேலரின் கூட்டத்தில் புகுந்தன. மக்கள் பயந்துபோய் அங்கும் இங்கும் ஓடினார்கள். பாம்புகள் விடவில்லை. அவர்களில் பலரை அவை துரத்தித், துரத்திக் கடித்தன. அந்தப் பாம்புகள் கொடிய விஷம் உடையவை. பாம்புக் கடி பட்டவர்கள் எல்லோரும் இறந்து போனார்கள்.

மக்கள் அதிர்ந்தார்கள். திடீர்த் திடீரெனத் தோன்றி கடித்து விட்டு ஓடி மறையும் பாம்புகளை என்ன செய்வதென்று அறியாது திகைத்தனர். அவர்கள் மோசேயிடம் ஓடிச் சென்று,

‘தலைவரே… எங்களை மன்னியும்…. நாங்கள் தான் உம்மையும் கடவுளையும் பழித்துப் பேசினோம். அதனால் தான் கடவுள் பாம்புகளை அனுப்பியிருக்கிறார். எங்கள் மரணம் இப்படி நிகழ்வது கொடுமையானது. எங்கள் தவறுகளை நாங்கள் உணர்ந்து விட்டோ ம். எங்களை மன்னியுங்கள். கடவுளிடம் மன்றாடி இந்தக் கொடிய பாம்புகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்’ மக்கள் கதறினார்கள்.

‘எத்தனையோமுறை கடவுள் உங்களைக் காப்பாற்றியிருக்கிறார். எத்தனையோ முறை உங்கள் முணுமுணுப்புகளை மன்னித்திருக்கிறார். அப்படியிருந்தும் நீங்கள் திருந்தவில்லை… ‘ மோசே எரிச்சல் பட்டார்.

‘தவறு தான். இனிமேல் அப்படி நடக்கமாட்டோ ம். நீர் தான் கடவுளிடம் பேசி எங்களைக் காப்பாற்ற வேண்டும்’ மக்கள் மிகவும் பணிவுடன் சொன்னார்கள். மோசே ஒத்துக் கொண்டார். அன்றைக்கே அவர் தனிமையில் கடவுளிடம் பேசினார். கடவுள் மோசே கேட்பதை எல்லாம் நிறைவேற்றுபவராக இருந்தார். எனவே இந்த வேண்டுதலையும் அவர் நிராகரிக்கவில்லை. அவர் மோசேயிடம்

‘உன் நிமித்தம் நான் இந்த மக்களை மன்னிக்கிறேன். நீ போய் வெண்கலத்தினால் ஒரு பாம்பின் உருவத்தைச் செய்து அதை ஒரு கோலில் கட்டி உயர்த்திக் காட்டு. பாம்பு கடி பட்டவர்கள் அந்த வெண்கலப் பாம்பின் சிலையைப் பார்த்தால் பிழைப்பார்கள்’ என்றார்.

மோசே உடனே சென்று வெண்கலத்தினால் ஒரு பாம்பின் உருவத்தைச் செய்தார். அதை ஒரு கோலில் கட்டி உயரமான மலை ஒன்றில் ஏறி அதை உயர்த்திக் காட்டினார்.

‘பாம்பு யாரையேனும் கடித்திருந்தால் உடனே இந்த வெண்கலப் பாம்பைப் பாருங்கள். பிழைப்பீர்கள்’ மோசே உரத்த குரலில் சொன்னார்.

மக்கள் கூட்டத்தினரிடையே பாம்பு கடி பட்டவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையோடும், நம்பிக்கையில்லாமலும் அந்த வெண்கலப் பாம்பைப் பார்த்தார்கள். என்ன ஆச்சரியம். அந்தப் பாம்பின் உருவத்தைப் பார்த்ததும் கடிபட்டவர்கள் உடனே நலம் பெற்று எழுந்தார்கள். அவர்களுடைய வலியும், சோர்வும் எல்லாம் காணாமல் போயின. அரவம் தீண்டிய அவர்களை மரணம் தீண்டவில்லை.

மக்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். விலக்கி வைத்திருந்த அவர்களுடைய கடவுள் நம்பிக்கை இதனால் துலக்கி வைக்கப்பட்டது.

===============================================================

முந்தைய கி.மு விவிலியக் கதைகளைப் படிக்க

===============================================================

 1. உலகம் உருவான கதை

2. முதல் பாவம்

3. முதல் கொலை

4. மொழிகள் உருவான கதை

5. நோவாவின் பேழை

6. விசுவாசத்தின் தந்தை ஆபிர(க)஡ம்

7 ஈசாக்கின் திருமணம்.

8 சோதோம் நகரம் சேதமாகிறது.

9 இரு சகோதரர்கள்.

10. யாக்கோபின் திருமணம்

11. அழகு தேவதை தீனா

12. அடிமை ஆளுநன்.

13. மோசேயின் விடுதலைப் பயணம்

14. கானானை நோக்கிய பயணம்.

6 மறுமொழிகள்

  1. Ravi kumar (kuwait ) சொன்னது,

    April 24, 2009 இல் 7:29 பிற்பகல்

    //** I think you are read everything very well **//
    //** Snack story Super **//

  2. சேவியர் சொன்னது,

    April 25, 2009 இல் 12:55 மு.பகல்

    நன்றி ரவி :) முதல் பின்னூட்டத்துக்கு :)

  3. antonyraj சொன்னது,

    April 25, 2009 இல் 3:03 பிற்பகல்

    அருமையான விளக்கம்.நன்று நன்றி

  4. சேவியர் சொன்னது,

    April 27, 2009 இல் 5:12 பிற்பகல்

    /அருமையான விளக்கம்.நன்று நன்றி//

    நன்றி ஆண்டனி…

  5. Queeni சொன்னது,

    மே 13, 2009 இல் 2:46 மு.பகல்

    “விலக்கி வைத்திருந்த அவர்களுடைய கடவுள் நம்பிக்கை இதனால் துலக்கி வைக்கப்பட்டது”.
    Our faith should be simple and pure, like the perspective of a child.
    Thank you.

  6. சேவியர் சொன்னது,

    மே 24, 2009 இல் 8:36 பிற்பகல்

    /“விலக்கி வைத்திருந்த அவர்களுடைய கடவுள் நம்பிக்கை இதனால் துலக்கி வைக்கப்பட்டது”.
    Our faith should be simple and pure, like the perspective of a child.//

    நன்றி ரெஜி ..


மறுமொழியொன்றை வழங்குக