உனது குரல்..

 neetu-chandra-42

எப்போதோ
நீ விட்டுச் சென்ற
குரலின் விரல்களை
இன்னமும்
இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன்.

பார்வையற்ற ஒருவனின்
பாதங்களுக்குக்
கீழே
பரவும் வெளிச்சம் போல
பயனற்று வழிகிறது
என் எதிர்பார்ப்பின் கதறல்.

உன் குரலில்
இப்போது
இனிமை கூடியிருக்கலாம்.
அல்லது
கரகரப்பு கலந்திருக்கலாம்.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவற்றில்
மிகப் பழமையான
சிற்பம் போல,
அதிகபட்சக் கவனத்துடனே
அன்றைய உன் குரலை
பாதுகாக்கிறேன்.

அந்தக் ஒலிக்குள் இருக்கும்
மொழி
என்னைக் காயப்படுத்திய
விலகலின் வார்த்தை தான்,
ஆனாலும்
விலக்காமல் வைத்திருக்கிறேன்.

ஒருவேளை
அந்தக் குரல் தொலைந்து
போனால்,
மீண்டும் ஒரு குரலுக்காய்
உன் வாசலுக்கு
யாசகனாய் வருவேனோ என்னும்
பயத்துடன்.

கி.மு கதைகள் : வாழ்த்தாய் மாறிய சாபம்

16

அக்காலத்தில் ஆங்காங்கே குறிசொல்பவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். இவர்கள் கடவுளிடம் மனதால் பேசி, கடவுள் என்ன சொல்கிறாரோ அவற்றை மக்களுக்குத் தெரிவிப்பார்கள். அவர்கள் எப்போதும், யாரைக்கண்டும் அஞ்சுவதில்லை. மன்னனை சபிக்கவும், குடியானவனை வாழ்த்தவும் அவர்கள் தயங்குவதேயில்லை. பணம் பதவி செல்வாக்கு இவற்றுக்கு அவர்கள் விலைபோவதுமில்லை.

பிலேயாம் ஒரு மிகச்சிறந்த மனிதர். தெய்வ பக்தர். அவர் குறி சொல்வதில் சிறந்து விளங்கினார். அவர் கடவுளிடம் பேசி கடவுள் சொல்வதை மக்களுக்குத் தவறாமல் சொல்லிவந்தார்.

அந்த நாட்டு மன்னன் பாலாக் இஸ்ரயேலர்களைக் கண்டு பொறாமைப் பட்டான். இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாகவும், ஒரே குழுவாகவும் தங்கியிருந்ததும், அவர்களிடையே இருந்த ஏராளமான செல்வங்கள், கால்நடைகள் இவைகளும் அவனை பொறாமைப் பட வைத்தன. எப்படியாவது அவர்களிடமிருந்து அவற்றையெல்லாம் அபகரிக்க வேண்டும் என்று மன்னன் திட்டமிட்டான்.

இஸ்ரயேல் மக்கள் கடவுளின் அன்பைப்பெற்றவர்கள் எனவே அவர்களை நேரடியாக வீழ்த்தமுடியாது. ஏதேனும் சூழ்ச்சி செய்து தான் அவர்களை வீழ்த்தவேண்டும் என்று பாலாக் திட்டமிட்டான். அவனுடைய மனதில் பிலேயாம் வந்தார்.

பிலேயாம் இறைபக்தர். அவர் ஒருவரை வாழ்த்தினால் அவர் வாழ்வார். அவர் ஒருவனை சபித்தால் அவன் அழிவுறுவான். எனவே பிலேயாமை அழைத்து இஸ்ரயேல் மக்களைச் சபிக்கச் செய்யவேண்டும் என்று மன்னன் முடிவெடுத்தான்.

பாலாக்கின் வீரர்கள் பிலேயாமின் இல்லத்தில் வந்து நின்றனர்.
‘பிலேயாம்… மன்னன் உன்னை அழைக்கிறார். நீ உடனடியாக மன்னனைச் சந்திக்க வேண்டும்’

‘நான் ஏன் மன்னனைச் சந்திக்கவேண்டும் ? ஏதேனும் முக்கியமான விஷயமா ?’ பிலேயாம் கேட்டார்.

‘ஆம். இஸ்ரயேல் மக்கள் நம்முடைய மோவாப் நாட்டிலே தங்கியிருக்கிறார்கள் அல்லவா ? அவர்களை நீர் சபிக்க வேண்டுமாம் ‘ வீரர்கள் சொன்னார்கள்.

பிலேயாம் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அப்போது கடவுள் அவரோடு பேசினார். ‘ பிலேயாம்.. நீ பாலாக்கின் வீரர்களோடு போகவேண்டாம். இஸ்ரயேல் மக்கள் என்னுடையவர்கள். அவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள். சபிக்கப் படவேண்டியவர்கள் அல்ல’

161பிலேயாம் கண்களைத் திறந்தார். ‘ இல்லை. நான் உங்களோடு வர முடியாது. இஸ்ரயேல் மக்கள் ஆசீர்வதிக்கப்படவேண்டியவர்கள். அவர்களை நான் சபிக்கமுடியாது என்று மன்னனிடம் போய்ச் சொல்’ பிலேயாம் தெளிவாகச் சொன்னார்.

வீரர்கள்  மன்னனிடம் வந்து விஷயத்தைச் சொல்ல, மன்னன் கடும் கோபமடைந்தார்,

‘உயிர் மீது அவருக்கு ஆசையிருந்தால் உடனே என்னிடம் வரச் சொல்லுங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.

இரண்டாவதாக வீரர்கள் சிலர் பிலேயாமைச் சந்திக்கச் சென்றார்கள்.

‘நீர் உடனே மன்னனைச் சந்தித்தாகவேண்டும். இது அரச கட்டளை. இல்லையேல் இங்கேயே உமது தலையை வெட்டி வீசுவோம்’ வீரர்கள் எச்சரித்தார்கள்.

பிலேயாம் வேறு வழியின்றி அவர்களுடன் சென்றார். அவர்கள் அவரை ஒரு கழுதையின் மீது அமரவைத்து அழைத்துச் சென்றனர். கடவுள் இதைக் கண்டு கோபமடைந்தார்.

‘பாலாக்கைச் சந்திக்க வேண்டாமென்றல்லவா நான் சொன்னேன். இஸ்ரயேலர்களைச் சபிக்க வேண்டாமென்றல்லவா நான் கூறினேன்.. பிலேயாம் என் வார்த்தைகளை மீறிவிட்டானே ‘ என்று வருந்தினார். உடனே தன்னுடைய தூதர் ஒருவரை அனுப்பி அவரை வழிமறிக்குமாறு சொன்னார்.

பிலேயாம் கழுதையில் சென்றுகொண்டிருந்தபோது கடவுளின் தூதர் வாளுடன் அவருக்கு எதிரே வந்து நின்றார். அவர் பிலேயாமின் கண்களுக்குத் தெரியவில்லை. கழுதையின் கண்ணுக்கு மட்டுமே தெரிந்தார். கழுதை அவரைக் கண்டதும் விலகி ஓடியது. பிலேயாம் கழுதையை அடித்தார்.

கழுதை இருபுறமும் மதில்சுவரால் கட்டப்பட்ட வழியில் ஓடியது. கடவுளின் தூதர் இருபுறத்திலுமிருந்து கழுதையை நெருக்கினார். கழுதை பயணிக்கச் சிரமப்பட்டது. பிலேயாம் கழுதையை இரண்டாவது முறையாக அடித்தார்.

மீண்டும் கடவுளின் தூதர் கழுதையின் முன்னால் வந்து நின்று வாளை ஓங்கினார். உடனே கழுதை தரையில் படுத்தது. பிலேயாமின் கோபம் கரைகடந்தது. கழுதையை மீண்டும் ஒருமுறை ஓங்கி அடித்தார்.

உடனே கழுதை… ‘பிலேயாம்.. ஏன் என்னை அடிக்கிறாய் ?’ என்று கேட்டது.

கழுதை பேசியதைக் கேட்ட பிலேயாம் நடுங்கினார்.

‘நீ என்னை ஏன் மூன்று முறை அடித்தாய் ? கடவுளின் தூதர் வாளோடு என்னை வழிமறிக்கிறாரே’ கழுதை சொன்னதும்  பிலேயாம் தன் தவறை உணர்ந்தார். இஸ்ரயேல் மக்களைச் சபிக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்.

அப்போது கடவுளின் தூதர் அவருடைய கண்களுக்கும் தரிசனமானார். ‘ நீர் போய் கடவுள் சொல்வதை பாலாக்கிற்குச் சொல்லும்’ தூதர் சொன்னார். பிலேயாம் தெளிவு பெற்றவராய் மன்னனின் அரண்மனைக்குச் சென்றார்.

பாலாக்கின் அரண்மனை.

பிலேயாமிற்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசன் உட்பட அனைவருமே எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

‘இதோ.. பிலேயாம் நம்மிடம் வந்திருக்கிறார். இனிமேல் வெற்றிகள் எல்லாம் நமக்கே. பிலேயாம்,  உம் வாயால் அந்த இஸ்ரயேல் மக்களைச் சபியுங்கள் ‘ மன்னன் ஆனந்தமாய்க் கூறினான்.

‘அரசே… கடவுள் என்ன சொல்கிறாரோ அதைத்தான் நான் சொல்வேன். மன்னன் சொல்வதையெல்லாம் என்னால் செய்ய முடியாது.’ பிலேயாம் அமைதியாகச் சொன்னார். மன்னன் புரியாமல் பார்த்தான்.

‘இஸ்ரயேல் மக்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் கடவுளின் பிள்ளைகள். அவர்கள் மீது சாபம் வராது’ பிலேயாம் சொன்னார்.

உடனே மன்னனும், கூட இருந்தவர்களும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

‘இஸ்ரயேல் மக்கள் கடவுளின் மக்கள். அவர்களை வாழ்த்துவோர் வாழ்த்தப்படுவார்கள், சபிப்போர் சாபத்துக்கு ஆளாவார்கள். நானும் இஸ்ரயேல் மக்களை வாழ்த்துகிறேன்…’ பிலேயாம் மீண்டும் சொன்னார். மன்னனின் முன்னிலையில், அனைத்து அரசவை ஊழியர்களின் முன்னிலையில் பிலேயாம் கடவுள் தன்னுடன் இருக்கும் தைரியத்தில் துணிந்து நின்றார்.

பிலேயாமின் வார்த்தைகளைக் கேட்ட பாலாக் மன்னன் கோபமடைந்தான். பிலேயாமை ஏதேனும் செய்தால் கடவுளின் சாபம் தனக்கு வந்துவிடுமோ என்று பயந்து அவரை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டான்.

கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வரவிருந்த சாபத்தை, வாழ்த்தாக மாற்றியதை அறிந்த இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்

உடலைப் பேண பத்து கட்டளைகள்

 

ss 

 

உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.

  

  1. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப்பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.
  2.  

     

  3. தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் ஒருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.  
  4.  

  5. சோர்வாய் இருக்கிறது ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள். 
  6.  

  7. நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைத்தலை முழுமையாய் விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.
  8.  

  9. மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்புப் பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.
  10.  

  11. உணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 
  12.  

  13. உண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள். 
  14.  

  15. இனிப்புப் பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே !
  16.  

     

  17. எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.
  18.  

  19. தேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம். வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் உத்தரவாதம் !
  20.  

  நன்றி : தமிழ் ஓசை – களஞ்சியம்

வெள்ளை தேசம் வேண்டும்

DSC_0324

மேகத் தொட்டிலில்
புரண்டு படுக்கும்
சிறு விண்மீன் துண்டாய்,
விழிகளை வருடும்
என்
புன்னகைப் பெண்ணே,

உனக்கு
வெள்ளை நிறம்
பிடிக்கும் என்ற பின்
நான்
கார் மேகத்தைக் கூட
வெறுக்கத் துவங்கினேன்.

உன் விழி மயில்கள்
வழக்கிடும் போதெல்லாம்
நான்
வெள்ளைக்காய்
வாதாடுவதால்
என் கருவிழிகளுக்குக் கவலை.

அவைகளுக்கெங்கே
தெரியப் போகிறது
நான்
விளக்கைப் அணைக்காமல்
துயிலும் ரகசியம்.

குளிர்காலப் பனித்தூவல்களை
கைகளில் அள்ளி
நான்
உன் முகத்துக்கு
முத்தம் தரும் பரவசம்.

பௌர்ணமி இரவுகளில்
வானம் பார்த்தே
நான்
விழித்துக் கிடக்கும்
புது சுகம்.

ஒரே
ஒரு கவலை தான்
எனக்கு,

கவிதை எழுதக் காகிதம் எடுத்தால்
அதன்
வெள்ளையை வார்த்தைகள்
கொள்ளையடிக்கும் என்பதால்
அதில்
பேனா வைத்தாலே
பதறிப் போகிறேன்.

பிரசுரமாகாமல் கிடக்கின்றன
உன்
நினைவுகள் பதிந்த
வெள்ளைக் காகிதங்கள்.

0

அலாவுதீன் விளக்கு…

Shradha_Das

என்னிடமிருக்கிறது
ஒரு விளக்கு.

அலாவுதீன்
தவறவிட்டதாய் இருக்கலாம்
அல்லது
வேண்டுமென்றே
விட்டெறிந்ததாய் இருக்கலாம்.

அது
தானாகவே வந்து
என்
மனசைத் தேய்க்கிறது.

வாசலுக்கு வெளியே
போட்டால் கூட
சிரித்துக் கொண்டே
என்
படுக்கையறைக்குள்
புகுந்து விடுகிறது.

அதுவாகவே வந்து
என்
உதடுகளில் உட்கார்கிறது
அப்போது
உள்ளத்தில்
கனவு மழை பொழிகிறது.

நான்
ஏதேனும் கேட்டால் சிரிக்கிறது
அதற்குத் தேவையானதை
நான் தான்
தரவேண்டுமாம்.
நகைக்கிறது.

இப்போதெல்லாம்
அதன் கட்டளையில்லாமல்
எனக்கு
பொழுதுகள் விடிவதில்லை.
அப்படி விடிந்தாலும்
நானாகவே போய்
அதை
உசுப்பி எழுப்பி பேசவிடுகிறேன்.

இந்த
அதிசய விளக்கைப் பற்றி
நண்பனிடம்
விளக்கப் போனேன்.

அவன்
கல்பனாவைக் காதலிக்கையில்
அவன் வீட்டிலும்
ஒன்று இருந்ததாம்.

கண்டெடுத்ததும்
எறிந்து விட வேண்டுமாம்,
பழகிவிட்டால்
விலகிப் போகாதாம்
சோர்ந்து போயிருந்தவன் சொன்னான்.

0

எலுமிச்சை எனும் ஏழைத் தோழன்.

lemon2வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமது நினைவுக்கு சட்டென வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை.

சட்டென இரண்டாக வெட்டி அதன் சாறை தண்ணீரில் கலந்து உப்போ, சர்க்கரையோ போட்டு கொஞ்சம் ஐஸ் கட்டிகளையும் போட்டால் சுவையான குளிர்பானம் தயார்.

இப்படி சட்டென நாம் தயாரிக்கும் எலுமிச்சைப் பழச்சாற்றில் எத்தனை நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.

எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டு என்பது கவனிக்கத் தக்கது.

எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதனால் வரும் பலன்களில் சில இதோ…

1. எலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணி.

2. எலுமிச்சைப் பழச்சாறு குருதி சுத்தீகரிப்பானாகவும் செயல்படுகிறது. அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.

3. எலுமிச்சைப் பழச்சாறை “லிவர் டானிக்” என்று அழைக்கிறார்கள் மருத்துவர்கள். ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்குவதற்கு எலுமிச்சைப் பழச்சாறு பெரிதும் துணை செய்கிறது.

.
4. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அபரிமிதமாக நிரம்பி வழியும் வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது. தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும். மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.

5. எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.lemon

.
6. வாய் துற்நாற்றம் இருக்கிறதா ? பல்லிலும் ஊனிலும் சிக்கல்கள் இருக்கின்றனவா ? எலுமிச்சைப் பழச்சாறைக் கொண்டு மஸாஜ் செய்யுங்கள். பல்லுக்கும், பல் சார்ந்த இத்தகைய நோய்களுக்கும் எலுமிச்சைப் பழச்சாறு நல்ல மருந்து !

7. உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா ? தினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

.
8. உயர் குருதி அழுத்தம் உடையவர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு மிகவும் நல்லது. உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது. மன அழுத்தத்தைக் கூட எலுமிச்சைப் பழச்சாறு குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

9. காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது.

.
10. மூட்டு வலி, உடல் தசைகளில் வலி போன்றவற்றுக்கு எலுமிச்சைப் பழச்சாறு மருந்தாகிறது. உடலிலுள்ள தேவையற்ற நச்சுத்தன்மை, பாக்டீரியாக்கள் போன்றவற்றை வெளியேற்றுவதன் மூலம் உடலுக்கு நலமளிக்கிறது எலுமிச்சைப் பழச்சாறு !

இத்தனை பயன்கள் கொண்ட எலுமிச்சை பழச்சாறை பழச்சாறை எப்படி அருந்தலாம் ? எவ்வளவு அருந்தலாம் ? எனும் குழப்பம் இருக்கிறதா ? மருத்துவர்களின் ஆலோசனையைப் பாருங்கள்.

எழுபது கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள் முழுமையான எலுமிச்சைப் பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிசைந்து உட்கொள்ளலாம். தினமும் இரண்டு முறை உட்கொள்வது பயனளிக்கும். குறிப்பாக காலையில் குடிப்பது சாலச் சிறந்தது. எழுபது கிலோவுக்குக் குறைவான எடை கொண்டவர்களுக்கு அரை எலுமிச்சைச் சாறே போதுமானது.

அட… என்ன ? எங்கே கிளம்பிட்டீங்க ? எலுமிச்சை வாங்கவா ? ஒரு கப் எனக்கும் தயாராக்குங்க.

நன்றி : தமிழ் ஓசை

நீ நட்ட ரோஜா…

XV3A0338வீட்டுத் தோட்டத்தில்
நீ
நட்டு வைத்த
வெள்ளை ரோஜா எது தெரியாமல்
திணறிவிட்டேன்.

பூத்து நின்ற
நூற்றுக்கணக்கான செடிகளை
விரல் கொண்டு
வருடி நடக்கையில்
சட்டென்று நாணம் வீசி
சிவப்பாகி
அடையாளம் காட்டுகிறது
அது !

கவிதை : எது எனக்கழகு ?

tamanna-1__7_

எத்தனை முறை
கொத்தினாலும் தீராத
கனி தான் காதல்.
கோடி மீன்கள் குடித்ததனால்
குறைவு படுமா கடல் ?

சில நேரங்களில்
பனிக்குள் பொதிந்து வைத்த
நீராய்,
இன்னும் சில நேரம்
நீருக்குள் பிரித்து வைத்த காற்றாய்
காதல்.

அது,
கிழமைகளின் கீழ்
கிழிந்து போவதில்லை.

இதயக் கோபுரங்களை
வெள்ளை விமானங்கள்
விழுங்கிடுமா என்ன ?

நீ,
அம்மனைத் தரிசிக்கும்
ராகு கால ரகசியம் முடிந்தபின்
நான் உன்னை
தவமிருந்து தரிசிக்கிறேன்.

நீ தான்,
விரதமிருக்கிறேன்
விலகிப் போ என்று
அவ்வப்போது
உன் செவ்வாய் கதவுகளைச்
சாத்தியே வைக்கிறாய்.

கர்ப்பக்கிரகம் திறந்த பின்னும்
கடவுளை யாரோ
திரையிட்டு மறைப்பதாய்
தோன்றுகிறது எனக்கு.

நல்ல வேளை,
நீ
மௌன விரதம் இருப்பதில்லை.

பூக்களுக்குள் வாசனை ஊற்றி
வண்டின் நாசிகளை
வடமிட்டுக் கட்டி இறக்கினால்
வலிக்காதா என்ன ?
மனசுக்கு.

எந்த ஆடை எனக்கழகு?
என
ஓர் பிரபஞ்சக் கேள்வி கேட்கிறாய்.

எந்தச் செடி
எனக்கழகென்று
பூக்கள் கேட்பது நியாயமா ?

எந்தப் பூ
எனக்கழகென்று
வண்ணத்துப் பூச்சி வினவலாமா ?

தொட்டாச்சிணுங்கியின்
தோழி நீ,
அனிச்ச மலரின்
பெண் அவதாரம் நீ,
விடையில்லையேல் வாடிவிடுவாய்.

காதுகளால் கேட்பது
காதலில் சுவையில்லை
உன்
உதடுகளைக் கடன் கொடு
முத்தத்தின் உலை தரும்
வெப்பத்தால் விளக்குகிறேன்.

இதயத்தில் ஊடுருவிய வாள்

 விளையாட்டு
என்று தான் கருதினேன்1
முதலில்.

முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.

உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.

துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.

நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.

மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.

கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.

இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.

நில் , கவனி, வாக்களி.

ee

நினைவுகள் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் தாவுகின்றன. அப்போதெல்லாம் “மர்பி” ரேடியோவின் முன்னால் கூட்டம் கூட்டமாக வாக்கு எண்ணிக்கை நிலவரங்களைக் கேட்டபடி அமர்ந்திருந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.

இன்றைக்கு என்ன நடந்தது என்பதை மறு நாள் செய்தித் தாளில் பார்த்தோ, அல்லது ஆறரை மணி ஏழே கால் மணி வானொலி செய்திகளில் கேட்டோ தெரிந்து கொள்ள வேண்டிய நிலை. இன்றைய தேர்தல் பரபரப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அப்போதைய தேர்தல் முறைகளும், தகவல் பரிமாற்றங்களும் எத்தனை பின்னோக்கியிருந்தது என்பதை சிலிர்ப்புடன் உணர முடிகிறது.

இன்றைய தேர்தல் அப்படியில்லை. ஆறுமணிக்கு ஒருவர் வழுக்கி விழுந்தால், கொஞ்சம் நாகரீகமாகச் சொல்வதென்றால், ஆறுமணிக்கு ஒருவர் மீது செருப்பு வீசப்பட்டால் அடுத்த நிமிடம் எல்லா தொலைக்காட்சி சானல்களிலும் அது முதன்மைச் செய்தியாகிவிடுகிறது. வீசப்பட்ட செருப்புக்கு ஒரு விளம்பரம் தேசிய அளவில் கிடைத்தும் விடுகிறது.

விட்டால், இந்த செருப்பு வீசும் நிகழ்ச்சியை உங்களுக்காத் தொகுத்து வழங்குவது “முனியாண்டி செருப்பு கம்பெனி” என ஸ்பான்சர்ஸ் கூட கிடைப்பார்கள்.

ஊடகத்தின் பிரமிப்பூட்டும் வளர்ச்சியின் பயனாக, ஆளாளுக்கு தனித் தனி சேனலை ஏற்படுத்திக் கொண்டு அதை கிட்டத் தட்ட அரசியல் பிரச்சார மேடையாகப் பயன்படுத்தி வருகின்றனர். சுவரில் போஸ்டர் ஒட்டுவது தேவையற்றுப் போய்விட்டது, எல்லார் வீட்டு வரவேற்பறையிலும் தொலைக்காட்சிப் பெட்டி ஒட்டி வைக்கப்பட்ட பின்.

மக்களின் நாடித் துடிப்பை அரசியல் கட்சிகள் கணிக்கவும், புரிந்து கொள்ளவும், அதற்கேற்ப நாள் தோறும் பல்டியடிக்கப் பழகவும் இந்த ஊடக வளர்ச்சி பெரும் துணை செய்கிறது.

இந்த நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய நாள்வரை எட்டாவது பக்கத்தின் கடைசியில் இடம் பெற்ற “இலங்கையில் யுத்தம்” எனும் செய்தி இன்று எல்லா பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் ஈழமாகவும், ஈரமாகவும் இடம்பெறக் காரணமும் இந்த அரசியல் கணிப்புகள் மட்டுமே.

jjதேர்தல் முடிந்த மூன்றாவது நாளே ஈழமாவது. சோளமாவது எங்கேயாவது ஒரு எஸ்டேட்டில் போய் நிம்மதியா கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுப்போம் என தலைவர்கள் கழன்று கொள்ளப் போவது மட்டும் அக்மார்க் உண்மை.

இப்போதைக்கு தமிழனின் உயிர் அவர்களுக்கு துருப்புச் சீட்டு. ஈழம் என்று கூட சொல்லக் கூடாது இலங்கை என்று தான் சொல்ல வேண்டும் என கங்கணம் கட்டியிருந்தவர்கள் கூட தனி ஈழம் என தாவியதற்கு 40 ஐத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்பதை அரசியல் கைக்குழந்தைகளும் அறியும்.

“அழுத்தமாய் சொன்னால்” போர் நிற்கும் என்று தெரிந்தாலும் கூட்டணிக்காக அமைதிகாக்கும் அரசியல் கட்சிகளில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையையும் தமிழகம் நன்கறியும்.

இலங்கைக்கு வெளிப்படையான ஆதரவை சீனா அளிப்பதால், இலங்கையில் சீனாவின் தளம் அமைக்கப்பட்டால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தாகிப் போகும் எனும் பதட்டம் இந்திய ராணுவத்திடம் இருப்பதும் கவனிக்கத் தக்கது.

உணர்ச்சிவசப்பட்டு வாக்களிப்பதில் பேர்போன தமிழக மக்களை எப்படியேனும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் வைத்திருக்க வேண்டும் எனும் தலையாய கவலை அரசியல் கட்சிகளுக்கு. “போர் நிறுத்தம் கொண்டு வா.. ” எனக் கதறும் அரசியல் கட்சிகள், ஒரு வேளை போர் நிறுத்தம் வந்து விட்டால் உள்ளுக்குள் அதிர்ச்சியடைந்து, “அய்யோ ஓட்டு போய்விட்டதே ..” என கதறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நீ ஒன்று சொன்னால், நான் இன்னொன்று சொல்வேன் என மாறிமாறி தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் உடுக்கையடிப் பிரச்சாரம் நிகழ்த்துவதில் குழம்பிப் போய் இருப்பவர்கள் பொது மக்கள் மட்டுமே.

காலையில் ஒரு கட்சி மீது மக்களுக்கு இருக்கும் அபிப்பிராயம், மாலையில் மாறிவிடுகிறது. இரண்டு பேருமே அப்படித் தான் என மூன்றாவது நபருக்கு ஓட்டு போடலாமா என யோசிக்கும் மக்களைப் பரவலாக எங்கும் காண முடிகிறது. ஊடகங்களும், இணையமும் அசுர வளர்ச்சியடைந்திருக்கும் இன்றைய சூழலில் ஒரு பொதுப்படையான கருத்துருவாக்கத்தை பரவலாக நிறுவுவதென்பது சாத்தியமில்லை எனும் நிலையே காணப்படுகிறது.

வெறும் மேடைப்பேச்சுகளை மட்டும் வைத்து எந்த அரசியல் வாதியையும் கணிக்க முடியாது. கணிக்கக் கூடாது. அது ஏசி அறையில் இருந்து கொண்டு சென்னையே குளிர்கிறது என்று கணிப்பதற்கு சமம்.

ஒரு தலைவர் வாக்குறுதிச் சுருக்குப் பையைத் திறந்து அள்ளி விடுகிறார் எனில் கொஞ்சம் கவனியுங்கள். சில கேள்விகளை உங்களுக்குள்ளேயே எழுப்புங்கள்.

இந்த தலைவருக்கு இந்தப் பிரச்சினையில் கடந்த மாதம் இருந்த நிலைப்பாடு என்ன ? கடந்த வருடம் இருந்த நிலைப்பாடுkk என்ன ? ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைப்பாடு என்ன ?

தொடர்ச்சியாக ஒரே மாதிரியான நிலைப்பாடு கொண்டிருந்தார் எனில், அந்த சிக்கலில் முடிந்த அளவுக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் எனில் அவருடைய வாக்குறுதி குறைந்த பட்ச நம்பிக்கைக்கு உரியது என கருதிக் கொள்ளலாம்.

இரண்டாவது, அந்த பிரச்சினை சம்பந்தமாக நபர் தந்திருக்கும் வாக்குறுதி நிறைவேற சாத்தியக் கூறுகள் என்னென்ன ?

அந்த தலைவர் ஆதரிக்கும் கட்சி மத்தியில் ஆட்சியமைக்க சாத்தியம் உண்டா ? அந்த தலைவர் ஆதரிக்கும் கட்சியின் தலைமை, உயர் மட்ட தலைவர்கள் அனைவரும் இந்த கொள்கையோடு சற்றேனும் உடன்பாடு உடையவர்கள் தானா ? என சில கேள்விகளை எழுப்புங்கள்.

மூன்றாவதாக, எல்லோமே சரியாய் இருந்தால் சர்வதேச அளவில் இந்த திட்டத்தை அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற முடியுமா என யோசியுங்கள். இந்த திட்டத்தை நிறைவேற்ற எந்தெந்த நாடுகளின் ஒத்துழைப்பு வேண்டும், அதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன என்பன போன்றவற்றை ஆராய்தல் மிக முக்கியம்.

நான்காவதாக, இது ஏன் கடந்த காலத்தில் நிகழவில்லை ? அதற்கு எழுந்த முட்டுக் கட்டைகள் என்ன ? அந்த முட்டுக் கட்டைகள் வரும் ஆட்சியில் வருவதற்கான வாய்ப்புகள் என்ன ? என்பதை கவனியுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக கண்மூடித் தனமாக ஒருவர் தரும் வாக்குறுதியை நோக்கி கேள்விகளை எழுப்புங்கள். “இதை நிறைவேற்ற நீங்கள் வைத்திருக்கும் திட்டத்தை தெளிவாக்குங்கள்” என விசாரியுங்கள்.

நிலவில் நிலம் வாங்கித் தருவேன் என்றவுடன், மொட்டை மாடியில் படுத்துக் கிடந்து நிலவைப் பார்த்துக் கொட்டாவி விட்டால், அடுத்த தேர்தலில் ஆளுக்கு நான்கு நட்சத்திரம் என்ற வாக்குறுதி வந்து சேரும்.

இந்திய நாட்டின் ஒட்டுமொத்த அமைதி, மக்களின் ஒற்றுமை, சுதந்திரம், பாதுகாப்பு உணர்வு, நட்புறவு, சர்வதேச அங்கீகாரம், உள்நாட்டு வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்தையும் ஆராய்ந்தே யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதை முடிவெடுங்கள்.

கடைசியாக ஒன்று, குப்பைத் திரைப்படங்களைப் பார்க்க குடும்பத்துடன் மூன்று மணி நேரம் ஒதுக்கும் நாம், இந்த முறை குடும்பத்தினரோடு மூன்று மணி நேரம் அமர்ந்து கலந்துரையாடினாலே நாட்டின் தலைவர் யாராய் இருந்தால் நலம் என்பது புரிந்து போகும்.

முடிவு எடுக்க வேண்டியது நீங்கள் மட்டுமே ! திணிக்கப்பட்ட அபிப்பிராயங்களை வெளியேற்றுங்கள்

வாக்களியுங்கள், இந்தியா செழிக்க வாய்ப்பளியுங்கள்.

நன்றி விகடன்

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers