உடலைப் பேண பத்து கட்டளைகள்

 

ss 

 

உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.

  

  1. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப்பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.
  2.  

     

  3. தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் ஒருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.  
  4.  

  5. சோர்வாய் இருக்கிறது ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள். 
  6.  

  7. நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைத்தலை முழுமையாய் விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.
  8.  

  9. மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்புப் பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.
  10.  

  11. உணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 
  12.  

  13. உண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள். 
  14.  

  15. இனிப்புப் பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே !
  16.  

     

  17. எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.
  18.  

  19. தேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம். வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் உத்தரவாதம் !
  20.  

  நன்றி : தமிழ் ஓசை – களஞ்சியம்

7 மறுமொழிகள்

  1. ஷாமா சொன்னது,

    மே 28, 2009 இல் 8:13 மு.பகல்

    ஆரோக்கிய வாழ்வுக்கு உங்கள் தகவல்கள் மிகவும் பயனானது… நன்றி சேவியர்.

    கல்சியம் அதிகம் கிடைக்கக் கூடிய சில உணவு வகைகளையும் சொல்லிவிடவா?….

    அகத்தி இலையிலும் அதன் பூவிலும் அதிகளவு கல்சியம் காணப்படுகிறது.
    கிழங்குகளின் இலைகளையும் சமைத்து உண்ணலாம். (உ+ம்:- வத்தாளை, மரவெள்ளி, பீற்ரூட், கரட், முள்ளங்கி, கோலி ப்ளவர், பூசணி போன்றவற்றின் இலைகள்) இவற்றில் இரும்பு, புரதம், கல்சியம், கரட்டீன், நார்ப் பொருள் என்பன காணப்படுகின்றன.

    இன்னும் ஒரு சிறு குறிப்பு:
    அடிவயிற்றுப் பகுதி உறுப்புகளை சுற்றியுள்ள கொழுப்பு, உடல் நலத்தை பாதிக்கக்கூடும் என ஹாங்காங் பல்கலைக்கழக மருத்துவத்துறை தலைமை பேராசிரியர் லாவ் ச்சூ பாக் (Lau Chu Pak) கூறுகிறார்.
    இவ்வகை கொழுப்பு, இன்சுலின் தடுப்பு, இரத்தக்குழாய் வீக்கம், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு மற்றும் இரத்தம் கட்டுதல் ஆகியவற்றை உருவாக்குகின்ற, சைற்றோகினிஸ் (Cytokines) மற்றும் கொழுப்பு அமிலங்களை வெளியிடுகிறது.
    இவை அனைத்தும் நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு இட்டுச்செல்லும் உயர் ஆபத்துக்களை கொண்டுள்ளது என லாவ் ச்சூ பாக் (Lau Chu Pak) கூறியுள்ளார்.

    எனவே, உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வு மிக மிக முக்கியம்.
    “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”.

  2. ஷாமா சொன்னது,

    மே 28, 2009 இல் 8:21 மு.பகல்

    Moses இன் 10 கட்டளைகள் போல்
    Xavier இன் 10 கட்டளைகள் ரொம்ப அருமை…
    வாழ்த்துகள்!

  3. சேவியர் சொன்னது,

    மே 28, 2009 இல் 11:38 பிற்பகல்

    நன்றி ஷாமா. பின்னூட்டமாய் ஒரு அழகிய பதிவையே எழுதியமைக்கு.

  4. Suresh சொன்னது,

    ஜூன் 25, 2009 இல் 9:33 பிற்பகல்

    very useful…

  5. சேவியர் சொன்னது,

    ஜூன் 30, 2009 இல் 2:56 மு.பகல்

    நன்றி சுரேஷ் :)

  6. rajkumar சொன்னது,

    ஆகஸ்ட் 25, 2009 இல் 10:59 பிற்பகல்

    hai saveyar. how are u pa, I like u yours kavithai

  7. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:24 பிற்பகல்

    /hai saveyar. how are u pa, I like u yours kavithai//

    நன்றி ராஜ்குமார் :)


மறுமொழியொன்றை வழங்குக