கி.மு : ஏகூத் பின்னிய சதி வலை

 haman_mordechai

இஸ்ராயேல் மக்களை மேசேக்குப் பின்பு திறமையாக வழிநடத்தியவர் யோசுவா. அவருடைய மறைவிற்குப் பிறகு அவர்களுக்குச் சிறப்பான வழிகாட்டிகள் இல்லாமல் போயிற்று. கானான் நாட்டில் வசித்து வந்த இஸ்ரயேலர்கள் கானானியரை முற்றிலும் விரட்டிவிடாமல் அவர்களையும் தங்களோடு தங்க வைத்திருந்தனர். அதுவே அவர்களுக்கு எதிராய் முடிந்தது. கானானியர்கள் பலுகிப் பெருகிப் பலம் கொண்டார்கள். இஸ்ரயேல் மக்களோடு கடவுள் இருந்ததால் அவர்களை கானானியரால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

காலப்போக்கில் இஸ்ரயேல் மக்கள் கடவுள் தங்களுக்குச் செய்த நன்மைகளையெல்லாம் மறந்து விட்டு கானானியரோடு திருமணபந்தங்களை ஏற்படுத்தவும், கானானியரின் தெய்வமான பாகாலை வணங்கவும் துவங்கினார்கள். இஸ்ரயேல் மக்கள் தங்கள் இனத்தில் தான் பெண்கொள்ளவேண்டும் என்பதே அவர்களுக்குக் கடவுள் கொடுத்திருந்த கட்டளை. அதை இஸ்ரயேலர்கள் மீறத் துவங்கினார்கள். தன்னைப் புறக்கணித்த இஸ்ரயேலர் மீது கடவுள் கோபம் கொண்டார். அவர்களைக் கைவிட்டார். கானானியரின் கை ஓங்கியது. அவர்கள் இஸ்ரயேலரை தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்து கொடுமைப்படுத்தத் துவங்கினார்கள்.

அந்நாட்களில் மோவாப் நாட்டை எக்லோன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் மிகவும் வலிமையானவன். மிகச் சிறந்த போர்வீரன். அவனுடைய ஆட்சியில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அவர்கள் மேல் அரசன் கடுமையான வரிகளைச் சுமத்திக் கொடுமைப்படுத்தினான். இஸ்ரயேல் மக்கள் நிம்மதியின்றித் தவித்தார்கள்.

இஸ்ரயேலர்கள் கடவுளை விட்டு விலகிச் செல்வதும், மீண்டும் மனம் மாறிக் கடவுளை நம்புவதும் அடிக்கடி நடந்தது. இந்த முறையும் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகச் செய்த தங்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் கடவுளை நோக்கி மன்றாடினார்கள். கடவுள் மனமிரங்கினார். அவர்களுக்கு வழிகாட்ட நியாயாதிபதி ஒருவரை நியமித்தார். அவர் தான் ஏகூத்.

ஏகூத் இஸ்ரயேல் மக்கள் தலைவர்களை ஒன்றுகூட்டினார்.

‘நாம் இந்த மன்னனின் கீழ் கடந்த பதினெட்டு ஆண்டுகளாகப் பெரும் கஷ்டத்தை அனுபவித்துவிட்டோ ம். இனிமேலும் நாம் சும்மா இருந்தால் நம்முடைய மூதாதையர்கள் நானூறு ஆண்டுகள் எகிப்தில் அடிமைப்பட்டது போல நாமும், நம்முடைய வருங்காலத் தலைமுறையினரும் கஷ்டப்படுவார்கள். எனவே இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்’ ஏகூத் சொன்னார்.

‘நாங்கள் என்ன செய்யவேண்டும் ?’ மக்கள் பிரதிநிதிகள் கேட்டார்கள்.

‘முதலாவதாக நீங்கள் யாரும் இனிமேல் பாகாலை வழிபடக் கூடாது. நம்முடைய கடவுளைத் தான் வழிபட வேண்டும். நமக்கு ஒரே ஒரு கடவுள் தான். அவரே உண்மையானவர் என்பதை பலமுறை நாம் கண்டிருக்கிறோம். எனவே நம் வழிகளை மாற்றிக் கொண்டு நம் கடவுளில் நிலைத்திருக்கவேண்டும்’

‘இரண்டாவதாக, நமக்கு நல்ல வழிகாட்டிகள் இல்லை. எனவே என்னுடைய தலைமையை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும். நான் உங்களுக்காக கடவுளின் அருளோடு போராடுவேன்’ ஏகூத் சொல்ல அனைவரும் ஒத்துக் கொண்டார்கள்.

‘இப்போது மன்னனுக்குச் செலுத்தவேண்டிய வரிப்பணத்தையெல்லாம் என்னிடம் கொடுங்கள். இந்தமுறை நான் அதை மன்னனிடம் கொடுக்கிறேன்’ ஏகூத் சொன்னார். மக்கள் அவ்வாறே செய்தனர்.

‘நீங்கள் எல்லோரும் ஒரு போருக்குத் தயாராக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் நாம் போரிட வேண்டி வரலாம்’ ஏகூத் கூடியிருந்த மக்களிடம் கூறினார்.

ஏகூத் இடதுகைப் பழக்கம் கொண்டவர். எனவே எப்போதும் தன்னுடைய கத்தியை இடுப்பின் வலது பக்கத்தில் சொருகி வைப்பது அவருடைய வழக்கம். இந்தமுறையும் அவர் ஒரு கூர்மையான கத்தியை எடுத்து அதை தன் இடையின் வலது பக்கத்தில் மறைத்து வைத்தார். பின் மன்னனுக்குரிய வரிப்பணத்தையும் எடுத்துக் கொண்டு மன்னனின் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டார்.

வரிப்பணத்தோடு ஏகூத் வருவதைக் கண்ட மன்னன் மகிழ்ந்தான்.

‘அரசே…. எங்கள் தலைவரே.. இதோ உமக்கான வரிப்பணம்’ ஏகூத் போலி பவ்யம் காண்பித்தார்.

‘நல்லது. உங்களை நான் பாராட்டுகிறேன். சரியான நேரத்தில் வரிப்பணத்தைச் செலுத்துவதில் நீங்கள் கெட்டிக் காரர்கள்’ மன்னன் சிரித்தான். அரசவை மொத்தமும் சிரித்தது.

‘மன்னனே… உங்கள் அரசாட்சியில் நாங்கள் நலமுடன் இருக்கிறோம். எனவே வரிப்பணம் செலுத்துவதில் எங்களுக்கு எப்போதும் தாமதம் ஏற்படுவதில்லை’ ஏகூத் வஞ்சகமாய் புகழ்ந்தான். வரிப்பணத்தையெல்லாம் மன்னனிடம் ஒப்படைத்த ஏகூத் மன்னனை நோக்கி,

‘அரசே ஒரு விண்ணப்பம்’ என்றார்.

‘சொல்… என்ன விண்ணப்பம் ? வரியைக் குறைக்கவேண்டுமா ?’ மன்னன் நகைத்தான்.

‘இல்லை அரசே. இது மிக மிக ரகசியமானது. உம்மிடம் மட்டுமே சொல்லவேண்டும். இந்த அரசவைப் பணியாளர்கள் கூட கேட்கக் கூடாது’ ஏகூத் சொன்னார்.

‘ சரி என்னுடன் வா…’ மன்னர் ஏகூரை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குச் சென்றான். அந்த அறை எப்போதுமே குளிர்ச்சியாக இருக்குமாறு கட்டப்பட்டிருந்தது.

‘சொல்.. என்ன ரகசியம் வைத்திருக்கிறாய் ?’ மன்னன் கேட்டான்.

ஏகூத் தாமதிக்கவில்லை, கணநேரத்தில் தன்னுடைய வலது இடையில் சொருகியிருந்த கத்தியை இடது கையினால் உருவி எடுத்து மன்னன் சுதாரிக்கும் முன் அவனுடைய வயிற்றில் குத்தினார். கத்தி மன்னனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு மறுபுறம் வந்தது. மன்னன் கத்தாமலிருக்க தன்னுடைய வலது கையினால் மன்னனுடைய வாயைப் பொத்திய ஏகூத்,’ அரசே… இதுதான் நான் சொல்ல வந்த ரகசியம்’ என்று ஆத்திரக் கண்களோடு உறுமினார். மன்னனின் கண்கள் மரணபயத்தில் தத்தளித்து அடங்கியது. மன்னன் இறந்தான்.

ஏகூத் எதுவுமே நடவாதவர் போல மெதுவாக அரண்மனையை விட்டு வெளியேறினார். சற்றும் தாமதியாமல் உடனே சென்று தயாராய் இருந்த இஸ்ரயேல் மக்களை ஒன்று சேர்த்து மன்னனுக்கு எதிராகப் போரிடவும் தயாரானார்.

அறைக்குள் சென்ற மன்னன் நீண்டநேரமாக வெளியே வராததால் அரச அலுவலர்கள் அரசர் சென்ற அறைக்குள் நுழைந்தனர். அங்கே அரசன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு ஒட்டுமொத்தமாக அதிர்ந்தார்கள்.

‘ஐயோ… நமது மன்னனை அந்த இஸ்ரயேலன் கொன்று விட்டான்’

‘உடனே படைத்தளபதியை வரவழையுங்கள்… இஸ்ரயேலர்களை அழித்தொழிக்க வேண்டும்…’

‘என்ன ஆயிற்று.. ஏன் பதட்டப்படுகிறீர்கள் ?’

அரண்மனை சடுதியில் பரபரப்புக்குத் தாவியது. ஆனால் அதற்குள் ஏகூத் இஸ்ரயேலர் படையோடு அரண்மனையைத்தாக்கினார். போருக்குத் தயார் நிலையில் இல்லாத அரண்மனை வீரர்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள். இஸ்ரயேலர்களின் கை ஓங்கியது. மோவாபியர் படை படுதோல்வி கண்டது. இஸ்ரயேலர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

நீண்ட நாளைய அடிமைத்தனத்திலிருந்து தங்களை மீட்ட ஏகூரையும், ஏகூத் வழியாகச் செயலாற்றியக் கடவுளையும் இஸ்ரயேலர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

 

பிடித்திருந்தால்…… வாக்களியுங்கள்… நன்றி

1 மறுமொழி

  1. ஷாமா சொன்னது,

    நவம்பர் 19, 2009 இல் 7:27 மு.பகல்

    //நமக்கு ஒரே ஒரு கடவுள் தான். அவரே உண்மையானவர் என்பதை பலமுறை நாம் கண்டிருக்கிறோம். எனவே நம் வழிகளை மாற்றிக் கொண்டு நம் கடவுளில் நிலைத்திருக்கவேண்டும்’//

    உண்மை!….நன்றி சேவியர்!


மறுமொழியொன்றை வழங்குக