கவிதை : உன்… சிரிப்பினில்…


ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.

உன் விலகலை
ஓர் புன்னகையோடு தான்
ஒத்துக் கொண்டேன்.
நல்லவேளை
அகத்தின் அழுகை முகத்தில் தெரியவில்லை.

எதுவும் நிலையில்லையடி
அதை
உன் விலகலில் தான்
எனக்கு உணர்த்த வேண்டுமா ?

உன் காதலுக்குப் பரிசாய்
எதையேனும் தர நினைக்கிறேன்
எதுவும் உயர்வாய் தெரியவில்லை
உயர்வாக இருப்பதெல்லாம்
உன்னிடமே இருக்கின்றன !

துவக்கமும் முடிவும் இல்லாதது
காதல் என்கிறார்கள்.
நான் துவங்கி வைத்தேன்
நீ முடித்து வைக்கிறாய்
பழமொழி பழசாகிப் போகிறதோ ?


யாரையும் நேசிக்க யாரும்
கற்றுத் தருவதில்லை.
உன்னை நேசிக்க வேண்டாமென்று
கற்றுத் தர மட்டும்
சுற்றித் திரிகிறது சுற்றம்.

உன் உதடுகள்
நிறுத்தாமல் சொல்லும் பொய்க்காய்
தலைகுனிகின்றன உன் இமைகள்.
நிமிரும் போது
நிஜம் சொல்லி நனைகின்றன கண்கள்.


உன் சிரிப்புக்குள்
என்னதான் இருக்கிறதோ ?
அது தான் என்
பிடிவாதங்களுக்கெல்லாம்
தற்கொலை முனையாகிறது.

கவிதை : காய்க்காத அத்திமரம்

 

 

விரும்பாமலேயே
வாய்த்து விடுகிறது
பலருக்கும்
குழந்தைப் பாக்கியம்.

நாள்காட்டிகளின்
சுட்டுவிரல்
கணக்குகளில் பிசகியோ,

விசாரணைக்குரிய
பாதுகாப்புக்
கவசங்களின் கண்களில்
மண்ணைத் தூவியோ,

மோகத்தின்
முணுமுணுப்புகளில்
மறைந்து போன
எச்சரிக்கை உணர்விலோ,

ஏதோ ஒன்றில்
நழுவி விழுகின்றன
இந்த
மண்ணின் வரங்கள்
சாபங்களாக.

இந்த வானக வரங்களை
சாபங்களாகச் சித்தரிப்போர்
சந்தித்தல் நலம்.

மரத்தில் தொட்டில் கட்டி
கண்களில்
மதகு உடைத்துக் கரையும்
வேண்டுதல் ஒலிகளை.

தமிழிஷில் வாக்களிக்க….

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers