கவிதை : பின் தொடரும் சிரிப்புகள்.

என்னுடைய
சிரிப்பைப் பார்த்து
கேலியாகச் சிரிக்கிறது
எனது
இன்னொரு சிரிப்பு.

அதுதான் உண்மையென்பது
அதன் வாதம்,
இது தான் உண்மையென்பது
இதன் நியாயம்.

பின்
இரண்டு மூன்றாகி
கூடைக் கணக்காகி
மாலையில்
என்னைப் பின் தொடர்ந்து
துரத்துகின்றன
சிரிப்புப் பேரணிகள்.

எது
உண்மையான சிரிப்பென்று
ஒத்துக் கொள்ள வேண்டுமாம்
நான்.

மாலையில் சிரிக்கிறேன்
வாசலில் நிற்கும்
மழலையைப் பார்த்து.

தீர்ந்து போய் விடுகிறது
பின் தொடர்ந்த
சிரிப்பின் ஒலிகள்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

கவிதை : மரணம் நடந்த வீதி

சத்தமிட்டு
கால்களைக் கட்டிக் கொண்டு
கதறி அழுது
புலம்பியது சுற்றம்.

கதறி அழாதவர்கள்
அன்பு குறைந்தவர்களாய்
கருதப்பட்டார்கள்.

திரட்டிய
கண்ணீர் துளிகளை
முந்தானைகளில் சேமித்து
கூட்டம்
கடந்த பின்,

ஜாமங்களின்
குறட்டை ஒலிகளையும்
மீறி
இருட்டின் விழிகளிலிருந்து
விழுந்து கொண்டிருந்தன
மெளனமான கண்ணீர் துளிகள்.

மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தில்
பளீரிட்டது
இறந்து போனவரின்
கண்ணீர் விழிகள்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

கவிதை : ஒற்றை மோகம்.


தொட்டு விட விரல்கள்
துடி துடிக்கும்
அருகினில் நீயின்றி
படபடக்கும்
இருவிழி ஓரங்கள்
நீர்துளிர்க்கும்
அதிலும் உன்முகம்
எதிரொளிக்கும்

கனவுக்குள் உன் பிம்பம்
குடை பிடிக்கும்
அதிகாலை போர்வைக்குள்
அடம்பிடிக்கும்
போலியாய் துரத்தினும்
மனம் அதட்டும்
குளியலைறைக் கதவையும்
அதுதிறக்கும்.

நீயின்றி நீயிருப்பாய்
மனம்சிலிர்க்கும்
என்றேனும் பிரிவாயோ
உயிர்வியர்க்கும்
உறவுக்குப் பெயரென்ன
தலைகுழம்பும்
பெயருக்கு தேவையென்ன
உள்வினவும்

எப்போது பூக்கவேண்டும்
செடி அறியும்
தப்பாமல் அதுபூக்கும்
நிலை நிலைக்கும்
இப்போது ஏன்பூத்தாய்
வினா வினவும்
கேள்வியே மூடமடா
மனம் சிரிக்கும்.

அரும்பியதை விரும்பியதை
உயிர் அணைக்கும்
திரும்பியதும் திசையெங்கும்
அனல் அடிக்கும்
உரிமையென உள்நெஞ்சம்
உனை அணைக்கும்
இல்லையென சொல்னால் மெய்
வெந்து தணியும்.

பிடித்திருந்தால் வாக்களிக்கலாமே…

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers