எகிறும் தங்கம், பதறும் பெண்கள்

 

sruthதங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விண்ணைத் தொட்டிருப்பது கல்யாணம் கச்சேரியை நெருங்கிக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பெல்லாம் இத்தனை பவுன் நகை என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்போதெல்லாம் இத்தனை ரூபாய்க்கு நகை என்றே பேசிக்கொள்கின்றனர். காரணம் நாள் தோறும் எகிறிக் குதிக்கும் தங்கத்தின் விலை.

தங்கத்தின் விலையேற்றத்துக்கு அடுத்த தெரு கடைகள் முதல் சர்வதேச கச்சா எண்ணையின் விலை வரை பல்வேறு காரணங்களை ஆர்வலர்கள் அலசி ஆராய்ந்து பல்வேறு தகவல்களைத் தந்திருக்கிறார்கள். அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

தங்கம் எதற்கு ? வேறு ஆபரணங்களே இல்லையா ? தங்கம் போட்டால் தான் ஆச்சா ?  என கேள்வி எழுப்பினால் என்ன பதில் கிடைக்கிறது ?

 “விற்றால் விலை கிடக்கும், அடகு வைக்கலாம்” என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் தங்க நகைகள் தான் வேண்டும் என்பதில் ஆழமான காரணம் இல்லை.

நகர்ப்புற இளம் வயதினர் தங்கத்தை தூர எறிந்து விட்டு ஃபாஷன் நகைகளுக்கு மாறி வெகு நாட்களாகிறது. பாஷன் நகைகள் நகரின் எல்லா கடைகளிலும் எல்லா நிறங்களிலும், எல்லா வடிவங்களிலும் கிடைக்கிறது. பலர் இதை ஒரு குடிசைத் தொழிலாகவே செய்தும் வருகின்றனர். சில நூறு ரூபாய்களுக்கே காதணி, வளையல், கழுத்துச் சங்கிலி என எல்லாவற்றையும் ஒரே ஸ்டைலில் வாங்கவும் முடியும் என்பது இந்த வகை நகைகளின் சிறப்பம்சம்.

பட்டுப் புடவைகளை எடுத்துப் பாருங்களேன். முன்பெல்லாம் பட்டுப் புடவை உடுத்தாத பெண்களை திருமண வீட்டில் பார்ப்பது அரிது. அரிது என்பதை விட குதிரைக் கொம்பு என்று கூட சொல்லலாம். காரணம் பட்டு கட்டாம போனா கவுரக் குறைச்சல் என நினைத்தது தான். இப்போதெல்லாம் நிலமை மாறிவிட்டது ஃபாஷன் டிசைனர்ஸ் சேலைகள் தான் கண்களில் அதிகமாய் தென்படுகின்றன.

பட்டுப் புடவை செம வெயிட்டுப்பா… அதையெல்லாம் தூக்கிட்டு நடக்க முடியாது” என இளம் பெண்கள் வெளிப்படையாகவே மறுக்கத் துவங்கிவிட்டார்கள்.

எது வசதியாக இருக்கிறதோ, எது மலிவாகக் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தும் போக்கு நிச்சயம் வரவேற்கத் தக்கது. காரணம் ஆடை, நகை எல்லாமே நமக்கு ஆனந்தம் தருவனவாக இருக்க வேண்டுமே தவிர, நம்மை வருத்துபவையாக இருக்கக் கூடாது என்பதே எனது கருத்து.

பிளாட்டினம், இரிடியம், பல்லாடியம், ருத்தேனியம், ரோடியம் மற்றும் ஓஸ்மியம் என பல்வேறு நகைகள் இருந்தாலும் அவையெல்லாம் தங்கத்தை விட அதிக விலை என்பதால் அவற்றையும் ஒதுக்கியே வைக்க வேண்டியிருக்கிறது.

சரி தங்கம் இல்லையேல் அப்படி என்னதான் வாங்கலாம் ?

பிளாட்டிஃப்னா கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? பிளாட்டிஃப்னா என்றால் ஸ்பானிஷ் மொழியில் செழுமைப்படுத்தப்பட்ட வெள்ளி என்பது பொருள். 92.5 விழுக்காடு வெள்ளியும், ஒரு விழுக்காடு பிளாட்டினமும், எட்டு விழுக்காடு மற்ற உலோகப் பொருட்களும் கலந்து உருவாகியிருக்கும் இந்த பிளாட்டிஃப்னா எனும் புது வகை உலோகம் 2005 ல் அறிமுகம் செய்யப்பட்டது.

பிளாட்டினத்தின் வனப்பும், வெள்ளியின் மினுமினுப்புமாய் கலந்து புதுவிதமான அழகுடன் திகழ்கிறது இந்த பிளாட்டிஃப்னா !

டைட்டானியம் எனும் உலோகம் வலுவான பொருள். பளிச்சென இல்லாமல் சாம்பல் நிறத்தில் பளபளப்பான நகைகளாய் வடிவம் எடுத்திருக்கிறது. மருத்துவக் குணாதிசயங்களும் உண்டு என சொல்லப்படும் இந்த டைட்டானியம் நகைகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றன. நீண்ட காலம் பயன்படுத்தலாம் எனும் உத்தரவாதத்துடன் வருகின்றன இந்த டைட்டானியம் நகைகள்.

டங்ஸ்டன் கார்பைடு என்பது டைட்டானியத்தைப் போலவே ஆனால் சற்றே அடர்த்தி குறைந்த நிறத்தில் கிடைக்கும் உலோகம். கார்பனையும் டங்ஸ்டன் எனும் உலோகத்தையும் கலந்து உருவாகியிருக்கும் இந்த உலோகம் எந்த விதமான நகைகளையும் செய்வதற்கு உகந்ததாம். அமெரிக்காவில் தங்கம் பயன்படுத்தும் ஆண்களின் விடுக்காடு 40 விழுக்காடு சரிந்து டங்ஸ்டன் நகைகள் பயன்படுத்தும் ஆண்களின் விழுக்காடு 50 ஆக உயர்ந்திருக்கிறதாம்.

தங்க முலாம் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் இந்த தங்க முலாமும் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. வெயிலில் அலைந்தால் கறுத்துப் போகும் என்றதெல்லாம் பாட்டி காலத்து சங்கதிகள். தங்கத்தையும், முலாமையும் கைகளில் தந்தால் சத்தியமாய் கண்டுபிடிக்க முடியாது என அடித்துச் சொல்லும் தரத்தில் இன்றைக்கு முலாம் நகைகள் கிடைக்கின்றன.

குறைந்தபட்சம் 10 காரட் தங்கத்தில் .175 செண்டீமீட்டர் அல்லது அதற்கு மேல் எனுமளவில் தரமான தங்க முலாம் பூசப்பட்ட நகைகள் கிடைக்கின்றன.

முலாம் பூசும் முறையை வெப்பத்திலும், அழுத்தத்திலும் தங்க நகையைப்  போலவே செய்யும் முறையும் உண்டு. இதற்கு நகையின் மொத்த எடையில் இருபதில் ஒரு பங்கு தங்கம் இருந்தாக வேண்டும் என்பது நிபந்தனை. இதை தங்க நிரப்பி என்றும் சொல்வார்கள்.

தங்க முலாத்தில் இன்னொரு பிரபலமான வகை வெள்ளியின் மேல் தங்கம் பூசப்படுவது. தரத்துக்கும், எடைக்கும், அழகுக்கும் உத்தரவாதம் இது.

தங்க நிற நகைகள் இன்னொரு வகை. இது தங்க முலாம் பூசப்படுவதல்ல, வெறுமனே தங்கத்தின் நிறம் பூசப்படுவது. மிக மிக மலிவானது. தரமும் சற்று குறைவானதே. ஆனாலும் பார்வையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் புகுந்திருக்கிறது.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது துருப்பிடிக்காத எஃகு என்பது இன்னொரு நகை வகை. ஆண்களுக்கான வாட்ச், பிரேஸ்லெட் போன்றவற்றுக்கு சிறந்தது இது. பத்து விழுக்காடு குரோமியத்தையும், .15 விழுக்காடு கார்பனையும் இரும்புடன் சேர்ப்பதால் கிடைக்கும் இந்த உலோகம் விரும்பிய வடிவங்களில் வடித்தெடுக்கும் வலிமை கொண்டது.

தங்கம் விலை குறையாதா குறையாதா என புலம்புவதை விட மிக மிக முக்கியமான தேவைகள் இல்லாத பட்சத்தில் தங்கத்தை விட்டு விட்டு வேறு நகைகளை நோக்கி கவனத்தைச் செலுத்தலாமே ?
தங்கத்தை புறக்கணித்து வேறு நகைகளை வாங்க பெரும்பாலான் மக்கள் நினைப்பது மறைமுகமாக தங்கத்தின் விலை கட்டுக்குள் வருவதற்கும் காரணமாகிவிடும்.

மேலை நாடுகளெல்லாம் தேவையில்லாமல் தங்கத்தில் பணத்தைக் கொட்டுவதைக் குறைத்தாலும் இன்னும் பழைய நினைப்பிலேயே தங்கத்தை நாம் கொண்டாடிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
வாழ்க்கை மாறிக்கொண்டிருக்கிறது. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நாம் இந்த நகை விஷயத்திலும் அதை நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே

நன்றி : தமிழ் ஓசையில் வெளியான எனது கட்டுரை

கவிதை : புரியவில்லையே அம்மா

அம்மா..
வார்த்தைகள் பழகும் வரைக்கும்
என் அழுகையை மொழிபெயர்த்து
அமுதூட்டுவாய்.
தொட்டிலின் ஈரம் துடைத்துத் தாலாட்டுவாய்.

பாவாடைப் பருவத்தில்
என் இடுப்பில்
புடவை கட்டிவிட்டு
உன்வயிற்றில் நெருப்புக் கட்டியிருப்பதாய்
சொல்லிச் சிரித்துக் கொண்டாய்.
ஏனோ எனக்குப் புரியவில்லை.

அறிவுக்குள் காரணங்கள் விளங்காத
ஒரு மாலைப்பொழுதின் விளையாட்டுத் திடலில்
பயந்து அழுது நடுங்கிச் சிவந்தபோது,
பூப்பெய்தினேன் என்றுசொல்லிப்
பூரித்தாய்.
எனக்கென்னவோ பாதிதான் புரிந்தது.

அந்தி வந்து வாசல் தட்டும் முன்
நான் வந்து சேரவேண்டுமென்று
கோபக்குரலில் விளக்கினாய்
முழுதாய் படராத இருட்டுபோல
சில இடங்கள் புரியவேயில்லை.

பள்ளிக்கூடத்தின் பலகைகளில்
தரவரிசையில் நான்
தலைகாட்டியபோதெல்லாம்
அடக்கமுடியா ஆனந்தத்தில் அணைத்துக் கொள்வாய்,
அப்போதெல்லாம்
தினம் தினம் தேர்வுகள் வராதா என்று யோசித்திருக்கிறேன்.

வலிகளின்
இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்ணீர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் மடியில் கவிழ்ந்தழுதிருக்கிறேன்.

என் கண்கள் துடைக்கும்
உன் முந்தானை நுனி,
என் வலிகள் பிய்த்தெறியும் உன் விரல் நுனி,
இவைகளின் தைரியத்தில்,
நான்
அழுவதற்குக் கூட அச்சப்பட்டதில்லை.

ஆனால்,
இன்று பயமாய் இருக்கிறது எனக்கு,

எப்போதும் சிரிக்கும்
உன் கண்கள் முழுதும் கண்ணீர்,
இறுக்கக் கட்டியிருக்கிறாய்
உன் ஆறுதல்க் கரங்களை.
உன் கால்களைக் கட்டிக்கொண்டு அழத்தோன்றுகிறது.

பாரமாய் என் கழுத்தில்
புத்தம் புதுத் தாலி.

இப்போதும் கூட ஏதோ ஒன்று புரியவில்லை.
ஆனால், என்னவென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

0

கவிதை : ஏதேனும் ஓர் சொல்

ஏதேனும் ஒரு செயல்
சந்தேகப் பொறியை
சொல்லாமல்
பற்ற வைக்கிறது.

ஏதேனும் ஒரு சொல்
சந்தேகப் பொறியாய் மாறி
எலி வாலுக்காய்
வாய் திறக்கிறது.

சொல்
கற்பனையில் வாக்கியங்களை
இடைவிடாமல்
இணைத்து பெருங்கதையாய் மாற,

செயல்
நிகழாதவற்றை
நிதமும் படம்பிடித்து
நீள் படமாயும் நிரம்பி வழிகிறது.

அந்த செயல் குறித்து
அவளோ,
அந்தச் சொல் குறித்து
அவனோ
பேசிக் கொள்ளாத கவலையில்,

மௌனப் படுக்கைக் கால்களருகே
கவிழ்ந்து படுத்து கதறி அழுகின்றன
அந்த
அப்பாவிச் சொல்லும் செயலும்

.

காலமாற்றமும், குழந்தையின்மையும்.

( இந்த மாத பெண்ணே நீ இதழில் வெளியானது )

வாழ்வின் ஆனந்தம் என்பது மழலைகளின் சிரிப்பிலும், கூட்டுக் குடும்ப உணர்விலும் எனும் நிலையிலிருந்து உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் சுவாரஸ்யம் கேளிக்கைகளும், பொருளீட்டுதலும், மனம் போன போக்கில் வாழ்தலும் எனும் நிலை உருவாகிவிட்டது.

கணினித் துறையின் மறுமலர்ச்சி இளைஞர்களையும் இளம் பெண்களையும் குடும்பம் எனும் ஆனந்தமான சூழலை விட்டு தூரமாய் விரட்டிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே இயற்கையை விட்டு வெகுதூரம் வந்துவிட்ட மனிதன், இப்போது குடும்பத்தை விட்டும் வெகுதூரம் சென்று விட்டான்.

எனவே தான் எப்போதும் இல்லாத அளவுக்கு மென்பொறியாளர் தம்பதியினரிடையே மனக்கசப்பும், மணமுறிவும் அதிகரித்திருக்கிறது. இதைவிடப் பெரிய சிக்கல் என்னவெனில் கூடி வாழும் தம்பதியினருக்கும் கொஞ்சி மகிழ குழந்தையில்லை எனும் இன்னலும் உருவாகியிருக்கிறது.

திருமணமான தம்பதியினரில் ஐந்து பேருக்கு ஒருவருக்கு கருத்தரிப்பதில் தாமதமும், சிக்கலும் நிலவுகிறது. இதன் முதல் காரணம் மன அழுத்தம், இரண்டாவது காரணம் அலுவலகத்துக்கும், பணத்துக்கும் கொடுக்கும் முன்னுரிமை. இப்போது இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது என பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது ஆண்களின் வயது !

பெண்ணின் திருமண வயது 21 என்று ஆட்டோக்களின் பின்னால் எழுதப்பட்டிருப்பது இப்போது நகைச்சுவையாகி விட்டது. திருமணத்துக்கான வயது பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சுமார் முப்பது வயதை நெருங்கும் நிலையில் பெண்களும், முப்பதைத் தாண்டிய பிறகே ஆண்களும் திருமணம் செய்ய விரும்புகின்றனர்.

இப்படி இளைஞர்கள் திருமணத்தைத் தள்ளிப்போட்டு, பின்னர் குழந்தைப் பிறப்பைச் சிலகாலம் தள்ளிப் போடுவதே குழந்தையின்மைக்கும், குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவுக்கும் முதன்மையான காரணமாகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி.

முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் கணிசமான அளவுக்குக் குறைகின்றன எனவும்,  கருவுறும் பெண்களுக்குக் கருச்சிதைவு நேர்வதற்கும் ஆண்களின் வயது காரணமாகி விடுகிறது எனவும் இந்த ஆராய்ச்சி அதிர்ச்சித் தகவலை அறிவித்திருக்கிறது.
சரியான வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தள்ளிப் போட்டு முப்பதுகளின் கடைசியில் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்தக் குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான சிக்கல்கள் உட்பட பல்வேறு நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம்.  நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு சிக்கலின்றி குழந்தை பிறக்கும் வாய்ப்பு பெருமளவில் குறைகிறதாம்.

பெண்களின் வயது மட்டுமே குழந்தைப் பிறப்புக்குத் தேவை, ஆண்களின் வயது ஒரு பொருட்டல்ல, 90 வயதிலும் ஆண்களால் குழந்தை பெற்றுக் கொள்ளமுடியும் என்றிருந்த ஆண்களின் மீசை முறுக்கலுக்கு இந்த ஆராய்ச்சி ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

கூடவே குடும்ப உறவுகளைக் குறித்த ஆழமான உணர்வு இல்லாமல், மேனாட்டுக் கலாச்சாரத்தின் வால்பிடித்து, கேளிக்கைகளுக்கும், பணத்துக்கும் முன்னுரிமை கொடுத்து அலையும் இளம் வயதினருக்கு இந்த ஆராய்ச்சி ஓர் எச்சரிக்கை மணியாகவும் ஒலிக்கிறது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 73 other followers