கவிதை : என் சன்னலோரச் சிட்டுக்கள்

அந்த
சாம்பல் நிறக் குருவி
குஞ்சுகளைக்
கூட்டிக் கொண்டு
கூட்டுக்கு வெளியே
பறக்கத் துவங்கியிருக்கிறது.

இந்த சன்னல் திரையின்
கண்கள் வழியே தெரிகிறது,
ஈரத் தரையின்
புற்கள் இடையே
அதன்
அலகுப் பற்கள் அலையும் அழகு,

காணும் பட்டத்தின் பின்
நீளும் வாலாய்,
தாயின் பின்னால்
குஞ்சுகள் தத்தும் அழகு,

உச்சரிக்கும் பூவாய்,
எச்சரிக்கும் காற்றாய்,
தாயை
நச்சரிக்கும் குரலாய்,
காதில் பூச்சொரியும்
கீச்சுக் குரலழகு,

அதன்
சிறகுச் சூட்டில் சிலநேரம்
சிக்கிக் கிடக்கும்
என் குளிர் கண்கள்.

சில காலம் முன்
சுள்ளி சேகரித்த
காலத்திலேயே எனக்குள்
அது
கூடு கட்டிக் குடியேறி விட்டது.

இப்போது,
தேனீர்,
அலுவல்,
குருவிக் கவனிப்பென்பது
வழக்கமான பழக்கமாகிவிட்டது.

நான்
பேசியதில்லை.
ஆனாலும்
பிரிய நண்பன் போல்
உள்ளுக்குள் தோன்றல்.

அது பேசும் பாஷைகளில்
தமிழை விட
தொன்மை வாடை.
அதன் அழகுக் கழுத்தில்
மலரை விட
மென்மை ஆடை.

மனசில் சிதறும் தானியங்களை
அவை
தரையில் அமர்ந்து
கொத்துகின்றன.

அவை கொத்தித் தின்னும்
அழகில்
என்
மனசின் தானியங்கள்
முளை விடுகின்றன.

அதன்
சத்தங்களின் சரணாலயமாய்
என்
நினைவுச் செடியின்
நீண்ட கிளைகள்.

மனம் மட்டும்
கவனமாய் கவலைப்படும்.

நாளை
சிட்டுக்கள் மீண்டும் வருமோ ?
இல்லை ஏதேனும்
வேடந்தாங்கலை
வேண்டிச் செல்லுமோ ?

*

 : சேவியர் கவிதைகள் காவியங்கள் நூலிலிருந்து.

கவிதை : அறுவை சிகிச்சை


நாளைக்கு அறுவை சிகிச்சை !!!
இருபத்து நான்கு வருட
இருள் வாழ்க்கைக்குப் பின்
விழிப்பாதைக்குள் வழியப் போகுது வெளிச்சம்.

எனைப் பார்த்துக்கொண்டிருந்த பூமியை
முதன் முதலாய்
நான் பார்க்கப் போகிறேன் ..

பார்வை கிடைத்ததும்
முதலில்
அம்மாவைப் பார்க்க வேண்டும்.
பேச்சுக்குள் பரிமாறிக்கொண்ட பாசத்தின்
முக உருவம் காண வேண்டும்.

வீட்டுக்குள் நுழையும் போது
நான் தொட்டுப் பார்க்கும் திண்ணையும்
எனைத் தொட்டுப் பார்க்கும்
அப்பாவையும் பார்க்க வேண்டும்.

இரைச்சல்களில் இழுக்கப்பட்டு
எங்கோ நிற்கும் போது
என்கரம் தீண்டி சாலை கடத்தும்
அந்த அன்னிய முகம் காணவேண்டும்.

என்னை மட்டும் இருள் பள்ளத்தின்
முகம் இல்லா மூலைக்குள்
புதைத்துப் போட்ட
என் கருவிழி காணவேண்டும் .

என் ஒரு முகத்தின்
இரு கண்களையும் இருட்டாக்கிய
அந்த பல முக இறைவனின்
திரு உருவம் தரிசிக்க வேண்டும்.

என் இருட்டுப் பயணத்துக்கு
கதவுகள் கண்டுபிடிக்கும்
என் ஊன்றுகோல்..
நான் உடுத்திருக்கும் ஆடையின் நிறம்
எல்லாம் காணவேண்டும்.

வானவில்லுக்கு நிறமுண்டாம்.
ஆமாம் நிறமென்பதென்ன ?
நிலவு போல பெண்ணாம்
சரி நிலவும்,பெண்ணும் என்ன நிறம்..?

எனக்கு முன்னால் இருப்பதெல்லாம்
எதிர்பார்ப்பு மூட்டைகள்.
மனசு முழுக்க ஆனந்தம் வந்து
ஊசிகுத்திய போது..
கனவு கலைத்தாள் அம்மா.

விடிந்து விட்டதாம்..
எனக்கு
அடக்கமுடியாமல் அழுகை வந்தது.

கனவு கண்டாயா
என்ற அம்மாவின் கேள்விக்கு
ஊன்றுகோல் தடவிய கரங்களுடன்
வார்த்தைகள் வலித்தன.
ஆமாம். ஆனால்.
கனவில் கூட கண் தெரியலேம்மா..

கவிதை : பிரிவின் பிரியம்


உறவுச் சுவரில்
உயிர் ஒட்டிய நாளிலிருந்தே
பிரிவுப் பிசாசின்
கோரப்பற்களில்
ஈரம் மாறா இரத்தத் துளிகள்.

இரு உடல்
ஓருயிராய் பிணைந்து,
ஓருடல்
ஈருயிராய் தாய்மை அணிந்து,
பின்னொரு பொழுதில்
தொப்புள் கொடியின்
நெருக்கம் விட்டபோது
துவங்கிய பிரிவு.

பள்ளிக்கூட
ஆரம்ப நட்பு.
ஆற்றங்கரையில் ஒதுங்கிய
சிறு வயதுச் சங்கதிகள்,
பதின் பருவத்தில்
பயிரான
முகப்பருப் கனவுகள்.

அத்தனை
கானகக் குவியலிலும்
பிரிவைச் சந்திக்காத
பச்சைக் கிளை
ஒன்றையேனும்
பார்க்க இயலவில்லை.

பிரிவுகளில் பின்னால்
ஓடி ஓடி
கால் வலித்த காதல்கள்,

கடல்களைக் கடந்து
கட்டி வைக்கும்
மணல் கோபுரக் கரன்சிகள்,

தாய் நாட்டில்
ஓர் ஓட்டு வீட்டுக்குள்
ஒதுங்கிக் கிடக்கும்
தாய்ப்பாசக் கவலைகள்.

சட்டென்று முடிவடையும்
ஒற்றையடிப்பாதையின்
குறுக்குச் சுவர்
மரணங்கள் !

தற்கால ஓய்வுகளாகவும்,
நிரந்தரச் சாய்வுகளாகவும்,
பிரிவுக்கு முன்னாலும்
பின்னாலும்
பிரியாமல் தொடர்பவை
பிரிவுகளே.

பிரிவுகளைப்
பிரியவேண்டுமென்று
மனங்கள் பிரியப்படும்.

ஆனால்,
நிஜத்தின் பாதங்களோ,
அந்த பிரியத்தின்
சந்திப்பிலும்
ஒரு பிரிவைச் சந்திக்கும்.

கவிதை : நிகழ்வின் நிழல்கள்

அந்த காகத்தின் கூட்டிற்குள்
காரிருள் நேரத்தில்
சத்தமின்றி வந்து முட்டையிட்டுச் சென்றது
இசைக்குயில் ஒன்று.

முளைதெரியும் வரை
பூமிக்குள் விதைகளில் வித்தியாசமில்லையே,
காகத்தின் கதகதப்பில்
குயில் குஞ்சு
முட்டைக்குள் முளைக்கத் துவங்கியது.

மழையில்
ஈரமாகிப்போன இறகுகளுடனும்
வெயிலில்
கருகிப்போன அலகுடனும்
கருமைக் காகம்
குஞ்சுகளுக்கான காத்திருப்பில்
கரைந்து கொண்டிருந்தது.

நாட்கள் உடைந்து போன
ஒரு பொழுதில்
முட்டையோட்டுக்கிடையே
சின்னப்பறவைகள் சிறகுலர்த்தத் துவங்கின.
தாய்ப்பாசத்தின் தழுவல்களில்
மெல்ல மெல்ல
இமைதிறக்கத் துவங்கின.

ஒட்டுமொத்த கருப்புக் குடும்பமும்
இறகுகளால் சண்டையிட்டு
அலகுகளால் அன்பு பகிர்ந்து
மெல்ல மெல்ல வளரத்துவங்கின.

பொழுதுகளைப் பிளந்த ஓர் பொழுதில்
சுய முகம் தெளிந்த
அந்த சின்னக்குயில் மெல்ல மெல்ல
சாதகம் செய்யத் துவங்கியது.

சிரித்துக் கொண்டிருந்த
தாய்க் காகத்தின் கண்களில்
கோபத்தீ.

கூட்டுக்குள் கும்மாளமடித்த
கருப்புச் சகோதரர்கள் கையில்
கருப்புக்கொடி.

சுற்றி வளைத்த காகங்கள்
மெல்ல
அலகுகளில் கொலைவெறி தேய்த்து
கொத்தத் துவங்கின
அந்த மெல்லிசைக் குயிலை.

பறப்பதற்குப் பக்குவப்படாத அந்த
பச்சிளங் குயில்,
அங்கங்கள் முழுதும் இரத்தப் பொட்டுக்கள் வாங்கி
மெல்ல மெல்ல சாகத் துவங்கியது.

ஊமையாய் பிறக்காததற்காய்
கடைசியாய் ஒருமுறை கவலைப்பட்டது

Follow

Get every new post delivered to your Inbox.

Join 73 other followers