உடலைப் பேண பத்து கட்டளைகள்

 

ss 

 

உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.

  

  1. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப்பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.
  2.  

     

  3. தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் ஒருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.  
  4.  

  5. சோர்வாய் இருக்கிறது ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள். 
  6.  

  7. நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைத்தலை முழுமையாய் விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.
  8.  

  9. மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்புப் பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.
  10.  

  11. உணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 
  12.  

  13. உண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள். 
  14.  

  15. இனிப்புப் பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே !
  16.  

     

  17. எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.
  18.  

  19. தேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம். வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் உத்தரவாதம் !
  20.  

  நன்றி : தமிழ் ஓசை – களஞ்சியம்

வாங்க சிரிக்கலாம்…

smile
உற்சாகமாக பட்டாம்பூச்சியைப் போல ஓடித் திரியும் பலருக்கு உடலும் மனமும் இளமையாக இருப்பதை நாம் கவனித்திருக்கக் கூடும். கவலைகளற்ற, அல்லது தேவையற்ற கவலைகளை மூட்டைகளைப் போல முதுகில் தூக்கிச் சுமக்காத மனிதர்களுக்கு வாழ்க்கை என்பது உற்சாகப் பயணமே.

வயிறு குலுங்கச் சிரிப்பது இதய நோயையே கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லும் என்கிறது அமெரிக்காவிலுள்ள பால்டிமோர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.  மன அழுத்தம் மாரடைப்பின் முதல் காரணி. மன அழுத்தமானது நமது இரத்தக் குழாய்களிலுள்ள எண்டோதெலியத்தை வலுவிழக்கச் செய்து இரத்தக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை வரவழைத்து விடுகிறது.

மனம் திறந்த சிரிப்பு மன அழுத்தத்தைக் குறைப்பதால் இரத்தக் குழாய்கள் சீராக இயங்க உதவுகின்றன, இதன் மூலம் மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது என இதற்கு மருத்துவ விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் மைக்கேல் மில்லர். ஆய்வில் ஈடுபடுத்தப் பட்ட இதய நோயாளிகள் அனைவருமே தினசரி வாழ்க்கையை இலகுவாய் ஆனந்தமாய், சிரிப்புடன் கொண்டாடாதவர்களே. !

மனதை மட்டுமற்றி உடலையும் வலுவாக்குகிறது சிரிப்பு. சிரிக்கும் போது உடலிலுள்ள அனைத்து பாகங்களும் இயங்குகின்றன, இரத்த ஓட்டம் அதிகமாகிறது, மூளைக்கு உயிர்வளி அதிகம் செலுத்தப்பட்டு மூளை சுறுசுறுப்படைகிறது, உடல் தசைகள், முக தசைகள் எல்லாம் அதிக இயக்கமடைந்து உற்சாகம் பெறுகின்றன. எல்லாவற்றையும் விட, உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது சிரிப்பு என்பது சிறப்புச் செய்தி !

சிரிக்கும் போது உடலில் லிம்ப் திரவம் வேகமாகப் பரவுகிறது. நமது உள் உடல் உறுப்புகளில் தேங்கிக் கிடக்கும் அசுத்த திரவங்களை இது வெளியேற்றி சுத்தமாக்கி விடுகிறது. கூடவே நமது செரிமானக் கோளாறுகளையும் சரி செய்து விடுகின்றன.

சிரிக்கும் போது நமது உடலில் ஏராளம் உயிர்வழியும் பரவுகின்றது. இந்த உயிர் வழி உடலை புத்துணர்ச்சியாக்குகிறது. உடலுக்குள் உயிர் வழி நிரம்பி வழியும்போது பல பாக்டீரியாக்கள், மற்றும் உயிரைக் கொல்லும் புற்று நோய் கிருமிகளெல்லாம் வெளிYயேறத் துவங்குகின்றன. நுரையீரல் தனக்குள் தேங்கிக் கிடக்கும் கரியமில வாயுவை முழுமையாய் வெளியேற்றி உயிர்வழியைக் கொண்டு நிரப்புகிறது. யோகாசனத்தில் பயிற்றுவிக்கப்படும் மூச்சுப் பயிற்சியைப் போல சிரிப்பும் உடலுக்குள் பிராணவாயுவை நிரப்பி உடலை வலுவாக்குகிறது.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் மக்கள் உயிர்வழி நிலையங்களுக்குச் சென்று சுத்தமான உயிர்வழியை டாலர்கள் செலுத்தி சுவாசிக்கின்றனர். அந்த உயிர்வழி நிலையங்கள் தரும் பலனை மனம் விட்ட சிரிப்பு தரும் என்பதை அறியும்போது சிரிக்கத் தோன்றுகிறதல்லவா ?
சரி வெறுமனே உடலுக்கு உற்சாகம் தருவது தான் சிரிப்பா என நினைக்கிறீர்களா ? விஷயமே இனிமேல் தான் இருக்கிறது. சிரிக்கும் போது நமது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களின் பயன்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த பயோகெமிக்கல்ஸ் செரிமானச் சிக்கல்களை சரிசெய்து, மன அழுத்தத்தை துடைத்தெறிந்து, மூளையை உற்சாகப்படுத்தி, மனதை இலகுவாக்குகிறது. ஒரு முறை மனம் விட்டுச் சிரிக்கும் போது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களை கடையில் பணம் கொடுத்து வாங்க வேண்டுமானால் எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா ? சுமார் 5 இலட்சம் ரூபாய்கள் ! இன்னுமா சிரிக்கத் தோன்றவில்லை.

சிலர் வாழ்க்கையில் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மனம் விட்டுச் சிரிப்பார்கள். சிலருக்கு சிரிப்பு சுட்டுப் போட்டாலும் வராது. இப்படி சிரிப்பே வராதவர்கள் இப்போதெல்லாம் சிரிப்பு நிலையங்களுக்குச் சென்று செயற்கையாய் சிரித்து வைக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட செயற்கைச் சிரிப்பினால் அதிக பயன் இல்லை என்பது ஒரு தரப்பினரின் வாதம். ஆனந்தமான சூழல், இலகுவான மனநிலை, இயல்பான பீறிட்டுக் கிளம்பும் சிரிப்பு, வாழ்க்கையை நேர்மனதுடன் அணுகும் நிலை இவையெல்லாம் கலந்த சிரிப்பே முழுமையானது என்பது அவர்களுடைய விளக்கம்

பத்து நிமிட நேரங்கள் உடற்பயிற்சி கூடத்தில் வியர்க்க விறுவிறுக்க ஓடுவதும், ஒரு நிமிடம் ஆனந்தமாய் சிரிப்பதும் ஒரே பயன் தரக் கூடியது என கூறி வியக்க வைக்கிறார் சிரிப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வில்லியம் பிரை என்பவர்.

மேலை நாடுகளில் பிரபலமாய் இருக்கும் “கிச்சு கிச்சு மூட்டும்” நிகழ்ச்சிகள் தற்போது இந்தியாவிலும் மென்பொருள் துறை உட்பட பல்வேறு துறைகளில் மிகப் பிரபலம். இதற்கென்றே சிறப்புக் குழுக்கள் இயங்குகின்றன. இவர்களுடைய ஒரே வேலை நகைச்சுவைகளை அடுக்கடுக்காய் சொல்லி பார்வையாளர்களைச் வாய்விட்டுச் சிரிக்க வைப்பது தான்.
இதற்கான கட்டணம் பல ஆயிரம் ரூபாய்கள் !

நமக்கு வரக் கூடிய நோய்களில் 85 விழுக்காடு நோய்களை நமது உடலிலுள்ள சக்தியைத் தூண்டுவதன் மூலமாக குணப்படுத்த முடியும் என அடித்துச் சொல்கிறார் இங்கிலாந்தின் மருத்துவர் பிரான்ஸ் இன்கெல்பிங்கர். அதற்குத் தேவையானதெல்லாம் மருந்துகளோ, ஊசிகளோ அல்ல, மாறாக உற்சாகமான சிந்தனைகள், இலகுவான மனம், அன்பு செலுத்தும் குணம், நம்பிக்கை, நகைச்சுவை, சிரிப்பு, ஆனந்தம் இவையே !

சிரிப்புக்கு வலிகளைக் குறைக்கும் வலிமையும் இருக்கிறது என்கிறார் நார்மன் கசின் என்பவர். இவர் நிரந்தர முதுகெலும்பு வலியினால் பாதிக்கப்பட்டவர். பத்து நிமிடம் வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு நகைச்சுவைப் படத்தைப் பார்த்தால் என்னால் இரண்டு மணி நேரம் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்கிறார் அவர். அதன் பின் சிரிப்பு வலியைக் குறைக்கும் என பல்வேறு மருத்துவ அறிக்கைகள், ஆய்வுகள் வெளியாகிவிட்டன. ஜேம்ஸ் வால்சன் எனும் அமெரிக்க மருத்துவர் தனது நூலான “ சிரிப்பும் உடல்நலமும்” எனும் நூலில் சிரிப்புக்கு இருக்கும் வலி நீக்கும் குணத்தைப் பற்றி விவரித்திருக்கிறார். 

வலியைக் குறைக்கும் எண்டோர்பின்கள் உடலில் சுரக்க சிரிப்பு உதவும் எனும் நம்பிக்கை சிலருக்கு, இல்லையில்லை சிரிக்கும் போது உடலில் இறுக்கம் குறைவதே வலி குறைய காரணம் என்னும் நம்பிக்கை வேறு சிலருக்கு. எப்படியோ சிரித்தால் வலி குறையும் என்பது மட்டும் பொதுவாகவே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தெரிந்த நண்பர்களில் எப்போதும் உற்சாகமும், சிரிப்புமாய் இருக்கும் நண்பர்கள் நிச்சயம் ஓரிருவராவது இருப்பார்கள். அவர்களுக்கு கடைசியாய் எப்போது ஜலதோஷம் வந்தது என நினைத்துப் பாருங்கள் வியப்படைவீர்கள் என்கின்றனர் மருத்துவர்கள். காரணம் சிரிப்பும், களிப்புமாய் இருக்கும் உற்சாகவாதிகளை இந்த ஜலதோஷம் அடிக்கடி தொந்தரவு செய்வதில்லையாம் !

இன்னொரு வியப்பூட்டும் ஆராய்ச்சியும் சிரிப்பைக் குறித்து வெளியாகியிருக்கிறது. அதாவது பாலூட்டும் தாய்மார்கள் உற்சாகமாய் சிரித்துக் கொண்டிருக்கும் மனநிலையில் இருந்தால் அவர்களுடைய குழந்தை நோய்நொடியின்றி ஆரோக்கியமாய் இருக்குமாம். அதிலும் குறிப்பாக தாய்மை நிலையிலிருக்கும்போதே உற்சாகமாய் சிரித்துக் கொண்டிருந்தால் மழலைக்கு இன்னும் அதிக பலனாம். காரணம் உற்சாகமாய் சிரித்து வாழும் தாய்மார்களிளுக்கு பாலில் இம்யூனோகுளோபுலின் எ அதிகமாய் இருப்பது தான் என மருத்துவம் குறித்து வைத்திருக்கிறது.

இன்னோர் மருத்துவ அறிக்கை உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸைக் கூட சிரிப்பு துரத்தும் எனக் கூறி அசர வைக்கிறது. அதாவது எயிட்ஸ் கிருமிகளுடன் போராடும் டி- அணுக்களை சிரிப்பு வலிமைப் படுத்துகிறதாம் !
மகிழ்ச்சியும், சிரிப்பும் குறித்த விழிப்புணர்வு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கிமு எழுநூறுகளில் வாழ்ந்த சாலமோன் மன்னன் தனது நீதி மொழிகளில், “மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” என எழுதியிருப்பதை நினைத்தால் ஆச்சரியம் மேலிடுகிறது. கிபி பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஹென்றி டி மோண்டிவிலி, அறுவை சிகிச்சைக் காயத்தை சிரிப்பு விரைவில் குணப்படுத்திவிடும் எனவும், எதிர்மறை உணர்வுகள் காயத்தை அதிகப்படுத்தும் எனவும் கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கது.
 
சிரிப்பு குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், நுரையீரலை வலிமையாக்கும், இதயத்தைப் பாதுகாக்கும், உடலுக்கும் மனதுக்கும் தேவையான பயிற்சியை அளிக்கும், மன அழுத்தத்தைத் துரத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மூளையை வலிமையாக்கும் என மருத்துவ உலகம் சிரிப்பின் பயன்களைப் பட்டியலிடும்போது விழிகள் விரிய, உதடுகள் மலர வியக்க வேண்டியிருக்கிறது.
 
ஆனால், இன்றைய அழுத்தமான வாழ்க்கை முறை அடுத்த வீட்டு நபரின் பெயரைக் கூட அறிந்து கொள்ளாத மனிதர்களைத் தான் வீதிகள் தோறும் உருவாக்கியிருக்கிறது. அலுவலகங்கள் தங்கள் கண்ணாடி அறைகளை கணினியை விரல்களால் விசாரிக்கும் மனித ரோபோக்களால் நிரப்பியிருக்கின்றன. மனிதர்கள் சிரிக்க மறந்து விட்டார்களோ என ஐயப்படத் தோன்றுகிறது.

சிரிப்பு வரவில்லையேல் நல்ல நகைச்சுவை நூல்கள் வாசிக்கலாம், திரைப்படங்கள் பார்க்கலாம், நண்பர்களுடன் உரையாடலாம் என்றெல்லாம் யோசனைகள் சொல்கின்றனர் மருத்துவர்கள். அப்படியும் சிரிப்பு வரவில்லையா ? அனைத்தையும் மறந்து ஒரு குழந்தையிடம் உங்களை ஒப்படையுங்கள். குழந்தையின் தேசத்துக்குச் சென்று வாருங்கள். சிரிப்பு உங்களை சிறையெடுக்கும்.

அது ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான், வாழ்க்கையை ஆனந்தத்துடன் அணுகுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், சரியானதை உண்ணுங்கள் கூடவே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வஞ்சகம் பாராமல் வாய்விட்டுச் சிரியுங்கள்.

பெண்ணே நீ – இதழில் வெளியான கட்டுரை.

“பெண்ணே நீ” கட்டுரை : மருத்துவத் துறையை உலுக்கும் போலிகளின் படையெடுப்பு

“காய்ச்சலா இருக்கு கூடவே தொண்டை வலியும் இருமலும் இருக்கு ஏதாச்சும் மருந்து கொடுங்க” என மருந்து கடைகளில் மக்கள் கேட்பதை பல முறை கேட்டிருக்கிறோம். இப்படிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் மருந்துகளில் எத்தனை மருந்துகள் உண்மையானவை ? எத்தனை மருந்துகள் போலியானவை ? எனும் கேள்வியை எப்போதாவது நாம் எழுப்பியதுண்டா ?

மேலை நாடுகளிலெல்லாம் மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லையெனில் மருந்துக் கடைகளில் மருந்துகளைத் தரமாட்டார்கள். ஆனால் நமது நாட்டில் அப்படியில்லை எந்த நோயாய் இருந்தாலும் மருந்தகங்களில் இருப்பவர்களே மருத்துவர்களாகி ஏதேனும் நான்கைந்து பெயர் தெரியாத மாத்திரைகளைத் தந்து விடுகின்றனர். இவை உண்மையிலேயே பயனுள்ளவை தானா ? உடலுக்கு நலமளிப்பவை தானா ?

இது குறித்து உலக நலவாழ்வு நிறுவனம் சொல்லும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதாவது உலக அளவில் புழக்கத்தில் உள்ள மருந்துகளில் சுமார் பதினைந்து முதல் இருபது விழுக்காடு மருந்துகள் போலியானவையே என அது அறிக்கை வெளியிட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சுமார் ஒரு விழுக்காடு மட்டுமே போலி மருந்துகள் கலந்துள்ளன. ஆனால் வளரும் நாடுகளிலோ சுமார் இருபத்தைந்து முதல் முப்பது விழுக்காடு என இந்த புள்ளி விவரங்கள் மூர்ச்சையடைய வைக்கின்றன.

வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே போலி மருந்துகளும், தரமற்ற தயாரிப்புகளும் அதிகமாய் தயாராவதாக உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கிறது. அதன் கூற்றை நிரூபிக்க புள்ளி விவரக் கணக்குகளையும் சமர்ப்பிக்கின்றது.

உலக அளவில் பின் தங்கிய நாடுகளில் தயாராகும் மருந்துகளில் 25 விழுக்காடு மருந்துகள் போலியானவையாம்.

நைஜீரியாவிலும், பாகிஸ்தானிலும் தயாராகும் மருந்துகளில் நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு மருந்துகள் தரமற்ற மாற்று மருந்துகள் எனவும், சீனாவில் சில மருந்துகள் சுமார் 85 விழுக்காடு போலியாய் இருப்பதாகவும், நைஜீரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் சுமார் 37 விழுக்காடு ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் போலியே என்றும், ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் உலவும் மலேரியா தடுப்பு மருந்துகளில் 90 விழுக்காடு போலியே என்றும் இந்த அதிர்ச்சிப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

உலகெங்கும் ஒவ்வோர் வினாடியும் சுமார் 35 இலட்ச ரூபாய்க்கான போலி மருந்துகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் வினாடிக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கான போலி மருந்துகள் விற்பனையாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் போதும் இந்தக் கள்ளச் சந்தையின் பலத்தைக் காட்ட !

இந்தியாவிலும் சுமார் 10 விழுக்காடு மருந்துகள் போலியானவையே என்பதே உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை சொல்லும் செய்தி. ஆனால் உண்மையில் இது இந்த எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாய் இருக்கலாம் என கருதப்படுகிறது.

போலி மருந்துகள் என்பவை உண்மையான மருந்துகளைப் போல தயாராக்கப்பட்டு, தரம் குறைந்ததாகவோ, தரமற்றதாகவோ, ஊறு விளைவிப்பதாகவோ இருக்கின்றன என்கிறது உலக நலவாழ்வு நிறுவனம்.

போலி மருந்துகளால் என்ன தான் பிரச்சனை ?

முதலாவதாக இந்த போலி மருந்துகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இந்த மருந்துகளால் நோய் குணமாகும் வாய்ப்பு மிகவும் குறைவு

இரண்டாவதாக இந்த போலி மருந்துகளில் மருத்துவ மூலக்கூறுகள் தேவையான அளவில் இல்லாமல் இருப்பதால் குறைவாகவோ, அதிகமாகவோ உட்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இது நோயின் வீரியம் அதிகரிக்கவோ, நோயாளிக்கு வேறு பக்க விளைவுகள் வரவோ வழி வகுக்கிறது.

மூன்றாவதாக இந்த மருந்துகளில் நிறைய விஷத் தன்மையுடைய பொருட்கள் கலந்திருப்பதால் இவை நோயாளியின் உயிருக்கே ஆபத்தாய் முடிகின்றன.

உதாரணமாக ஹெய்தியில் ஒருமுறை இருமல் மருந்து எண்பத்தொன்பது பேரைப் பலிவாங்கியது, சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தில் இருந்த டைஎத்தலின் கிளைகோல் எனும் வேதியல் பொருளே இதன் காரணம் என பின்னர் கண்டறியப்பட்டது.
நைஜீரியாவில் ஒருமுறை 2500 பேர் மரணம், வங்கதேசத்தில் 109 பேர் மரணம், சமீபத்தில் இந்தியாவில் பல குழந்தைகள் மரணம் என இந்த துயரக் கணக்கு உலகெங்கும் விரிவடைகிறது.

சீனாவில் ஆண்டுதோறும் சுமார் மூன்று இலட்சம் பேர் தரம் குறைந்த போலி மாற்று மருந்துகளினால் உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் இந்த போலி மருந்துகளால் சமூகத்திற்கு நேரக்கூடிய மிகப்பெரிய ஆபத்தின் சிறு சிறு துணிக்கைகள் எனக் கொள்ளலாம்.

பாலியல் சார்ந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் புழக்கத்தில் உள்ளவற்றில் பெரும்பாலானவை போலி மருந்துகளே. ரகசியமாய் மருத்துவம் பார்க்க வேண்டும் எனும் மக்களின் எண்ணமும், பாலியல் கல்வி இல்லாத சூழலும், பாலியல் நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இத்தகைய தரமற்ற பாலியல் சார்ந்த மருந்துகளின் அசுர வளர்ச்சிக்கு வழிகோல்கின்றன. இத்தகைய மருந்துகளுக்கான விளம்பரங்களையும், உரையாடல்களையும் ஊடகங்கள் மிகைப்படுத்தி மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையும் இந்த நேரத்தில் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

இன்னொன்று எயிட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள். அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் இல்லாத இத்தகைய பெரிய நோய்கள் போலி மருந்து தயாரிப்போருக்கு ஒரு வரமாய் மாறியிருக்கிறது. உலகமே மூளையைக் கசக்கும் எயிட்ஸ் நோய்க்கான மருந்தை நமது தெருக்கள் கூவிக் கூவி விற்கின்றன !

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா என எல்லா கண்டங்களிலும் போலிகள் புகுந்திருந்தாலும், ஆசியக் கண்டம் தான் இந்த போலி மருந்துகளின் ஊற்றாய் இருக்கிறது என மேலை நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. சீனாவில் மட்டும் சுமார் 500 அனுமதியற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியிருந்தது.

தென்மேற்கு ஆசியாவிலுள்ள கம்போடியாவில் சுமார் 2800 போலி மருந்து விற்பனை நிலையங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கீகாரமற்ற மருந்துகளும் உலவுகின்றனவாம். தாய்லாந்தில் விற்கப்படும் மருந்துகளில் சுமார் 8.5 விழுக்காடு போலி தானாம்.

ஈராக்கின் மீது அமெரிக்கா போர்தொடுக்க ஆரம்பித்த பின் அங்கே சுமார் 70 விழுக்காடு மருந்துகள் காலாவதியானதாகவோ, தரமற்ற தயாரிப்பாகவோ, போலியானதாகவோ தான் கிடைப்பதாக ஈராக்கின் அமைச்சர் அதில் முஸின் தெரிவிக்கிறார்.

போலி மருந்துகள் இப்படி உலக நாடுகளையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கையில் இன்னொரு அச்சுறுத்தலாய் உலவுகின்றன தடை செய்யப்பட்ட மருந்துகள்.

இதிலுள்ள துயரம் என்னவென்றால் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் ஏராளமாய், வெகு சகஜமாய் இந்தியாவில் கிடைக்கின்றன என்பது தான். இந்தியா தான் போலிகளின் புகலிடமாயிற்றே எங்கும் போலி எதிலும் போலி என்பது மருத்துவத்திலும் இரண்டறக் கலந்து விட்டது.

ஆடைகளிலோ அல்லது பிற பொருட்களிலோ போலிகள் இருந்தால் பண விரயம் எனுமளவில் அது நின்று விடுகிறது. ஆனால் மருந்துப் பொருட்களில் போலித்தனம் நுழையும்போதோ அது உயிரையே அழித்து விடுகிறது. எனவே தான் பிற போலித்தனங்களைப் போல இலகுவாக மருத்துகளிலுள்ள போலித்தனங்களை எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

இந்தியாவில் சுமார் 515 மருந்துகள் 3000 வேறு வேறு பெயர்களில் உலவுவதாகவும் இவை உலக நாடுகள் பலவற்றிலும் தடைசெய்யப்பட்ட போதிலும் இந்திய மருந்து கடைகளில் எந்த விதமான தடையுமின்றி கிடைப்பதாகவும் மருத்துவம் சார்ந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மருந்துகள் புற்று நோய், பக்கவாதம், பார்வையிழப்பு போன்ற பல்வேறு கொடிய நோய்களை வரவழைக்கும் வலிமை கொண்டவையாம்.

பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜோர்டன், மலேஷியா, நார்வே, ஸ்பெயின், டென்மார்க், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட இத்தகைய மருந்துகளைக் குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் இன்றி இந்திய மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும், இதன் மூலம் பல இலட்சக் கணக்கான மக்கள் பாதிப்பு அடைகின்றனர் என்பதும் அதிர்ச்சியூட்டும் செய்திகளாகும்.

உதாரணமாக ஜப்பானில் சுமார் பத்தாயிரம் பேரை பார்வையிழக்கவும், உடலுறுப்புகள் செயலிழக்கவும் வைத்த மருந்துகளும், உலக அளவில் சுமார் 15 ஆயிரம் பேரை உயிரிழக்கவும் வைத்த மருந்துகளும் இன்றும் இந்தியச் சந்தையில் அச்சமின்றி உலவுகின்றன. இவை சர்வதேச அரங்கில் நிராகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது.

நவால்ஜின், டி கோல்ட், விக்ஸ் ஆக்சன் 500, நிம்சுலைட், அனால்ஜின் போன்ற சர்வ சாதாரணமாய் எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கும் மருந்துகள் எல்லாம் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனால் தடை செய்யப்பட்ட மருந்துகளே என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ? இதில் இன்னொரு வருத்தத்துக்குரிய விஷயம் என்னவெனில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள் பல இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை என்பதே !

ஒரு மருந்தைத் தடை செய்யும் அதிகாரம் மருத்துவத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு வுக்கு உண்டு. ஒரு மருந்தை தடை செய்யும் முன் ஒரு மருத்துவக் குழு அந்த மருந்தை முழுமையாக ஆராய்கிறது. அந்த மருந்தில் உள்ள வேதியல் பொருட்கள், அவை உடலுக்கு ஏற்படுத்தக் கூடிய பக்க விளைவுகள் போன்றவற்றை முழுமையாக ஆராய்ந்தபின் அந்த மருந்தைத் தடை செய்வதா, வேண்டாமா எனும் அறிக்கையை ஆலோசனைக் குழுவுக்கு அளிக்கிறது. ஆலோசனைக் குழு அந்த அறிக்கையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது.

அப்படித் தடை செய்தாலும் அவை விற்பனைக் கூடங்களுக்கு திருட்டுத் தனமாக வந்து சேர்ந்து விடுகின்றன. கடந்த மாதம் பஞ்சாபில் ஒரு மருந்து கடையிலிருந்து மட்டும் சுமார் ஒரு இலட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மருந்துகள் கைப்பற்றப்பட்டன. ஒரு கடையில் நிலமையே இப்படியெனில் இந்தியா முழுவதுமுள்ள கோடிக்கணக்கான மருந்து கடைகளில் எத்தனை கோடி ரூபாய்களுக்கான தடை செய்யப்பட்ட மருந்துகள் இருக்கின்றனவோ எனும் பதட்டம் இயல்பாகவே எழுகிறது.

மருந்தை வாங்க வரும் நோயாளிகள் எந்தெந்த மருந்துகள் தடை செய்யப்பட்டவை, எவை அங்கீகரிக்கப்பட்டவை என்பதை அறிந்திருக்க முடியாது. அந்தத் தார்மீகக் கடமை மருந்தைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கும், மருந்தை வினியோகிக்கும் மருந்து கடைகளுக்கும் உண்டு. தடை செய்யப்பட்ட மருந்துகளை பரிந்துரை செய்யாமலும், அவற்றை விற்பனை செய்யாமலும் இருக்க வேண்டியது அவர்களுடைய கடமை.
பரிந்துரைக்கப்படும் மருந்துகள் உலக நலவாழ்வு நிறுவனத்தின் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் இருக்கிறதா எப்பதைக் கவனித்தால் ஆபத்திலிருந்து தப்பலாம். தனிநபர்களைப் பொறுத்தவரையில் இது சாத்தியமான வழிமுறை அல்ல. ஆனால் இந்த சோதனையை மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் எளிதில் செய்ய முடியும்.

தடை செய்யப்பட்டவை எவை என்பன போன்ற தகவல்களை பெரிய மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவர்கள் பெரும்பாலும் எளிதில் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவின் பல எல்லைகளிலும் இருக்கும் சிறு சிறு மருத்துவமனை மருத்துவர்களை இந்தத் தகவல் சென்றடைவதில்லை. எனவே அவர்களுக்கு எந்த மருந்துகள் தடை செய்யப்பட்டவை என்பதில் தெளிவில்லை. பெரும்பாலும் இவையெல்லாம் மருத்துவ இதழ்கள், அறிக்கைகள் மூலம் மட்டுமே மருத்துவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அவை எல்லோரையும் சென்றடையாமல் இருப்பதில் வியப்பில்லை.

நேரடியாக வாங்கும் கடைகளிலேயே இத்தகைய போலிகளின் புழக்கம் இருக்கும் போது இணையம் மூலமாக வாங்கும் மருந்துகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இணையத்தில் மருந்துகள் வாங்கும்போது தரமற்ற மருந்துகளே ஐம்பது விழுக்காடு நேரங்களில் வழங்கப்படுகின்றனவாம். முடிந்தவரை இணையம் மூலம் மருந்துகள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இணையம் மூலமாக வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கூட விலையைப் பார்க்காமல் அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே வாங்க வேண்டும்.

இந்த போலி மருந்துகள், தடை செய்யப்பட்ட மருந்துகள், அங்கீகாரமற்ற மருந்துகள் போன்றவை சமூகத்தில் நிகழ்த்தும் பாதிப்பு மிகப்பெரிய தீவிர வாதத் தாக்குதல் போன்றது என்பதை உணர்தல் அவசியம். இதைத் தடுக்க அரசு ரீதியான திட்டமிட்ட செயல்பாடு மிக அவசியம்.

அனைத்து மருத்துவ மனைகளும் தரக்கட்டுப்பாடுக்குள் வரவேண்டும். டிரேட்மார்க் இல்லாத மருத்துவமனைகள் இயங்க அரசு அனுமதி மறுக்க வேண்டும். இந்த மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை தரமான நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பெறவேண்டும். அந்த நிறுவனங்களின் தயாரிப்புத் தரத்தையும் அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும்.

போலி மருந்துகள், அனுமதியற்ற மருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும். ஒரு பயங்கரவாத, கொலைக் குற்றத்துக்குரிய அல்லது அதற்கும் மேற்பட்ட வீரியத்துடன் இந்த குற்றங்கள் அணுகப்பட வேண்டும். போலி மருந்துகளுக்கு எதிரான விசாரணைகள் சமூகத்தின் ஒட்டுமொத்த நலன் சார்ந்தது என்பதால் விரைந்து முடிக்கப்படவும் வேண்டும்.

போலி மருந்துகள், தரமற்ற தயாரிப்புகள் இவற்றுக்கான அனுமதிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், சுயநல நோக்கங்களுடன் அனுமதி வழங்கியவர்கள் இவர்களுக்கு எதிராய் சட்டம் கடுமையாய் பாய வேண்டும்.

கடுமையான தரக்கட்டுப்பாடு அமைப்பும், அதில் தனிநபர் நலம் கலக்காத அணுகு முறையும் வேண்டும்.

போலி மருந்து குறித்த புகார்கள் எளிமையாக்கப்படவேண்டும். போலியா ? அப்படின்னா என்ன ? எனக் கேட்கும் பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவையெல்லாம் இருந்தால் சந்தையிலும், தயாரிப்பு நிலையங்களிலும், இறக்குமதிகளிலும் இந்த போலி மருந்துகளை ஒழித்தல் சாத்தியமே.
நைஜீரியா இத்தகைய போலி மருந்துகளால் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஒரு நாடு. 2001 ல் சுமார் 41 விழுக்காடு மருந்துகள் அங்கே போலியாகவே உலவி வந்தன. நைஜீரிய அரசு எடுத்த தீவிர முயற்சிகளின் பயனாக தற்போது அந்த விகிதம் கணிசமாய் குறைந்து 15 விழுக்காடு எனுமளவுக்குக் குறைந்திருக்கிறது. பதிவு செய்யப்படாத மருந்துகள் 68 விழுக்காடிலிருந்து 19 விழுக்காடாக வீழ்ந்திருக்கிறது. இவையெல்லாம் மற்ற வளரும் நாடுகளுக்கான ஒரு முன்னுதாரணம் எனலாம்.

சரி இந்த போலி மருந்து விஷயத்தில் நமது பங்கு என்ன ?

முதலில் விளம்பரங்களின் வசீகரத்தைக் கொண்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் மருந்து என்றால் கண்டிப்பாக உயர் தரம் என முடிவு கட்டாமல் இருப்பது. இரவு நேரங்களில் தொலைக்காட்சியில் பேசும் “வாலிப வயோதிக அன்பர்களே” அழைப்புகள் உண்மை என நம்பி ஏமாறாமல் இருப்பது. போலிகளை எந்த விதத்திலும் ஊக்குவிக்காமல் இருப்பது என பல வழிகளில் நமது பங்காற்றல் இருக்க முடியும்.

போலி மருந்துகளை தெரிந்தே வாங்கும் போது நாம் அந்த குற்றத்தின் பங்கு தாரர்கள் ஆகின்றோம் என்பதையும், நாமும் பணத்தைக் கொடுத்து அந்த குற்றத்தையும் அது தொடர்பாய் எழக்கூடிய தொடர் குற்றங்களையும் ஊக்குவிக்கிறோம் என்பதையும் உணரவேண்டும்.

போலி மருந்துகளை விற்கும் மருந்தகங்கள், தங்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும் என்பதால் இந்த பிழையைச் செய்கின்றனர். இத்தகையோர் சமூகத்தைச் சிதைக்கும் கொடும் செயலைச் செய்கின்றோம் என்பதை உணர வேண்டும்.

வளரும் நாடுகளிலுள்ள மக்கள் சுகாதார வசதிகள் இல்லாமல் தொடர் நோய்களுக்கு இலக்கானவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். தினசரி வாழ்க்கையை இழுக்கவே திராணியற்ற மக்கள் லாபமானதை வாங்கவே விரும்புவர். அவர்களுடைய பொருளாதார இயலாமையை மூலதனமாக்கி ஆபத்தான போலிகளை அவர்கள் தலையில் கட்டாமல், மருந்தகங்கள் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

போலி மருந்துகளைக் கண்டறிவது கடினம். எனிலும் நம்மால் முடிந்த அளவுக்கு போலியில்லாத மருந்து தானா என்பதை ஊர்ஜிதப்படுத்திய பின்பே வாங்க வேண்டும்.

மருந்துகள் வாங்கும்போது அளவிலோ, வடிவத்திலோ, நிறத்திலோ, எழுத்துகளிலோ ஏதேனும் வித்தியாசம் தென்பட்டால் வாங்காதீர்கள். வேறொரு மருந்து கடையை நாடுங்கள். வாங்கிவிட்டால் மருத்துவரை அணுகி உங்கள் சந்தேகத்தைத் தெரிவிக்கலாம்.

பெரும்பாலும் போலிகள் மாத்திரைகளில் தான் காணப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. எனவே மாத்திரைகள் வாங்கும் போது அதிக கவனம் செலுத்துங்கள்.

மருந்துகளின் ஆயுளைக் கண்டிப்பாகப் பாருங்கள். அதன் கடைசி நாள் தாண்டியிருந்தாலோ, அதன் மீது புதிதாக ஸ்டிக்கர் ஏதேனும் ஒட்டப்பட்டிருந்தாலோ, நாள் திருத்தப்பட்டிருந்தாலோ அதை வாங்காதீர்கள்.
மருந்துகள் “காலாவதி” நாள் இல்லாமல் இருந்தால் அது நிச்சயம் போலி மருந்து என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.
மருந்துகளில் தயாரிப்பு நிறுவனத்தைக் குறித்த விவரம் இல்லாமல் இருந்தாலும் அது போலியே.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்த போலி மருந்துகள் ஆயிரம் சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன. போலி மருந்துகள் பிரச்சினை சமூகத்தைக் கரையானாக அரித்து, சமூகத்தின் நலனையே கெடுக்கும் பிரச்சனையாகும்.

இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து அரசு தீவிர நடவடிக்கைகள் எடுப்பது, ஊடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் தங்கள் தார்மீகக் கடமையை உணர்ந்து செயல்படுவது என கூட்டு முயற்சி கைகூடினால் சுகாதாரமான சமூகம் சாத்தியமாகும் என்பதில் ஐயமில்லை.

ஆரோக்கியமாய் வாழ்வது கடினமல்ல…

ஆரோக்கியமான வாழ்வு கடினமானதா ? எளிதானதா ? கேள்விகள் காலம் காலமாய் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

வாழ்க்கை அவசரங்களின் பைகளில் மனிதர்களைத் திணித்து விட்டது. யாரும் ஆர அமர நான்கு மணி நேரம் தியானம் செய்வதில்லை, நின்று நிதானமாய் பேசுவது இல்லை, குடும்பத்தோடு போதிய அளவு நேரம் செலவிடுவதும் இல்லை. சில நிமிடங்களைச் செலவிடுவதற்குக் கூட யோசிக்க வைக்கிறது வாழ்க்கை.

இத்தகைய சூழலில் வாழ்வின் தேவைக்கான ஓட்டங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுகளில் என்னென்ன செய்தால் ஆரோக்கியமான வாழ்க்கையைக் காத்துக் கொள்ளலாம்.

இதோ, இந்த பத்து செய்திகளையும் மனதில் கொள்ளுங்கள்.
 

1.     தினமும் காலையில் தவறாமல் காலை உணவு உண்ணுங்கள். காலையில் உணவு உண்பது அதிக வைட்டமின்களையும் தேவையான சத்துகளையும் உடல் பெற்றுக் கொள்ள உதவுகிறது. குறைந்த அளவு கொழுப்பே உடலில் சேர்கிறது.

அமெரிக்காவிலுள்ள இதயம் தொடர்பான ஆராய்ச்சி ஒன்று “காலை உணவை உண்ணாதவர்களுடன் ஒப்பிடுகையில், காலை உணவை தவறாமல் உண்பவர்கள் பிற்காலத்தில் நீரிழிவு, அதிக எடை போன்ற சிக்கல்களுக்கு ஆளாகும் வாய்ப்பு குறைவு” என்று முடிவு வெளியிட்டிருந்தது.

நேரமில்லை என்று சாக்குப் போக்கு சொல்பவர்கள் அலுவலகத்திற்கு காலை உணவை கையோடு எடுத்துக் கொண்டு வந்தேனும் உண்பதே நல்லது.

2.     நன்றாகத் தூங்க வேண்டும். இன்றைய அவசர உலகம் பல்வேறு காரணங்களைக் கூறி தூக்கத்தின் நீளத்தைக் குறைக்கிறது.

தேவையான அளவு (ஏழு முதல் எட்டு மணி நேரம் ) தூக்கம் கிடைக்காதவர்களின் உடல், மனம் இரண்டுமே பாதிக்கிறது. அலுவலகப் பணிகளிலும், தனிப்பட்ட பணிகளிலும் கவன சிதைவுக்கு இது காரணமாகி விடுகிறது. பல்வேறு நோய்களுக்கும் இது விண்ணப்பம் விடுகிறது.

3.                  உடற்பயிற்சி செய்யுங்கள். உலகில் முக்கால் வாசி பேர் எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

உடலை நல்ல ஆரோக்கியமாக வைத்திருப்பது மனதை உற்சாகத்துடன் வைத்திருக்கவும், தீய பழக்கங்களிலிருந்து விடுபடவும் உதவும்.

செய்யும் வேலையிலேயே உடற்பயிற்சிக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நடக்க வேண்டும். அலுவலகத்திலும், வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் நடந்து கொண்டே இருப்பது நம்மை அறியாமலேயே நமக்கு உடற்பயிற்சியாய் அமைந்து விடுகிறது.

லிப்ட்டை புறக்கணித்து படிகளில் ஏறி இறங்குவது, கடைகளின் உள்ளே நடந்து திரிவது, பக்கத்து தெருவுக்கு நடந்தே போய் வருவது என சிறு சிறு செயல்கள் மூலமாகவே உடலுக்கு சற்று ஆரோக்கியம் வழங்க முடியும்.

ஆரோக்கியமான உடலே நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கு நாம் அளிக்கும் மிகப்பெரிய பரிசு.

4.                  பற்களைக் கவனியுங்கள். உடலைப் பாதுகாக்க நாம் செலவிடும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பல்லைப் பாதுகாக்க நாம் செலவிடுவதில்லை.

பல் வலி வருவதற்கு முன்பாக பல் மருத்துவரிடம் செல்லும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உண்மையைச் சொல்வதெனில் பற்களை ஆரோக்கியமாகக் காத்துக் கொள்வதன் மூலம் ஆயுளில் 6.4 ஆண்டுகளைக் கூட்ட முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
5.       உணவில் மீன் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் சிறந்தது. மீனிலுள்ள ஒமேகா – 3 எனும் அமிலம் அலர்ஜி, ஆஸ்த்மா, தலைவலி, இதயம் தொடர்பான நோய்கள் போன்றவற்றைத் தடை செய்வதில் உதவுகின்றன.
6.         கொறித்தலை வகைப்படுத்துங்கள். தேனீர் இடைவேளைகள் போன்ற நேரங்களில் வறுத்த, பொரித்த வகையறாக்களை கட்டுவதை விட்டு விடுங்கள். அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறி சாலட்களை உண்ணுங்கள்.

தேனீருக்கு டீ குடியுங்கள். பால் இல்லாமல் டீ குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் மிகவும் நல்லது.

7.     நிறைய தண்ணீர் குடியுங்கள். மிகவும் எளிதான ஆனால் பலரும் செய்யாத செயல் இது தான். தண்ணீர் குடிக்க மறந்து விடுதல் பல நோய்களை இழுத்து வரும்.

உடலின் உறுப்புக்களை ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கும் ஒரு எளிய வழி நிறைய சுத்தமான தண்ணீர் குடிப்பதே என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

இது இதய நோய், சிறுநீரகக் கற்கள், உயர் குருதி அழுத்தம் உட்பட பல நோய்களை தடுக்கிறது. உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் உதவுகிறது.

8.         சமூகத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு குழுவில் இணைந்தோ, அல்லது சமூக நலப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டோ சமூக நிகழ்வுகளில் பங்கு பெறுங்கள்.

மனிதன் குழுவாக வாழ படைக்கப்பட்டவன், தனிமைத் தீவுகளுக்குள் அடைபடுவதை விட சமூக வனத்துக்குள் சுற்றி வருவது மனம், உடல் என இரண்டையுமே சுறுசுறுப்பாக்கும். பாதுகாப்பு உணர்வும் அதிகரிக்கும்.

9.      தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிருங்கள். வாழ்வில் எட்ட முடியாத இலட்சியங்களையும், தேவையற்ற எதிர் மறை சிந்தனைகளளயும் ஒதுக்கி விடுங்கள்.

குடும்ப உறவுகளை பலப்படுத்தி வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆரோக்கியமான கோடு கிழியுங்கள்.

திட்டமிடுங்கள். உணவு, வேலை, குடும்பம் என அனைத்து செயல்களையும் சரியான முறையில் திட்டமிடுங்கள்.
10.        ஒரு நல்ல பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள். உங்களை மிகவும் ஆனந்தமடையச் செய்வதாகவும், மனதை இலகுவாக்குவதாகவும் இருக்கவேண்டும் அது.

எழுதுவது, வாசிப்பது, இசை கேட்பது, தோட்டம் வைப்பது, செல்லப் பிராணிகள் வளர்ப்பது என எதுவானாலும் உங்களை மிகவும் வசீகரிக்கும் ஒன்றை பற்றிக் கொள்ளுங்கள். வாழ்க்கைக்கு மிகப்பெரிய உந்துதலை அவை தரும்.

இந்த எளிய வழிகளைக் கடைபிடிப்பது தேவையற்ற நோய்களை நம் வாசலோடு அனுப்பி விடவும், உடல் நலத்தை வீட்டுக்குள் வரவேற்கவும் துணை செய்யும் என்பதில் ஐயமில்லை

 

Follow

Get every new post delivered to your Inbox.

Join 73 other followers