எல்லா பயணங்களும்
ஒரு
முதல் புள்ளியின் நீளல்களே.
பிறந்தபின் சிறந்தவராவர்
மனிதர்.
பிறப்பே சிறப்பானது
இறைமகன் பிறப்பில் தான்.
கலிலேயாவின் நாசரேத்தில்
கன்னியாயிருந்த மரியாளுக்கு
கபிரியேல் தூதர்
வான் வாழ்த்தொன்றை வழங்கினார்.
கன்னியான உமக்குள்
கடவுள் அவதரிப்பார்.
மரியாளின் மனதுக்குள்
அணையாது எரிந்தது
அந்த
சம்மனசு சொன்ன சங்கதி.
மரியாள் இன்னும்
தாயாராக
தயாராகவில்லை.
ஆண் வாசனை அறியாத
என் வாசலுக்குள்
ஓர்
ஆன்மீகக் குழந்தை அவதரிக்குமா ?
இதெப்படிச் சாத்தியம்
இல்லாமையிலிருந்து
ஓர்
இறைமகனின் அவதாரம் ?
ஏளனப் பார்வைகள் என்
கற்புக் கதவை
சந்தேகப் படாதா ?
ஆயிரம் கேள்விகளை
வினாடிக்குள் இழுத்து,
அத்தனை கேள்விகளையும்
அந்த
வினாடியின் முடிவில்
ஒடித்துப் போட்டது மரியின் உறுதி.
கோடி மக்களுக்குக்
கிடைக்காத பாக்கியம்
தேடி வந்திருக்கிறதே
என பிரமிப்புப் பூக்களை
விழிகளில் பயிரிட்டாள்.
சஞ்சலத்தின் வேர்களை
வெட்டிவிட
சம்மதம் செய்தாள்.
மண ஒப்பந்தமாகியிருந்த
மரியாள்,
மன ஒப்பந்தமும் கொண்டாள்.
புதியவனை உள்ளுக்குள்
பதியம் கொண்டு,
பூமிக்கு புதிய ஓர் தாயானாள்.
கணவனாகக் காத்திருந்த
யோசேப்பு அதிர்ந்தார்.
கவலை நெற்றியை தேய்த்தார்.
சந்தேகத்தின்
செந்தீயில் கண்களைத் தீய்த்தார்.
மரியாளின் கற்புக் கதவு
பலவீனமாகி விட்டதா
என பயந்தார்.
திருமணமே முடியாமல்
கரு உருவானதில்
கவலைப் பட்டார்.
வேருக்குள் விழுந்திருக்கும்
விஷயம்
ஊருக்குள் விழுவதற்குள்
மறைவாய் விலக்கி விடுதல்
நிறைவானது என்று
உள்ளுக்குள் முடிவெடுத்தார்.
இரவுத் தூக்கத்தில்
கடவுளின் தூதர்
அவருடைய
கனவின் கதவைத் திறந்தார்.
சந்தேகத்தின் கதவை மூடினார்.
தூய ஆவியால்
தாயானவள் தான் மரியாள்
பிறக்கும் பாலனுக்கு
இயேசு என்று பெயரிடு
தூதர் விளக்கினார்.
வந்திருப்பது
அவமானமல்ல,
வெகுமானம் என்பதை
குதூகலத்தோடு குறித்துக் கொண்டார்.
கடவுளின் சித்தம்,
எனக்குத் தேவை நித்தம் என்றார்,
ஓர்
வரலாற்றுக்குத் தந்தையாகும்
வரம் பெற்றார்.
கன்னிக்குப் பிறப்பான்
மீட்பின் மகன் !
தீர்க்கத் தரிசனங்களின்
தீர்க்கமான முடிவின் துவக்கம் தான்
இறைமகன் வரவின் விளக்கம்.
பிறப்பின் காலம் பிறந்தது.
அப்போது
வான் தந்த நட்சத்திரம்
ஒன்றுக்கு
வால் வந்தது.
வானத்து நட்சத்திரங்கள் எல்லாம்
செதுக்கிய முனைகளோடு
நகர,
நட்சத்திரம் வால் நீட்டி
சூரியன்
பூமியில் இருக்கிறான் என
சுட்டிக் காட்டியது.
தூரத்து விடிவெள்ளி ஒன்று
ஈர நிலா
பூமியில் இருப்பதை
விரல்கள் நீட்டி விளக்கியது.
இயற்கையே இறங்கி வந்து
குடிலில் கிடந்த
கொட்டில் மகனைச் சுட்டியது
ஓஓ
LikeLike