இதயத்தில் ஊடுருவிய வாள்

.
விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.

முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.

உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.

துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.

நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.

மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.

கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.

இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.

One comment on “இதயத்தில் ஊடுருவிய வாள்

  1. அனுபவங்கள் எல்லோருக்குமே வாழ்க்கையில் கிடைக்கின்றது. ஆனால் அதை வார்த்தெடுக்கும் திறமை…

    //துவக்கமும்
    முடிவுமற்றுப் போன
    ஒரு
    வட்டக் குடுவைக்குள்
    நீச்சலடித்துக் கொண்டிருந்தது
    உனைச் சார்ந்த
    என் நினைவுகள்.// – நல்ல வரிகள்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.