பாசம் இலவசம்

 

‘இன்னிக்கும் கடுதாசி வரல பெரியவரே…’ சொல்லிவிட்டுக் கடந்து போன தபால்க்காரனையே பார்த்துக்கொண்டிருந்தார் வேதாச்சலம். வேதாச்சலத்துக்கு வயது அறுபத்து ஐந்து இருக்கும். பார்வை இப்போதெல்லாம் அவருக்கு சரியாகத் தெரிவதில்லை. ஒரு ஆரம்பப்பாடசாலையில் வாத்தியார் வேலை செய்து ஐம்பத்து எட்டு வருடங்களை நகர்த்தியாகி விட்டது. காலில் அவ்வப்போது வந்து போகும் வீக்கம். முகத்தில் சோர்வின் தழும்புகள். முதுமை ஒரு கொடுமை என்றால் முதுமையில் தனிமை அதை விட கொடுமையானது…  இளமையில் வறுமை யும் முதுமையில் தனிமையும் இரண்டும் இல்லாத வாழ்வு, பலருக்கு அது பகல்க்கனவு.

ஏங்க … இன்னிக்கும் பையனோட லெட்டர் வரலையா ? சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் மாலதி. இல்லே… என்னிக்கு தான் லெட்டர் எல்லாம் ஒழுங்கா வந்து சேர்ந்திருக்கு. எதுவுமே சரியான நேரத்துக்கு வரது இல்லே. அது டவுண் பஸ் ஆனாலும் சரி, கடுதாசி ஆனாலும் சரி, ஏன் இந்த பாழாப்போன சாவு கூட சரியான நேரத்துக்கு வரதில்லே… சொல்லி முடித்த வேதாச்சலத்தின் கண்கள் நனைந்திருந்தன. மெதுவாக எழுந்து வீட்டின் கொல்லைப்பக்கமாக நடக்கத் துவங்கினார்.

அது ஒரு ஓட்டு வீடு, பின்பக்கம் நீளமான கொல்லை, வீட்டின் கிழக்குப் பக்கத்தில் கன்னிமூலை பார்த்துக் கட்டிவைத்த கிணறு… பின் பக்கம் அரை ஏக்கர் நிலத்தில் மரச்சீனிக்கிழங்கு பயிரிடப்பட்டு அதற்கு வேலியாக பலா மரங்கள் நடப்பட்டிருந்தன. எங்கும் ஒரு நீண்ட அமைதி.

வேதாச்சலம் ஒன்றும் தனி மனிதர் இல்லை, அவருக்கு ஏழு பிள்ளைகள். அவர் காலத்திலெல்லாம் அதிக குழந்தை பெற்றுக்கொள்வதெல்லாம் சர்வ சாதாரணம். பக்கத்து வீட்டு பொன்னம்மாவுக்கு 2 புருஷனும் 16 பிள்ளைகளும் என்று சொன்னால் இப்போதெல்லாம் சிரிப்பார்கள், இல்லையேல் நம்ப மாட்டார்கள். ஆனால் அது தான் நிஜம்.
அந்த பதினாறு பிள்ளைகளும், அவர்களின் பிள்ளைகளுமாக அந்த கிராமத்தில் எல்லா மூலைகளிலும் அவர்களுக்கு உறவினர் பட்டாளம் தான். கடந்த ஆண்டு தான் பொன்னம்மா செத்துப்போனாள். நூறு வயது வரை இருப்பாள் என்று எல்லோராலும் கணிக்கப்பட்டு அதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும் போதே இறந்து போய்விட்டாள் பொன்னம்மா. ஆனால் அதில் என்ன வருத்தம் என்றால், சாகும்போது அவளுடைய பிள்ளைகளில் ஒருவர் கூட அருகில் இல்லை. கடைசி காலத்தில் பிள்ளைகள் அருகில் இல்லாமல் இறக்க நேரிடுவது ஒரு மிகப்பெரிய வலி என்று தோன்றியது வேதாச்சலத்துக்கு.

வேதாச்சலத்துக்கு நான்கு பெண் பிள்ளைகள். எல்லோரும் திருமணம் ஆகி தனிக்குடித்தனம் போய் விட்டார்கள். எப்போதேனும் குழந்தை களோடு வந்து போவார்கள். அப்போதெல்லாம் வேதாச்சலம் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார். குழந்தைகளோடு சிரித்து, விளையாடி இனிப்புகள் கொடுத்து… அப்படி வேதாச்சலத்தை பார்ப்பதே மாலதிக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.
‘இது தாண்டி, இதுக்கு மேல என்ன வேணும் எனக்கு… எல்லா பிள்ளைங்களையும் கரையேத்திட்டேன்…
பசங்களை படிக்க வெச்சுட்டேன்… ஒரு பையனை அமெரிக்கா வுக்கே அனுப்பிட்டேன்.. இந்த உசுரு இப்போ போனாகூட கவலையில்லே…’ என்று அப்போதெல்லாம் மனைவியிடம் சொல்வார். ஆனால் குழந்தைகள் விடுப்பு முடித்து போன பிறகு அவரை மீண்டும் அந்த தனிமை சூழ்ந்து கொள்ளும்.

எப்போதுமே தனியாக இருப்பது வேதாச்சலத்துக்குப் பிடிப்பதில்லை. கோயிலில் தேவசம் போர்டில் அவருக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. சமையச் சொற்பொழிவுகளுக்கு வேதாச்சலத்தை விட்டால் யாரும் இல்லை என்கின்ற நிலமை. அதிலும் இதிகாச கதைகளை வாழ்வியல் நிகழ்வுகளோடு கதாபாத்திரங்களோடு ஒப்பிடுவதற்கு அவரை விட்டால் ஆளில்லை. ” செய்நன்றியில் சிறந்தது கர்ணனா..கும்ப கர்ணனா” என்னும் தலைப்பில் அவர் பேசிய சொற்பொழிவிற்காக அவருக்கு அந்த சாஸ்தான் கோயிலில் பாராட்டுப் பத்திரமே வாசித்தார்கள். ஆனால்
இப்போது நிலமையே வேறு…. தொண்டை கட்டிப்போன குரலுடன், நடுங்கும் தொனியில் தான் வார்த்தைகளே வரும். போதாக்குறைக்கு சிறு நீரகக் கோளாறு வேறு… அமெரிக்காவிலிருக்கும் மகனிடமிருந்து கடிதம் வந்து ரொம்ப நாட்களாகிறது. வீட்டிற்கு ஒரு போன் வைக்கலாம் என்றால் இந்த வயல்க்காட்டை எல்லாம் தாண்டி கம்பிகள் இழுத்து வருவதற்கு நிறைய நாட்களாகுமாம். ஏதேதோ எண்ணங்களோடு அந்த புளிய மரத்தின் நிழலில் உட்கார்ந்தார் வேதாச்சலம். அந்த புளியமரம், ஒருகாலத்தில் தன்னுடைய பிள்ளைகள் ஊஞ்சல் ஆடி ஆடி விளையாடிய மரம். இப்போது அதுவும் தனிமை தின்றுகொண்டிருந்தது. கிளைகளில் எப்போதாவது வந்து தங்கிப்போகும் காகத்தைத் தவிர எதுவும் இல்லை. முன்பெல்லாம் அதன் கிளைகளில் வெளவால்களாய்த் தொங்கி விளையாடுவார்கள் வேதாச்சலத்தின் மகன்கள். இப்போது அவர்களும் வேலை வேலை என்று வெளியூர் போய் செட்டிலாகி விட்டார்கள்.

வறுமையில் பிறந்து கடின உழைப்பால் நடுத்தர நிலமைக்கு வந்தவர்தான் வேதாச்சலம். தன் பிள்ளைகளாவது வறுமையில் விழக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார். நன்றாகப் படிக்க வைத்தார். இப்போது பிள்ளைகள் அவர்களுக்கான பாதையில் நடக்கத்துவங்கிய போது அவருக்கு கஷ்டமாக இருக்கிறது.

‘ வந்து சாப்பிடுங்க .. என்ன தவம் செய்யறீங்களா ?’ மாலதியில் குரல் பின்னாலிருந்து எழ திரும்பிப்பார்த்தார்.
இல்லடி… நம்ம பையன் கிட்டே இருந்து ஒரு கடுதாசி வந்து எவ்வளவு நாளாச்சு. நாம என்ன கேக்கறோம் ? ஒரு நாலு வரிக் கடுதாசி, அவ்ளோ தானே.. பிள்ளைங்களுக்கு ஏன் இதெல்லாம் புரியாம போச்சு ?
பேசாம நம்ம வயலில விவசாயம் பாக்க பிள்ளைங்களைப் பழக்கி இருக்கலாம்.. காலம் பூரா பாத்துட்டாவது இருந்திருக்கலாம். இப்ப பாரு ஐம்பத்தெட்டு வருஷம் நானும் நீயும் வேலை பாத்தோம்… அப்போ நாம வெளியே பிள்ளைங்க வீட்டில. இப்போ பாரு நமக்கு வயசாயிடுச்சு , ரிட்டயர்ட் ஆயிட்டோ ம்… இப்போ பிள்ளைங்க எல்லாம் வெளியே இருக்காங்க. நம்ம பிள்ளைங்க கூட நாம சரியா, சந்தோஷமா இருக்க முடியல. இப்போ யாராவது பக்கத்துல இருக்க மாட்டாங்களான்னு ஒரு ஏக்கம் தான். ஒரு கடுதாசி போடக்கூட பசங்களுக்கு நேரம் இல்லை. சொல்லிவிட்டு வெறுமையாய்ச் சிரித்தார் வேதாச்சலம்.

அதையெல்லாம் விட்டுடுங்க… பசங்க நல்லா இருக்காங்க, சந்தோஷமா இருக்காங்க . அது போதாதா நமக்கு ?
வாங்க இப்போ செஞ்சு வெச்சதெல்லாம் ஆறிடப்போகுது. சும்மா எதையாவது நினைச்சு வருந்தாதீங்க. லெட்டர் வரும், கண்டிப்பா நாளைக்கு வரும் பாருங்களேன். என் மனசு சொல்லுது. சொல்லிவிட்டு நகர்ந்தாள் மாலதி.

பகல் முழுவதும் அளவுக்கு அதிகமாகவே சிந்தனைகள் வந்து வேதனைப்படுத்திக் கொண்டிருந்தன.
இரவும் கூட வேதாச்சலத்துக்கு இருப்புக் கொள்ளவில்லை. மனசின் மேல் மொத்தப்பாரமும் விழுந்து கிடந்தது.
முன்பெல்லாம் நிறைய முற்போக்குக் கருத்துக்கள் பேசுவார். இப்போதெல்லாம் கந்தர் சஷ்டி கவசம் கேட்காமல் எழும்புவதில்லை . பகவத் கீதை படிக்காமல் தூங்கப் போவதில்லை. முதுமை மனிதனை மாற்றி விடுகிறது.
தோள்களில் வலு இருந்தபோதெல்லாம், தன்னை மட்டுமே நம்பிக் கிடந்த மனசு, முதுமை நெருங்க நெருங்க இன்னொரு தோள் தேடுகிறது. இதயம் வெறும் இரத்தத்தின் சுத்தீகரிப்பாலை என்றெல்லாம் பேசி யிருக்கிறார். இப்போது ஏதோ ஒன்று இதயத்தையே பாரமாக்குவதாய் உணர்ந்தார். என்னோட அப்பா கூட இப்படித்தான் நினைச்சிருப்பாரோ ? அவரும் வயசான நாட்களில் கயிற்றுக்கட்டிலில் கிடந்து இதெல்லாம் தான் சிந்தித்திருப்பாரோ ? அப்போதெல்லாம் என் கடிதம் காணாமல் அப்பாவின் மனசு கூட இப்படித் தான் அழுதிருக்குமா ? எப்போதேனும் மணியார்டர் அனுப்பும் போது கூட நான்கு வரிக்கடிதம் அனுப்புவதில்லை. அதெல்லாம் ஒரு மிகப்பெரிய வேலையாய்த் தோன்றியது அப்போது. வேதாச்சலத்துக்கு நினைவுகள் முண்டியடித்தன. இப்போதுதான் ஒரு தந்தையின் பாசம் புரிகிறது. இப்போது அப்பா ஒரு முறை முன்னால் வந்தால் கால்களைக் கட்டிக்கொண்டு அழவேண்டும் போலிருந்தது அவருக்கு. ஏதேதோ நினைவுகளுடன் தூங்கிப்போனார் வேதாச்சலம். அந்த ஒற்றை ஆந்தை மாமரக்கிளையில் இருந்து கத்தத்துவங்கியது.

“கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா பிரவர்த்ததே…”.. டேப் ரிக்கார்டர் மெலிதாச் சுழல, வெளியே விடியத் துவங்கியிருந்தது.

‘என்னங்க டீ போடவா ?’ – மெதுவாய்க்கேட்டாள் மாலதி.
சத்தமில்லாமல் படுத்துக் கிடந்தார் வேதாச்சலம்.

என்னங்க… தூங்கறீங்களா முழிச்சுக்கிடீங்களா ? மாலதி வேதாச்சலத்தின் தோளைத் தொட்டாள்.
‘ம்ம்ம்… டீ போடு…சரியான தூக்கமே இல்ல… கெட்ட கெட்ட கனவா வருது….’ சொல்லி விட்டு எழும்பி உட்கார்ந்தார் வேதாச்சலம்.
சரி… எழும்பி பல் தேச்சுட்டு வாங்க… இன்னிக்கு கோகுலாஷ்டமி, கோயிலுக்கு போயிட்டு வரலாம்… மாலதி சொல்லிக்கொண்டே சமையலறை நோக்கி நடந்தாள்.

வெளியே நன்றாக விடிந்திருந்தது.
வேதாச்சலம் வழக்கம் போல சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினார். எவ்வளவு நேரம் இருந்திருப்பார் என்று தெரியவில்லை.
‘ சார் போஸ்ட்’ – என்ற போஸ்ட் மேனின் குரலில் திடுக்கிட்டு விழித்தார். மனசுக்குள் திடீரென்று மழையடித்ததாய் ஒரு குளிர்ச்சி.
கண்களை அவசர அவசரமாய்த் திறக்க, வெளியே யாருமே இல்லை…. மாலதி தான் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.
‘என்ன பகலிலேயே  கனவா ? எழும்பி குளிச்சிட்டு வாங்க.. கோயிலுக்கு போகலாம்… ‘ மாலதியின் குரலால் மீண்டும் ஏமாற்றம் தொற்றியது அவருக்கு. சாய்வு நாற்காலியில் மீண்டும் படுத்தார்…

‘ சார் கடுதாசி வந்திருக்கு ‘ – மீண்டும் அதே குரல். பிரமை பிடிவாதமாய்த் தொடர்கிறதா ? யோசனையுடன் மெதுவாய் கண்கள் திறந்தார்.
என்ன ஆச்சரியம் .. !!! தபால்க்காரர் தான் நின்று கொண்டிருந்தார். அவசர அவசரமாய் எழுந்தார் வேதாச்சலம்.
‘சார்… கடுதாசி வந்திருக்கு சார். நீங்களும் டெய்லி கேப்பீங்க, நானும் இல்லே இல்லே ன்னு சொல்லுவேன் இன்னிக்கு என்னடாண்ணா நிஜமாவே கடுதாசி சார். அதுவும் அமெரிக்கால இருக்கிற உங்க பையன் கிட்டே இருந்து’, சொல்லி விட்டு ஒரு கவரை நீட்டினார்.
சத்தம் கேட்டு மாலதி திண்ணைக்கு விரைந்தாள். வேதாச்சலம் பரபரப்பு விரல்களால் கடிதத்தைப் பிரித்துக் கொண்டிருந்தார்.
உள்ளே ஒரு செக்… ஏழாயிரம் அமெரிக்க டாலர்களுக்கான செக். சுமார் மூன்றே கால் இலட்ச ரூபாய். அதை எடுத்து இடதுகையால் திண்ணையின் ஓரத்தில் வைத்துவிட்டு ஏதேனும் கடிதம் இருக்கிறதா என்று கவரை ஆர்வமாய்த் துழாவினார் வேதாச்சலம்.
உள்ளே வெறுமை. கண்களை இடுக்கிக் கொண்டு மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்தார். இவன் ஒரு நாலு வார்த்தை எழுதினா கொறஞ்சா போயிடுவான் ? முணுமுணுத்தபடி வெற்றுக் கவரின் வெளிப்பக்கம் எழுதப்பட்டிருந்த மகனின் பெயரை மெதுவாய்த்தடவினார் வேதாச்சலம்.
மகன் அனுப்பிய காசோலை திண்ணையின் ஓரத்தில் முக்கியத்துவமில்லாமல் கிடந்தது.

7 comments on “பாசம் இலவசம்

  1. Pingback: பாசம் இலவசம் « SEASONSNIDUR

  2. கார்த்திக், வருகைக்கும், கருத்துக்கும் பதிவுக்கும் நன்றிகள் பல.

    அருமையான கவிதை வரிகளுக்கு நன்றிகள்.

    Like

  3. nalla padaippu…

    keeleyula varigalai pathiseyya mudiyumaa….

    oru anathayin enna ottam

    anathaiyaai…

    kadai virithaai kolvaarillai…
    karmam mattume unakku sontham…
    kalaipugalil kan mooduvai… athumattumthaan unnoda aanantham…
    kangalil avvapothu kanneer thuligal… athu matumthaan aaruthal…
    un thedalukku ilako…. un kelvikku pathilo kedayathu….
    karmam seyyum varai valkai undu… mudiyalaya… neeya un maranathai thedikol…
    unnudaya antha theduthalukku mattumthaan ilaku undu…vidayum undu….

    Like

  4. Illamail panam peria visayam annal mudumail manam peria visayam -girathai algaga intha kathai eduthu solli iruku.Asiriyaruku enathu paratukkal.

    Like

  5. nalla kathai. Arutperungo thanathu pinutathil kelviyaai ezhuthiyular. athu 100/100 unmai. vayathanavanga ethirparpu athigam athu niyamanathumkuda. thinamum naan ithai paarkiren. muthiyor illathil pillaigalal pala kaaranangal vidapata muthiyorin nilai ithuthan. ivargalai purinthukolvathum thirupthipaduthuvathu sila samayangalil kashtamanathe. oru chinna seyalkuda sila samayangalil avargalukku sandoshathai tharum avargalathu ullathai thodum.
    nalla kathai padaithatharkku thanks & vaazhthukkal.

    Like

  6. முதுமையில் எதிர்பார்ப்புகள் அதிகமாகுமோ?
    ஒருவருக்காக நாம் செலவழிக்கும் “நேரமே” அவர் மீதான அன்புக்கு முக்கியமான அளவுகோலாகிறது!!

    வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.