சுடுகிறது எனக்கு.
சூரியன் என் முகத்திலும்
பூமி என் முதுகிலும்
உலை வைத்து உலை வைத்தே
உருக்குலைந்து போனது என் தேகம்.
என் மீது பாதம் வைத்தாலே
எண்ணைக்கொப்பறையில் விழுந்ததுபோல்
துடிக்கும் மக்கள்,
மோர்க் கோப்பைகளிலும்
இளநீர், குளிர்நீர் களிலும்
இதயம் வைக்கிறார்கள்.
ஆனால்
தொட்டுப் பார்க்கும் தொலைவிலிருந்தும்
தண்ணீர் லாரிகள் கூட எனக்கு
தயவு காட்டுவதில்லை.
என் முகத்தில் ஆயிரம் விழுப்புண்கள் .
புண்களைச் சரிசெய்ய
அனுப்பப் பட்டவர்கள்
எண்கள் சரிசெய்ய மட்டுமே பழக்கப்பட்டவர்கள்.
என் நாசித் துளைகள் எங்கும்
டீசல் புகை வழிய
உலகத்தின் நுரையீரல்கள்
ஈரம் வறண்டு போகின்றன.
என் தோள்களிலும்
கால்களிலும்
மிச்சப் பொருட்களின்
எச்சில் துளிகளாய் குப்பைக் குவியல்கள் !!!
சிலநேரங்களில் என்
நரம்புகளுக்கு இரத்ததானம் செய்யும்
அவசரத் தற்கொலையாளர்கள்
தானமாய்ச் செத்துப் போவதுண்டு.
எப்போதாவது வானம்
வருத்தப்பட்டு என் தேகம் நனைக்க
மேகம் கரைப்பதுண்டு.
பகலைப் போர்த்தியும்
இரவை உடுத்தியும்
மல்லாக்கப் படுத்திருக்கும் எனக்கும்
ஓடத்தோன்றுவதுண்டு.
எப்போதாவது வரும்
மந்திரியின் வருகைக்காய்
என் தினசரி நண்பர்களை
என் மீது
ஓடவிடாமல் ஒதுக்கும் போது.
கடைசி பத்திகளில் பன்ஞ்.
வாழ்த்துக்கள் சேவியர்.
LikeLike
நன்றி கலை. 🙂
LikeLike
Nalla Kavidai.:-)
Thaar salaikum thagam undu endru sonna xavier rukku nanri
Natpudan
Bala
LikeLike