ஒரு பிச்சைக்காரர் நடக்கிறார்.

begger.jpg

பகல் முடியாதா என்று
பாழாய்ப் போன மூட்டு வலி சொல்லும்
உயிரை மட்டும் விட்டு விட்டு
உணர்வுகளைப் பசி கொல்லும்.

எனக்கு அம்மாவின் பெயர் கூட
தெரியாது.
ஆனால் வாசல் கடக்கையில்
அப்படித்தான் அழைக்கிறேன்.

பல மனிதர்கள்
என்னைக் கண்டவுடன்
பேருந்து எண் பார்ப்பார்கள்.
கை விரல் எண்ணிப் பார்ப்பார்கள்
வரி விளம்பரங்களில்
பார்வை விளம்புவார்கள்
தவறி என் முகம் பார்த்துவிட்டால்
முகத்தைப் பாறையாக்கி
“இல்லை” என்று சொல்வார்கள்.

மீதம் வைத்த உணவைப் பார்த்தால்
விரயப் பணத்தின் அளவைப் பார்த்தால்
உயிருக்குள் தீக்குச்சி கிழியும்.

நான்
வட்டிக்குப் பணம் தருவதாய்,
சுவிஸ் வங்கியில் பெயர் இருப்பதாய்,
தினசரி கார்ட்டூன்கள் சிரிக்கும்.
கசக்கிப் போட்ட பழைய காகிதமாய்
மனசு மட்டும் நசுங்கும்.

வறுமையோடு ஒப்பிட ஒன்றுமில்லை
திருவோடு ஏந்தி
தெருவோரம் நடக்கும் போது
நாய்களும் கொஞ்சம் விலகியே செல்லும்.
மண்டையோட்டுக் காட்சிப் பொருளாய்
எங்கள்
சேரிச் சிறுவர் தலை தெரியும்.

காலையில் ஆலயம்
மதியம் மசூதி
மாலையில் கோயில்.
அலங்கார மேடைகளில்
ஆண்டவன் வழிபாடு.
என்
வழியும் புண்களில் எண்ணை பூசியபடி
தெருவில் இருப்பான் ஆண்டவன்.

சமுதாய மாற்றங்கள்.
சமத்துவச் சங்கதிகள்
மனித மதிப்பீடுகள்.
எங்கள் தோல்களில் உடுக்கை செய்து,
பாதுகாப்புக் கோப்பைக்குள்
பாதரச அரசியல் வாதிகள்.

மொத்த இடமும் சுற்றி முடித்து
சிதறிய சில்லறை காசுகளை
எண்ணி ஏமாந்து
வேதனை வெடிக்க
விட்டம் பார்க்கையில்,

பசிக்குதா என்றபடி
குடிசைக் கதவு திறப்பாள்
மனிதாபிமானத்தைச் சேர்த்து வைத்திருக்கும்
என் சேரிச் சகோதரி.

3 comments on “ஒரு பிச்சைக்காரர் நடக்கிறார்.

  1. It is impressive,cos lot of people are even never mind those people but u had the mind to write poem.Really i appericiate ur poem.after reading this i realized worried people who were really hurting those people, begger also a humanbeing,they also have heart as well as hunger, but we people are not considering.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.