சாருநிவேதிதாவின் மூன்று புத்தகங்கள் வெளியிடும் விழா நேற்று சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்தது.
எஸ்.ரா, அழகிய பெரியவன் என எழுத்தாளர்களும், பாலுமகேந்திரா, பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் என இயக்குனர்களும் நிரம்பியிருந்த விழாமேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தது நடிகை ஜோதிர்மயி அருகிலேயே அவருடைய காதைக் கடித்தபடி சாரு நிவேதிதா.
சாருநிவேதிதாவின் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள், இலக்கியம் குறித்த கட்டுரைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் என மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
வழக்கமான புத்தக வெளியீட்டு விழாவின் இலக்கணங்களை மீறாமல் எல்லோரும் சாருவின் அருமை பெருமைகளை மேடையில் முழங்கிக் கொண்டிருந்தனர்.
சொல்லி வைத்தது போல எல்லோருமே சாரு திரைப்படத் துறைக்கு வரவேண்டும் என்னும் கோரிக்கையையும் வைத்தனர்.
விழாவில் பாலுமகேந்திராவின் பேச்சு ஒரு நிஜமான கலைஞரின் உணர்வு பூர்வமான வெளிப்பாடாக இருந்தது.
சாரு நிவேதிதா தன்னுடைய நூலில் பாரதிராஜாவைப் புகழ்ந்து பேசிக் கொண்டு பாடல்கள் இல்லாத திரைப்படங்களை பாரதிராஜா எடுத்தால்( கேப்டன் மகள் – என்று ஒரு படம் வந்ததை சாரு மறந்து விட்டாரா ?) அவை அடூர் கோபாலகிருஷ்ணனின் படங்களோடு ஒரே தராசில் வைத்து எடையிடப் படக்கூடிய வலிமை படைத்ததாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
இதை சுட்டிக் காட்டிய பாலுமகேந்திரா, என்ன சாரு, என்னுடைய வீடு சந்தியாராகம் எனும் இரண்டு படங்களுமே பாடல்கள் இல்லாமல் எடுக்கப்பட்டது தான். அவை பெருமைக்குரிய படங்கள் இல்லையா ? அவற்றைக் குறித்த ஒரு தகவல் கூட இல்லையே என்று பேசியபோது உணர்ச்சி வசப்பட்டு நாதழுதழுத்தார். அழுகையை மறைக்க சில வினாடிகள் தேவைப்பட்டது அவருக்கு.
ஒரு நிஜமான கலைஞர் தன்னுடைய படைப்பிற்குக் கிடைக்க வேண்டிய கவுரவத்தை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவருடைய பேச்சு சுட்டிக் காட்டியது.
ஒரு நியாயமான விமர்சகன் ஒரு விஷயத்தை வெளிப்படையாய் எழுதும் போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை உரக்கச் சொல்வதாகவும் அமைந்தது அது.
அவர் சொன்ன இன்னொரு விஷயம் மிகவும் கனமானது.
பாலாஜி சக்திவேல் தன்னுடைய கல்லூரி திரைப்படத்தில் பேருந்தோடு சேர்த்து மூன்று மாணவிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை வியாபார நோக்கில் சொல்லியிருந்ததாக நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
இத்தகைய துயரமான நிகழ்வு ஒரு கனமான ஆவணப் படமாக எடுக்கப்பட வேண்டியதேயன்றி ஆடல் பாடல்களுக்கு இடையே காட்டப்பட வேண்டியதல்ல. என்னை பல நாள் தூக்கமிழக்கச் செய்த அந்த மாணவிகளின் ஓலத்தை இப்படி வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தியது சரியல்ல என்று குறிப்பிட்டார்.
ஒருவேளை டிரைலரில் அந்த காட்சி இடம்பெற்றிருந்தால், ஒரு சண்டை, ஒரு பாடலுக்கு இடையே அந்த நிகழ்வும் காட்டப்பட்டிருந்தால் அதன் அழுத்தம் எவ்வளவு மலினப்பட்டிருக்கும் என்பதை அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
பாலுமகேந்திராவின் மீது நான் வைத்திருந்த மரியாதையை சற்று அதிகரிக்கச் செய்தது அவருடைய வெளிப்படையான பேச்சு. அதுவும் பாலுமகேந்திரா எனக்கு குரு என்று பாலாஜி சொல்லியிருக்கும் சூழலில் தைரியமாக மேடையிலேயே பாலு பேசியது அவருடைய கருத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதியைக் காட்டியது.
பல வேளைகளில் திரையுலகம் செய்கின்ற பிழை இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வியாபார நோக்கத்துக்காக சோகமான நிகழ்வுகளை கமர்ஷியல் அம்சமாக்கி விடுகின்றனர்.
படுகொலைகள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற அனைத்துமே ஆடல் பாடல்களுடன் அரங்கேறும் போது அந்த நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு எழும் சோகம் கொஞ்ச நஞ்சமல்ல.
இப்படித்தான் நான் எப்போதும் மதிக்கும் பிரமிப்புக்குரிய கவிப்பேரரசு வைரமுத்து ஒருமுறை எழுதினார்…
சுனாமி சீற்றத்தினால் பல்லாயிரம் உயிர்கள் மாண்டதற்கு கண்ணீர்க் கவிதை வடித்த கையோடு ஒரு திரைப்படத்திற்குப் பாடல் எழுதினார்.
சின்னச் சின்னச் சிகரங்கள் காட்டி
செல்லக் கொலைகள் செய்யாதே
எனும் சில்மிஷப் பாடல்.
கட்டிக் கொண்டு கையாடச் சொன்னது காமச் சாமியோ
நான் கட்டும் ஆடை களவாடப் பார்க்கும் நீதான் சுனாமியோ ? என்று.
சுனாமி ஏற்படுத்திய சோகம் சற்றும் விலகாத சூழலில் எப்படி ஒரு கவிஞரால் கட்டும் ஆடையைக் களவாடப் பார்க்கும் காமுகனாக, சில்மிஷத் தென்றலாக சுனாமியை பார்க்கத் தோன்றியது என்னும் அதிர்ச்சி எனக்குள் இப்போதும் உண்டு.
பாலுமகேந்திராவின் நியாயமான கேள்வியும், சமூகப் பிரக்ஞையும் அனைத்து படைப்பாளிகளுக்கும் வேண்டும். தங்கள் படைப்புத் திறனும், வியாபாரமும் மட்டுமே பேசப்பட வேண்டும் எனும் வேட்கையை இத்தகைய துயரத் தருணங்கள் குறித்த நிகழ்வுகளிலேனும் சற்று குறைத்து பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்தில் அமர்ந்து படைப்புகளைச் செய்யும் சமூக பங்களிப்பும் மனித நேயமும் வளர வேண்டும்.
ஃ
//
கேப்டன் மகள் – என்று ஒரு படம் வந்ததை சாரு மறந்து விட்டாரா
//
சொ.கா.சூ.*
*சொந்த காசில் சூனியம்
LikeLike
Pingback: கிறுக்கல்கள் » Blog Archive » கல்லூரி திரைப்படம் - பாலு மகேந்திரா கருத்து - என் பார்வை
Pingback: காளை & Disaster Lyricism « Snap Judgment
விழாவினை நன்கு பதிந்திருக்கிறீர்கள் சேவியர்.
அடூருக்கும் பாரதிராஜாவுக்கும் வெகு தொலைவு என்பது எனது தாழ்மையான கருத்து. ஆனால் பாலுமகேந்திராவின் படைப்புகளை நிச்சயமாக சொல்லலாம்.(அவை வேறு genre என்று இருந்தாலும் கூட..)
மேலும் பாலு மகேந்திரா அவர்கள் மேடைகளில் உணர்ச்சிவயப்படுதல் இது முதன் முறை அல்லவே!
LikeLike
நன்றி Zero. நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. எனவே தான் அது குறித்து ஏதும் விரிவான கருத்து சொல்லவில்லை. பாலு சொன்ன கருத்துக்களை மட்டுமே சொல்ல விழைந்தேன்.
( விழா முடியும் வரை நான் இருக்கவில்லை. எஸ்.ரா பேசி முடித்ததும் விட்டேன் ஜூட் )
LikeLike
Xavier,
Oh, thanks for this post, by the way!
Balu Mahendra does have a point with regard to “using” real-life tragedies in films, but I don’t think Balaji Sakthivel has “exploited” the history of the Dharmapuri incident in his film for commercial purposes. I say this despite the fact that the climax didn’t work for me.
LikeLike
//இலக்கிய மேடையில் நடிகை ஜோதிர்மயிக்கு என்ன வேலை எனப்புரியவில்லை…!//
இயக்குனர்கள் இருக்கும் மேடையாச்சே !
LikeLike
//PESUMPADATHULA PECHE KIDAIYATHU-:)//
எப்படி இப்படியெல்லாம் ? கமல் பாஷைல சொல்லணும்னா … அப்படியே வர்ரது தான் இல்ல… ? 🙂
LikeLike
PESUMPADATHULA PECHE KIDAIYATHU-:)
LikeLike
பதிவிற்கு நன்றி, சேவியர்!
கல்லூரி திரைப்படம் குறித்த பாலுமகேந்திராவிருந்து இப்படி ஒரு கருத்து எதிர்பார்க்கவில்லை..!!
பாரதீய நவீன இளவரசன்,
/இல்லாத படங்கள் தமிழில் உண்டா…?தெரிந்துகொள்ள ஆசை.
/
(கமலின்) குருதிப்புனல்!
LikeLike
>>”Most of his films apparently did suck even when they were armed with god-awesome songs.”
I was (obviously) referring to Bharathiraja’s longtime association with Raaja. It’d be a real chore to sit through films like Kizhakke Pogum Rayil if one takes away the wonderful songs that feature in them.
Bharathiraja’s aesthetics is rather poor, even within the realms of Tamil cinema. Mahendran and Balu Mahendra are the ones who brought in the real new wave in the aesthetics of Tamil cinema, and the aesthetics in their films have invariably been far superior to what Bharathiraja has ever managed to do. What Bharathiraja actually did was to take Tamil cinema out of studios, for the first time, and shoot in real locales; capture the lives of people that never managed to find their way to Tamil film screen till then (but, he did only an average job at this).
LikeLike
1. If Bharathiraja had made films without songs, they would have surely sucked big time. Most of his films apparently did suck even when they were armed with god-awesome songs. (As many have noted already, Captain Magal did have songs. Does ‘endha peNNilum illAdha onRu’ ring a bell?)
2. On last check, Charu Nivedita called Paruthiveeran as one of the greatest films in Tamil cinema. That’s reason enough to keep him out of the radar. But then, Charu Nivedita never fails to surprise you. He also thinks Bharathiraja’s films deserve to be placed along with Adoor’s!
3. Balu Mahendra made two real masterpieces in Veedu and Sandhya Raagam (Chokkalinga Bhagavathar turning in with two back-to-back great performances); and never really made any other film that came anywhere close to these two films. I am glad he always picks only these two films in particular when talking about his works.
LikeLike
பாரதிராஜா பற்றிய சாருவின் சிலாகிப்புக்கு பாலுமகேந்திரா வருந்தத் தேவையில்லை.அத்துடன் சாரு ஒரு போதும் சமூகக் கருத்துள்ள படங்களை எடுப்பாரென எதிர்பார்க்க முடியாது.எனவே சாரு தமிழ்சினிமாவுக்கு வராமலிருப்பதே நல்லது.
‘கல்லூரி’ குறித்தான விமர்சனம் வரவேற்கத்தக்கது.பாலுமகேந்திராவின் திரைப்படங்கள் பேசும் வலியை அது கொண்டிருந்தாலும் உண்மையின் சாயலை முழுவதுமாகக் காட்சிப்படுத்த முடியவில்லை.
இலக்கிய மேடையில் நடிகை ஜோதிர்மயிக்கு என்ன வேலை எனப்புரியவில்லை…!
LikeLike
பாலுமகேந்திராவின் கருத்து மிக முட்டாள்தனமாக எனக்கு படுகிறது. கலை, இலக்கியம் குறித்த எந்த நவீன புரிதலும் இல்லாமல், இன்னும் பழைய ஸ்டீரியோபாணி (முற்போக்காக தோற்றமளிக்கும்) கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் பார்வையில் ரீன்னும் நீட்டிப் பார்த்தால் தருமபுரி நிகழ்சியை பத்திரிகையில் ரிப்போர்ட் செய்வது கூட ஒரு வியாபார உத்தி மட்டுமே. பாலாஜி சக்திவேலின் கல்லூரி, மிக நேர்மையான முறையில் சம்பவத்தை காட்சியாக்கி, பிண்ணணி கதை மூலம் அதை கலையாக்கியிருக்கிறது. இன்னும் இது பற்றிய என் பல கருத்துக்களை சொல்ல இந்த பின்னூட்டம் காண்து; ஒரு பதிவு தேவைப்படும். பாலு போன்ற தனது பழமைவாத குருவின் சிந்தனைகளை தாண்டி பாலாஜி தன்னை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
LikeLike
//பாடல் இல்லாத படம் என்று ஏதோ ஒரு ஞாபகம் //
பாடல்கள் இல்லாத பாரதிராஜா படங்களை அறிந்திலேன்;பாடல்கள் பாரதிராஜாவின் படத்தின் integral part அல்லவா. பாடல்களில்லாத தமிழ் படங்கள் என்றால் என் நினைவுக்கு வருவது, ‘அந்த நாள்’ (சிவாஜி நடித்தது; S. பாலச்சந்தர் இயக்கத்தில், AVM படம்), ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ (சத்யராஜ்), ‘வண்ணக்கனவுகள்’ (கார்த்திக், முரளி, ஜெயஸ்ரீ), ‘வீடு’ மற்றும் ‘சந்தியா ராகம்’ (பாலு மகேந்திரா); இது தவிரவும் பாடல்களே இல்லாத படங்கள் தமிழில் உண்டா…?தெரிந்துகொள்ள ஆசை.
LikeLike
//அந்த செய்தியை வைத்துக் கொண்டு, அதில் கடந்த காலத்தில் பயணித்து, எத்த்னை பேருடைய கனவுகள் அந்த நகழ்ச்சியில் அழிந்து போனது என்பதை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கும் படம் அது//
நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. சரியான முறையில் சொல்லப்பட்டிருந்ததெனில் வரவேற்போம். தொலைக்காட்சியில் பார்த்த சில காட்சிகள் நன்றாக இருந்தன.
LikeLike
மன்னிக்கவும்.கல்லூரி போன்ற ஒரு படத்தில் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை வைத்திருந்த விதம் சரியான முறையில்தான் இருந்தது.
அந்த செய்தியை வைத்துக் கொண்டு, அதில் கடந்த காலத்தில் பயணித்து, எத்த்னை பேருடைய கனவுகள் அந்த நகழ்ச்சியில் அழிந்து போனது என்பதை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கும் படம் அது. அந்த படத்துக்கு அம் மாதிரி க்ளைமாக்ஸ் வைத்து இருக்காமல் வேறு மாதிரி வைத்து இருந்தாலும் தகுந்த பாராட்டுகளை பெற்றிருக்கும்.அந்த நல்ல கதையை வன்முறை அரசியலுக்கெதிரான பிரச்சாரமாக கடைசி காட்சியில் உபயோகப்படுத்தியது நல்ல உத்தி.. சும்மா, சும்மா கொஞ்ச நஞ்சம் இருக்கும் நல்ல டைரக்டர்களையும் குறை சொல்லி ஓட விடாதீர்கள்.
LikeLike
அட ஆமா ! கேப்டன் மகளில் பாடல் உண்டு 🙂 மன்னிக்கவும்.. பாடல் இல்லாத படம் என்று ஏதோ ஒரு ஞாபகம் 😦
LikeLike
1. கேப்டன் மகள் படத்தில் பாடல்கள் உண்டு.
2. சாரு எழுதி பாலுமகேந்திராவின் புகழ் பரவவேண்டியதில்லை. எனக்கென்னவோ சாருவுக்கு தமிழ்ப்படங்களில் பெரும் பண்டிதம் இருப்பதாகத் தோன்றவில்லை. உலகப் படங்களில் இருக்கலாம். பாலுமகேந்திரா கேவலமான படங்களையும் எடுத்திருக்கிறார். ஆனால் சந்தியா ராகமும் வீடும் இந்திய அளவில் சிறந்த படங்கள் மட்டுமல்ல, உலகப் படங்களுக்கு இணையானவை.
3. நீங்கள் சொன்ன சுனாமி வரி பற்றி எனக்கும் அதிர்ச்சி உண்டு.
4. பாலு மகேந்திரா மேடையில் பேசும்போது படக்கூடிய உணர்ச்சிக்கு அளவே இல்லை. ரஜினியை மிஞ்சிவிடுவார். :)) அதில் ஒன்றுதான் அடூரின் படங்களுக்கு பாரதிராஜாவின் படத்தைச் சொல்வது.
LikeLike
பஸ் எரிப்பு ஒரு படத்திலாவது காட்டும் அளவுக்கு நாம் அந்த கொடிய சம்பவத்தை நினைவில் வைத்திருக்கிறோமே!!!!!!
1) கும்பகோணம் சம்பவத்திற்கு பிறகு கூரை வேய்ந்த பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டதா?
2) தர்மபுரி சம்பவத்திற்கு பிறகு பஸ் உடைப்பு,பொது மக்களுக்கு இடைஞ்சல் தரும் போராட்டங்கள்தான் நடைபெறவில்லையா?
மாற்றங்கள் நிகழ்த்தப்பட வேண்டியது மனங்களில்தான்?
LikeLike
1) கல்லூரி திரைப்படம் குறித்த பாலுமகேந்திராவின் அவதானிப்பு அர்த்தமுள்ளதாகவே படுகிறது. சாரு போன்றவர்களின் சான்றிதழ்களையெல்லாம் பாலுமகேந்திரா எதிர்பார்க்கவே தேவையில்லை. சிறந்த இயக்குநர்கள் என்ற கருதப்படும் சிலரைப் போல அவரும் பல்வேறு அபத்தமான படங்களை எடுத்திருந்தாலும், வீடு, சந்தியா ராகம் போன்ற படங்களை படைத்ததின் உயர்ந்த தளத்திலேயே இருக்கிறார்.
2) கேப்டன் மகள் படத்தில் பாடல்கள் இல்லையயென்று யார் சொன்னது? ‘எந்தப் பெண்ணிடம் இல்லாத ஒன்று… ஏதோ அது ஏதோ… என்ற பாடல் உட்பட இரண்டு மூன்று பாடல்கள் உள்ளன என்று ஞாபகம்.
3) அடூர் கோபால கிருஷ்ணனையும் பாரதிராஜாவையும் ஒரே இடத்தில் வைப்பது போன்ற ஒரு அபத்தம் இருக்கவே முடியாது. பெரும்பாலான காட்சிகளை நாடகத்தன்மையுடனும் மிகைப்படுத்தலுடனும் எடுக்கும் பாரதிராஜா எங்கே… படைப்பாளியின் குரலே ஒலிக்காமல் யதார்த்தரீதியான காட்சிப்படுத்தலுடனும் எடுக்கும் அடூர் எங்கே?…
– SURESH KANNAN
LikeLike
//சாரு எழுதி பாலுவின் படைபுகள் அங்கீகாரம் பெறப்போவதில்லை. பாலு எனும் சிங்கம் இடித்துரைத்து பேசியதே தவிர, நா தழு தழுத்து கெஞ்ச வில்லை.//
இசை, பாலு “கெஞ்சினார்” என்று நான் சொல்லவில்லை. நாற்பது ஆண்டுகால என்னுடைய திரையுலக வரலாற்றில் இரண்டே இரண்டு படங்களை மட்டும் பாடல்கள் இல்லாமல் எடுத்தேன் அவை வீடு, சந்தியா ராகம். அவற்றைக் குறித்த குறிப்புகள் இருக்குமா என்று ஆர்வத்துடன் பக்கங்களைப் புரட்டினேன். அது குறித்து நூலில் எங்கும் காணவில்லை. ஏன் சாரு, என்னுடைய படங்கள் அதற்குத் தகுதியானவை இல்லையா ? ” என்று பாலு குறிப்பிட்டதும், அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்டதும் உண்மை.
நான் எதையும் திரித்துக் கூறவில்லை.
LikeLike
சாரு நிவேதிதா தன்னுடைய நூலில் பாரதிராஜாவைப் புகழ்ந்து பேசிக் கொண்டு பாடல்கள் இல்லாத திரைப்படங்களை பாரதிராஜா எடுத்தால்( கேப்டன் மகள் – என்று ஒரு படம் வந்ததை சாரு மறந்து விட்டாரா ?) அவை அடூர் கோபாலகிருஷ்ணனின் படங்களோடு ஒரே தராசில் வைத்து எடையிடப் படக்கூடிய வலிமை படைத்ததாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
What is this nonsense. The sensibility of Adoor can never be found in
any of the tamil films,not to speak of the films of Bhararhi Raja.Raja
has a poor sense of aesthetics and his penchant for showing female
bodies in some dresses and angles in too well known. Raja has made
so many below average films, while none of the films by Adoor can
be termed as below average. Charu knows a few names and some
stories by reading. He is not even a well read person and can never
be considered as a critic who can be take seriously.
LikeLike
Pingback: கில்லி - Gilli » Blog Archive » ‘கல்லூரி’ திரைப்படம் குறித்து பாலுமகேந்திரா
சாரு எழுதி பாலுவின் படைபுகள் அங்கீகாரம் பெறப்போவதில்லை. பாலு எனும் சிங்கம் இடித்துரைத்து பேசியதே தவிர, நா தழு தழுத்து கெஞ்ச வில்லை. அவருக்கான் அடையாளமும், மதிப்பும் என்றும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. சக படைப்பாளியை மேடையிலேயே விமரிசித்த பாலு, சாரு விடம் கெஞ்சினார் என நீங்கள் எழுதியதை மீள் பதிவு செய்து வெளியிடவும். கலைஞனுக்கு அங்கீகாரம் தேவை எனும் கருத்து சரியே, ஆனால் பாலு அழுதார் என்பது மிகை மற்றுமல்ல திரிப்பும் கூட. தன்னள்வில் மிகவும் நல்லதொரு பதிவு.
அது தொழில், இது இலக்கியம் என துண்டை விரித்து தாண்டி விடுவார் வைரமுத்து. படிமங்கள் சரியான இடத்தில் கையாளப்படவேன்டும். வைரமுத்து மட்டுமல்ல கவிஞர்களே அதில் மிகவும் பலகீனமானவர்கள். இரட்டை கோபுரம் முதல் ஒசாமா வரை நிறைய பார்த்தாகிவிட்டது நம் பாடல்களில். 🙂
LikeLike