கவிதை : அழகி

அழகுப் பெண்ணே.
உனக்கு மட்டும்
எப்படி வந்தது இத்தனை அழகு.

பூக்கள் பூக்களோடு மோதி
மொட்டுக்களுக்குள்
வாசனை ஊற்றும் அழகு.

தென்றல் தென்றலோடு மோதி
சோலைகளுக்குச்
சொடுக்கெடுக்கும் அழகு.

உன் கண்களைக் கண்டதும்
ஓர்
மின்னல்க்காடு முளைத்தது
என் மௌனத்தின் மனப்படுகைகளில்.

உன் அழகை எழுத
எத்தனிக்கும் போதெல்லாம்
கனவுகள் வந்து
வார்த்தைகளைக் கலைத்துச் செல்கின்றன.

கற்பனைகள் வந்து
என் கவிதையை எடுத்துச் செல்கின்றன.

முத்துக்களை விழுங்கி நிற்கும்
சின்னச் சிப்பியாய்
வெட்கத்தில் புதைந்து கிடக்கிறது
உன் ஆடை.

வானவில்லுக்கு சிறு
வண்ணப்பொட்டிட்டதாய்
உன் சின்னவிரலில்
ஓர் சிங்கார மோதிரம்.

நதிகளுக்குள் சிறு
ரோஜா மிதப்பதாய்
ஒற்றைக்காலில் மட்டும் உனக்கு
ஒய்யாரக் கொலுசு.

இமைகளின் இடைகளிலும்
மோகத்தீ ஊற்றி நிறைக்கும்
உன்
தங்கச் சங்கிலியின்
தழுவல்ப் பிரதேசங்கள்.

நீ
இமைத்து முடிக்கும்
இடைவெளியில்
கவனித்தவை தான் இவையெல்லாம்.
மற்ற நேரங்களில்
என் புதைகுழியே உன் இரு விழிதான்.

நீ
ஒரு வார்த்தை பேசியிருந்தால்
நான் ஒருவேளை
மூர்ச்சையாகி மடிந்திருக்கலாம்.
இல்லையேல்
முக்தி நிலையில் முடிந்திருக்கலாம்.

எதுவும் நடக்கவில்லை..
ஓராயிரம் வண்ணத்துப் பூச்சிகள்
உற்சாக ஊர்வலம் செல்வதுபோல்
செல்கிறாய்..
எனைக் கடந்து.

என்னைத் தொடர்ந்த
என் சுவடுகள்
இப்போது
என்னை மட்டும்
தன்னந்தனியாய் விட்டு விட்டு
பயணித்துக் கொண்டிருக்கின்றன.

0

24 comments on “கவிதை : அழகி

  1. //IVVALAVU AZHAGANA KAVITHAYAI SOLLIVITTU KADAISIYIL
    “NEE IMAITHU MUDIKKUM IDAIVELIYIL DHAAN GAVANITHADHU IDHELLAM”
    ENDRU SONNIRGALE, ADHU SIMPLY SUPER..,
    ANBUDAN A.ABARNA//

    அன்பு அபர்ணா, நன்றி வருகைக்கும் உங்கள் கருத்துக்களுக்கும்.

    Like

  2. //nee imaithu mudikkum idaiveliyil gavanithavai dhaan idhellam
    Indha varigal super//

    நன்றி நேகா.. எனக்கும் பிடித்த வரிகள் அவை 🙂

    Like

  3. IVVALAVU AZHAGANA KAVITHAYAI SOLLIVITTU KADAISIYIL
    “NEE IMAITHU MUDIKKUM IDAIVELIYIL DHAAN GAVANITHADHU IDHELLAM”
    ENDRU SONNIRGALE, ADHU SIMPLY SUPER..,
    ANBUDAN A.ABARNA

    Like

  4. //அழகை அங்குல அங்குலமாக ஆராய்ச்சி நடத்தி அழிவே இல்லாத உங்கள் கற்பனைக்குள் உட்கார வைத்து உருவம் கொடுத்து இருக்கிறீர்கள் !!!!!!!

    //

    மனமார்ந்த நன்றிகள் குகன் 🙂

    //எங்கே பயணிக்கின்றன ? அந்த “அழகி ” யின் பின்னால் தானே ?
    மிகவும் ரசிக்கத் தூண்டும் கற்பனைத்துவம் கவிதை முழுவதும் விரவி இருக்கும் பாங்கே “அழகி” யில் அழகு //

    மீண்டும் நன்றிகள். உங்கள் விரிவான பார்வைகள் எழுத்தை கௌரவப் படுத்துகின்றன. நன்றி.

    Like

  5. நண்பர் சேவியருக்கு,

    அழகை அங்குல அங்குலமாக ஆராய்ச்சி நடத்தி அழிவே இல்லாத உங்கள் கற்பனைக்குள் உட்கார வைத்து உருவம் கொடுத்து இருக்கிறீர்கள் !!!!!!!

    என்னைத் தொடர்ந்த
    என் சுவடுகள்
    இப்போது
    என்னை மட்டும்
    தன்னந்தனியாய் விட்டு விட்டு
    பயணித்துக் கொண்டிருக்கின்றன.

    எங்கே பயணிக்கின்றன ? அந்த “அழகி ” யின் பின்னால் தானே ? 😉
    மிகவும் ரசிக்கத் தூண்டும் கற்பனைத்துவம் கவிதை முழுவதும் விரவி இருக்கும் பாங்கே “அழகி” யில் அழகு !!!!!!!!!!!!!!!!!!

    நட்புடன்
    குகன்

    Like

  6. //(அண்ணாச்சி இது நல்லாயில்ல
    நல்ல சைட் அடிச்சிட்டு கவிதை வேற.)

    இருந்தாலும், கவிதை நன்றாக இருக்கின்றது
    //

    மனதைத் தொடும் விஷயங்கள் தானே கவிதையாகும் 😀

    Like

  7. //இன்னோரு சேவியருக்கு… எப்படி எப்படியோ யோசிச்சி ட்ரை பன்னி இருகிங்க… கடைசில அம்மணி தண்ணி காட்டிடுச்சே… :)))

    //

    நல்லவேளை தண்ணி காட்டிடுச்சு 😉

    Like

  8. (அண்ணாச்சி இது நல்லாயில்ல
    நல்ல சைட் அடிச்சிட்டு கவிதை வேற.)

    இருந்தாலும், கவிதை நன்றாக இருக்கின்றது.

    Like

  9. ///நீ
    ஒரு வார்த்தை பேசியிருந்தால்
    நான் ஒருவேளை
    மூர்ச்சையாகி மடிந்திருக்கலாம்.
    இல்லையேல்
    முக்தி நிலையில் முடிந்திருக்கலாம்.//

    கவிஞர் சேவியருக்கு… இந்த வரி அசத்தல்…

    இன்னோரு சேவியருக்கு… எப்படி எப்படியோ யோசிச்சி ட்ரை பன்னி இருகிங்க… கடைசில அம்மணி தண்ணி காட்டிடுச்சே… :)))

    Like

  10. //ஓராயிரம் வண்ணத்துப் பூச்சிகள்
    உற்சாக ஊர்வலம் செல்வதுபோல்
    செல்கிறாய்..//

    ரொம்ப இனிமையான கற்பனை…
    அன்புடன் அருணா

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.