கி.மு : யோசேப்பு – ஒரு அடிமையின் கதை !

 

யோசேப்பு யாக்கோபின் பிரிய மகன். யாக்கோபிற்கு பல மனைவிகள் மூலம் மொத்தம் பன்னிரண்டு பிள்ளைகள். யோசேப்பும், பென்யமினும் அவருடைய பிரிய மனைவி ராகேலின் பிள்ளைகள். யோசேப்பின் மீது தந்தை யாக்கோபுக்கு அளவு கடந்த பாசம். அவர் யோசேப்பை மிகவும் செல்லமாய்க் கவனித்து வந்தார். அவனு க்காக தனியாக ஒரு அழகிய அங்கியையும் தன் கைப்பட செய்து கொடுத்தார். அதனால் யோசேப்பின் சகோதரர்கள் அனைவருக்கும் அவன் மீது பயங்கர பொறாமை.

‘நாம் பத்து பேர் இருக்கும்போது நம் தந்தை அவனிடம் மட்டும் அளவு கடந்த பாசம் கொண்டிருக்கிறார் பார்த்தீர்களா ? நமக்கு அவர் என்றைக்காவது ஏதாவது செய்து தந்திருக்கிறாரா ? பார்… செல்ல மகனுக்கு அங்கியாம் … ம்ம்ம்’  என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். யோசேப்பு மீது பொறாமையை வளர்த்துக் கொண்டார்கள். ஆனால் யோசேப்புவோ சகோதரர்களிடம் கள்ளம் கபடமில்லாமல் அன்பு கொண்டிருந்தான்.

ஒருநாள் அதி காலையில் அவன் சகோதரர்களிடம் ஓடி வந்து
‘அண்ணா … நான் ஒரு கனவு கண்டேன். சொல்லவா ?’ என்றான்
‘சரி சொல்… என்ன கனவு ?’ சகோதரர்கள் கேட்டனர்.

‘நாம் எல்லோரும் வயலில் அறுவடை செய்து அறுத்த அரிகளைக் கட்டுகளாகக் கட்டிக் கொண்டிருந்தோம். அப்போது என்னுடைய அரிக்கட்டு திடீரென எழுந்து நின்றது. உடனே உங்கள் அரிக்கட்டுகள் எல்லாம் அதை வணங்கின’ என்றான்

சகோதரர்கள் எரிச்சலடைந்தார்கள்.  ‘ஓ… உன்னை நாங்கள் எல்லோரும் வணங்க வேண்டும் என விரும்புகிறாயா ? நீ அதிகாரம் செலுத்த ஆசைப்படுகிறாயா ? போடா… போ’ என்று துரத்தினர். இந்த கனவைச் சொன்னபின் இன்னும் அதிகமாக அவனை வெறுத்தனர்.

இன்னும் சில நாட்கள் சென்றபின் யோசேப்பு இன்னொரு கனவு கண்டான் அதில் சூரியனும், சந்திரனும், பதினொரு நட்சத்திரங்களும் அவனை வணங்கின. இந்த கனவையும் அவன் சகோதரர்களிடம் சொன்னான். அவர்கள் அவன் மீது கொண்ட பொறாமையை அதிகப் படுத்தினார்கள்.

யோசேப்பு இளையவன் ஆகையால் தந்தையுடன் அதிக நேரத்தைச் செலவிட்டான். அவனுடைய சகோதரர்கள் பத்து பேரும் ஆடுகளை மேய்ப்பதற்காக பக்கத்து ஊரான செக்கேமிற்குச் சென்றனர். யோசேப்பு தந்தையுடன் தங்கியிருந்தான்.

நாட்கள் பலகடந்தன, மந்தைகளை ஓட்டிச் சென்ற சகோதரர்கள் திரும்பவில்லை. மகன்களைக் காணாத தந்தை வருந்தினார். அவர் யோசேப்பை அழைத்து,’ மகனே, நீ போய் உன்னுடைய சகோதரர்களும் மந்தையும் நலம்தானா என்பதை விசாரித்து வா’ என்று சொல்லி அனுப்பினார். யோசேப்பும் புறப்பட்டார்.

யோசேப்பு செக்கேமிற்குச் சென்று அந்த ஊர் முழுவதையும் சுற்றிப் பார்த்தான். எங்கும் அவனுடைய சகோதரர்களைக் காணோம். விசாரித்ததில் அவர்கள் அருகிலுள்ள தோத்தான் என்னும் ஊருக்குச் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது. எனவே யோசேப்பு தோத்தானை நோக்கிப் போனார்.

தூரத்தில் யோசேப்பு வருவதைக் கண்ட சகோதரர்கள் கோபம் கொண்டனர். ‘அதோ பார், நம் தந்தையின் செல்ல மகன் வருகிறான். அவனை இங்கேயே கொன்றுவிடவேண்டும். அவன் இருந்தால் தந்தை நம்மைக் கவனிக்கவே மாட்டார்’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

ரூபன், யோசேப்பின் சகோதரர்களில் ஒருவன், யோசேப்பின் மீது வெறுப்பு இருந்தாலும் அவனைக் கொல்வதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. ‘ நாம் அவனைக் கொல்ல வேண்டாம். ஒரு பெரிய குழியில் தள்ளிப் போடுவோம். அவனுடைய இரத்தத்தை சிந்தவேண்டாம். அவன் அங்கேயே கிடந்து செத்து ஒழியட்டும் ‘ என்றான். குழியில் தள்ளிவிட்டால் யாருக்கும் தெரியாமல் இரவில் வந்து அவனைக் காப்பாற்றி அனுப்பி வைக்கலாம் என்பது அவனுடைய ரகசியத் திட்டம். சகோதரர்களுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. அவனைக் கொன்ற பாவம் நமக்கெதற்கு ? அவனே தானாக செத்துத் தொலயட்டும் என்று கூறி அவனைக் குழியில் தள்ள முடிவெடுத்தனர்.

சகோதரர்களின் திட்டத்தை எதுவும் அறியாத யோசேப்பு சகோதரர்களிடம் ஓடோ டி வந்து.. ‘அண்ணா… எல்லோரும் நலம் தானே ? மந்தைகள் எல்லாம் நலம் தானே… உங்களைக் காணாமல் அப்பா ரொம்ப வருத்தப் பட்டார். அதனால் தான் உங்களைத் தேடி வந்தேன்’ என்று சொல்லி தன் முத்துப் பற்கள் காட்டிச் சிரித்தான்.

சகோதரர்கள் தாமதிக்கவில்லை. ‘ இங்கேயும் எங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டாயா ? ‘ என்று கூறிக் கொண்டே அவன் மேல் பாய்ந்து அவனுடைய அங்கியை அவிழ்ந்து அருகிலிருந்த பாழுங்கிணற்றில் தள்ளினார்கள்.

யோசேப்பு திகைத்தான். தன்னுடைய சகோதரர்களின் இந்தத் தாக்குதலை அவன் எதிர்பார்க்கவில்லை. ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று கதறினான். ஆனால் அது வெளியே யாருக்கும் கேட்கவேயில்லை.

அந்த வழியாக வணிகர் கூட்டம் ஒன்று எகிப்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அதைக் கண்ட சகோதரர்களில் ஒருவனான யூதா,’ எனக்கு இன்னொரு யோசனை வருகிறது. இவனைக் குழியில் போட்டு விட்டுப் போவதற்குப் பதிலாக, இந்த வணிகர்களிடம் அடிமையாய் விற்று விடலாமே. அவனைக் கொன்ற பாவமும் வேண்டாம், அவனை குழியில் போட்டு விட்டுப் போகும் பாவமும் வேண்டாம். எல்லாவற்றுக்கும் மேலாக அவன் மூலம் நமக்குப் பணமும் கிடைக்கும். அவன் பள்ளத்திலேயே கிடப்பதால் நமக்கு லாமபில்லை… என்ன சொல்கிறீர்கள் ? ‘ என்று சகோதரர்களிடம் கேட்டான். அவர்களுக்கும் அது நல்ல முடிவாகத் தோன்றியது. எனவே அவனை வெளியே எடுத்து இருபது வெள்ளிக்காசுக்கு அவனை அடிமையாக விற்றனர். யோசேப்பு சகோதரர்களைப் பார்த்து அழுதுகொண்டே வணிகர்களோடு பயணமானான்.

சகோதரர்கள், தங்கள் மந்தையிலிருந்து ஒரு ஆட்டை அடித்துக் கொன்று அந்த இரத்தத்தை யோசேப்பின் அங்கியில் தோய்த்து எடுத்துக் கொண்டு தந்தையிடம் சென்றனர். மிகவும் பதட்டமடைந்தவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு
‘அப்பா… இது நம்ம யோசேப்பின் அங்கியா பாருங்கள். வழியில் கண்டெடுத்தோம். யோசேப்புக்கு நீங்கள் செய்து கொடுத்த அங்கி போல இருக்கிறதே என்று எடுத்து வந்தோம்… சீக்கிரம் பார்த்து சொல்லுங்கள் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது ‘ சகோதரர்கள் சோகத்தை முகத்தில் வரவழைத்துக் கேட்டார்கள்.

அங்கியைக் கண்ட தந்தை அதிர்ந்தார். ‘ ஐயோ.. இது நான் யோசேப்புவிற்குச் செய்து கொடுத்த அங்கியாயிற்றே… என்னுடைய அருமை மகனை ஏதோ காட்டு விலங்கு தாக்கிக் கொன்று விட்டதா ?… ஐயோ என்ன செய்வேன்… அருமை மகனே நீ இறந்து விட்டாயா’ என்று புலம்பி அழுதார். சகோதரர்கள் உள்ளுக்குள் சிரித்தனர். தந்தை தான் உடுத்திருந்த ஆடைகளை அவிழ்ந்தெறிந்துவிட்டு கோணி உடுத்தி சாம்பலில் அமர்ந்து ஏழு நாட்கள் ஒப்பாரி வைத்து அழுது புலம்பினார். சோகமான சம்பவங்கள் நடந்தால் அப்படி அழுவது அக்கால வழக்கம்.

யோசேப்புவை வணிகர்கள் எகிப்து கொண்டு சென்று, பார்வோன் மன்னனின் மெய்க்காப்பாளன் ஒருவனிடம் நல்ல விலைக்கு விற்றனர். கடவுள் யோசேப்போடு இருந்தார். எனவே மெய்க்காப்பாளன் யோசேப்பை அடிமைபோல நடத்தாமல் தன்னுடைய இல்லத்திலேயே தங்க வைத்தார்.

யோசேப்பு தொட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்புற நடந்தன. எனவே மெய்க்காப்பாளன் அவனை தன்னுடைய இல்லத்தின் அனைத்து பொறுப்புகளுக்கும் பொறுப்பாளியாக நியமித்தான். யோசேப்பு அனைத்தையும் திறம்பட நடத்தினான். வருடங்கள் செல்லச் செல்ல அவனுடைய தோற்றம் மிகவும் வலிமையாக, அழகாக மாறியது.

யோசேப்பின் அழகிய கட்டுடலைக் கண்ட மெய்க்காப்பாளனின் மனைவிக்குள் மோகம் ஊறியது. எப்படியாவது அவனோடு உறவு கொள்ள வேண்டும் என எண்ணினாள். யோசேப்பை அழைத்து,

‘தலைவர் எல்லாவற்றையும் கவனிக்குமாறு தானே உன்னை நியமித்தார். ஆனால் நீ சில விஷயங்களைக் கவனிப்பதேயில்லை’ என்றாள்.

‘இல்லையே அம்மா, நான் எல்லாவற்றையும் நன்றாகக் கவனிக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்’

‘உன்னிடம் ஒரே ஒரு பிழை மட்டும் தான் இருக்கிறது. நீ அவருடைய சொத்துக்களில் ஒன்றை மட்டும் கவனிக்காமல் விட்டு விட்டாய்’ அவள் கண்சிமிட்டினாள்.

‘புரியும் படி சொல்லுங்களேன்’

‘நீ என்னைக் கவனிப்பதேயில்லையே’ அவள் குழைந்தாள்.

‘உங்களைக் கவனிக்கத் தான் தலைவர் இருக்கிறாரே’ யோசேப்பு சிரித்தான்.

‘உன்னைப் போல அழகான வாலிபன் இங்கே யாரும் இல்லை. உன்னுடைய கவனிப்பு எனக்கு வேண்டும்’ அவள் சொல்ல, யோசேப்பு திடுக்கிட்டான். அதுவரை எஜமானி தன்னுடன் விளையாட்டாய் பேசுகிறாள் என்று நினைத்திருந்தவனுக்கு இப்போது அதிச்சி..

‘அம்மா…. அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்’ யோசேப்பு குரலைத் தாழ்த்தினான்.

‘இதில் தப்பு ஒன்றுமில்லை யோசேப்பு. வா… என்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள். என்னுடைய விருப்பமில்லாமல் என்னைப் பலாத்காரம் செய்வது தான் தவறு. இதில் தவறு ஒன்றும் இல்லை. வா… தலைவனுக்குத் தெரியாமல் சங்கமித்திருப்போம்’ என்றாள்.

யோசேப்பு மறுத்தான்.,’ ஐயோ… நீங்கள் என் எஜமானி. தலைவர் என்மீது கொண்ட நம்பிக்கையால் தான் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்தார். உங்களை அவர் என்னிடம் ஒப்படைக்கவில்லை. உங்களோடு உறவு கொள்வது நான் தலைவனுக்குச் செய்யும் துரோகம். என்னை மன்னியுங்கள்’

‘யோசேப்பு…. ஏன் பயப்படுகிறாய் ? இது யாருக்கும் தெரியாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ என்னுடன் இன்று ஒரு நாள் மட்டும் உறவு கொள்…’

‘இல்லை எஜமானி… யாருக்கும் தெரியாவிட்டாலும். இது கடவுளுக்குத் தெரியும் என்னை விட்டு விடுங்கள். இது தவறு.’ என்று சொல்லி விட்டு அவ்விடம் விட்டு ஓடினான்.

ஆனாலும் அவள் யோசேப்பை தொடர்ந்து வற்புறுத்தி வந்தாள். ஒருநாள் வீட்டில் யாருமே இல்லாதபோது, தலைவி யோசேப்பின் மேலாடையை இழுத்து அவிழ்த்தாள்,’ யோசேப்பு. இன்று நீ என்னுடன் உறவு கொண்டேயாகவேண்டும். கவலைப்படாதே.. வா… என்னுடைய அழகிய உடலை அனுபவி… என்னோடு படு…’ என்று யோசேப்பை அழைத்தாள். அவன் மீண்டும் மறுத்தான். தலைவி அதிகாரமாய் சொல்லிப் பார்த்தாள், கெஞ்சலாய் சொல்லிப் பார்த்தாள், கொஞ்சலாய்ச் சொல்லிப் பார்த்தாள். யோசேப்பு எதற்கும் வளைந்து கொடுக்கவில்லை. தலைவி விடவில்லை. அவனை வலுக்கட்டாயமாக இழுத்தாள். அவன் தன்னுடைய மேலாடையை விட்டு விட்டு மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினான்.

தலைவி தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி பொருமினாள். ஒரு அடிமை தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்கவில்லையே என ஆத்திரம் கொண்டால். எப்படியும் யோசேப்பை பழிவாங்க வேண்டுமென காத்திருந்தாள்.

மாலையில் கணவன் வீடு திரும்பியதும் அவனிடம்,’வேலைக்கு ஆள் எடுக்கும் போது எதையும் விசாரிப்பதில்லையா ?’ என்று பொய்க்கோபத்துடன் கேட்டாள்.

‘நீ யாரைப்பற்றிச் சொல்கிறாய் ?’

‘யோசேப்பு பற்றித் தான்’

‘அவனுக்கு என்ன ? நன்றாகத் தானே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறான்’

‘ஆமாம்… ரொம்பவும் நன்றாகக் கவனிக்கிறான். சொத்துக்களை மட்டுமல்ல, உங்கள் மனைவியையும் சேர்த்து கவனிக்கிறான். இன்று அந்த அடிமை நாய் என்ன செய்தான் தெரியுமா ? என்னுடைய மேலாடையை இழுத்து என்னை பலாத்காரம் செய்யப் பார்த்தான். நான் கூச்சலிட்டதும் இந்த மேலாடையை விட்டு விட்டு ஓடி விட்டான்’ அவள் பொய்யாய் விசும்பினாள்.

தலைவன் அதிர்ந்தான். அவன் யோசேப்பை அழைத்து,’ துரோகியே… உன்னை எவ்வளவு நம்பினேன். இப்படி நம்பிக்கை துரோகம் செய்து விட்டாயே.. ‘ என்று கூறி அவனை அரச கைதிகளை அடைக்கும் கொடிய சிறையில் அடைத்தான். செய்யாத தவறுக்காக யோசேப்பு சிறையில் தள்ளப்பட்டார்.

சிறையிலும் ஆண்டவர் யோசேப்போடு இருந்தார். எனவே சிறைக்காப்பாளரின் தயவு அவருக்குக் கிடைத்தது. கைதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தார் அவர். யோசேப்பும் அந்த பணியைச் செவ்வனே செய்து வந்தார்.

ஒருநாள் மன்னனனுக்கு மதுபரிமாறுபவனும், அப்பம் தயாராக்குபவனும் ஏதோ காரணத்துக்காகத் தண்டனை பெற்று அதே சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களுக்கும் யோசேப்பு தான் கண்காணிப்பாளனாய் இருந்தான்.

சிலநாட்கள் கழிந்தபின் ஒருநாள் இரவு அவர்கள் இருவரும் ஒரே விதமான இரண்டு கனவுகளைக் கண்டனர். கனவு கண்டு கண்விழித்துக் கனவின் பொருள் புரியாமல் வருத்தமாய் அமர்ந்திருந்தனர். யோசேப்பு அவர்கள் வருத்தமாய் இருப்பதைக் கண்டார்.
‘ஏன் வருத்தமாய் இருக்கிறீர்கள். சிறையில் ஏதேனும் உங்களை வருத்தமடையச் செய்ததா ?’ யோசேப்பு கேட்டார்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. நாங்கள் இருவருமே ஒவ்வொரு கனவு கண்டோ ம். இரண்டுமே ஒரே போல் இருக்கின்றன ஆனால் அதன் விளக்கம் தெரியவில்லை’ என்றனர்.

‘இவ்வளவு தானா சங்கதி… கனவை என்னிடம் சொல்லுங்கள். கனவின் பலன் கூறும் திறமையைக் கடவுள் எனக்கு அளித்திருக்கிறார். உங்கள் கனவுகளின் பயனை நான் சொல்கிறேன்’

மதுபரிமாறுபவன் தன் கனவைச் சொன்னான்,’ மூன்று திராட்சைக் கிளைகள் நிற்கக் கண்டேன். அவை பழுத்துத் தொங்கின. நான் அவற்றைப் பிழிந்து கிண்ணத்தில் வடித்து மன்னனுக்குக் கொடுத்தேன்’ இதுவே கனவு.

‘ஆஹா… இது நல்ல கனவல்லவா. இன்னும் மூன்று நாட்களில் நீ விடுதலை செய்யப் படுவாய். மீண்டும் உனக்கு மதுபரிமாறும் வேலை கிடைக்கும். நீ மீண்டும் வேலையில் அமர்ந்ததும் மன்னனிடம் எனக்காகப் பரிந்து பேசி என்னை சிறையிலிருந்து விடுதலை செய். ஏனெனில் நான் நிரபராதி’ என்றான்.

மதுபரிமாறுபவன் மகிழ்ந்தான். அப்பம் சுடுபவன் தன் கனவைச் சொன்னான்.

‘என் தலையில் மூன்று அப்பக் கூடைகள் இருந்தன. அவற்றைப் பறவைகள் வந்து தின்றுவிட்டன’ இதன் விளக்கம் என்ன? என்றான்

‘ஐயோ… சகோதரனே.. சோகமான செய்தியைச் சொல்ல வைத்து விட்டாயே. இன்னும் மூன்று நாட்களில் நீ கழுமரத்தில் ஏற்றப்படுவாய். உன் தலையை கழுகுகள் வந்து கொத்தும். உன் நிலையை நினைத்து நான் வருந்துகிறேன்’ என்றான்.

அப்பம் சுடுவோன் மிகவும் கலக்கமுற்றவனாக இடிந்து போய் அமர்ந்தான்.

மூன்று நாட்களுக்குப் பின், யோசேப்பு சொன்னதன் படியே அவர்கள் இருவருக்கும் நடந்தது. ஆனால் மதுபரிமாறுபவன் யோசேப்பை மறந்தான். அவனுக்கு உதவிசெய்யவில்லை. யோசேப்பு சிறையிலேயே கிடந்தான்.

இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. மீண்டும் கனவு ! இப்போது கனவு கண்டது மன்னன் !! இரண்டு கனவுகள்.

மன்னனின் கனவில் நைல் நதியிலிருந்து ஏழு கொழுத்த பசுக்கள் வெளியேறி வந்தன. அதைத் தொடர்ந்து ஏழு நலிந்த பசுக்கள் வெளியேறி வந்து முதலில் வந்த அந்த ஏழு கொழுத்த பசுக்களையும் தின்று விட்டன.

ஏழு செழிப்பான கதிர்கள் வயலில் விளைந்தன. அதன் பின் ஏழு கருகிய பயிர்கள் தோன்றி அந்த ஏழு செழிப்பான கதிர்களையும் விழுங்கி விட்டன.

இந்த இரண்டு கனவுகளும் மன்னனின் தூக்கத்தைக் கெடுத்தன. இதன் பலனை அறிய நாடெங்கும் மன்னன் மந்திரவாதிகளையும், குறி சொல்வோரையும் வரவழைத்தான். ஆனால் யாராலும் அந்த கனவுகளின் விளக்கத்தைக் கணிக்க முடியவில்லை. மன்னனின் வருத்தம் அதிகரித்தது. ஏதாவது புரிகிறதா என்று தன் அரசவையில் இருக்கும் அனைவரிடமும் கேட்டான். பயனில்லை.

அப்போது தான் மன்னனின் மது பரிமாறுவோனுக்கு யோசேப்பின் நினைவு வந்தது. அவன் மன்னனிடம் சென்று
‘அரசே… நான் ஒன்று கூறுவேன். தவறெனில் மன்னியுங்கள்.’

‘சொல்.. என்ன விஷயம் ? கனவின் விளக்கம் உனக்குத் தெரியுமா ?

‘எனக்குத் தெரியாது அரசே. ஆனால் சிறையில் யோசேப்பு என்றொருவர் இருக்கிறார். அவர் கனவுகளுக்குச் சரியான விளக்கம் சொல்வார்’

‘என்ன ? கனவுகளுக்கு விளக்கம் சொல்பவன் ஒருவன் சிறையில் இருக்கிறானா ? நம்பும்படியாக இல்லையே ?’ மன்னன் சந்தேகக் குரலில் கேட்டான்.

‘அரசே.. உண்மையிலேயே அவன் கனவுகளுக்குச் சொல்லும் பலன்கள் மிகவும் சரியாக இருக்கும். நானும் அப்பம் தயாரிப்போனும் சிறையில் இருந்தபோது எங்கள் கனவுகளுக்குச் சரியான விளக்கம் சொன்னான். அதன்படி நான் விடுதலையானேன், அப்பம் தயாரிப்போன் கழுமரம் ஏறினான்.’

‘அப்படியா ? அப்படியானால் உடனே அவனை இங்கே அழைத்து வாருங்கள்’ என ஆணையிட்டான் மன்னன். யோசேப்பு மன்னனின் அரசவைக்கு அழைத்து வரப்பட்டான்.

‘நீ கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் வித்தகனா ?’ மன்னன் அதிகாரத் தோரணையில் கேட்டான்.

‘நானல்ல… கடவுள் எனக்கு உணர்த்துவதை நான் சொல்வேன். அவ்வளவே…’ பணிவாய் பதில் சொன்னான் யோசேப்பு.

சரி இதோ நான் கண்ட கனவுகளைக் கேள்… இதற்கு விளக்கம் சொல்.

நைல் நதியிலிருந்து ஏழு கொழுத்த பசுக்கள் வெளியேறின. அதைத் தொடர்ந்து ஏழு நலிந்த பசுக்கள் வெளியேறி கொழுத்த பசுக்களைத் தின்று விட்டன.
ஏழு செழிப்பான கதிர்கள் வயலில் விளைந்தன. அதன் பின் ஏழு கருகிய பயிர்கள் தோன்றி அந்த ஏழு செழிப்பான கதிர்களையும் விழுங்கி விட்டன.

‘இவையே கனவுகள். விளக்கம் தெரிகிறதா ?’ மன்னன் வினவினான்.

‘தெரிகிறது மன்னா. ஏழு கொழுத்த பசுக்கள் என்பது ஏழு வளமான ஆண்டுகளைக் குறிக்கும். ஏழு நலிந்த பசுக்கள் அதைத் தொடர்ந்து வரும் ஏழு வறட்சியான, பஞ்சத்தின் ஆண்டுகளைக் குறிக்கும். பயிர்களின் விளக்கமும் இதுவே.’

‘ஒரே பொருளில் ஏன் இரண்டு கனவுகள் வந்தன என்பதைப்பற்றி உனக்கு ஏதேனும் தெரியுமா ?’

‘தெரியும் அரசே. ஒரு கனவு உண்மையை உங்களுக்கு கடவுளால் அறிவிக்கப் பட்டது. இன்னொரு கனவு அதை உறுதி செய்கிறது’

‘அப்படியானால் உன்னுடைய விளக்கத்தின்படி இன்னும் ஏழு ஆண்டுகளுக்குப் பின் நாட்டில் கடுமையான பஞ்சம் வரும் என்கிறாய். அப்படித்தானே ?’

‘ஆம் அரசே. ஆனால் அந்தப் பஞ்சத்திலிருந்து நாம் தப்பிக்க ஒரு வழி இருக்கிறது’

‘என்ன வழி ?’

‘மன்னா, வரும் ஏழு ஆண்டுகள் நமக்கு வளமானதாக இருக்கும். அதன் பின்பு தான் பஞ்சத்தின் ஆண்டுகள் வரப் போகின்றன. எனவே இந்த பஞ்சத்திலிருந்து எகிப்து தப்பவேண்டுமெனில் இப்போதிருந்து ஏழு ஆண்டுகள் நாம் நகரெங்கும் தானியங்களைக் களஞ்சியங்கள் கட்டிச் சேமிக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தானியங்களைச் சேமித்தோமென்றால், அடுத்த ஏழு ஆண்டைய கொடிய பஞ்சத்திலும் எகிப்து பசியாறும்’ யோசேப்பு சொன்னார்

யோசேப்பின் விளக்கங்களும், வழிமுறைகளையும் கேட்ட மன்னன் வியந்தான். ‘ இதோ… அறிவும், திறமையும், கடவுள் அருளும் கொண்ட உன்னையே நான் அதற்குப் பொறுப்பாளியாக்குகிறேன். நீ இனி எகிப்து முழுவதற்கும் ஆளுநன் ஆவாய். நான் மட்டுமே உனக்கு மேலதிகாரி. மற்ற அனைவருக்கும் நீயே மேலதிகாரி. நீ சொன்னபடி எகிப்தில் தானியங்களை சேமிக்கும் பணியைத் துவங்கு. எதிர்காலப் பஞ்சத்திலிருந்து நாட்டைக் காப்பாற்று’ மன்னன் ஆணையிட்டான்.
யோசேப்பு மகிழ்ந்தார். அடிமையாய் விற்கப்பட்ட தான் எகிப்து முழுமைக்கும் ஆளுநர் ஆனது கடவுளின் செயல் தான் என உறுதியாய் நம்பினார்.

எகிப்து நகர் முழுவதும் ஏழு ஆண்டுகள் கணக்கின்றி தானியங்கள் யோசேப்பின் கண்காணிப்பின் கீழ் சேமிக்கப்பட்டன. ஏழு ஆண்டுகள் முடிந்தபோது எகிப்தின் தானியக் கிடங்குகள் எல்லாம் நிரம்பி வழிந்தன.

நாட்டில் பஞ்சம் துவங்கியது.

பஞ்சம் தன் கொடிய நகங்களை நீட்டி மக்களைப் பிராண்டியபோதும் எகிப்து மட்டும் எந்தக் குறைவும் இன்றி மகிழ்ந்திருந்தது. யாருக்கும் எதுவும் குறைவில்லை. மக்களுக்குத் தானியங்கள் யோசேப்பின் கண்காணிப்பில் குறைவின்றி வழங்கப்பட்டன. மக்கள் எல்லோரும் யோசேப்பின் திறமையைக் கண்டு வியந்தனர்.

யோசேப்பின் சகோதரர்களையும் பஞ்சம் பிடித்துக் கொண்டது !

யாக்கோபு தம் பத்து மகன்களையும் அழைத்து,’ எங்கும் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் எகிப்தில் மட்டும் பஞ்சம் இல்லையென்று கேள்விப்பட்டேன். நம்மிடம் உண்பதற்குத் தானியங்கள் ஏதும் இல்லை. என்வே நீங்கள்  எகிப்திற்குப் போய் நமக்கு உணவு வாங்கி வாருங்கள்’ என்று அவர்களை எகிப்திற்கு அனுப்பினார். தங்கள் சகோதரன் தான் எகிப்து தேசத்தின் ஆளுனர் என்பதை அவர்கள் யாருமே அறிந்திருக்கவில்லை.

இளையவன் பென்யமினை மட்டும் அவர் அவர்களோடு அனுப்பவில்லை. யோசேப்பை இழந்த துயரத்திலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. இந்த இளையவனையும் இழந்து விடக் கூடாதே என்னும் கவலை அவரிடம் இருந்தது.

அவர்கள் அனைவரும் எகித்து நாட்டுக்குச் சென்று யோசேப்பின் பாதங்களில் விழுந்து வணங்கினார்கள். சகோதரர்களைப் பார்த்த யோசேப்பு திடுக்கிட்டார். சகோதரர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் அவருடைய முகத்தை உற்று நோக்கவில்லை. ஆளுநரின் முகத்தை யாரும் ஏறிட்டுப் பார்க்கக் கூடாது என்பது அங்கே எழுதப்படாத விதி.

சகோதரர்கள் தான் வந்திருக்கிறார் என்று அறிந்தும் யோசேப்பு அறியாதவர் போல் நடித்தார். அவர்களிடம் கடுமையாய் பேசினார்.
‘நீங்கள் யார். ? எங்கிருந்து வருகிறீர்கள் ? நீங்கள் உளவாளிகள் தானே ? எகிப்து நாட்டை வேவு பார்க்கத் தானே நீங்கள் வந்திருக்கிறீர்கள்’ என்று கர்ஜித்தார்.

அவர்களோ,’ தயவு செய்து மன்னியுங்கள். நாங்கள் உளவாளிகள் அல்ல. பஞ்சத்தால் நாங்களும் எங்கள் தந்தையும் மிகவும் அவதியுற்றோம் அதனால் தான் நாங்கள் உமது பாதத்தில் வந்து மண்டியிடுகிறோம்’ என்றனர்.

யோசேப்போ’ உங்களை எப்படி நம்புவது ? உங்களைப் பார்த்தால் உளவாளிகள் போலதான் தெரிகிறது’ என்றார்.

‘தயவு செய்து எங்களை நம்புங்கள். நாங்கள் உளவாளிகள் அல்ல. கருணை காட்டுங்கள். நாங்கள் பன்னிரண்டு பேர் உண்டு. ஒருவன் இறந்து விட்டான். இன்னொரு இளையவனை எங்கள் தந்தை எங்களோடு அனுப்பவில்லை. அதனால் தான் நாங்கள் பத்து பேரும் உம்மிடம் வந்திருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒரு தந்தையின் மக்கள்’ என்றனர்.

‘ என்னால் நம்பமுடியவில்லை. உங்களைப் பார்த்தால் எகிப்து நாட்டில் பாதுகாப்பு இல்லாத இடங்களைப் பார்வையிட வந்தவர்கள் போலத் தான் தெரிகிறது. யாரங்கே… இதோ இவர்களைப் பிடித்து மூன்று நாள் சிறையில் அடையுங்கள்’ யோசேப்பு ஆணையிட்டார். அவர்களுக்குச் சிறையில் உணவுக்கு எந்தக் குறையும் வராமல் ரகசியமாய் கவனித்துக் கொண்டார்.

மூன்று நாட்களுக்குப் பின் யோசேப்பு அவர்களிடம் வந்து. ‘ நீங்கள் சொன்னவற்றையெல்லாம் யோசித்துப் பார்தேன். ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையாய் கூட இருக்கலாம். எதற்கும் நீங்கள் போய் உங்கள் இளைய சகோதரனை அழைத்து வாருங்கள். அவனை நீங்கள் அழைத்து வந்தால் நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையென்று நான் அறிந்து கொள்வேன்.’

‘சரி நாங்கள் சென்று அவனை அழைத்து வருகிறோம்.’

‘ஆனால், உங்களை எப்படி நம்புவது ? தம்பியை அழைத்து வருகிறேன் என்று சொல்லி நீங்கள் தப்பிப் போக நினைக்கலாம் இல்லையா ? அதனால் உங்களில் ஒருவன் இங்கே இருக்கட்டும் மற்றவர்கள் போய் இளையவனை அழைத்து வாருங்கள்’ யோசேப்பு சொன்னார்.

அவர்களுடைய சகோதரர்களில் ஒருவரான சிமியோன் மட்டும் சிறையில் இருக்க, மற்றவர்கள் புறப்படத் தயாரானார்கள்.

யோசேப்பு பணியாளனை அழைத்து,’ இவர்களுடைய அனைத்து தானிய மூட்டைகளிலும் தானியங்களை நிறைத்து அனுப்பு’ என்று ஆணையிட்டார். அவர்கள் அப்படியே செய்தார்கள். சகோதரர்கள் தங்கள் மூட்டைகளோடு பயணமானார்கள்.

வழியில் ஒரு சத்திரத்தில் இளைப்பாறினார்கள். அவர்களுடைய கழுதைகளில் ஒன்று மிகவும் களைத்துப் போய் இருந்தது.

‘சரி… ஒரு மூட்டையைத் திறந்து கொஞ்சம் தானியம் எடுத்து கழுதைக்குக் கொடுப்போம்’ சொல்லிக் கொண்டே அவர்கள் தானிய மூட்டையைத் திறந்தார்கள். அதிர்ந்தார்கள். அவர்களுடைய தானிய மூட்டையில் தானியத்தோடு சேர்ந்து தானியத்துக்காய் அவர்கள் கொடுத்த பண முடிப்பும் இருந்தது.

‘நாம் தானியத்துக்காகக் கொடுத்த பணம் எப்படி இங்கே வந்தது ?’

‘ஒரு வேளை தவறுதலாக வைத்துக் கட்டியிருப்பார்களோ’ அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டே வீட்டை வந்தடைந்தார்கள்.

நேராக தந்தையிடம் சென்று தங்களுக்கு நடந்தவற்றை அனைத்தையும் கூறினர். பென்யமினை கூட்டிக் கொண்டு சென்றால் தான் சிமியோன் விடுவிக்கப் படுவான் என்றும் சொன்னார்கள்.

தந்தை புலம்பினார். ‘முதலில் ஒரு மகனை இழந்தேன். இப்போது இன்னும் ஒருமகனை இப்போது இழந்து விட்டேனே. அவன் சிறையில் என்ன பாடு படுகிறானோ ? அவனுடைய உயிருக்கு உத்தரவாதம் கூட இல்லை.  நீங்கள் ஏன் இன்னும் ஒருவன் இருக்கிறான் என்று சொன்னீர்கள் ? அதைச் சொல்லாமல் இருந்திருக்கக் கூடாதா ? இப்போது நீங்கள் பென்யமினையும் கொல்லப் பார்க்கிறீர்களா ?’  என்று கதறினார்.

‘இல்லையப்பா… அவர் நம்மைப் பற்றியும் நம் குடும்பத்தைப் பற்றியும் துருவித் துருவி விசாரித்தார்… உங்களைப் பற்றி நிறைய கேட்டார். நீங்கள் உயிரோடு நலமாக இருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்டார். அவரிடம் பொய்சொல்லித் தப்புவிக்க முடியவில்லை .. மன்னியுங்கள்’ சகோதரர் தலை கவிழ்ந்தனர்.

‘ஆளுநன் விசாரிக்கத் தான் செய்வான். அதற்காக எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுவதா ?’ தந்தை நிறுத்தாமல் தவித்தார்.

‘கவலைப்படாதீர்கள் அப்பா. நாங்கள் ஏதாவது வழி செய்து அவனைக் கூட்டி வரலாம். நீங்கள் ரொம்ப சோர்வாக இருக்கிறீர்கள். நாங்கள் கொண்டு வந்திருக்கும் தானியத்திலிருந்து கொஞ்சம் எடுத்து சமைக்கலாம்’

சொல்லிக் கொண்டே அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தானிய மூட்டைகளைப் பிரித்தார்கள்.  தங்கள் தானிய மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது எல்லா மூட்டைகளிலும் பணமுடிப்பு இருந்தது. அதைக் கண்டு அவர்கள் இன்னும் அதிகமாக அச்சமடைந்தனர்.

யாக்கோபு அழத் துவங்கினார். ‘என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்களே ? முதலில் யோசேப்பு இறந்து போனான், இப்போது சிமியோனையும் விட்டு விட்டு வந்திருக்கிறீர்கள். இனிமேல் நான் பென்யமினையும் இழக்க வேண்டுமா ? முடியவே முடியாது. ராகேலுக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகளில் யோசேப்பை இழந்து விட்டேன். இனி இருப்பது பென்யமின் மட்டுமே அவனையும் இழக்க நான் தயாராக இல்லை’. என்று பிடிவாதமாய் மறுத்து விட்டார்.

ஆனால் அவருடைய பிடிவாதம் நீண்ட நாட்கள் நிலை நிற்கவில்லை. கொண்டு வந்த தானியங்கள் தீரத் துவங்கின. மேலும் எகிப்திற்குச் சென்று ஏதேனும் வாங்கி வந்தால் தான் உண்ண முடியும் என்னும் நிலமை. அங்கே செல்ல வேண்டுமென்றால் பென்யமினைக் கொண்டு போயாகவேண்டும் ? என்ன செய்வதென்று தெரியாமல் சகோதரர்களும், தந்தையும் திகிலுற்றார்கள்.

அப்பா,’ நாங்கள் பென்யமினைக் கூட்டிக் கொண்டு போகாவிடில் நாங்கள் ஆளுநரிடம் சொன்னதெல்லாம் பொய்யென்று ஆகிவிடும். பிறகு சிமியோனை மீட்கவும் முடியாது, நாங்களும் சிறையிலடைக்கப் படுவோம்… தயவு செய்து பென்யமினை அனுப்புங்கள். எப்படியாவது அவருடைய காலில் விழுந்து சிமியோனையும் விடுவிக்கச் செய்து, தானியங்களையும் வாங்கி வருகிறோம்’ சகோதரர்கள் தந்தையிடம் விண்ணப்பம் வைத்தனர். ஆனாலும் பென்யமினுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்னும் பயம் அவர்களுக்குளும் இருந்தது.

யாக்கோபுக்கு பென்யமினை அனுப்புவதில் சிறிதும் உடன்பாடு இல்லை. ஆனால் அவனை அனுப்பாமல் ஏதும் நடக்கப் போவதில்லை என்பது அவருக்கும் புரிந்தது. என்ன செய்வது என யோசித்தார்.

‘சரி… பென்யமினை அழைத்துக் கொண்டு போங்கள். ஆனால் அவனுக்கு ஏதும் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. அவன் திரும்பாவிடில் நீங்கள் என்னை உயிருடன் பார்க்க முடியாது. இன்னொன்றும் சொல்கிறேன்… போனதடவை உங்கள் பணம் உங்கள் மூட்டையிலேயே இருந்தது இல்லையா ? அது ஒரு வேளை தவறுதலாகவோ, அல்லது உங்களைச் சோதிப்பதற்காகவோ வைத்ததாக இருக்கலாம். அதனால் இந்தமுறை அதையும் சேர்ந்த்து இரண்டு மடங்கு பணத்தைக் கொடுங்கள். கூடவே நிறைய அன்பளிப்புகளையும், காணிக்கைகளையும் கொண்டு போங்கள். எல்லோரும் பத்திரமாய் போய்வாருங்கள். நீங்கள் பத்திரமாய் திரும்பி வரும் வரை என்னுடைய உயிர் என்னிடம் இருக்காது.. கவனம்….’ யாக்கோபு கண்ணீரோடு கையசைத்தார்.

அவர்கள் பதட்ட மனத்தோடு எகிப்தை வந்தடைந்து யோசேப்பின் முன் வந்து நின்றார்கள். அவர்களைக் கண்ட யோசேப்பு மகிழ்ந்தான். அவர் தன்னுடைய பணியாளனை நோக்கி,’ இவர்களை என் வீட்டுக்குக் கூட்டிப் போ. இவர்களுக்கு நல்ல கொழுத்த கன்றை அடித்து விருந்து ஏற்பாடு செய். என்னோடு இவர்களும் இன்று மதிய உணவு உண்ணட்டும்’ என்று ஆணையிட்டார்.

சகோதரர்களுக்கோ பயம் மேலும் அதிகரித்தது. அவ்வளவு தான் நாம் தொலைந்தோம். ஏதோ ஒரு சதித் திட்டத்தோடு தான் இந்த விருந்து நடக்கிறது. இனிமேல் நாம் தப்பவே முடியாது. நம் உடமைகளைப் பறித்து இவர் நம்மை சிறையில் தான் அடைக்கப் போகிறார் என்று நடு நடுங்கினார்கள். நடுங்கிக் கொண்டே அந்த பணியாளரிடம்,’ ஐயா… கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நாங்கள் தானியம் வாங்க வந்தபோது நீங்கள் தவறுதலாக எங்கள் பணத்தையும் அதிலேயே போட்டு கட்டி விட்டீர்கள் போலிருக்கிறது. எனவே அந்தப் பணத்தையும் சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம்’ என்றனர்.

பணியாளன் சிரித்தான்,’ அப்படியெல்லாம் இருக்காதே. உங்கள் பணம் என்னிடம் வந்து விட்டது. நீங்கள் உளறாமல் வாருங்கள்’ என்றார். சகோதரர்கள் ஏதும் புரியாமல் விழித்தார்கள்.

எல்லோரும் யோசேப்பின் வீட்டில் வந்து பயத்தோடு காத்திருந்தனர். கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை எல்லாம் தயாராக எடுத்து வைத்திருந்தனர். யோசேப்பு வந்ததும் அவரிடம் காணிக்கைகளைக் கொடுத்து அவருடைய மனதைக் குளிர வைக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.

யோசேப்பு மிடுக்குடன், ஆளுநர் உடையில் வந்தார்.

அவர்கள் அவரை ஏறிட்டுப் பார்க்காமல் காணிக்கைகளை அவர்முன் வைத்துவிட்டு தரையில் விழுந்து வணங்கினார்கள்.

‘ எழுந்திருங்கள்… உங்கள் தந்தை நலம் தானே ?’

‘ எங்கள் தந்தை நலமாய் இருக்கிறார்.’

‘ எங்கே … உங்கள் இளைய தம்பி ? பென்யமின் ?’

‘இதோ….’ அவர்கள் பென்யமினை சுட்டிக் காட்டினார்கள்.

தம்பியைக் கண்டதும் யோசேப்புவின் உள்ளம் பாசத்தால் உருகியது. இமைகளை உடைத்துக் கொண்டு கண்ணீர் வெளியேறியது. உடனே உள் அறைக்குச் சென்று சிறிது நேரம் அழுது விட்டு மீண்டும் ஆளுநர் மிடுக்கில் அவர்களிடம் வந்தார்.

‘சரி…. வாருங்கள் உண்போம்…’ என்று சொல்லிக் கொண்டே யோசேப்பு அவர்களை மூத்தவன் துவங்கி பென்யமின் வரை வயது அடிப்படையில் வரிசையாக அமர்த்தினார். அதைக் கண்ட சகோதரர்கள் மிகவும் ஆச்சரியப் பட்டனர்.

எல்லோரும் திருப்தியாக உணவு உண்டு மதுவும் அருந்தினார்கள்.

இப்போதும் யோசேப்பு தன்னை யாரென்று சொல்லவில்லை. இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்ப்போம் என்று முடிவெடுத்து, பணியாளனை தனியே அழைத்தார்.

‘எல்லாருடைய மூட்டையிலும் தானியத்தையும், அவர்கள் தந்த பணத்தையும் வைத்துக் கட்டிவிடு. பென்யமினுடைய பையில் மட்டும் என்னுடைய வெள்ளிக் கோப்பையையும் வைத்துக் கட்டு. அவர்கள் போகட்டும். கொஞ்ச தூரம் சென்றபின் நீ அவர்களைத் துரத்திப் பிடித்து இங்கே கூட்டி வா’ என்றார்.

பணியாளன் ஏதும் புரியாமல் விழித்தான் ஆனாலும் யோசேப்பு சொல்வதைச் செய்வது தானே அவனுடைய வேலை ! அதைச் செய்தான்.

அவர்கள் தானிய மூட்டைகளோடு சென்று புறப்பட்டார்கள். சற்று நேரப் பயணத்துக்குப் பின் அவர்களைத் தொடர்ந்து சென்ற பணியாளன் குரல் கொடுத்தான்.

‘நில்லுங்கள்’

பணியாளனின் குரல் தங்களுக்குப் பின்னால் ஒலிப்பதைக் கேட்டதும் வழியில் வந்து கொண்டிருந்த சகோதரர்கள் நின்றார்கள்.

‘சொல்லுங்கள்… ஐயா…’

‘என்ன இப்படி செய்து விட்டீர்கள் ? உங்களை மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்ட எங்கள் தலைவரிடமே நீங்கள் உங்கள் வேலையைக் காட்டி விட்டீர்களே ?’

‘ஐயா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? புரியவில்லையே ?’

‘புரியவில்லையா ? எங்கள் தலைவனின் வெள்ளிக் கிண்ணத்தைத் திருடி வந்து விட்டீர்களே…’

‘நாங்களா ? தலைவரின் வெள்ளிக் கிண்ணத்தைத் திருடினோமா ? இல்லவே இல்லை… இப்படியெல்லாம் வீண் பழி சுமத்தாதீர்கள். நாங்கள் அப்படி பட்டவர்கள் அல்ல’

‘பொய் எல்லாம் வேண்டாம். எங்கள் தலைவர் குறி பார்ப்பதில் கெட்டிக் காரர். வெள்ளிக் கிண்ணம் காணவில்லை என்றதும் குறிபார்த்தார். அது உங்களிடம் தான் இருக்கிறதாம்.. உங்களை நான் சோதனையிட்டாக வேண்டும்’

‘தாராளமாக எங்களைச் சோதனையிடுங்கள். எங்களில் யாரிடமாவது அந்த வெள்ளிக் கிண்ணம் இருந்தால் நீங்கள் அவனைக் கொன்று விடலாம்’ சகோதரர்கள் சொன்னார்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை அது பென்யமினின் மூட்டைக்குள் இருக்கிறது என்னும் ரகசியம்.

மூட்டைகள் ஒவ்வொன்றாய் அவிழ்க்கப் பட்டன. பென்யமினின் மூட்டை அவிழ்க்கப் பட்டபோது பளிச்சிட்டது வெள்ளிக் கிண்ணம்.

சகோதரர்கள் அதிர்ந்தார்கள். எல்லோரும் யோசேப்பின் முன்னிலையில் இழுத்து வரப்பட்டார்கள்.

‘திருடர்களே… உங்களுக்கு விருந்து தந்து உபசரித்தேன்.. நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா ‘ யாக்கோபு போலியாய் கர்ஜித்தார்.

‘ஐயா… எப்படிச் சொல்வது ? அது எப்படி வந்ததென்றே எங்களுக்குத் தெரியாது… என்ன சொல்லி உங்களை நம்பவைப்பேன். நாங்கள் அப்படிப் பட்டவர்கள் அல்ல. நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள்’ சகோதரர்கள் அழுதார்கள்.

‘சரி எல்லோரும் போங்கள். கிண்ணத்தைத் திருடிய பென்யமின் மட்டும் இங்கே நிற்கட்டும்’ யோசேப்பு சொன்னார்.

‘ஐயா… தயவு காட்டுங்கள். பென்யமின் இல்லையேல் எங்கள் தந்தை இறந்தே விடுவார். இவனைப் பத்திரமாகத் திருப்பி ஒப்படைப்போம் என்று நாங்கள் எங்கள் தந்தைக்கு வாக்களித்திருக்கிறோம். கருணை காட்டுங்கள். ஏற்கனவே அவர் தன்னுடைய ஒரு மகனை இழந்து அழுது கொண்டே இருக்கிறார்’ என்றார்கள்.

யோசேப்புவால் இதற்கு மேல் தன்னை மறைக்க முடியவில்லை. பணியாட்களை வெளியே அனுப்பிவிட்டு சகோதரகள் முன்னிலையில் சத்தமிட்டு அழுதார். சகோதரர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.

பின்பு தன்னுடைய தலைப்பாகையை எடுத்து விட்டு, சகோதரர்களே… ‘என்னை நன்றாக உற்றுப் பாருங்கள்… நான்தான் யோசேப்பு ! உங்கள் சகோதரன்’ என்றார்.

சகோதரர்கள் ஆனந்தமாய் அதிர்ந்தார்கள். அவரை முதன் முதலாய் உற்றுப் பார்த்தார்கள். அவர்களிடம் மகிழ்ச்சியும், அச்சமும் பீறிட்டது,

‘யோசேப்பு.  எங்களை மன்னித்து விடு. நாங்கள் உனக்கு மிகப் பெரிய கொடுமை செய்தோம். நீ இப்படி பெரிய ஆள் ஆனதைக் காணும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எங்களை மன்னித்து விடுவாயா ? ‘ சகோதரர்கள் அவரிடம் மன்னிப்பு வேண்டினர்.

யோசேப்பு சிரித்தார். ‘ கவலைப் படாதீர்கள். நீங்கள் எந்த தப்பும் செய்யவில்லை… இது எல்லாம் கடவுளின் சித்தம். அவர் எல்லோருக்கும் ஒவ்வொரு இடத்தைத் தயாராக்கி வைத்திருக்கிறார். நீங்களெல்லாம் அதைச் செயல்படுத்த அவரால் தெரிந்து கொள்ளப் பட்டீர்கள். அவ்வளவே’ என்றார்.

அனைவருக்கும் செல்வமும், ஏராளம் வண்டிகளில் தானியங்களும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

சகோதரர்கள் நாடு திரும்பி, நடந்ததையெல்லாம் தந்தையிடம் சொன்னார்கள். தந்தை ஆனந்தம் மேலிட உற்சாகமாய் சத்தமிட்டார். அவரிடம் சிறிது காலமாய் காணாமல் போயிருந்த உற்சாகம் திரும்ப வந்தது. யோசேப்பு தந்தையையும் சகோதரர்களையும் எகிப்து நாட்டிற்கு வரவழைத்தார். இஸ்ரயேல் என்று கடவுளால் பெயரிடப்பட்ட யோசேப்பின் தந்தை யாக்கோபு எகிப்திற்கு வந்தார். அங்கே இஸ்ரயேலில் குலம் பலுகிப் பெருகியது. அவர்கள் நீண்டகாலம் மகிழ்வுடன் வாழ்ந்தார்கள்.
0

21 comments on “கி.மு : யோசேப்பு – ஒரு அடிமையின் கதை !

  1. நல்ல நடையில் எழுதப்பட்டுள்ளது.யோசேப்பு பற்றி பைபிளில் படித்துள்ளேன்.பைபிளை மூன்று முறைபடித்தும் மறந்து போகிறது. ஆனால் இங்கே யோசேப்பு கதை அழகியநடைஅதைப்புரியும்படியான சொல்லும்பாங்கு நன்று.சகோதரி சொன்ன ஒரு பெயர் மாற்றம்மட்டுமே. சகோதரருக்கு நன்றி..
    S.Xavierraj.

    Like

  2. மிகவும் நல்ல பதிவு மிக்க மிக்க நன்றி சகோதரரே

    Like

  3. நல்லா இருக்கு ஆனால் download பன்ன முடியல pizza
    என்ன சரி செய்ங்க

    Like

  4. யோசேப்பு கதை வர்ணத்து கூறியதற்கு நன்றி

    Like

  5. சேவியர் அண்ணா,
    இப்பொழுது தான் தங்களின் வலை தளத்தை பார்த்தேன். தங்களின் பதிப்புகள் அனைத்தும் மிகவும் அருமை…..

    ‘திருடர்களே… உங்களுக்கு விருந்து தந்து உபசரித்தேன்.. நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா ‘ யாக்கோபு போலியாய் கர்ஜித்தார்.
    மேற்குறிப்பிட்ட வரியில் யோசேப்பு என்பதற்க்கு பதிலாக யாக்கோபு என்று பிழையுடன் பதித்துள்ளீர்கள் என நினைக்கிறேன்

    Like

  6. Pingback: கி.மு விவிலியக் கதைகள் : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது « கவிதைச் சாலை

  7. /முழுதுமாக அமைதியாக நேற்றே வாசித்துவிட்டேன்.என்ன பின்னூட்டம் போட என்றுதான் தெரியவில்லை.அதுதான் பேசாமல் இருந்துவிட்டேன்.நன்றி சேவியர் அண்ணா//

    நன்றி தங்கச்சி. வாசித்தமைக்கு 🙂

    Like

  8. /ரொம்ப நல்லா எழுத்து நடையில் கொண்டு வந்திருக்கீங்க!! முயற்சி மேலும் தொடரட்டும்…வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி சந்தன முல்லை.

    Like

  9. முழுதுமாக அமைதியாக நேற்றே வாசித்துவிட்டேன்.என்ன பின்னூட்டம் போட என்றுதான் தெரியவில்லை.அதுதான் பேசாமல் இருந்துவிட்டேன்.நன்றி சேவியர் அண்ணா.

    Like

  10. ரொம்ப நல்லா எழுத்து நடையில் கொண்டு வந்திருக்கீங்க!! முயற்சி மேலும் தொடரட்டும்…வாழ்த்துக்கள்!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.