கட்டுரை : கடவுளைத் தேடுது விஞ்ஞானம்

( தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )

 

விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராய் இருக்கும் மர்மங்கள் உலகில் ஏராளம் ஏராளம். அதில் ஒன்று தான் உலகில் உயிரின் முதல் துகள் உருவான நிகழ்வு. அதை அவர்கள் கடவுளின் துகள் என பெயரிட்டு அழைக்கிறார்கள்.

எப்படியேனும் அதன் மூலத்தைக் கண்டுபிடித்தே தீர்வது என உலகத்திலுள்ள தலை சிறந்த இயற்பியல் வல்லுனர்கள் தலையைப் பிய்த்து யோசித்ததில் தோன்றிய யோசனை தான்  லார்ஜ் ஹார்டான் கொலைடர் ( LHS – Large Hadron Collider) . உலகில் தோன்றிய உயிரினங்கள் எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமி எனும் இந்த கோளத்தில் மீது நிகழ்ந்த ஒரு மிகப்பெரிய தாக்குதலின் விளைவாய் (Big Bang) உருவானவை என்றே விஞ்ஞானம் கருதுகிறது.

அப்படியெனில் அதே போல ஒரு மாபெரும் மோதல் இப்போது நிகழுமானால் அதே போல உயிரின் துகள்கள் இப்போதும் உருவாக முடியும் இல்லையா ? என இயற்பியலார்கள் எழுப்பிய கேள்வியில் இருந்தது இந்த சோதனைக்கான விதை. இதைக் கொண்டு பல்வேறு இயற்பியல் ரகசியங்களின் முடிச்சை அவிழ்க்க முடியும் என விஞ்ஞானம் கருதுகிறது.

இது ஏதோ சிறிய ஒரு ஆராய்ச்சிக் கூட சோதனை என நீங்கள் நினைத்தால் முதலில் அந்த நினைப்பை மூட்டை கட்டி கடலில் எறிந்து விடுங்கள். இது மிக மிக கடினமான காரியம். இதில் பயன்படுத்தப்போவது அணு ஆற்றல் என்பதையும், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் சுமார் இரண்டாயிரம் இயற்பியல் வல்லுநர்கள் என்பதையும் கொண்டே இதன் தீவிரத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

இவர்களுடைய கணிப்புப் படி இரண்டு புரோட்டான் இழைகளை ஒன்றுடன் ஒன்று ஒளியின் வேகத்தில் ( அதாவது வினாடிக்கு சுமார் நூறு கோடி கிலோ மீட்டர் வேகத்தில் ) மோதவிட்டால் அது மோதிச் சிதறும் போது ஹிக்ஸ் பாஸன் (Higgs boson) என அவர்கள் பெயரிட்டுள்ள அந்த கடவுளின் துகளை உருவாக்க முடியும். இது தான் இந்த சோதனை குறித்த ஒருவரி விளக்கம். இதற்கான முயற்சி ஆரம்பித்தது 1983ம் ஆண்டு.

பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு இதன் ஆய்வக தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இப்போது அந்த சோதனை மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. இனிமேல் ஆண்டு படிப்படியாக சோதனைகள் நடத்தப்படலாம் என தெரிகிறது. எனினும் முழுமையான சோதனை நடத்த இன்னும் நான்கைந்து ஆண்டுகள் ஆகலாம்.

இந்த சோதனை நடந்தால் உலகமே அழியும் என ஒரு சாரார் தீவிரமாக இந்த சோதனைக்கு எதிராக நிற்கின்றனர். அளவிட முடியாத அணுவின் ஆற்றல் இந்த மோதலில் விளைவாய் ஏற்படும் இதன் மூலம் உலகம் அழியும் என சிலரும், உலகம் இந்த சோதனையினால் சுருங்கி சிதறும் என ஒரு சாராரும் அவர்கள் பக்க விளக்கங்களோடு எதிர்க்கின்றனர்.

இன்னும் ஒரு சிலர் பூமியிலுள்ள உயிர்வழி எல்லாம் இந்த சோதனையின் மூலம் இழுக்கப்பட்டு பூமி வெற்றிடமாகிவிடும். இந்த பூமி எனும் கோளமே இந்தச் சோதனையின் மூலம் முழுமையாக அழிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

டாக்டர். அட்ரியன் கெண்ட் என்பவர் இந்த சோதனையின் விளைவுகள் கவனமாய் பரிசீலிக்கப்படவில்லை எனவும் ஒட்டு மொத்த மனித குலத்தில் சாவுமணியாய் இருக்கக் கூடும் இந்த அராய்ச்சி என 2003 ல் ஒரு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத் தக்கது.
எனினும், இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளவர்களோ, இதில் உலகிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தொடர்ந்து சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சிக்காக அவர்கள் செய்திருக்கும் ஏற்பாட்டைப் பார்த்தால் வியப்பில் புருவங்கள் எகிறிக் குதிக்கின்றன. பிரான்சு – சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் இந்த சோதனைத் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. தரையில் பூமிக்குக் கீழே சுமார் நூறு மீட்டர் ஆழத்தில் தான் இந்த சோதனைச் சாலையே அமைகிறது. உள்ளே மிக சக்தி வாய்ந்த ஒரு சுற்றுப் பாதையை அமைக்கிறார்கள். இந்தச் சுற்றுப் பாதையின் நீளம் 27 கிலோ மீட்டர்கள்!

இந்தச் சுற்றுப் பாதை மிக மிக சக்தி வாய்ந்த, கனம் வாய்ந்த, வலிமை வாய்ந்த உலோகங்களால் அமைக்கப்படுகிறது. அணுக்களின் மோதல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே துல்லியமாய் ஊகிப்பது கடினம் என்பதால் அதீத கவனம் எடுத்துக் கொள்வதாகத் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த 27 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில் சுமார் 5000 காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவையே இந்த ஒளிக்கற்றையை சரியான பாதையில் பயணிக்க வைக்கும். இந்த ஒட்டு மொத்த அமைப்பும் சுமார் -271 டிகிரி செண்டிகிரேடில் உறை குளிர் நிலையில் அமைக்கப்படும். இந்தப் பிரபஞ்சத்திலேயே அதிக குளிரான இடம் இது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதற்காக அவர்கள் திரவ ஹீலியத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பது ஒரு முக்கியமான அறிவியல் தகவல். இந்த அமைப்பை இந்த நிலைக்குக் குளிர வைக்கவே சுமார் ஒரு மாத காலம் ஆகுமாம்.

இந்த அமைப்பிலுள்ள காம்பாக்ட் மோன் சோலினாய்ட் ( Compact Muon Solenoid (CMS) ), எனும் ஒரு சிறு பகுதியின் எடை மட்டுமே சுமார் 2500 டன் என்றால் மொத்த அமைப்பின் எடையை சற்று யோசித்துப் பாருங்கள். இதை பூமியில் நூறு அடி ஆழத்தில் இறக்கி வைக்க ஆன நேரமே 12 மணி நேரம் எனில் மொத்த அமைப்பின் தயாரிப்புக் காலத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

சரி, இதை வைத்துக் கொண்டு எப்படித் தான் ஆராய்ச்சி செய்கிறார்கள். எளிய முறையில் சொல்ல வேண்டுமெனில், இந்த வட்டப்பாதையில் ஒரு முனையிலிருந்து இரண்டு புரோட்டான் ஒளிக்கதிர்களை பாய்ச்சுவார்கள். இதன் சக்தி 450 கிகா எலக்டோ வால்ட். இது சுற்றுப் பாதையில் இரண்டு பக்கமுமாகப் பாய்ந்து செல்லும். இந்த பாய்ச்சலை சுற்றியிருக்கும் காந்தங்கள் வகைப்படுத்தும்.

வட்டத்தில் இரண்டு பாதை வழியாக வேகமாக வரும் இந்த கதிர்கள் ஒரு இடத்தில் மோதிச் சிதறும். அந்த மோதிச் சிதறும் கணத்தில் இந்த கடவுளின் துகள் என்று அவர்கள் அழைக்கும் சக்தி வெளிப்படும் என்பதே அவர்களுடைய கணிப்பு.

எவ்வளவு சக்தி வந்தாலும் இந்த அமைப்பு தாங்குமா என்பதை பல்வேறு கடினமாக சோதனைகள் மூலம் சோதித்து வருகின்றனர். பன்னிரண்டாயிரம் ஆம்ப்ஸ் மின்சாரத்தை இவற்றில் பாய்ச்சி சோதிப்பது அவற்றில் ஒன்று. இந்தச் சோதனை குறித்த விரிவான தகவல்கள் பெற விரும்பினால் http://lhc.web.cern.ch/lhc/ எனும் இணைய தளத்தை நாடலாம்.

பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நிகழவிருக்கும் இந்த ஆய்வு விஞ்ஞானத்தில் பல மர்மக் கதவுகளை திறக்கலாம் எனும் எதிர்பார்ப்பு விஞ்ஞானிகளிடையே நிலவுகிறது.

இந்த ஆய்வு மனுக்குலத்தையே அழிக்கும் பல்வேறு மூலக்கூறுகளை உருவாக்கலாம், அல்லது இயற்கை கட்டமைப்பின் மாற்றங்களை உருவாக்கலாம், பூமியே உயிரற்ற ஒரு பொட்டல் காடாய் மாறிவிடலாம்  எனும் அச்சம் வேறு பல ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.

இப்படிப்பட்ட சோதனைகளுக்காக பல ஆயிரம் கோடி செலவிடுவதை விட அக்கம் பக்கம் வறுமையினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் பட்டினி நாடுகளை வாழவைக்க இந்தப் பணத்தைச் செலவிடலாமே என்றும்,  உயிரின் முதல் துகளைத் தேடும் பணிக்காகச் செலவிடும் பணத்தில் உயிரின் கடைசித் துளியையும் இழந்து கொண்டிருப்பவனைக் காப்பாற்றலாமே என்றும் பல்வேறு எண்ணங்கள் மனித நேயம் கொண்ட உங்களிடம் இயல்பாகவே எழுகிறது தானே ?

38 comments on “கட்டுரை : கடவுளைத் தேடுது விஞ்ஞானம்

  1. மிகவும் அருமை.
    என்ன பன்றது.?
    இது ஒரு மனிதனின் அறிவியல் வளர்ச்சியை காட்டுகிறது.
    ஆனால், ரொம்ப செல்வுதான்.
    இத வறுமையில் இருப்பவர்களுக்கு குடுத்தா நல்லாதான் இருக்கும். சொன்னா கேட்க மாட்டானுங்க.
    அதுக்கு கடவுள்தான் வரனும்.
    அப்புறம் இதோட முடிவு என்னாகும்னு தெரியுமா.?
    Dr.அப்துல்காலாம் அய்யா கூட அந்த ஆய்வு கூடத்த போய் பார்த்துட்டு வந்திருக்காரு.
    என்னாகுமோ.? கடவுளுக்குதன்
    (Photon————> கடவுள் துகள் <————Photon) தெரியும்.

    -Ramarajan.

    Like

  2. //இந்த செலவையெல்லாம் தடுக்க கடவுள் வந்து நான் இப்படி தான் உலகத்தை உருவாக்கினேனு கூவுனா என்னா?

    //

    அதானே !

    Like

  3. இந்த செலவையெல்லாம் தடுக்க கடவுள் வந்து நான் இப்படி தான் உலகத்தை உருவாக்கினேனு கூவுனா என்னா?

    Like

  4. அன்பின் சேவியர்

    படித்தேன் – மீண்டும் படிக்க வேண்டும் – படிப்பேன் – அப்பொழுது மறு மொழி இடுகிறேன். இப்பொழுது வருகைப் பபதிவு மட்டும் தான்

    Like

  5. நல்ல கட்டுரை. நன்றி
    /* உயிரின் முதல் துகளைத் தேடும் பணிக்காகச் செலவிடும் பணத்தில் உயிரின் கடைசித் துளியையும் இழந்து கொண்டிருப்பவனைக் காப்பாற்றலாமே என்றும் பல்வேறு எண்ணங்கள் மனித நேயம் கொண்ட உங்களிடம் இயல்பாகவே எழுகிறது தானே ?*/
    ஆம்…

    Like

  6. நன்றி ஜெயபாரதன் சார். வருகைக்கும் கருத்துக்கும். உங்கள் விரிவான கட்டுரையுடன் ஒப்பிடுகையில் இது ஒரு சிறு முன்னுரை மட்டுமே 🙂

    Like

  7. அருமை நண்பர் சேவியர்,

    செப்டம்பர் 10, 2008 இல் ஜெனிவாவுக்கு அருகிலே விஞ்ஞானிகள் துணிவாகச் செய்த செர்ன் புரோட்டான் முட்டி மோதல் சோதனையில் ஹிக்ஸ் போஸான் துகளை உளவிய கட்டுரையைச் சிறப்பாக நல்ல தமிழில் எழுதியது கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

    பாராட்டுகள்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன், கனடா

    Like

  8. உங்களைப் போல இலக்கிய ரசிகர்கள் இருக்கும் வரை எழுதுவது என்பது எழுத்தாளனைப் பொறுத்தவரை மிகவும் ஆனந்தமான அனுபவமே 🙂

    உங்கள் பின்னூட்டத்தில் வழியாக தெரியும் உங்கள் மனித நேயம் மனதுக்கு மிகவும் இதமளிக்கிறது. உலகம் இறுக்கமாய் இருக்கிறது என மக்கள் சொல்லிக் கொண்டாலும் இன்னும் இதயங்கள் மிகவும் இளகிய நிலையிலேயே இருக்கின்றன என்பது ஆனந்தமானதே.

    வழக்கம்போலவே ஆழமான கருத்துக்களோடு வந்து வளமூட்டியமைக்கு நன்றிகள் பல.

    Like

  9. அன்புள்ள சேவியருக்கு,

    இது போன்ற விஞ்ஞான விஷயங்களை தமிழ் படுத்தி எழுதுவதற்கு, எத்துணை சிரமம் மேற்கொண்டு இருக்க வேண்டி இருக்கும்? . அத்தனையும் பொருட்படுத்தாது , கைகள் வலிக்க வலிக்க மொழிபெயர்த்து, உயிர் கொடுத்து எழுதி உள்ள கைகளுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் எனத் தெரியவில்லை.

    உலகத்தின் ஒரு மூலையில் மனிதன் உணவு, உடை, உறைப்பிடம் என்ற அடிப்படை தேவையே நிறைவேறாமல்,இன்றளவிலும் நாகரிக உலகத்தின் ஆதிவாசியாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.ஆனால், அதே உலகத்தின் இன்னொரு மூலையில் தான்,உயிரின் முதல் துகள் தேடுகிறேன் பேர்வழி என்ற அதிமேதாவிகளின் ஆர்பாட்டமான அராய்ச்சி நடக்கிறது.
    வாழும் உயிர்களுக்கே வழி இல்லாத போது,வாழ உயிர் எப்படி மண்ணுக்கு வந்தது என்ற ஆராய்ச்சி இப்பொழுது முக்கிய தேவையா ?

    //இப்படிப்பட்ட சோதனைகளுக்காக பல ஆயிரம் கோடி செலவிடுவதை விட அக்கம் பக்கம் வறுமையினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் பட்டினி நாடுகளை வாழவைக்க இந்தப் பணத்தைச் செலவிடலாமே என்றும், உயிரின் முதல் துகளைத் தேடும் பணிக்காகச் செலவிடும் பணத்தில் உயிரின் கடைசித் துளியையும் இழந்து கொண்டிருப்பவனைக் காப்பாற்றலாமே என்றும் பல்வேறு எண்ணங்கள் மனித நேயம் கொண்ட உங்களிடம் இயல்பாகவே எழுகிறது தானே ?//

    இதற்கு மேல் செருப்பால் அடித்தபடி உரைக்க வேறு யாராலும் முடியாது.

    நட்புடன்
    குகன்

    Like

  10. //நானு சுசியம் செய்ய ஆரம்பித்து பாயாசத்தில் வந்து நிற்பேன். அது மாதிரி கடவுளின் துகளை பிடிக்கபோகிறேன் என்று கிளம்பி, ஏதாவது நல்லது நடந்த சரிதான்.//

    அதே !!

    //

    நாமும் தான் காசை எப்படியெல்லாம் விரயம் பண்ணுகிறோம் அண்ணாச்சி?.
    //

    உண்மை. இருந்தாலும் சொல்ல விரும்பாத பல நல்ல செயல்களைச் செய்கிறேன் என்னும் திருப்தி எனக்கு எப்போதும் உண்டு.

    Like

  11. //கடவுளை எங்கே தேடுகிறார்கள்? ஏன் கடவுளை இங்கே கொண்டுவந்து படிப்பவர்களைக் குழப்புகிறீர்கள் சேவியர்//

    நான் எங்கே சொன்னேன்… அவங்க சொல்றாங்க…

    Scientists hope this will enable them to see new physics, and discover the sought-after Higgs boson, or “God particle”, which explains why matter has mass. ( BBC News )

    //ஒவ்வொரு மத நம்பிக்கையாளரும் கடவுளுக்கு பூசைப் பொருள், தூப, தீப ஆராதனைப் பொருள், தேர் இழுப்பு என்று வீணாக்கும் காசைக் கொண்டு ஏழைகளுக்கு உணவு கொடுத்தால் போதுமே?//

    100 % உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன் !. ஏழைகளுக்கு உதவாமல் அலங்காரத்திலும், உண்டியலிலும் கரைக்கப்படும் பணம் மனுக்குலத்தின் சாபக்கேடு.

    //அறிவியல் ஆராய்ச்சிகள் காசு செலவழித்தால்தான் முடியும். சும்மா, வெறும் காற்றில் முழம் போடமுடியாது//

    மண்ணை உண்ணும் மனிதனிடம் எது முக்கியம் என்று கேட்டால் உணவு என்பான் என்பது என் எண்ணம். வறுமையைப் போக்க ஒரு ஆராய்ச்சி நடந்தால் நல்லது.

    //

    Like

  12. //கண்டிப்பாக.

    சோமாலியா போன்ற நாடுகளில் உணவுக்கே வழியில்லாமல் தினம் தினம் பலர் இறந்துகொண்டிருக்க ஏன் இந்த விபரீத பண விரைய விளையாட்டு?
    :((

    //

    உங்கள் மனித நேய உணர்வுகளுக்கு மனமார்ந்த நன்றிகள் சிவா.

    Like

  13. //அதிகமாக தனிமனிதத் தாக்குதல்களும் மொக்கைகளும் கும்மிகளும் காணப்படும் தமிழ் வலையுலகத்தில் இப்படியான கட்டுரைகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சி வருவதை தவிர்க்க முடியவி்ல்லை. ஆங்கில வலைப்பதிவுகள் ஏறத்தாழ எல்லாமுமே பயனுள்ளவையாயிருக்க தமிழ்வலைப் பதிவுகள் செல்லும் பாதையை இவ்வாறான பதிவுகள்தான் மாற்றவேண்டும்.

    மிக்க நன்றி சேவியர்.

    //

    அன்பின் மதுவதனன். இப்படி ஆத்மார்த்தமான ஊக்கமூட்டுதல் கிடைத்தால் நல்ல பதிவுகள் நிச்சயம் வரும்.

    Like

  14. நானு சுசியம் செய்ய ஆரம்பித்து பாயாசத்தில் வந்து நிற்பேன். அது மாதிரி கடவுளின் துகளை பிடிக்கபோகிறேன் என்று கிளம்பி, ஏதாவது நல்லது நடந்த சரிதான்.

    நாமும் தான் காசை எப்படியெல்லாம் விரயம் பண்ணுகிறோம் அண்ணாச்சி?.

    Like

  15. கடவுளை எங்கே தேடுகிறார்கள்? ஏன் கடவுளை இங்கே கொண்டுவந்து படிப்பவர்களைக் குழப்புகிறீர்கள் சேவியர்? விஞ்ஞானிகள், அறிவியல் தியரிகள் சரியா என்பதைக் கண்டறிய இந்தச் சோதனைகளை நடத்துகிறார்கள். அவ்வளவே. இங்கு கடவுளும் கிடையாது; கந்தசாமிப் பிள்ளையும் கிடையாது.

    கடைசியாக, இந்தப் பணத்தைக் கொண்டு ஏழைகளுக்குச் சோறு போடலாமே என்ற முத்தாய்ப்பு எதற்கு? ஒவ்வொரு மத நம்பிக்கையாளரும் கடவுளுக்கு பூசைப் பொருள், தூப, தீப ஆராதனைப் பொருள், தேர் இழுப்பு என்று வீணாக்கும் காசைக் கொண்டு ஏழைகளுக்கு உணவு கொடுத்தால் போதுமே?

    அறிவியல் ஆராய்ச்சிகள் காசு செலவழித்தால்தான் முடியும். சும்மா, வெறும் காற்றில் முழம் போடமுடியாது.

    ///இந்த ஆய்வு மனுக்குலத்தையே அழிக்கும் பல்வேறு மூலக்கூறுகளை உருவாக்கலாம், அல்லது இயற்கை கட்டமைப்பின் மாற்றங்களை உருவாக்கலாம், பூமியே உயிரற்ற ஒரு பொட்டல் காடாய் மாறிவிடலாம் எனும் அச்சம் வேறு பல ஆய்வாளர்களிடையே நிலவுகிறது./// என்பதை… மன்னிக்கவும், உளறல் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் சொல்லமுடியாது.

    எங்கிருந்து புது “மூலக்கூறு” உருவாகும்? இயற்கைக் கட்டமைப்பில் என்ன “மாற்றங்கள்” ஏற்படும்? பொதுமக்களைத் தேவையின்றி பயமுறுத்தும் பூச்சாண்டி வேலைகள் தேவையா?

    Like

  16. /
    இப்படிப்பட்ட சோதனைகளுக்காக பல ஆயிரம் கோடி செலவிடுவதை விட அக்கம் பக்கம் வறுமையினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் பட்டினி நாடுகளை வாழவைக்க இந்தப் பணத்தைச் செலவிடலாமே என்றும், உயிரின் முதல் துகளைத் தேடும் பணிக்காகச் செலவிடும் பணத்தில் உயிரின் கடைசித் துளியையும் இழந்து கொண்டிருப்பவனைக் காப்பாற்றலாமே என்றும் பல்வேறு எண்ணங்கள் மனித நேயம் கொண்ட உங்களிடம் இயல்பாகவே எழுகிறது தானே ?
    /

    கண்டிப்பாக.

    சோமாலியா போன்ற நாடுகளில் உணவுக்கே வழியில்லாமல் தினம் தினம் பலர் இறந்துகொண்டிருக்க ஏன் இந்த விபரீத பண விரைய விளையாட்டு?
    :((

    Like

  17. அதிகமாக தனிமனிதத் தாக்குதல்களும் மொக்கைகளும் கும்மிகளும் (எப்படித்தான் தமிழர்கள் தாங்கள் பயன்படுத்தும் எதனையும் அதிவிரைவாக இப்படி மாற்றிக்கொள்கிறார்களோ தெரியவில்லை) காணப்படும் தமிழ் வலையுலகத்தில் இப்படியான கட்டுரைகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சி வருவதை தவிர்க்க முடியவி்ல்லை. ஆங்கில வலைப்பதிவுகள் ஏறத்தாழ எல்லாமுமே பயனுள்ளவையாயிருக்க தமிழ்வலைப் பதிவுகள் செல்லும் பாதையை இவ்வாறான பதிவுகள்தான் மாற்றவேண்டும்.

    மிக்க நன்றி சேவியர்.

    Like

  18. நல்ல அறிவியல் கட்டுரை.கடவுளைத் தேடி…வாசிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறது.என்றாலும் கடவுளைக் கண்டு பிடிக்கிறதுக்கிடையில உலகத்தையே நெளிச்சு நசுக்கிக் கோணலாக்கிடுவாங்களே விஞ்ஞானம்னு சொல்லிகிட்டு.நல்லது நடந்தா நல்லதுதான்.

    Like

  19. //இது போல ஒரு அறிவியல் கட்டுரை தமிழில் படித்து பல காலமாகிவிட்டது.

    தொடரட்டும் உங்கள் எழுத்து. என்னைப் போன்றோர் வாசிக்கக் காத்திருக்கிறோம்.
    //

    மனமார்ந்த நன்றிகள் செல்வகுமார்.
    அடிக்கடி உங்களை எதிர்பார்க்கிறேன்.

    Like

  20. //இதை பற்றி ஏற்கனவே டான் ப்ரொன் தனது angels and demons என்ற புத்தகத்தில் அருமையாக விளக்கி உள்ளார்.//

    ஆமாம் 🙂

    //நானும் முதலில் பூச்சுற்றுதல் என்று தான் நினைத்தேன்,பின்னர் IEEE சஞ்சிகையில் அதைப் பற்றி வந்தது.
    அதாவது ஒன்றும் இல்லாததில் இருந்து ஒன்றை உருவாக்குவது.
    அது வெடித்தால் நாம் எப்பிடி தோன்றினோம் என்று மட்டும் இல்லை,பூமி என்று ஒரு கிரகம் எப்பிடி அழிந்தது என்று எவனாவது ஆரய்ச்சி பண்ண வேண்டி வரும். அதனது வேகம் எப்படி என்றால் ஒரு பெரிய தூணை அதே வேகத்தில் சுற்றி ஓடி வந்தால் நமது முதுகும் வயிறும் ஒன்றை ஒன்று தொடும்.
    கற்பனை பண்ணி பாருங்கள்//

    அம்மாடியோவ்.. விட்டுடுங்க 😀

    Like

  21. //ஏதோ ஒரு டிவி சேனலில் இதைப்பற்றி கொஞ்சம் கேட்டேன். இது தேவையா என்றே தோன்றியது.
    கடைசி பாராவிலுள்ள உங்கள் மனித நேயம் அருமை//

    நன்றி சுல்தான். வருகைக்கும், கருத்துக்கும்.

    Like

  22. இது போல ஒரு அறிவியல் கட்டுரை தமிழில் படித்து பல காலமாகிவிட்டது.

    தொடரட்டும் உங்கள் எழுத்து. என்னைப் போன்றோர் வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    Like

  23. இதை பற்றி ஏற்கனவே டான் ப்ரொன் தனது angels and demons என்ற புத்தகத்தில் அருமையாக விளக்கி உள்ளார்.நானும் முதலில் பூச்சுற்றுதல் என்று தான் நினைத்தேன்,பின்னர் IEEE சஞ்சிகையில் அதைப் பற்றி வந்தது.
    அதாவது ஒன்றும் இல்லாததில் இருந்து ஒன்றை உருவாக்குவது.
    அது வெடித்தால் நாம் எப்பிடி தோன்றினோம் என்று மட்டும் இல்லை,பூமி என்று ஒரு கிரகம் எப்பிடி அழிந்தது என்று எவனாவது ஆரய்ச்சி பண்ண வேண்டி வரும். அதனது வேகம் எப்படி என்றால் ஒரு பெரிய தூணை அதே வேகத்தில் சுற்றி ஓடி வந்தால் நமது முதுகும் வயிறும் ஒன்றை ஒன்று தொடும்.
    கற்பனை பண்ணி பாருங்கள்.

    Like

  24. CERN macht mir persönlich doch schon nen wenig Angst. Niemand weiß, was wirklich passiert. Alle sprechen in Wahrscheinlichkeiten. Selbst wenn die Wahrscheinlichkeit, dass etwas “Unschönes” passiert gegen 0,00999 tendiert, sollte man die Finger von solch einem folgeschweren Versuch lassen. Der Versuch wird ja irgendwie millionenfach wiederholt…

    Like

  25. ஏதோ ஒரு டிவி சேனலில் இதைப்பற்றி கொஞ்சம் கேட்டேன். இது தேவையா என்றே தோன்றியது.
    கடைசி பாராவிலுள்ள உங்கள் மனித நேயம் அருமை.

    Like

  26. //இழந்து கொண்டிருப்பவனைக் காப்பாற்றலாமே என்றும்//

    சொல்லி திருந்தாத இனம் மனித இனம்.

    Like

  27. இப்படிப்பட்ட சோதனைகளுக்காக பல ஆயிரம் கோடி செலவிடுவதை விட அக்கம் பக்கம் வறுமையினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் பட்டினி நாடுகளை வாழவைக்க இந்தப் பணத்தைச் செலவிடலாமே என்றும், உயிரின் முதல் துகளைத் தேடும் பணிக்காகச் செலவிடும் பணத்தில் உயிரின் கடைசித் துளியையும் இழந்து கொண்டிருப்பவனைக் காப்பாற்றலாமே என்றும் பல்வேறு எண்ணங்கள் மனித நேயம் கொண்ட உங்களிடம் இயல்பாகவே எழுகிறது தானே ?

    At last this is excellent thought. good… congratulation.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.