கவிதை : என் இனிய கணினியே.


என் இனிய கணினியே.

இவ்வளவு நேரம் தொடர்ச்சியாக
நான்
யார் முகத்தையும் பார்த்ததில்லை.

இவ்வளவு நேரம் யாரோடும்
விரல் தீண்டல் தொடர்ந்ததில்லை.

அதெப்படி
உன்னால் மட்டும் முடிகிறது ?
கண்ணுக்குத் தெரியாத
கணிதச் சுருக்கங்களின் சுளுக்கெடுக்க ?

முகம் மனசின் கண்ணாடி
என்பது
முகமே கண்ணாடியாகிப் போன
உன்னிடம் தானே உண்மையாகிறது ?

பொழுதுகள் மாறினாலும்
முகங்கள் மாறினாலும்
விடைகளை மாற்ற மறுப்பது
நீ மட்டும் தானே.

நீ மட்டும் இல்லையென்றால்
உலகம் ஒருவேளை
காகிதக் கட்டுக்களில்
புதைக்கப் பட்டிருக்கலாம் !!!

நீ மட்டும் இல்லையென்றால்
உலகைப் பிடித்தெடுக்கும்
ஓர் வலை
உருவாகாமலேயே போயிருக்கலாம்.

நீ என்ன செய்வாய் என்று கேட்ட காலம்
போய்விட்டது.
என்ன செய்ய மாட்டாய் என்கிறது
கலியுகம்.

யாரோ பகல் கனவு கண்டால்
அதை
பிரதி எடுத்துக் கொடுக்கிறாய்.
இரவுக் கனவை இரவல் வாங்கி
மென்பொருளாய் மொழி பெயர்க்கிறாய்.

இப்போதெல்லாம்
மனித மொழிகளுக்கிங்கே மரியாதை இல்லை
கணினி மொழிகளுக்குத் தான்
உலக அங்கீகாரம்.
என்ன..???
விரல்களால் பேச வேண்டும்
அது ஒன்று தான் வித்தியாசம் !!!

சில ஆண்டுகளுக்கு முன்பு
உலகம் உன்னை ஆண்டுகொண்டிருந்தது
இப்போது
நீ ஆட்சியைக் கைப்பற்றி விட்டாய்.

மிட்டாய்க் கடைகளின்
இனிப்புக் கணக்குகள் கூட
நீ இல்லையென்றால் கசந்து போகிறது.

ஏனென்றால்
எங்கள் மூளைக்குச் செல்லும்
முக்கால் வாசி நரம்புகளும்
விரலுக்கும் விழிகளுக்குமாய்
இடம் பெயர்ந்து விட்டது.

எங்கள் மானிட சமூகம்
வைரஸ் வினியோகம் செய்வது,
நோய் தருவதும் மருந்து தருவதும்
நாங்கள் என்பதை
நீ
மறந்துவிடாமல் இருக்கத்தான்.

காலம் மாறிவிட்டது
முன்பு கலப்பை இருந்த இடத்தில்
இப்போது கணிப்பொறி.
முன்பு வரப்புகள் இருந்த இடத்தில்
இப்போது வன்பொருள்கள்.

ஆனாலும் எங்கள் வயிறு
இன்னும்
மென்பொருள் தின்னப் பழகவில்லை.

21 comments on “கவிதை : என் இனிய கணினியே.

  1. கணினியின் இன்றியமையை ஒரு கவிதையில் கூறி அசத்தி விட்டீர்கள். பொதுவாகத் தங்கள் கவிதைகள் மிக எளிமையாக, அழகாக உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன.

    Like

  2. நீ மட்டும் இல்லையென்றால்
    உலகைப் பிடித்தெடுக்கும்
    ஓர் வலை
    உருவாகாமலேயே போயிருக்கலாம்,

    very good said saviour.

    Like

  3. உயிரற்ற பொருட்களுக்கு கூட கவிதையின் மூலம் உயிர் கொடுக்கின்றது உங்கள் எழுத்துக்கள்…

    கணினியின் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்….

    எப்பொழுதும் போல் இறுதியில் உங்கள் முத்திரையை பதித்து விட்டீர்கள்!!!

    ***
    ஆனாலும் எங்கள் வயிறு
    இன்னும்
    மென்பொருள் தின்னப் பழகவில்லை.
    ****

    பழகாமல் இருக்கும் வரையில் நல்லது… அல்லது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு இருக்கும் கிராமப்புறங்களையும் வயல்வெளிகளையும் “Find” and “Replace” command மூலம் ஒரேயடியாக அழித்து விடுவார்கள் இந்த கணினி வல்லுனர்கள்…..

    Like

  4. //ஆனாலும் எங்கள் வயிறு
    இன்னும்
    மென்பொருள் தின்னப் பழகவில்லை.//

    தின்னப் பழக்கிவிடுவார்கள் கூடிய சீக்கிரம்…….. சேவியர்…..இப்போதே நிறைய பேருக்கு கணினி முன் உட்கார்ந்தால் தூக்கம் வருவதில்லை…
    அன்புடன் அருணா

    Like

  5. /கணினியின் இன்றியமையை ஒரு கவிதையில் கூறி அசத்தி விட்டீர்கள். பொதுவாகத் தங்கள் கவிதைகள் மிக எளிமையாக, அழகாக உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன//

    மனமார்ந்த நன்றிகள் அமுதா.

    Like

  6. /நீ மட்டும் இல்லையென்றால்
    உலகைப் பிடித்தெடுக்கும்
    ஓர் வலை
    உருவாகாமலேயே போயிருக்கலாம்,

    very good said saviour.
    /

    நன்றி சார்… மீண்டும்.

    Like

  7. //உயிரற்ற பொருட்களுக்கு கூட கவிதையின் மூலம் உயிர் கொடுக்கின்றது உங்கள் எழுத்துக்கள்…
    //

    மிக்க நன்றி தோழி.

    //
    கணினியின் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்….

    எப்பொழுதும் போல் இறுதியில் உங்கள் முத்திரையை பதித்து விட்டீர்கள்!!!

    //

    மீண்டும் மீண்டும் நன்றிகள் 🙂

    //

    ***
    ஆனாலும் எங்கள் வயிறு
    இன்னும்
    மென்பொருள் தின்னப் பழகவில்லை.
    ****

    பழகாமல் இருக்கும் வரையில் நல்லது… அல்லது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு இருக்கும் கிராமப்புறங்களையும் வயல்வெளிகளையும் “Find” and “Replace” command மூலம் ஒரேயடியாக அழித்து விடுவார்கள் இந்த கணினி வல்லுனர்கள்
    //

    உண்மை 🙂 உங்கள் கற்பனை சுவாரஸ்யம் 😀 அறிவியல் புனை கதை போல…

    Like

  8. //…..இப்போதே நிறைய பேருக்கு கணினி முன் உட்கார்ந்தால் தூக்கம் வருவதில்லை…
    //

    உண்மை தான் அருணா… பலருக்குள்ளும் இப்போது வலை அடிமைத்தனம் நுழைகிறது.

    Like

  9. உங்கள் அப்பா உங்களைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பில் இப்படி எழுதியிருந்ததாக நினைவிருக்கிறது ‘என் மகனுக்குள் ஒரு கவிஞன் இருப்பதைக்க கண்டேன்., இப்போது ஒரு கவிஞனுக்குள் மகனைக் காண்கிறேன்”. அப்பா சொன்னதை அப்படியே சொன்னேனா தெரியவில்லை. ஆனால் சாராம்சம் சரியாயிருக்குமென்று நினக்கிறேன். அப்பாவின் பார்வை தப்பாமல் விழுந்திருக்கிறது. எதையுமே கவிதைக்கண்களோடு பார்க்கும் உங்களது உளநோக்கு அபாரம் சேவியர் வாழத்துக்கள்…..
    கணிணியின் வியாபகத்தினை காட்டும்படி எங்களுர் சஞ்சிகை ஒன்றில் ஒரு துணுக்கு எழுதியிருந்தார்கள். ஒரு சிறுவன் தந்தையிடம் கேட்பானாம்
    “ அப்பா எனக்கு யூசர் நேம்
    வைத்திருக்கிறீர்கள் – என்
    பாஸ்வேட் என்ன?’’ என்று

    Like

  10. //என் மகனுக்குள் ஒரு கவிஞன் இருப்பதைக்க கண்டேன்., இப்போது ஒரு கவிஞனுக்குள் மகனைக் காண்கிறேன்”. அப்பா சொன்னதை அப்படியே சொன்னேனா தெரியவில்லை. ஆனால் சாராம்சம் சரியாயிருக்குமென்று நினக்கிறேன். அப்பாவின் பார்வை தப்பாமல் விழுந்திருக்கிறது. எதையுமே கவிதைக்கண்களோடு பார்க்கும் உங்களது உளநோக்கு அபாரம் சேவியர் வாழத்துக்கள்…..
    //

    அப்பாவின் நினைவுகளைக் கிளறி விட்டமைக்கு நன்றிகள் நண்பரே.. கவிஞரின் பாராட்டு ஊக்கமூட்டுகிறது. உங்கள் பாராட்டுக்களுக்கு பணிவான நன்றிகள்.

    //கணிணியின் வியாபகத்தினை காட்டும்படி எங்களுர் சஞ்சிகை ஒன்றில் ஒரு துணுக்கு எழுதியிருந்தார்கள். ஒரு சிறுவன் தந்தையிடம் கேட்பானாம்
    “ அப்பா எனக்கு யூசர் நேம்
    வைத்திருக்கிறீர்கள் – என்
    பாஸ்வேட் என்ன?’’ என்று//

    ரசித்தேன் 🙂 பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

    Like

  11. அன்புள்ள சேவியருக்கு,

    பொழுதுகள் மாறினாலும்
    முகங்கள் மாறினாலும்
    விடைகளை மாற்ற மறுப்பது
    நீ மட்டும் தானே.

    கடைசி மின்சார ரயில் வண்டி செல்லும் நேரமானாலும்,அதிகாலை குயில்களின் கொஞ்சும் ஒலி கேட்கும் நேரமானாலும் , தன்னை இயக்குபவன் கொடுங்கோலன் ஹிட்லர் வாரிசு ஆனாலும்,அன்னை தெரசாவின் இதயம் கொண்டவன் ஆனாலும் ஒரே மாதிரியாய் நடந்து கொள்ளக் கூடிய மனப்பக்குவம் பெற்ற இயந்திரம் கணினி என்பதை மிகத் தெளிவாக சொல்லி விட்டீர்கள்!!!!!!!!!

    ஆனாலும் எங்கள் வயிறு
    இன்னும்
    மென்பொருள் தின்னப் பழகவில்லை.

    தெருவிளக்கின் வெளிச்சம் தாவரத்தை இரவிலும் காணுவதற்கு பயன்படலாமே ஒழிய, இலைகள் பச்சையம் தயாரிக்க ஒரு போதும் பயன்படாது.வாழ்வின் பொருளாதார நிலையினை உயர்த்திக் கொள்ள மென்பொருள் தொழில் நமக்கு உதவி செய்யலாமே ஒழிய, உடல் மற்றும் மனம் சார்ந்த உணர்வுகளுக்கு எந்தப் பயனையும் அளித்து விட முடியாது என்ற ஆணித்தரமான உண்மையை விளங்கும் படியாய் முடித்துள்ளது மிக மிக நன்று !!!!!!!!!!!!!!!!!!!!!

    கடலை கடந்திடும் கால்கள் கொண்டவருக்கு ,ஆற்று நீச்சல் அலுப்பு தட்டும் செயலா ? என்ன ?. வருத்தமளிக்கும் உலகத்தின் சமூக நிகழ்வுகளை முழு வீச்சில் கட்டுரைகளாகவும், அதில் எஞ்சியவற்றை கவிதைகளாகவும் புருவம் உயர்த்தி படிக்கும் வண்ணம் எழுதும் உங்களுக்கு நம்முடைய அலுவல் வாழ்வியலுக்கான ஆதாரத்தை பற்றி எழுதித் தர சொல்லிக் கொடுக்க வேண்டுமா? 🙂

    நட்புடன்
    குகன்

    Like

  12. /கடைசி மின்சார ரயில் வண்டி செல்லும் நேரமானாலும்,அதிகாலை குயில்களின் கொஞ்சும் ஒலி கேட்கும் நேரமானாலும் , தன்னை இயக்குபவன் கொடுங்கோலன் ஹிட்லர் வாரிசு ஆனாலும்,அன்னை தெரசாவின் இதயம் கொண்டவன் ஆனாலும் ஒரே மாதிரியாய் நடந்து கொள்ளக் கூடிய மனப்பக்குவம் பெற்ற இயந்திரம் கணினி என்பதை மிகத் தெளிவாக சொல்லி விட்டீர்கள்//

    எப்படி இப்படியெல்லாம்…. அசத்தறீங்க குகன்.

    //தெருவிளக்கின் வெளிச்சம் தாவரத்தை இரவிலும் காணுவதற்கு பயன்படலாமே ஒழிய, இலைகள் பச்சையம் தயாரிக்க ஒரு போதும் பயன்படாது//

    சூப்பர்… சூப்பர் !!!!!! மிக மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். வழக்கம் போலவே கவிதையை வலுவூட்டும் பின்னூட்டத்துக்கு நன்றி.

    //
    கடலை கடந்திடும் கால்கள் கொண்டவருக்கு ,ஆற்று நீச்சல் அலுப்பு தட்டும் செயலா ? என்ன ?. வருத்தமளிக்கும் உலகத்தின் சமூக நிகழ்வுகளை முழு வீச்சில் கட்டுரைகளாகவும், அதில் எஞ்சியவற்றை கவிதைகளாகவும் புருவம் உயர்த்தி படிக்கும் வண்ணம் எழுதும் உங்களுக்கு நம்முடைய அலுவல் வாழ்வியலுக்கான ஆதாரத்தை பற்றி எழுதித் தர சொல்லிக் கொடுக்க வேண்டுமா
    //

    உங்கள் அன்புக்கு பணிவான நன்றிகள் குகன் 🙂

    Like

  13. படிப்பவனை நூறு சதவிகித பாதிப்புக்கு உள்ளாக்கும் உங்கள் படைப்புக்கு , குறைந்த பட்சம் ஒரு புள்ளி சதவிகித பாதிப்பாவது ஏற்படுத்தும் வீதம் மறுமொழி இட வேண்டும் என்ற உந்துதலின் விளைவே இப்படியெல்லாம் எழுதச் சொல்கிறது 🙂

    மற்றபடி எப்போதும் அசத்துவது நீங்கள் தான் 🙂

    Like

  14. sir unga books ennaku venum sir up coming film diretor naan coimbatore my mobile number 9843758683 pushparaj coimbatore

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.