கவிதை : ஏனடி ?

 விடியலுக்கு முன்
எப்போதோ
முளைவிட்ட விதையாய்
சிறிதாய்
கிளை விட்டாய்.

நீ
வேர் விட்ட வினாடிகளையோ
கிளையான கணங்களையோ
என்னால்
கணித்துத் தான்
சொல்ல முடிகிறது.

நீயோ
பூத்துக் குலுங்கிய பின்னும்
முளைக்கவேயில்லை
என
முரண்டு பிடித்தாய்.

தூக்கணாங்குருவிகள்
குடிவந்த பின்னும்
கிளைகளே இல்லையென
பிடிவாதம் பிடித்தாய்.

என்
விளக்கங்களை எல்லாம்
வாசலிலேயே
வழியனுப்பி வைத்தாய்.

ஆனாலும்
அலகுகள் அகலாமல்
மரங்கொத்தியாய்
இசை கொத்திக் கிடந்தேன்
நான்.

ஓர் நாள்
கண்விழித்துப் பார்த்தபோது
நீ
இலையுதிர் காலத்தில்
இருந்தாய்.

மரங்கொத்தித் தழும்புகள்
மட்டுமே
உன் மனம் முழுதும்.

அப்போது கூட
அவை
பிறப்பின் பாதச் சுவடு
என்றாயே தவிர
காதலின் காலடி என்பதை
ஒத்துக் கொள்ள மறுத்தாய்.

இப்போதெல்லாம்
என் மரங்கொத்தும் மூக்கை
உன்
தோட்டத்தில் நுழைப்பதில்லை.
எனக்கென்று ஓர்
ஆலமரம்
ஓரமாய் நடப்பட்ட பிறகு.

ஏதோ ஓர்
பச்சைக் கிளியிடம்
கண்ணீரோடு சொன்னாயாமே,
அந்த
மரங்கொத்தியின் அலகு
அற்புதமாய் இருந்ததென்று.

13 comments on “கவிதை : ஏனடி ?

  1. அருமை அருமை குகன். உங்கள் பின்னூட்டம் தன்னளவில் ஒரு படைப்பாய் நிலைக்கிறது !

    ஒவ்வொரு வரியையும் வெகுவாய் ரசித்தேன். நன்றிகள் பல.

    Like

  2. அன்புள்ள சேவியருக்கு ,

    வைக்கப்பட்டுள்ள பாத்திரத்திற்கு ஏற்ப உருவம் கொள்ளும் தண்ணீரைப் போல, ரசிகனுடைய இலக்கிய ரசனையைப் பொறுத்து இந்த கவிதை தனக்குரிய பொருள் கொள்கிறது. மழையில் நிழல் தெரியுமா? அதுவும் முழு நிழல். தெரியும். இந்த புதிர் முடிச்சு கவிதை மழையில், வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் மனசின் முழு நிழலாய் இருக்கும் ரசிப்புத் தன்மை தெரிவதோடு, அதன் நீளம் எத்தனை அடி என அளந்து கொள்ளவும் கூடும்.

    ஏதோ ஓர்
    பச்சைக் கிளியிடம்
    கண்ணீரோடு சொன்னாயாமே,
    அந்த
    மரங்கொத்தியின் அலகு
    அற்புதமாய் இருந்ததென்று

    தப்பான கணக்கிட்டு தைத்து விட்ட நேர்மையான தையல் கலைஞன், இறுதி ஆடை வடிவத்தை காணும் போது, தவறைச் சரி செய்ய முடியாது போவதால், உண்மை வருத்தம் கொள்வதைப் போல, நட்பு காதலாவது தவறு எனக் கணக்கிட்டு , திருமணம் முடிந்த பின் , ஒன்றும் செய்ய முடியாது போகையில், பெண்ணொருத்தி வருத்தம் கொள்ளுகிறாள் தோழியிடம்.

    நிறமற்ற ஒளிக் கலவை தான் எதார்த்த வாழ்வியல் எனச் சொல்லும் பாங்கு பாராட்டுதற்குரியது!!!!!

    நட்புடன்
    குகன்

    Like

  3. //அண்ணா,வர்ணனை கொட்டிக் கிடக்கிறது.மரங்கொத்தியின் அலகை விட உங்கள் பேனா கூர்மையானது.//

    மிக்க நன்றி தங்கையே !

    Like

  4. அண்ணா,வர்ணனை கொட்டிக் கிடக்கிறது.மரங்கொத்தியின் அலகை விட உங்கள் பேனா கூர்மையானது.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.