ஸ்லம்டாக் மில்லியனர் – எனது பார்வையில்

slum

 

அங்கிங்கெனாதபடி எங்கும் பரபரப்பு விஷயமாகியிருக்கும் ஸ்லம் டாக் மில்லியனர் படத்தை இந்த வார இறுதியில் தான் பார்த்தேன்.
சேரியில் வளரும் ஒரு முஸ்லீம் சிறுவன் எப்படி கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கிறான் எனும் முடிச்சுடன் படம் ஆரம்பிக்கும் போது ஏதோ ஒர் அறிவு ஜீவியின் கதையைச் சொல்லப்போகிறார்கள் என சகஜமாக அமர்ந்தால் மனதுக்குள் ஓராயிரம் ஈட்டிகளைப் பாய்ச்சுவது போல காட்சிகளை நகர்த்துகிறார்கள் இயக்குனரும் கதாசிரியரும்.

எங்கே இருக்கிறாள் என்று தெரியாத தனது காதலி இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பாள் என்னும் ஒரு நம்பிக்கை இழையில் மில்லியனயர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கதையின் நாயகன், கால் செண்டர் நிறுவனத்தில் “டீ” பையன்.

விஷயம் எதுவும் தெரியாது அவனுக்கு. மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியதில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அவன் சந்தித்த மனிதர்கள், அல்லது கேட்ட தகவல்கள், பார்த்த அனுபவங்கள் இவற்றின் வெளிச்சமே. ஆனால் மிகவும் கூர்மையான அறிவு அவனுக்கு. எப்போது போன் போட்டால் மில்லியனர் நிகழ்ச்சியில் இடம் பிடிக்கலாம் என்பது உட்பட.

ஆயிரம் ரூபாய் நோட்டில் காந்தித் தாத்தா இருக்கிறார் என்பது தெரியாத சிறுவனுக்கு நூறு டாலர் நோட்டில் இருப்பது பெஞ்சமின் பிராங்கிளின் என்பது தெரிகிறது.

“வாய்மையே வெல்லும்” எனும் தாரக மந்திரம் தெரியாத சிறுவனுக்கு தர்ஷன் தோ கான்ஷயாம் பாடல் எழுதியது யார் என்பது தெரிகிறது.

கேட்டால் யாருக்குமே சந்தேகம் வருவது இயல்பு தான். நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் அனில் கபூருக்கும் சந்தேகம் வருகிறது.
தான் மட்டுமே ஜெயித்த “கோடீஸ்வரன்” நிகழ்ச்சியில் ஒரு சேரிப்பையன் ஜெயித்து விட்டால் அது தனக்கு அவமானம் என உள்ளுக்குள் நினைக்கும் ஒரு ஆணவத் திமிர் அனில் கபூருக்கு. சிறுவனுக்கு தவறான விடையைச் சொல்லிக் கொடுத்து விலக்க முயல்கிறார் ! நாயகனோ மாட்டவில்லை.

அனில் கபூருக்கு சந்தேகம் வலுக்க, கடைசி கேள்வி நாளை நேரடி ஒளிபரப்பு வருவதற்கு முன் காவல் துறையிடம் தள்ளப்படுகிறான் சிறுவன். அங்கே நமது காவல்துறையின் “கண்ணியமான” விசாரணையில் நொறுக்கப்பட்டு, வாயில் இரத்தம் வடிய, கடைசியில் நாயகன் கேள்விகளுக்கான விடை தனக்குத் தெரிந்தது எப்படி என்பதை விளக்குகிறான், வலிக்க வலிக்க.

எந்த ஒரு அதீத சக்தியோ தயாரிப்போ ஏதுமின்றி தனது வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளில் அனுபவ வெளிச்சத்தில் விடைகளைச் சொல்லியது காவல் துறைக்குத் தெரிய வருகிறது. அந்த ஒவ்வோர் விளக்கமும், நெஞ்சைப் பிசைந்து, உயிருக்குள் ஈட்டிகளைப் பாய்ச்சுகின்றன.

அதிலும் குறிப்பாக கவலை என்னவென்பதே அறியாத இரண்டு இஸ்லாமிய சேரிச் சிறுவர்கள் மத வெறித்தாக்குதலில் அமைதியான வாழ்க்கையை இழந்து சின்னா பின்னமாகி சிதறுண்டு திகைக்கும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன.

அழகான, திறமையான சிறுவர்களை ஊனமாக்கி பிச்சையெடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தினரையும், அவர்களின் உண்மை முகம் தெரியாமல் உற்சாகமாய் பாடிக் காட்டு சிறுவர்களையும் பார்க்கும் போது இனம் புரியாத கவலை மனதை ஆகிரமித்துக் கொள்கிறது.

பெஞ்சமின் பிராங்கிளின் தான் நூறு ரூபாய் நோட்டில் இருக்கிறார் என்பது நாயகனுக்குத் தெரியவரும் காட்சி கல் மனதோரையும் கரைக்கிறது

வெளிநாடுகளில் சென்று படங்கள் எடுத்தே பழக்கப் பட்ட நமக்கு, நமது வீட்டின் கொல்லைப் பகுதி எப்படி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இந்தத் திரைப்படம். அதிலும் சேரியில் பிறந்த ஒரு சிறுவனின் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் கொடூர நிஜம் மனதை அறைகிறது. எதிர்த்துப் பேசக் கூட எங்கும் அனுமதியற்ற அவர்களுடைய வாழ்க்கை நமது நிதானத்தின் மேல் கேள்வி எழுப்புகிறது.

நமது நிராகரிப்புகள், மத சகிப்புத் தன்மை இருப்பதால் பீற்றிக் கொள்ளும் நமது நாட்டில் நிகழும் வன் முறை விபரீதங்கள், மனித நேயம் இருக்கிறது என பறை சாற்றிக் கொள்ளும் நமது தெருக்களில் நிலவும் வலி மிகும் நிகழ்வுகள் என காட்சிகள் நம்மைப் பற்றி நமக்கு விளக்குகின்றன.

என் வீட்டுச் சாக்கடையை எப்படி இன்னொருவன் எடுத்து விளம்பரப் படுத்தலாம் எனும் முழக்கங்கள் ஆங்காங்கே எழுவதற்குக் காரணம், தெரிந்தோ தெரியாமலோ இந்த நிலமைக்கு தானும் ஓர் காரணம் எனும் குற்ற உணர்வாய் கூட இருக்கலாம்.

முஸ்லிம் தீவிரவாதியை விஜயகாந்த் சுழற்றிச் சுழற்றி அடிக்கும் போது சிரித்துக் கை தட்டுபவர்கள், ஓர் இஸ்லாமியச் சேரியை சூறையாடும் இந்துத்துவ வெறியைக் கைத்தட்டி வரவேற்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது தான்.

எனினும் சிறுவனின் முகத்தை காவலர் ஒருவர் கொடூரமாய் எட்டி உதைக்கும் காட்சியில் “பாருங்கள் இது தான் உண்மையான இந்தியா” என சிறுவன் சொல்ல, வெள்ளைக்கார தம்பதியர் “உண்மையான அமெரிக்காவை உனக்குக் காட்டுகிறேன்” என பணம் கொடுத்து அரவணைப்பது ரொம்பவே மிகைப்படுத்தப்பட்ட செயற்கை.

துரோகம் செய்யும் அண்ணன், தம்பியின் காதலியை அபகரிக்கும் அண்ணன், தாதாவிடம் பணி செய்யும் அண்ணன், கடைசியில் தம்பிக்காய் உயிர் விடும் அண்ணன் என ஒரு சராசரி பலவீனமான காட்சிப் படைப்பாய் வரும் அண்ணன் கதாபாத்திரம் மனதை தொடுகிறது.

சிறுவயதுக் காதல் என்பதெல்லாம் மனதுக்குள் நெருடலாய் இருந்தாலும், எதையும் கற்றுத் தெரியாத சிறுவர்களிடம் துளிர்விடும் ஆத்மார்த்தமான நேசமாய் இதைப் பார்ப்பதில் பிழையொன்றுமில்லை.

இசை ரஹ்மான் என்பதனாலேயே இந்தப் படம் பிரபலமாயிருக்கிறதோ எனும் சந்தேகம் உண்டு. ஆங்கிலம் பேசும் ஒரு இந்தியப் படமாகவே இந்தப் படம் மிளிர்ந்திருக்கிறது. ரஹ்மானின் இசை பிரமாதம் என்றாலும் இதை விட சிறப்பாகவே தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கிறாரோ என்றும் தோன்றுகிறது.

சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் மனதில் நிற்கும் திரைப்படங்களின் ஒன்று இந்த ஸ்லம்டாக் மில்லியனயர். அதன் முக்கியக் காரணம் நாயகனின் சிறுவயதுக் காட்சிகள்.

25 comments on “ஸ்லம்டாக் மில்லியனர் – எனது பார்வையில்

  1. //உங்கள் அலசல் மிகப் பிரமாதம். காட்சிக்குக் காட்சி நெஞ்சைக் கனக்க வைக்கிறது, நிறைய சிந்திக்கவும் வைக்கிறது இப் படம்.//

    மிக்க நன்றி ரெஜி.. விரிவான கருத்துக்கும், பாராட்டுக்கும்.

    Like

  2. உங்கள் அலசல் மிகப் பிரமாதம். காட்சிக்குக் காட்சி நெஞ்சைக் கனக்க வைக்கிறது, நிறைய சிந்திக்கவும் வைக்கிறது இப் படம்.

    // முஸ்லிம் தீவிரவாதியை விஜயகாந்த் சுழற்றிச் சுழற்றி அடிக்கும் போது சிரித்துக் கை தட்டுபவர்கள், ஓர் இஸ்லாமியச் சேரியை சூறையாடும் இந்துத்துவ வெறியைக் கைத்தட்டி வரவேற்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது தான்.//

    மதபேதங்கள் ஒழிந்தால் மக்கள் எவ்வளவு சுபீட்சமாக வாழலாம். “ஓன்றே குலமென்று பாடுவோம், ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்” இந்த பொற்காலம் உதயமாகும் காலம்தான் எப்போ?:|

    // சிறுவனின் முகத்தை காவலர் ஒருவர் கொடூரமாய் எட்டி உதைக்கும் காட்சியில் “பாருங்கள் இது தான் உண்மையான இந்தியா” என சிறுவன் சொல்ல, வெள்ளைக்கார தம்பதியர் “உண்மையான அமெரிக்காவை உனக்குக் காட்டுகிறேன்” என பணம் கொடுத்து அரவணைப்பது ரொம்பவே மிகைப்படுத்தப்பட்ட செயற்கை.//

    இதை செயற்கைத்தனம் என்றும் முற்றும் முழுதாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில்,
    இங்கு பணம் கேட்டால் “அடி, உதை”.
    அங்கோ, “அடி” பட்டு அகதிகளாகப் போனவர்களுக்கு “சமூக சேவை” யின் அடிப்படையில் பணம் கொடுத்து ஆதரிக்கிறார்களே! அதை என்னவென்று கூறுவது? *-)
    ம்ம்ம்ம்ம்… பெருமூச்சு மட்டும் தான் விட முடிகிறது.

    நன்றி சேவியர்.

    Like

  3. இப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை உங்கள் விமர்சனம் தந்துள்ளது.

    பாராட்டுக்கள்.

    Renuka

    Like

  4. நன்றி தேவா & சிவா…

    பெயரிலி,

    ஆத்மார்த்தமான உணர்வுகளை விரிவாக முன்வைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் பெயரையும் சொல்லலாமே !

    Like

  5. நல்ல அலசல். இந்த திரைப்படம் அவார்டுபெறும் தருணத்தில் எழும் கைதட்டல்கள் எல்லாம் மனிதநேயம் குறித்த இந்திய மனச்சாட்சியையும் தட்டுகின்றது.

    இந்த திரைப்படத்தினூடாக இந்தியர்கள் என்ற உணர்வு மிகுதியில் உள்ளவர்கள் பெருமைப்பட ஒன்றும் இல்லை. அதற்காக திரைப்படத்தை இயக்கியவர் குற்றவாளியும் இல்லை. இந்திய திரைஉலகம் தவிர்க்கும் வலி மிகுந்த தெருக்களில் அவர்கள் நடந்திருக்கின்றார்கள் (பாலா போன்றோர் விதிவிலக்கு) ஆனால் வலி மிகுந்த தெருக்கள் இருப்பதும் அதில் வேதனையுடன் மானுடம் வாழ்வதும் உண்மையே.

    இந்த திரைப்படம் உலகரங்கில் வெற்றி பெறுவதினூடாக சில அரசியல் விசயங்களும் சொல்லப்படுகின்றது. இந்தியாவின் வளர்ச்சி, உலக நாடுகளுடன் போட்டி போடும் பொருளாதரா மேம்பாடு என்பவை இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் பொதுவானதில்லை. அங்கே என்னுமொரு மிகக் கொடுமையான பக்கம் உண்டு. அந்த பக்கத்தில் பெருமளவு மக்கள் வேதனையுடன் வாழ்கின்றனர். அது சரி செய்யப்பட முடியாதது. வளர்ந்த நாடுகளின் வரிசையில் சமாந்திரமாக கைகோர்த்து நிற்க முற்படும் இந்தியனின் நம்பிக்கை மீது இவ்வாறு முன்வைக்கப்படும் விசயங்கள் இடியாய் விழுகின்றது. இந்த செய்திகள் எப்போதும் வளர்ந்த நாடுகளில் பத்திரிகை கட்டுரைகளாக வந்து கொண்டுதான் இருக்கின்றது. தலித்துக்கள் பிரச்சனை, சாதியப் பிரச்சனை, தேவதாசிகள் பிரச்சனை, எயிட்ஸ், இந்து முஸ்லீம் பிரச்சனை, என்று பலவும் வந்துகொண்டுதான் இருக்கும் அந்த வரிசையில் இந்த படமும் பல விசயங்களை முன்வைக்கின்றது.

    உண்மையில் ஆஸ்கார் வாங்கியது என்பது சந்தோசம் துக்கம் இரண்டும் கலந்த ஒரு தர்மசங்கட நிலை என்றுதான் கூற முடியும். சேரிகளும் பிச்சைக்காரர் களின் வேதனையான வாழ்வும் மத வன்முறைகளும் ஏனைய மனிதநேயத்துக்கு புறம்பான தீண்டாமை போன்ற கொடுமைகளும் அப்படியே தான் உள்ளது. குறிப்பாக ஆஸ்கார் என்பது இவ்வாறான பிரச்சனைகளுக்கு மத்தியில் ஜெலித்துக்கொண்டிருக்கின்றது என்பதை உணர முடியும். இந்த திரைப்படத்தின் வெற்றியும் அவர்டுகளும் இறுதியாக இந்த விசயத்தை தான் உலகத்துக்கு எடுத்துக் கூறுகின்றது. எனவே ஆஸ்கார் விருது கிடைத்துவிட்டது. என்னும் பல விருதுகள் கிடைக்கலாம் ஆனால் அதை நினைத்து சந்தோசப்படவும் பெருமைப்படவும் வேண்டுமானால் சமூகத்தில் உள்ள சாக்கடைகளை ஒவ்வொருவரும் உணர்ந்து சுத்தம் செய்வது அவசியமானது.

    Like

  6. முஸ்லிம் தீவிரவாதியை விஜயகாந்த் சுழற்றிச் சுழற்றி அடிக்கும் vijayakanth is remaking this movie, and he acts as Jamal as learned from reliable sources. I belive except the name everything be as usual stuff–what he privide in all his movies….

    Any one can write the story for this movie!!! I mean V.kanth’s movie

    Like

  7. நல்லா அலசிஆராய்ந்து உள்ளீர்!
    என் பதிவிலும் இதுபோல் எழுதியுள்ளேன்..
    அன்புடன் அழைக்கிறேன்..

    Like

  8. unmai xavier
    முஸ்லிம் தீவிரவாதியை விஜயகாந்த் சுழற்றிச் சுழற்றி அடிக்கும் போது சிரித்துக் கை தட்டுபவர்கள், ஓர் இஸ்லாமியச் சேரியை சூறையாடும் இந்துத்துவ வெறியைக் கைத்தட்டி வரவேற்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது தான்.
    anbe sivam endru than indhuthuvam solkirathu
    aanal indhu vanmuraialargal irukindrargal enna seyvathu

    Like

  9. “கோடிஸ்வர சேறி நாய்” பெயருக்கே ஒரு அவர்டு கொடுக்கலாம்.

    ஆஸ்கர் அவர்டு என்பது ஆங்கில நாகரிகம், கலாசாரமும் உள்ள படத்திற்கு கொடுக்கப்படுவது இந்தியர்களுக்கு அது சரிப்பட்டு வராதது. – கமல்

    Like

  10. இப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை உங்கள் விமர்சனம் தந்துள்ளது.

    பாராட்டுக்கள்.

    Like

  11. Pingback: ஆஸ்கர் ரஹ்மானும். கவனிக்கும் கமலும் « அலசல்

  12. I did’t see this movie but ” eight Oscar award ”
    Your story more energy , we are proud about A.R.Rahman also

    Like

  13. நல்லதொரு அலசல்.
    torrent ல் aXXo வின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறேன்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.