பறவை : அறிவியல் புனைக் கதை

bird2a

 

 

 

 

 

 

 

 

 

 

“சார். என்னோட கார்ல ஒரு பறவை அடிபட்டு செத்துப் போச்சு சார்” சென்னை அறிவியல் ஆராய்சிக் கூடத்துக்கு வந்த தொலைபேசியைக் கேட்டு சிரித்தார் வெங்கட்ராமன்.

காலையிலேயே மனுஷனை டென்ஷன் பண்ண வந்திடுவாங்க ஏதாச்சும் ராங் கால் பார்ட்டிங்க என்று உள்ளுக்குள் பொருமியவர் வார்த்தைகளிலும் அதைக் காட்டினார்.

“சார்… நீங்க போன் பண்ணியிருக்கிறது அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்துக்கு. பறவை செத்துப் போனதையெல்லாம் எங்க கிட்டே சொல்ல வேண்டாம் சார். புளூ கிராஸ் க்கு போன்பண்ணுங்க. நான்வெஜ் சாப்பிடுவீங்கன்னா கரம் மசாலா போட்டு குழம்பு வைங்க. இல்லேன்னா நல்லடக்கம் பண்ணிடுங்க.”

சொல்லிக் கொண்டே எரிச்சலுடன் வைக்கப் போனவரை இழுத்துப் பிடித்தது மறுமுனையில் பேசிய வினோத்தின் குரல்.

“சார்… பிளீஸ் வைக்காதீங்க… எனக்குப் பயமா இருக்கு”

“பயமா இருக்கா ? ” வெங்கட்ராமன் வைக்கப்போன போனை மீண்டும் பற்றினார்.

“ஆமா சார். உண்மையிலே அந்தப் பறவை என் கார்ல அடிபட்டதும் சட்டுன்னு போய் பறவையைப் பார்த்தேன் சார். அப்படி ஒரு பறவையை நான் பார்த்ததே இல்லை..”

இப்போது வெங்கட்ராமனை சுவாரஸ்யம் பற்றிக் கொண்டது. “பாத்ததேயில்லைன்னா ? புது விதமான பறவையா ?”

“ஆமா சார். அடிபட்டுக் கிடந்த பறவையைத் தூக்கிப் பாத்தா அதோட வயிற்றுக்குள்ளேயிருந்து ஒரு சத்தம் வந்துட்டே இருந்துது…” வினோத் சொல்லி நிறுத்த வெங்கட்ராமனுக்கு இப்போது இருப்புக் கொள்ளவில்லை.

“சத்தம்ன்னா….?”

“ஏதோ ரேடியோ இரைச்சல் மாதிரி சத்தம் சார். பறவையை உற்றுப் பாத்தப்போ தான் தெரிஞ்சுது அது பறவை இல்ல சார்.. ஒரு ரோபோ ! ” வினோத் சொல்ல வெங்கட்ராமன் இருக்கையை விட்டு எழும்பினார்.

“வாட்…. சின்ன ரோபோவா ? பறவை வடிவிலா ? எங்கே இருக்கு இப்போ ? நீங்க எங்கேயிருந்து பேசறீங்க ? ” வெங்கட்ராமன் பரபரத்தார்.

தகவல் காட்டுத் தீ போல ஆராய்ச்சிக் கூடத்தின் இருக்கைகளுக்கெல்லாம் பரவியது. செய்தியைக் கேட்டு எல்லோரும் ஒட்டு மொத்தமாய் வியந்தார்கள்.

பறவை வடிவில் ஒரு ரோபோவா ? 

இந்தப் பறவை எங்கிருந்து வந்திருக்கக் கூடும் ? பாகிஸ்தான் ? சீனா ? ஏன் வந்திருக்க வேண்டும் ? நம் நாட்டை உளவு பார்ப்பதற்காக வந்திருக்கிறதா ?

இந்த ஒரு பறவை தானா இன்னும் நிறைய பறவைகள் நாட்டுக்குள் பறந்து திரிகின்றனவா ? இவைகளின் நோக்கம் என்ன ? ராணுவ தளவாடங்களைப் படமெடுத்து அண்டை நாடுகளுக்கு அனுப்புவதா ?

அறைகள் கேள்விகளால் நிரம்பிக் கொண்டிருந்தபோது பறவை ஆராய்ச்சிக் கூடத்துக்கு கொண்டு வரப்பட்டது. தகவல் கிடைத்த வல்லுனர்கள் சென்னை ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைந்தனர்.

சட்டென பார்த்தால் புறாவைப் போன்ற தோற்றம். ஒரு இயந்திரப் பறவை என நம்ப முடியாதபடி இறக்கைகள், அலகு, வால் எல்லாமே அச்சு அசலாய் உண்மையான பறவை போல.

அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் முதன்மை அறையில் கிடத்தப்பட்டது பறவை. சாத்தப்பட்ட கண்ணாடிக் கூண்டுகளுக்கு உள்ளே விஞ்ஞானிகளின் புருவம் உயர்வதும், வாய் திறந்து மூடுவதும் என ஏதோ வியப்பு ஓடிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது.

சில மணி நேரங்களுக்குப் பின் டவுன்ஹால் உரையாற்றினார் கூடத்தின் தலைவர் மதன் கபூர்.

இன்றைக்கு நமது பார்வைக்கு வந்திருக்கும் பறவை ஒரு விஞ்ஞான ஆச்சரியம். பறவையைப் போல இயல்பாகவே பறக்கக்கூடிய இந்தப் பறவை ஏதோ இயக்கக் கோளாறு காரணமாக பழுதடைந்து வீழ்ந்திருக்கிறது.

இதன் கண்கள் மிக மிக சக்திவாய்ந்த காமராக்கள். இவை இந்த படத்தை எங்கே அனுப்புகின்றன என்பது மர்மமாக இருக்கிறது. இந்தப் பறவையினுள்ளே இருக்கக் கூடிய எல்லா கருவிகளுமே மிக மிகப் புதியதாக உள்ளன. நாம் இதுவரை தெரிந்து கொள்ளாத நுட்பம் இதில் தெரிகிறது. மிகவும் நுண்ணிய, மெல்லிய அளவில் இருப்பதால் முழுமையாய் ஏதும் இன்னும் கண்டறியப்படவில்லை.

இது ஏதோ அயல் நாடு நமது நாட்டின் மீது பறவைகளை ஏவி நமது எல்லைகளைப் படம்பிடிக்கவும், நமது ராணுவ நிலையங்கள், பாதுகாப்பு பகுதிகள் அனைத்தையும் படம்பிடிக்கவும், அணு நிலையங்களை நோட்டம் விடவும் அனுப்பியிருப்பதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.

இதை பாகிஸ்தான் செய்திருக்க வாய்ப்பில்லை. வெறுமனே அடி, வெட்டு, விதண்டாவாதாப் பேச்சு, தீவிரவாதம் இவற்றை மட்டுமே அறிந்திருக்கும் பாகிஸ்தான், இத்தனை உயரிய தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.

எனில் இது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடு செய்து வரும் மறைமுக வேலையாகவே கருத வேண்டியிருக்கிறது. இதை உலக சபையின் பார்வைக்குக் கொண்டு செல்லும் படி இந்திய அரசை இந்த ஆராய்சிக்கழகம் கேட்டுக் கொள்ளும். இந்த பறவையை மேலும் ஆய்வு செய்ய அகில இந்திய அளவிலான குழு அமைக்கப்படும்.

நாட்டின் பாதுகாப்பான இடங்களில் இத்தகைய பறவைகள் உலவுகின்றனவா என்பதைக் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கவேண்டியதும், அதற்காக சிறப்புக் கருவிகள் ஏற்படுத்த வேண்டியதும் அவசியம் எனவும் இந்த அமைப்பு கருதுகிறது.

மதன் கபூர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது வெங்கட்ராமனின் தொலைபேசி ஒலித்தது.

“சார்… ஒரு கிரிக்கட் பால் போல ஒண்ணு இங்கே கிடந்துது சார். நான் அதை எடுக்கப் போனதும் பறந்து போச்சு…” 

அதே நேரம்

மயூபா கிரகத்தின் ஆராய்ச்சிக் கூடத்தில் மக்கள் உற்சாகமாய் இருந்தனர்.

பூமி எனும் கிரகத்துக்கு நாம் அனுப்பிய விண்வெளிக் கலங்களிலிருந்து கிடைத்த தகவல்கள் வியப்பூட்டுகின்றன. அங்கும் ஓரளவு விஞ்ஞான வளர்ச்சியடைந்த பகுதிகள் இருக்கின்றன.

மயூபா கிரகத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பார்த்தது போல இருக்கிறது பூமி எனும் கிரகம். ஏராளம் மரங்கள், தண்ணீர், மிக சுத்தமான காற்று என வியப்பூட்டும் அருமையான கிரகம்.

மயூபா இயந்திரங்களின் பூமியாகிவிட்டது. எனவே பூமியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நமது விண்கலப் பறவைகள், பந்துகள், மண்புழுக்கள், வண்டுகள் எல்லாம் அனுப்பிய தகவல்கள் சுவாரஸ்யமானவை. பூமியின் எல்லா பாகங்களிலும் இருக்கும் நாம் அனுப்பிய பத்து இலட்சம் கருவிகள் நமக்கு துல்லியமான தகவல்களைத் தந்து கொண்டே இருக்கின்றன.

சொல்லிக் கொண்டிருந்தவன் மனிதனைப் போலவே இருந்தான். அறிவியல் படங்கள் காண்பிப்பது போல அகோரமாய் இருக்கவில்லை. இரண்டு கைகள் இரண்டு கால்கள். சரியான அளவிலான தலை என இருந்தவன் திரும்பிய போது தெரிந்தது சின்னதாய் ஒரு வால்.

 “பூமியை அபகரிப்பது எளிதா ?”

 “பூமியின் மீது போர் தொடுத்தால் தான் பூமியை தன் வசப்படுத்த முடியும்.” 

“பூமியின் பலத்தை அறியாமல் அதன் மீது எப்படிப் போர் தொடுப்பது ?” 

“இப்போது நாம் அனுப்பியிருக்கும் பத்து இலட்சம் கருவிகளையும் வெடிக்க வைத்தாலே பூமியை முழுமையாய் அழித்துவிடலாம். ஆனால்…”

“ஆனால்.. ?”

“நமக்குத் தேவை வெறும் பொட்டல் காடல்ல. முழுமையான பூமியும், அதிலுள்ள மனிதர்களும். நாம் அவர்களைப் போலவே இருப்பதால் நாமும் அவர்களோடு அவர்களாக உலவ முடியும். இதுவரை நாம் கண்டறிந்த உயிரினங்கள் வாழும் நாற்பத்து எட்டு கிரகங்களிலும், இந்த கிரகத்து உயிரினம் மட்டுமே நம்மைப் போல் இருக்கிறது”

“இருந்தாலும் பூமியிலுள்ள உயிரிகளுக்கு வால் இல்லையே…”

“வால் இல்லாதது கொஞ்சம் அவலட்சணம் தான் ! இருந்தாலும் பரவாயில்லை. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அவர்களும் நம்மைப் போலவே நடக்கின்றனர், பேசுகின்றனர், குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்….”

“சரி.. கேட்க சுவாரஸ்யமாய் தான் இருக்கிறது. நம் கிரகத்து மக்கள் அனைவரும் தங்குமளவுக்கு பூமி பெரியதா ?”

“நம்மைப் போல பத்து மடங்கு கூட்டம் அங்கே வசிக்கிறது. எனவே நாமும் போய் சேர்ந்து கொள்ள வேண்டியது தான்.”

“சரி.. எப்படி பூமியில் போகப் போகிறோம்…”

“அது மட்டும் சஸ்பென்ஸ்” அதுவரை எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருந்த மனிதன் மெலிதாய் புன்னகைத்தான்.

 0

 மயூபா கிரகத்தின் திட்டத்தை அறியாத சென்னை ஆராய்ச்சிக் கழகம் இந்திய அரசின் உயர் மட்டக் குழுவில் தனது  கருத்துக்களைச் சமர்ப்பித்தது.

இந்திய அரசு உடனே இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரை அழைத்து நிலமையை விளக்க, எல்லாவற்றையும் உடனடியாக மறுக்கும் தூதர் இதையும் மறுத்தார். “இந்தியாவுடனான இணக்கமான சூழலை அமெரிக்கா எப்போதுமே உடைக்காது ” என்றார் வழக்கம் போலவே. 

தகவல் உலகத்தின் சபைக்குச் சென்றது. 

உலகத்தினர் அனைவருக்குமே இந்தச் செய்தி அதிர்ச்சிச் செய்தியாக இருந்தது. புறா, பந்து போன்ற வடிவங்களில் அதி நவீன கருவிகள் நாட்டில் ஊடுருவிக் கிடக்கின்றன என்றால் இன்னும் என்னென்ன வடிவங்களில் ஒற்றுக் கருவிகள் உலவுகின்றனவோ என உலகம் கவலைப்பட்டது. 

இது பின்லேடனின் சதியாய் இருக்கலாமோ எனவும் அமெரிக்கா பேசத் தவறவில்லை. அப்படியானால் பறவைகள் மோதி கட்டிடங்கள் உடையுமோ எனும் கவலையை அமெரிக்கர்களின் விழிகளில் பார்க்க முடிந்தது. 

பூமியின் தலைவர்களும், விஞ்ஞானிகளும், குழம்பிப் போய், வியந்து போய் பேசிக்கொண்டிருக்கையில். 

ஒருவேளை இது ஏலியனாக இருக்கலாமோ என யூ.எஃப். ஓ கூறியதை மட்டும் யாருமே காது கொடுத்துக் கேட்கவில்லை.

 0

 நாளை பூமி மீதான தாக்குதல் நாள்.

 மயூபாவில் நாள் குறித்தனர். ஆண்களும் பெண்களுமாக அனைவரும் விண்கலங்களில் ஏறி பூமிக்கு வர ஆயத்தமாகியிருந்தனர்.

 நோவாவின் பேழை போல மிகப்பெரிதாய் இருந்த விண்கலங்கள் ஏழு அடுக்குகளால் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் கீழ் அடுக்கிலிருந்த காந்தப் பகுதியில் சக்தியைச் செலுத்தினால் அது ஒளியாண்டுகள் வேகத்தில் பாய்ந்து சேரவேண்டிய பகுதியை சில நிமிடங்களில் சேர்ந்து விடும்.

 வரிசையாய் நின்றிருந்த ஆயிரக்கணக்கான விண்கலங்கள் எங்கெங்கே இறங்கவேண்டும் என்பது இயந்திரப் பறவைகள் அனுப்பிய தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருந்தது.

 எப்படி பூமி மீது போரிடப் போகிறார்கள் என்பது மட்டும் மர்மமாகவே இருந்தது.

மயூபாவின் விஞ்ஞானக் கூடத்திலிருந்த தலைமை விஞ்ஞானி சொன்னார்.

நமது திட்டம் இது தான். பூமியில் வாழும் மனிதர்களுக்கு ஒரு விஷேஷ குணம் இருக்கிறது. நம்மைப் போல அவர்கள் பட்டியலிட்டு எதையும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் காரணமாய் இருப்பவை அவர்களுடைய ஹார்மோன்கள் தான்.

 அதில் நாம் எடுத்திருப்பது ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோன். இதுதான் மனிதர்களை இன்பமான சூழலுக்கு இட்டுச் செல்கிறது. இதை நுகர்ந்தால் மனிதன் போர் சிந்தனையை எல்லாம் விட்டு விட்டு காதல் சிந்தனைக்குள் மூழ்வி விடுவான். 

தலைமை விஞ்ஞானி சொல்லச் சொல்ல குழுவிலிருந்தவர்கள் விழிகளை விரித்து கேட்டுக் கொண்டிருந்தனர். 

இந்த ஆக்ஸிடோசினைத் தான் நாம் செயற்கையாய் தயாரித்து ஏற்கனவே பூமியில் உலவும் கருவிகள் மூலம் காற்றில் பரவ விடப் போகிறோம். 

“எப்போது தயாரிப்பது ? அதற்கு ஒரு துளி ஆக்ஸிடோனின் வேண்டுமே” 

“ஏற்கனவே தயாரித்தாயிற்று. ஒரு துளியை வைத்துக் கடலை உருவாக்கலாம் என்பது இன்னும் பூமி மக்களுக்குத் தெரியாத கலை. நாம் ஏற்கனவே அந்த ஹார்மோனை பிரதியெடுத்தாயிற்று. கலவியின் போதும், தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும் போதும் இந்த ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும் என்பது பூமி மக்களுக்கே கூட தெரிந்த சமாச்சாரம் தான். ”

நாளைக் காலையில் நாம் புறப்படுவதற்கு முன் பூமியிலுள்ள நமது கருவிகளான பறவைகள், மண்புழுக்கள், பந்துகள், வண்டுகள் எல்லாம் பூமியெங்கும் பறந்து திரிந்து இந்த ஆக்ஸிடோசினை பூமியெங்கும் தூவிக்கொண்டே இருக்கும்.

மக்கள் மோகச் சிந்தனையில் மூழ்கும் போது, நாம் போய் இறங்குவோம். இதன் மூலம் மக்களுடைய போரிடும் சிந்தனை தற்காலிகமாய் மறையும் நாம் சென்று இறங்குவதை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள். கூடவே நமது இனத்தைப் பெருக்கிக் கொள்வதும் எளிதாகிவிடும்.

அவர் சொல்லிக் கொண்டே போக, விண்கலங்கள் பூமியை நோக்கிப் புறப்பட ஆயத்த நிலையில் இருந்தன.

விஷயம் தெரியாத இந்தியாவின் சில அரசியல் கட்சிகள் பாகிஸ்தான் பிரதமருக்கான கொடும்பாவியைத் தயாரித்துக் கொண்டிருந்தன.

 0 

 நன்றி : யூத்புல் விகடன்.

http://youthful.vikatan.com/youth/xaviorstory27032009.asp

12 comments on “பறவை : அறிவியல் புனைக் கதை

  1. நல்ல “புனைக் கதை” தான்…. ஆனால்….
    hmmmmmmmm…..

    Like

  2. /ஆகா.. அப்படியா.. பூமிக்கு வருவார்களா…வந்தால் என்ன நடக்கும்//

    பொறுத்திருந்து தான் பாக்கணும் போல 😀

    Like

  3. /நல்ல கதை… 🙂 பிறகு என்ன நடக்ககும்…?
    //

    அதெல்லாம் அவரவர் கற்பனையைப் பொறுத்த சமாச்சாரம் 🙂

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.