கி.மு :: நெற்றிப் பொட்டில் ஆணி !!!

தெபோராளும், பாராக்கும்

debora

ஏகூர் என்பவர் இஸ்ரயேலர்களின் வழிகாட்டியாக இருந்து வந்தார். அவர் வழிகாட்டியாக இருந்தவரைக்கும் இஸ்ரயேலர்கள் கடவுளின் வழியில் நடந்து வந்தார்கள். ஏகூர் இறந்தார். இஸ்ரயேலர்கள் மீண்டும் கடவுளை நிராகரித்து விட்டு அன்னிய தெய்வங்களை வழிபடவும், சிற்றின்பம், வன்முறை போன்றவற்றில் நாட்டம் கொள்ளவும் ஆரம்பித்தனர். கடவுள் அவர்களை மீண்டும் தண்டித்தார்.

அப்போது கானானியரின் மன்னனாக யாபீன் என்பவர் ஆட்சிசெய்து வந்தார். அவர் பலத்த படையினரோடு வந்து இஸ்ரயேல் மக்களைத் தாக்கி மீண்டும் அவர்களை அடிமை நிலைக்குக் கொண்டு வந்தார். இஸ்ரயேலர்கள் மக்கள் கடவுளை மறந்து சிதறிக் கிடந்ததால் அவர்களால் போரில் வெற்றி பெற இயலவில்லை.

யாபீன் மன்னனின் படைத்தளபதி பெயர் சிசெரா. அவன் மிகவும் கொடுமைக்காரனாக இருந்தான். அவனுடைய படைபலம் மிகப் பெரிது. அவனிடம் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட இரும்பு ரதங்கள் இருந்தன. எத்தனை பெரிய படையாய் இருந்தாலும் அவனுடைய ரதங்கள் அவற்றை நிர்மூலமாக்கி வந்தன. அவன் கடுமையான சட்டங்கள் பலவற்றைப் போட்டு இஸ்ரயேல் மக்களை கடுமையாகப் பழிவாங்கினார். இஸ்ரயேலர்கள் உழைப்பின் பயன்களை எல்லாம் அரசனுக்கே கொடுக்க வேண்டிவந்தது. அவர்களால் எதையும் சுதந்திரமாகச் செய்ய முடியவில்லை. இஸ்ரயேல் குல பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. இஸ்ரயேல் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

நிலமை கட்டுக்குள் அடங்காமல் போவதைக் கண்ட மக்கள் ஒன்றுகூடினார்கள்.

‘நம்முடைய இந்த நிலமைக்குக் காரணம் நம்முடைய பாவங்கள் தான். நம்மில் பலர் பாகாலை வணங்குகிறோம். இனிமேல் நாம் மனம் திரும்பி கடவுளின் வழிக்கு வரவேண்டும். இனிமேல் நமக்கு நம்முடைய தெய்வத்தைத் தவிர வேறு தெய்வங்களே இருக்கக் கூடாது. அப்போது தான் நம்முடைய கஷ்டகாலத்துக்கு ஒரு விடிவு கிடைக்கும்.’ ஒருவர் பேசினார்.

‘ஆம் உண்மை தான். அனைத்துக்கும் காரணம் நம்முடைய கீழ்ப்படியாமை தான். இனிமேல் நம்முடைய கடவுளை மட்டுமே வழிபட வேண்டும். நம்முடைய மூதாதையர்களின் வாழ்க்கையில் கூட இதே போல பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. எல்லாமே கடவுளை விட்டு விலகிப்போனபோது நடந்தவை தான்’

‘நாம் கண்டிப்பாக நம்முடைய நம்முடைய பாவ வழிகளை விட்டு விலகியாக வேண்டும்’

‘கடவுளை வழிபடுவது, அவரை நாவால் துதிப்பதும், பலி செலுத்துவதும் மட்டுமல்ல. அவருடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவும் வேண்டும். எனவே இனிமேல் யாரும் கானானியரோடு கலக்கக் கூடாது. சிற்றின்பச் சுழலில் சிக்கவும் கூடாது’

மக்கள் அனைவரும் நீண்டநேரம் விவாதித்தார்கள். கடைசியில் எல்லோரும் ஒரே குரலாக கடவுளை நோக்கி மன்றாட ஆரம்பித்தார்கள். இஸ்ரயேல் மக்கள் மனம் திரும்பி தன்னுடைய வழியில் வந்ததைக் கண்ட கடவுள் மகிழ்ந்தார். அவர்களை மீட்பதென்று முடிவெடுத்தார்.

தெபோராள் இஸ்ரயேல் மக்களின் வழிகாட்டியாகத் தெரிந்தெடுக்கப் பட்டாள்.

தெபோராள் மன உறுதியும், சிந்தனைத் தெளிவும், இறை பக்தியும் நிறைந்தவள். அவள் ஒரு பேரீச்சை மரத்தின் அடியில் வசித்துவந்தாள். கடவுளை மனதில் நினைத்தவர்களுக்கு அதை விட மனநிறைவு அளிக்கக் கூடிய வேறு சொத்துக்கள் ஏது ? தெபோராவும் உலக சொத்து சுகங்கள் மீதெல்லாம் அக்கறைப்படாமல் கடவுளையே நினைத்து வாழ்ந்து வந்தாள்.

ஒருநாள் அவர் பாராக் என்னும் இஸ்ரயேல் வீரர் ஒருவரை அழைத்தாள். பாராக் நல்ல பலசாலி. பல போர்களை முன்னின்று நடத்திய அனுபவம் மிக்கவன்.

‘பாராக். சிசெராவின் கொடுமைகளிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டிய நேரம் வந்து விட்டது’ தெபோராள் சொன்னாள்.

‘இதைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.’ பாராக் ஆனந்தமாய்ச் சொன்னான்.

‘இந்த வெற்றி உன் மூலமாய் தான் வரும்’

‘என் மூலமாகவா ? புரியவில்லையே ?’

‘நீதான் படையைத் திரட்டிக் கொண்டு போய் சிசெராவைத் தோற்கடிக்க வேண்டும். கடவுள் உன்னுடன் இருப்பார்.’

‘ஐயோ.. சிசெராவை எதிர்க்க என்னால் முடியாது. அவரை எதிர்க்குமளவுக்கு நம்மிடம் படை வலிமையும் இல்லை’

‘கடவுள் தான் அனைவரையும் படைத்தவர். அவரால் தோற்கடிக்கப் பட முடியாத மனிதர் இல்லை. அவர் நம்மோடு இருக்கிறார். தைரியமாகச் செல்’

‘இல்லை… எனக்குப் பயமாக இருக்கிறது. என்னால் முடியாது’ பாராக் மீண்டும் மறுத்தார்.

‘கடவுள் உன்னோடு வந்தால் கூட பயமா உனக்கு ?’ தெபோராள் கேட்டாள்.

‘கடவுள் வருவது இருக்கட்டும். நீங்கள் என்னோடு வந்தால் நான் நம்பிக்கையுடன் போரிடச் செல்கிறேன். முடியுமா உங்களால்’ பாராக் கேட்டார்.

‘சரி… நானும் உன்னுடன் வருகிறேன். ஆனால், நீ கடவுளை முழுவதும் நம்பாததால் செசரா உன் கையால் சாகமாட்டான். அவனுடைய சாவு ஒரு பெண்ணினால் தான் வரும்’ தெபோராள் சொன்னாள்.

‘ஒரு பெண்ணினால் சிசெரா என்னும் மாபெரும் வீரன் கொல்லப்படுவானா ? வேடிக்கைக் கதையாக இருக்கிறதே’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்ட பாராக் அதை வெளிக்காட்டாமல் தெபோராவிடமிருந்து விடைபெற்று இஸ்ரயேல் படையைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டார். பெரும் இஸ்ரயேலர் படை ஒன்று தயாரானது.

சில நாட்கள் சென்றபின் தெபோராள் பாராக்கை மீண்டும் அழைத்து,’ போருக்கான தருணம் வந்து விட்டது. சிசெராவிற்கு எதிராகப் போரிடப் புறப்படுவோம்’ என்றாள். படை கடவுளின் ஆதரவுடன் சிசெராவை எதிர்த்துப் போரிடப் புறப்பட்டது.

போர் துவங்கியது.

இஸ்ரயேலரின் படைக்கு முன்னால் சிசெராவின் இரும்பு ரதங்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சிசெரா பெரும் பின்னடைவைச் சந்தித்தார். போரில் இஸ்ரயேலர்களின் கை ஓங்கியது. சிசெரா ரதத்தை விட்டுத் தப்பியோடினார். தப்பியோடிய சிசெரா யாகேல் என்பவளுடைய கூடாரத்தில் தஞ்சம் புகுந்தார். யாகேலின் கணவனும், யாபீன் அரசனும் நண்பர்களாக இருந்தார்கள்.

‘வாருங்கள். நீங்கள் சிசெரா தானே ? ‘ யாகேல் வரவேற்றாள்.

‘ஆம்.. இஸ்ரயேலர் படை நம்முடைய படையைச் சிதறடித்து விட்டது. நான் தப்பியோடி இங்கே வந்தேன். நல்லவேளை இது உன் கூடாரம். இங்கே எனக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது’ சிசெரா சொன்னான்.

‘கண்டிப்பாக … உங்களைப் போன்ற ஒரு வீரரைப் பாதுகாப்பது எனக்கு மகிழ்ச்சியல்லவா ? மிகவும் களைப்பாய் இருக்கிறீர்கள். ஏதேனும் குடிக்கத் தரவா ?’ யாகேல் கேட்டாள்.

‘கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் மிகவும் மகிழ்வேன்’

யாகேல் உள்ளே சென்று சிசெராவிற்குக் குடிப்பதற்காக பால் கொண்டு வந்தாள். சிசெரா அதைக் குடித்துச் சோர்வகற்றினார்.

‘மிக்க நன்றி யாகேல். நான் உள் அறைக்குச் சென்று கொஞ்சம் இளைப்பாறுகிறேன். யாரேனும் என்னைத் தேடி வந்தால் நான் இங்கே வரவேயில்லை என்று சொல்’ சிசெரா சொல்லிவிட்டு உள் அறைக்குச் சென்று படுத்தார். கடுமையான போரும், தப்பியோடிய களைப்பும் அவரை தூக்கத்துக்குள் இழுத்துச் சென்றன.

யாகேலின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து சிசெரா அயர்ந்து உறங்கினான். ஆனால் யாகேலோ மன்னன் யாபீனையும், தளபதி சிசெராவையும் மிகவும் வெறுத்தாள். அது சிசெராவிற்குத் தெரியவில்லை.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிசெராவைப் பார்க்கப் பார்க்க யாகேலுக்குள் இருந்த வன்மம் வெளிவந்தது. சிசெராவைக் கொல்வதற்குச் சரியான சந்தர்ப்பத்தைக் கடவுளே தனக்கு அளித்திருப்பதாய் நினைத்தாள். இந்த சந்தர்ப்பத்தை விட்டு விட்டால் இவனைப் பழிவாங்க வேறு வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். சிசெராவைக் கொல்வதென்று முடிவெடுத்தாள்.

வீட்டிலிருந்த பெரிய சுத்தியல் ஒன்றைக் கைகளில் எடுத்தாள். கூடாரத்தில் இருந்த நீளமான ஆணி ஒன்றையும் எடுத்தாள்.

நேராக தூங்கிக் கொண்டிருந்த சிசெராவின் அருகில் சென்று அவனுடைய நெற்றிப் பொட்டில் ஆணியை வைத்தாள். கோபமும், ஆத்திரமும், வெறுப்பும் அவளுடைய கண்களில் கொப்பளித்துப் பாய, கையிலிருந்த சுத்தியலால் ஆணியை ஓங்கி அடித்தாள். என்ன நடக்கிறது என்பதைப் சிசெரா புரிந்து கொள்ளும் முன் யாகேல் அடித்த ஆணி அவனுடைய நெற்றிப் பொட்டைப் துளைத்து மறுமுனை வழியாக வெளியே வந்து தரையில் புதைந்தது.

சிசெரா துடிதுடித்து இறந்தான். தெபோராளின் வாக்குப் படி அவனை ஒரு பெண்ணே கொன்று விட்டாள்.

தப்பியோடிய சிசெராவைத் தேடிக் கொண்டு பாராக் அந்தப் பக்கமாக வந்தான். வாசலிலே பாராக்கின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த யாகேல் அவனுக்கு எதிரே வந்து நின்றாள்.

‘வாருங்கள் … நீங்கள் பாராக் தானே’

‘ஆம் பெண்ணே… நீ யார் ?’

‘உங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்ததை அறிந்து மகிழ்ச்சி’ யாகேல் புன்னகைத்தாள்.

‘இன்னும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை பெண்ணே. சிசெரா தப்பியோடிவிட்டான். சிசெராவைக் கொன்றபின் தான் முழுவெற்றி கிடைக்கும். அவனைத் தான் தேடி அலைகிறேன்’ பாராக் சொன்னார்.

‘சிசெராவா ? அவன் இதோ என்னுடைய வீட்டின் உள் அறையில் படுத்திருக்கிறார்’ யாகேல் சொன்னதும், பாராக் தன்னுடைய உடைவாளை உருவிக் கொண்டு அவளுடைய கூடாரத்துக்குள் பாய்ந்தார். உள்ளே சிசெரா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான்.

‘செசரா உன் கையால் சாகமாட்டான். அவனுடைய சாவு ஒரு பெண்ணினால் தான் வரும்’ என்று தெபோராள் சொன்ன வார்த்தைகள் அவனுடைய மனதில் எதிரொலித்தன. கடவுளின் செயலை எண்ணி வியந்தான்.

சிசெரா கொலைசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டதும் யாபீன் மன்னன் நடுங்கினார். இஸ்ரயேலர்களுக்கு அஞ்சி ஒடுங்கினான். இஸ்ரயேலர்களின் கை எங்கும் ஓங்கியது. அவர்களுக்கு எதிராக இறுக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுகளும் அறுந்தன.

இவ்வாறு இஸ்ரயேல் மக்களைக் கடவுள் ஒரு கொடுமையான மன்னனிடமிருந்து பாதுகாத்தார்.

4 comments on “கி.மு :: நெற்றிப் பொட்டில் ஆணி !!!

  1. //இறைவன் தலைமையில் ந்டக்கும் எச்செயலும் நன்மையிலேயே முடியும். நல்ல நடையில் எழுதப்பட்ட வரலாறு. நல்வாழ்த்துகள் சேவியர்//

    மனமார்ந்த நன்றிகள். 🙂

    Like

  2. இறைவன் தலைமையில் ந்டக்கும் எச்செயலும் நன்மையிலேயே முடியும். நல்ல நடையில் எழுதப்பட்ட வரலாறு. நல்வாழ்த்துகள் சேவியர்.

    Like

  3. //அன்று நடந்த சரித்திர வரலாற்றை இலகுநடையில் தந்தமைக்கு நன்றி சேவியர்!….
    நல்லவர்களுக்கு இறை வழிநடத்தல் எப்போதும் இருக்கும்….
    தொடரட்டும் உங்கள் இறைப்பயணம்!

    //

    நன்றி ஷாமா…

    Like

  4. இறைவன் வழிநடத்தும் போர் என்பது காலம் காலமாக (நல்லவர்களை வாழவைத்து…தீயவர்களை அழிப்பது) எல்லா சமூகத்தினரிடையேயும் நடந்தேறியவையே… புராணக் கதைகளில் வரும் மஹாபாரதப்போர் உட்பட!
    இங்கே,
    அன்று நடந்த சரித்திர வரலாற்றை இலகுநடையில் தந்தமைக்கு நன்றி சேவியர்!….
    நல்லவர்களுக்கு இறை வழிநடத்தல் எப்போதும் இருக்கும்….
    தொடரட்டும் உங்கள் இறைப்பயணம்!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.