இஸ்ரவேலர்களின் மன்னனாக இருந்த தாவீதிற்கு ஏராளமான மனைவிகளும், பிள்ளைகளும் இருந்தனர். அவர்களின் ஒருவன் பெயர் அப்சலோம்.
அப்சலோமிற்கு தாமார் என்றொரு சகோதரி இருந்தாள். தாமார் பேரழகி. இளமையும் அழகும் ஒரே இடத்தில் கொட்டி வைத்தது போன்ற அழகிய உருவம் அவளுக்கு. அவளைக் கண்டவர்கள் அனைவரும் தங்களை மறந்து அவளுடைய அழகில் சிறிது நேரம் சொக்கிப் போவது நிச்சயம். அந்த அளவுக்கு அழகி அவள்.
தாவீதிற்கும் இன்னொரு மனைவிக்கும் பிறந்த ஒரு மகன் அம்மோன். அவனும் நாளுக்கு நாள் அழகும் இளமையும் அதிகரித்துக் கொண்டே வருகின்ற தாமாரின் மீது ஆசைப்பட்டான். தன்னுடைய தங்கை என்று தெரிந்திருந்தும் அவள் மீது கொண்ட மோகத்தை அவனால் நிறுத்தி வைக்க முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகளில் அவன் தாமாரின் நினைவில் புரண்டான். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்னும் நினைப்பிலேயே அவன் நோயுற்றான்.
ஒரு நாள், அம்மோனைக் காண அவனுடைய நண்பன் யோனத்தாபு வந்தான்.
‘இளவரசே… என்னவாயிற்று உடம்புக்கு ? ‘ யோனத்தாபு கேட்டான்.
‘மனசு சரியில்லாததால் உடம்பும் வாடிவிட்டது… ‘ அம்மோன் சொன்னான்.
‘இளவரசருக்கே மனசு சரியில்லையா ? என்ன சொல்கிறீர்கள் ? மனசில் இருப்பதை மறைக்காமல் சொல்லுங்கள். எந்தக் குழப்பத்துக்கும் ஒரு முடிவு உண்டு, எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. உங்கள் கலக்கத்தைச் சொல்லுங்கள், அதைத் தீர்க்க நான் ஒரு வழி சொல்வேன்’
‘நான் ஒரு பெண்ணை அடைய வேண்டும். ஆனால் அது எப்படியென்று தான் தெரியவில்லை’ அம்மோன் கூறினான்.
‘இவ்வளவு தானா விஷயம். நீர் தான் இளவரசராயிற்றே. எந்தப் பெண் வேண்டுமோ அந்தப் பெண்ணை அறைக்கு அழையுங்கள். இதில் என்ன சிக்கல் ? இதற்கு ஏன் மனவருத்தம் ?’ நண்பன் கேட்டான்.
‘இல்லை… அந்தப் பெண்ணை நான் படுக்கைக்கு அழைக்க முடியாத நிலை’
‘புரியவில்லையே !!’
‘நான் விரும்புவது தாமாரை. அவள் எனக்குத் தங்கை முறை. ஆனால் அவளை அடையவில்லையெனில் நான் செத்து விடுவேன் போலிருக்கிறது’ அம்மோன் உண்மையைச் சொன்னான்.
‘ஓ… அதுதான் விஷயமா ?’ என்று இழுத்த யோனத்தாபு சிறிது நேரம் யோசித்தான்.
‘ம்ம்… நான் ஒரு வழி சொல்கிறேன். கேட்கிறீர்களா ?’
‘தாமாரை அடையவேண்டும். அதற்காக நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். இதற்காக அவமானப் பட நேர்ந்தால் கூடக் கவலையில்லை’ அம்மோன் சொன்னான்.
‘அந்த அளவுக்கு நீங்கள் தாமார் மீது ஆசைப்படுகிறீர்களா ? சரி..ஒன்று செய்யுங்கள். நீங்கள் உடம்பு சரியில்லாதது போல நடியுங்கள். போர்வைக்குள் சுருண்டு படுத்துக் கொள்ளுங்கள். எப்படியும் உம்முடைய தந்தை உம்மைக் காண வருவார். அவரிடம், எனக்கு உடம்பு சரியில்லை, தாமாரை அனுப்பி கொஞ்சம் உணவு தயாரிக்கச் சொல்லுங்கள். தங்கை கையால் சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது என்று சொல்லுங்கள்’ நண்பன் திட்டம் தயாரித்துக் கொடுத்தான்.
அம்மோனுக்கும் அந்தத் திட்டம் பலிக்கும் போல தெரிந்தது. ஒத்துக் கொண்டார். திட்டமிட்டபடியே அவர் மிகவும் நோயுற்றவர் போல நடிக்க தாவீது அவரைக் காண வந்தார்.
‘மகனே… என்னவாயிற்று உனக்கு ? படுக்கையிலேயே கிடக்கிறாயே’ தாவீது கேட்டார்.
‘உடம்பு மிகவும் சோர்வாக இருக்கிறது. நீங்கள் பல வேலைகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள். பாசத்துக்குரிய யாராவது அருகில் இருக்க வேண்டும் போல இருக்கிறது. தாமாரை அனுப்புவீர்களா ? அவள் கையால் கொஞ்சம் சாப்பிடவேண்டும்’ அம்மோன் நடித்தான்.
தாவீதிற்கு அம்மானின் சூழ்ச்சி புரியவில்லை. ‘ தங்கையை அனுப்புவது தானே… இதோ இப்போதே அனுப்புகிறேன்’, என்று சொல்லி உடனே தாமாரை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்.
தாமார் அண்ணனைக் காண ஓடி வந்தாள்.
‘அண்ணா… என்னவாயிற்று. உங்கள் பாசம் என்னை நெகிழச் செய்கிறது. நான் இதோ இப்போதே உங்களுக்கு சூடான உணவு தயாரித்துத் தருகிறேன்… ‘ தாமார் பாசத்தால் நனைத்தாள். ஆனால் அம்மோனின் மனமோ மோகத்தில் மூழ்கிக் கிடந்தது.
தாமாரும், அம்மோனும் மட்டும் தனியறையில் இருந்தார்கள். தாமார் உணவு தயாரித்து வந்து அண்ணனின் அருகே அமர்ந்தாள். அம்மான் சட்டென தாமாரின் கையைப் பிடித்தான். அவனுடைய கையில் காமத்தின் சூடு தெரிந்தது.
தாமார் திடுக்கிட்டாள். ‘அண்……ணா…’ அவளுடைய குரல் பாதி வழியில் தடுக்கி விழுந்தது.
‘தாமார்.. கவலைப்படாதே. வா… என்னுடன் படு…என்னுடைய நோய்க்குக் காரணமே நீ தான். உன் நினைவில் தான் எனக்கு நோயே வந்தது. இப்போது அந்த நோய்க்கு மருந்தும் நீதான். வா..’ அம்மான் சொன்னான்.
தாமார் அதிர்ந்து போய் எழுந்தாள். ‘ இல்லை அண்ணா.. நீங்கள் என் சகோதரர். இதெல்லாம்… கூடவே கூடாது…’ தாமார் மறுத்தாள்.
அம்மான் விடவில்லை. ‘இல்லை நீ என் வேண்டுகோளை நிறைவேற்றியே ஆகவேண்டும்’ என்று கூறி அவளைப் பிடித்து இழுத்தான்.
‘அண்ணா… குறைந்தபட்சம் நீ நம்முடைய தந்தையிடம் பேசு. நானே உனக்கு மனைவியாகிறேன். இஸ்ரயேலரிடம் இந்த பழக்கம் இல்லையென்றாலும் கூட உன் நலனைக் கருதி தந்தை இதற்கு உடன்படக் கூடும். என்னை இப்போதைக்கு விட்டு விடு’ தாமார் எழுந்தாள்.
அம்மானுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. அவனுக்குள்ளிருந்த மிருகம் இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகத் தானே காத்திருந்தது. அடுத்த வினாடி வரை காத்திருக்கும் பொறுமை கூட அதனிடம் இருக்கவில்லை. அவன் அவளை பலாத்காரம் செய்து விட்டான்.
அதற்குப் பின்பு அம்மான் தாமாரை வெறுப்புடன் பார்த் தான். அவனுக்கு தாமாரின் மீதிருந்த காமம் சுத்தமாய் வடிந்து போயிருக்க மனம் வறண்டு போயிருந்தது.
‘இனிமேல் நீ வெளியே போய்விடு… இங்கே நிற்காதே’ என்றான்.
‘அம்மான்… நீ என்னுடன் உறவு கொண்டுவிட்டாய். இது வழக்கம் இல்லை என்றால் கூட என்னை மனைவியாக்கி விடு. கன்னித் தன்மை இழந்த என்னை வெளியே அனுப்பி விடாதே. இது என்னை பலாத்காரம் செய்ததை விடக் கொடுமையானது’ தாமார் கெஞ்சினாள்.
அம்மான் அவளைப் பார்க்கவே வெறுப்படைந்து அவளை விரட்டி விட்டான்.
தாமார் அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்று தான் அணிந்திருந்த அழகிய ஆடைகளைக் கிழித்துவிட்டு, தலையில் சாம்பல் தடவி துக்கம் அனுசரித்தாள். அப்போது அவளுடைய அண்ணன் அப்சலோம் வீட்டிற்கு வந்தான். தாமார் தலைவிரி கோலமாக அழுதுகொண்டிருப்பதைக் கண்ட அவனுடைய உயிர் துடித்தது.
‘தாமார்… என்னவாயிற்று உனக்கு ? எந்தப் பாவி உன்னை இந்த நிலமைக்கு ஆளாக்கினான். சொல்.. அவன் தலையைக் கொண்டு வருகிறேன்’ அப்சலோம் கோபத்தில் கேட்டான்.
‘அம்மான் தான் அவன்….’ தாமார் அழுதுகொண்டே சொன்னாள்.
அம்மான் என்னும் பெயரைக் கேட்டதும் அப்சலோம் இன்னும் அதிகமாக அதிர்ந்தான். ‘அவனா ? உன் சகோதரனா உன்னைக் கெடுத்தான்…. அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்… ‘ என்று புறப்பட்டான்.
நடந்தவற்றை அனைத்தையும் அறிந்த தாவீது மிகவும் கோபமடைந்தார். தன் மகனே தன் மகளை மானபங்கப் படுத்திவிட்டானே என வருந்தினார். ஆனாலும் அம்மோனை அவர் எதுவும் செய்யவில்லை.
அப்சலோம் அம்மோனைக் கொல்லத் தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தார்.
நாட்கள், வாரங்கள், மாதங்கள் என காலம் ஓடியது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஏறக்குறைய எல்லோரும் இந்த சம்பவத்தை மறந்துவிட்ட ஒரு நாளில் அப்சலோம் தாவீதின் முன் சென்றான்.
‘தந்தையே… நான் ஒரு விருந்து ஏற்பாடு செய்துள்ளேன். நீங்களும் பணியாளர்களும் விருந்தில் கலந்து கொள்ளவேண்டும்’ அப்சலோம் அழைத்தான்.
‘அழைப்புக்கு நன்றி மகனே. ஆனாலும் நான் வந்தால் என்னோடு கூடவே படைவீரர்கள், பணியாளர்கள் எல்லோரும் வருவார்கள். உனக்கு வீண் சுமை..’ தாவீது மறுத்தார்.
‘சுமையெல்லாம் இல்லை தந்தையே… தந்தை மகனுக்குச் சுமையாக முடியுமா ? வாருங்கள்…’ அப்சலோம் கட்டாயப் படுத்தினார்.
‘இல்லை மகனே… வேண்டாம்… அது சரிப்பட்டு வராது’ தாவீது திட்டவட்டமாக மறுத்தார்.
‘அப்படியானால் அம்மோனையாவது அனுப்புங்கள்’ அப்சலோம் கேட்டான்
‘அம்மோனா ? அவன் எதற்கு ? வேண்டாம்… உனக்கும் அவனுக்கும் சரிவராது…’ தாவீது அதையும் மறுத்தார்.
‘என்ன சொல்கிறீர்கள் தந்தையே ? நீங்கள் பழசை இன்னும் மறக்கவில்லையா ? அதையெல்லாம் நான் என்றைக்கோ மறந்து விட்டேன். தாமர் எனக்கும், அம்மோனுக்கும் தங்கை தான். அதே போல அம்மோன் உங்கள் மகனல்லவா ? அவன் என் சகோதரனல்லவா ? சகோதரர்களுக்கு இடையே சண்டை வருமா என்ன ?’ அப்சலோம் நடித்தான்.
‘சரி.. அப்படியானால் அம்மோனை அழைத்துப் போ…’ தாவீது அனுமதியளித்தார்.
இந்த வாய்ப்புக்காகத் தானே அப்சலோம் காத்திருந்தான். அம்மோனைக் கட்டித் தழுவி, அவனை விருந்துக்கு அழைத்துச் சென்றான்.
அங்கே தாமாரும், அப்சலோமும் அவனுக்கு ஏராளமான இனிப்புகளும், மதுவகைகளும் வழங்கினர்.
அம்மோன் உற்சாகமாய்க் குடித்தான். குடித்துக் குடித்து போதையில் சரிந்தான்.
அந்த நேரத்துக்காகக் காத்திருந்த அப்சலோம், இரண்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாமலிருந்த கணக்கை அன்று தீர்த்துக் கொண்டான்.
அன்றே போதையில் மிதந்த அம்மோனை அப்சலோம் கொன்றான்.
அதுவரைக்கும் அப்சலோமின் கண்களில் அணையாமல் எரிந்து கொண்டிருந்த கோபத்தின் தீ அப்போது தான் அணைந்தது.
தகாத உறவுக்கு ஆசைப்பட்ட அம்மோன், துடி துடித்து இறந்தான்.
–
கி.மு – விவிலியக் கதைகள் நூலில் இருந்து