வீட்டுப் படிக்கட்டில் அமர்ந்து
பேன் பார்க்கும் சகோதரிகளை
பாட்டி திட்டுவாள்
ராத்திரியில
தலையை விரிச்சு போடாதீங்க.
இரவு வேளைகளில்
கிணற்றங்கரையில்
தண்ணி எடுக்கப் போகையிலும்
வசவு விழும்
பொழுதணஞ்சப்புறம் தண்ணி எடுக்காதீங்க.
சிம்னி விளக்கு
வெளிச்சத்தில்
நகம் வெட்டுகையில்
தாத்தா கத்துவார்
இதெல்லாம் குடும்பத்துக்கு ஆகாது.
ஏன் எதற்கென்றோ,
சரியா தப்பா என்றோ
விவாதம் செய்ததில்லை யாரும்.
எனினும்,
திட்டுவதற்கு ஆளில்லாத
இன்றைய
கிராம வீட்டு மெளனம்
ஏதோ செய்கிறது எல்லோரையும்.