தேவதைகளின்
சிறகசைப்பில் சரிசெய்ய
இயலாதவற்றை
ராச்சசிகளின் நகக்கீறல்கள்
ரட்சிப்பதில்லை.
தேவதைச் சாரலில்
மோட்சம் அடையாதவர்கள்
பேய்மழையின் கைபிடித்து
பரமண்டலங்களுக்குப்
பயணிப்பதும் நிச்சயமில்லை.
மெல்லினங்களின்
இறகுகளில் தான்
பறந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை.
வல்லினங்களின்
பளு அறுத்து வீசிவிடின்
மனசும்
இலேசாகிப் பறக்கத் துவங்கும்.
எனினும்…
இறக்க இறக்க
உயிர்த்துக் கொண்டே தான்
இருக்கின்றன
எறும்பின் முதுகில்
எந்திரக் கற்கள்.
எத்தனை தான்
தேவாலயப் பீடங்களிலும்
பலிபீடங்களிலும்
கண்ணீர்த் துளிகள்
இரத்தம் சிந்திக் கொண்டிருந்தாலும்
வறுமைக் கோட்டை
அழிக்க இயலாத
மழை
பொழிந்து கொண்டிருந்தாலென்ன
அழிந்து கொண்டிருந்தால் தான் என்ன ?