சிறுகதை : பையன் எங்கே ?

பையனைக் காணோங்க….

போனின் மறுமுனையில் பதட்டமும், அழுகையுமாய் வழிந்த குரலைக் கேட்டதும் சாகர் வெலவெலத்துப் போனான். முகத்துக்கு நேரே விசிறியடித்துக் கொண்டிருந்த ஏ.சி காற்றையும் மீறி சட்டென உடல் வியர்த்தது. பதட்டத்தில் இருக்கையை பின்னோக்கித் தள்ள அது ஒரு அரைவட்டமடித்து ஆடியது. முன்னால் டேபிளில் இருந்த லேப்டாப் முகத்தில் வரி வரியாய், கட்டம் கட்டமாய் ஆங்கில எழுத்துகளை வாங்கி புரியாமல் பார்த்தது.

பையனைக் காணோமா ? ஏன் ? என்னாச்சு ? வீட்ல தானே இருந்தான் ? இருக்கையை விட்டு பதறி எழுந்த சாகரின் கையிலிருந்த செல்போன் நழுவி தரையில் விழுந்தது. அந்த ஐடி நிறுவனத்தின் தரை முழுவதும் அழுக்கு கலர் கார்ப்பெட் கைகளை விரித்துப் படுத்திருந்தது. கீழே விழுந்த அந்த போன் இருபதாயிரத்துச் சொச்சம் ரூபாய். இன்னொரு சந்தர்ப்பமாய் இருந்திருந்தால், “ஓ..ஷிட்..” என்று கத்தியிருப்பான். இப்போது அவனுக்கு எதுவுமே ஓடவில்லை.

என்னாச்சு ? வீட்ல தானே இருந்தான்.. மறுபடியும் கேட்டுக்கொண்டே கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். வெளியே ஒரு அரை ஏக்கர் நிலம் அளவுக்கு அந்த வர்க் ஏரியா விரிந்து கிடந்தது. சின்னச் சின்ன தடுப்புகளுக்குப் பக்கத்தில் கணினிகளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள்.

மறுமுனையில் பிரியாவின் அழுகைக்கிடையே அவளுடைய வார்த்தைகளைத் தேடுவதே பெரும் சிரமமாய் இருந்தது அவனுக்கு. ஒரே பையன். போன மாசம் தான் இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாடினான். பிறந்த நாளை கிராண்டா கொண்டாடாதேப்பா கண்ணு வெச்சுடுவாங்க.. ஊரில் பாட்டி சொன்னதையும் மீறி நல்ல செலவு பண்ணி விழா எடுத்திருந்தான்.

மாமாவும், அக்‌ஷத்துமா வெளியே போயிருந்தாங்க…

ஓ… அப்பா தான் கூட்டிட்டு போனாரா ? சாகர் குரலில் கொஞ்சம் பதட்டம் தணிந்தது. வந்துடுவாங்க.. எப்போ போனாங்க…

போய் ஒரு மூணு மணி நேரமாச்சும் இருக்கும்

மூணு மணி நேரமா ? போன பதட்டம் மறுபடியும் வந்து ஒட்டிக் கொள்ள, சரி.. அழாதே, பக்கத்துல எங்கேயாச்சும் போயிருப்பாங்க. என்றான்.

இல்லீங்க, மாமா வெறும் லுங்கியும், பனியனும் தாங்க போட்டிருந்தாரு. பையன் வீட்ல போட்டிருந்த சட்டை தான் போட்டிருந்தான். வேற எங்கயும் போயிருக்க வழியே இல்லை.

போன் பண்ணிப் பாத்தியா ?

பண்ணினேன்.. போனை வீட்டிலேயே வெச்சுட்டுப் போயிருக்காரு.. வெளியே போனா கைல எடுத்துட்டுப் போற அறிவு கூடவா இல்லை ?

பக்கத்துல கடைகளுக்கு எங்கேயாவது போயிருப்பாரோ ?

பக்கத்து கடை, அவங்க போற பார்க், அவங்க சுத்தற ஏரியா எல்லாம் போய் பாத்துட்டேன். அத்தை பையன் லாஸ்ட் ஒன் அவரா பைக்ல சுத்திட்டே திரியறான்.. எனக்கென்னவோ பயமா இருக்குங்க.. மறு முனையில் விசும்பல் சத்தம் அதிகமாகி அழுகையாய் மாறியிருந்தது.

சரி, டென்ஷன் ஆகாதே.. நான் இதோ கெளம்பி வரேன்.. சொல்லிக் கொண்டே பளீரென ஒளிவிட்டுக் கொண்டிருந்த லேப்டாப்பை அப்படியே மடக்கி கருப்பு நிற பைக்குள் திணித்தான். சுவரில் ஒரு பாம்பு போல தொங்கிக் கொண்டிருந்த பவர் கார்டையும் இழுத்து உள்ளே தள்ளினான். கதவைப் பூட்டாமல், லைட்டை அணைக்காமல் வெளியே வந்தான்.

எதிரே பளீர் விளக்கோடு தெரிந்தது மேனேஜர் முத்து வின் அறை. அந்த அறையைப் பார்த்தபோதே உள்ளுக்குள் எரிச்சல் வந்தது. அதையெல்லாம் வெளிக்காட்டாமல் வேகமாக அந்த அறையின் கதவை சம்பிரதாயமாய் ஒரு தட்டு தட்டிவிட்டுத் திறந்தான்.

வாங்க சாகர்.. என்ன பையோட கெளம்பிட்டீங்க

பையனைக் காணோமாம்…

என்னது பையனைக் காணோமா ? முத்துவின் கண்களில் தெரிந்த அதிர்ச்சி அவருடைய கண்ணாடியையும் மீறி எட்டிப் பார்த்தது.

அப்பா தான் பையனைக் கூட்டிட்டு போயிருக்காரு, அதனால பக்கத்துல எங்கேயாவது தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

ஓ.. அப்பா கூட தான் போயிருக்காரா ? அப்போ நோ பிராப்ளம்…

இல்ல… தட்ஸ் த பிராப்ளம்.. அவருக்கு இல்லாத நோய் எல்லாம் இருக்கு. சுகர், லோ பிபி.. எல்லா எழவும் இருக்கு. பாவம்.. சட்டுன்னு லோ பிபி அது இதுன்னு ஆயிடுச்சுன்னா என்ன பண்றது ? அதான் டென்ஷனா இருக்கு…

சரி..சரி.. நீங்க கெளம்புங்க… பிளீஸ்… டோன்ட் வரி,,,ஹி..வில் பி ஆல்ரைட்.

அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்வது ரொம்ப ரொம்ப ஈசி. அதே பிரச்சினை நமக்கு வரும்போது தான் எந்த ஆறுதலும் வேலை செய்யாது. சோலியப் பாத்துட்டு போய்யா.. அவனவன் கஷ்டம் அவனவனுக்குன்னு கத்தத் தோணும். சாகர் எதையும் சொல்லவில்லை, தாங்க்ஸ்… என்று மட்டுமே சொன்னான்.

அதற்குப் பிறகு தாமதிக்கவில்லை, வேக வேகமாக கதவில் அக்ஸஸ் கார்டைக் காட்டினான். பீப் என சத்தமிட்டு இறுக்கம் தளர்ந்த கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டே ஓடிய சாகரை செக்யூரிடி பிடித்து நிறுத்தினார்.

சார்..சாவி..சாவி… ரூம் சாவி சார்…

சாவி ரூம்லயே தான் இருக்கு… நீங்களே பூட்டி சாவியை எடுத்துக்கோங்க, கொஞ்சம் அர்ஜன்ட்… பேசிக்கொண்டே ஓடினான் சாகர்.

சரசரவென இரண்டு மாடிகள் கீழே இறங்கி, கார்ப்பார்க்கிங்கை நோக்கி ஓடுகையில் மீண்டும் போன்…

போலீஸ் கம்ப்ளெயின்ட் குடுக்க போறேங்க… ஐயோ.. பையன் எங்கே போனானோ…

கொஞ்சம் வெயிட் பண்ணு, என் பிரன்ட்ஸ்க்கு கால் பண்றேன்.. தேடுவோம்… வரேன்… நான் கார்ல ஏறிட்டே இருக்கேன்…

லேட் ஆயிட்டே இருக்கு.. நைட் ஆச்சுன்னா கண்டு பிடிக்க கஷ்டம்.. சொல்லும் போதே பிரியாவின் அழுகை போனில் கொட்டியது.

பெண்களுடைய அழுகை தான் ஆண்களுடைய டென்ஷனை பலமடங்கு உயர்த்தி விடுகிறது. தனது சான்ட்ரோ காரில் ஏறி சட்டென கிளம்பினான் சாகர்.

“டாடி.. இன்னிக்கு ஒரு நாளைக்கும் லீவ் போடுங்களேன்” காலையில் அக்‌ஷத் சட்டையை இழுத்துக் கொண்டே கேட்டான்.

இல்லப்பா.. இன்னிக்கு கண்டிப்பா போணும், ஒரு கிளையன்ட் விசிட் இருக்கு.. முத்து வரச் சொல்லியிருக்காரு.

யாருப்பா அது முத்து ?

என்னோட பாஸ் டா..

அதென்ன பாஸ் பா.. என் பையன் வீட்ல நிக்க சொல்றான்னு சொல்ல வேண்டியது தானே..

ஒரு கிளையன்ட் விசிட் இருக்கு… அதனால நிறைய வேலை..

ஆமா.. பையனுக்கு கிளையன்ட் விசிட், வேலை எல்லாம் ரொம்ப நல்லா புரியும் ரொம்ப டீட்டெயிலா சொல்லுங்க. பாத்திரங்களின் இசைக்கிடையே பிரியாவின் குரல் கிண்டலுடன் ஒலித்தது.

பையனுக்கு புரியுதா இல்லையாங்கறது முக்கியமில்லை, ஆனா உண்மையைச் சொல்லணும்ல…

ஆமா..ஆமா.. பையனுக்கு சொல்ற சாக்குல என் கிட்டே தான் அதைச் சொல்றீங்க…

சே…சே… உனக்கு இனிமே புதுசா சொல்லணுமா என்ன ? சாக்ஸை உதறிக் கொண்டே கேட்டான் சாகர். அவனுடைய பதிலில் சிரிப்பு கொஞ்சம், வழிசல் கொஞ்சம் கலந்திருந்தது.

சரி.. சரி.. கெளம்புங்க…

டாடி…. பிளீஸ்….

இல்லடா செல்லம்.. நாளைக்கு லீவ் போட்டு உன்னை ஊர் சுத்திக் காட்டறேன் சரியா…

டேய்.. நாளைங்கறது டாடிக்கு எப்பவும் வராதுடா… அவருக்கு கிளையண்ட் தான் முக்கியம்…

சாகர் சிரித்துக் கொண்டே, பையனை அள்ளி எடுத்துக் கொஞ்சிவிட்டு காரை நோக்கி நடந்தான். பின்னால் பையன் ஒரு சோக முகத்தோடு சுவற்றைப் பிடித்துக் கொண்டே நின்றான்.

டேய்..சாவுகிராக்கி.. பாத்து ஓட்டமாட்டே ?

சர்ர்ர்ர்ர்ரக்… என பிரேக் அடித்து நிமிர்ந்த சாகரின் காருக்கு முன்னால் ஒரு பல்சர் நின்றிருந்தது. அவன் எப்போ அங்கே வந்தான் என்பதையே சாகர் கவனிக்கவில்லை. கவனம் எல்லாம் பையன் மீது தான் இருந்தது…

இந்த ஐடி கம்பெனியில் சேர்ந்ததிலிருந்தே ஏதாவது ஒன்று மாறி ஏதோ ஒரு வேலை வந்து கொண்டே தான் இருக்கிறது. என்ன செய்ய ? ஐந்திலக்கத்தில் ஒரு பெரிய எண் வங்கிக் கணக்கில் மாசம் தோறும் அட்சர சுத்தமாய் வந்து சேரும். அதற்குக் கொடுக்கும் விலை ரொம்பப் பெரியது.

கிளையன்ட் விசிட் என்றாலே போச்சு. அவன் தானே பணம் காய்க்கும் மரம். அவனை எவ்வளவு தூரம் சோப்பு போடறோமோ அந்த அளவுக்கு தான் கம்பெனி வளரும். ஒருத்தன் அமெரிக்காவிலிருந்து விசிட்டுக்கு வருகிறான் என்றாலே இங்கே எல்லோருக்கும் கிலி பிடித்துக் கொள்ளும்,

அஜென்டா தயாராக்கிட்டியா ? விசிட் அரெஜ்மென்ட் எல்லாம் என்ன நிலமைல இருக்கு ? லாஜிஸ்டிக்ஸ் ல எந்த பிரச்சினையும் வரக்கூடாது… வர்ரவன் சாதாரண ஆள் இல்லை. அவன் அந்த குரூப் டைரக்டர். அவனோட மனசைக் குளிர வைக்கிறது தான் நம்ம ஒரே குறிக்கோள்.

அஜென்டா பண்ணிட்டிருக்கேன் முத்து.. இன்னும் முடியல..

சீக்கிரம் முடி.. இன்னும் மூணு வாரம் தான் இருக்கு. நாலு கேப்பபிளிடி பிரசன்டேஷன் வேணும். டெஸ்டிங் சர்வீசஸ்ல யார் அவெய்லபிள்ன்னு பாரு… நாலு பிரசன்டேஷனாவது இருக்கணும். வரவனுக்கு நம்ம கம்பெனி மேல நல்ல அபிப்பிராயம் வரணும்.

கண்டிப்பா பண்ணிடலாம்.

சீக்கிரம் பண்ணு… ஐ  வான்ட் டு ரிவ்யூ த பிளான். பிரசன்டேஷன் குடுக்கிறவங்களோட டைம் வேணும். அவங்களோட பிரசன்டேஷன் வாங்கி முதல்ல படிச்சுப் பாரு. ஒரு டிரை ரண் போடணும். சும்மா கிளையன்ட் முன்னாடி நிறுத்தினா சொதப்பிடுவாங்க. பத்து மில்லியன் அக்கவுண்ட்ப்பா… கொஞ்சம் சொதப்பினாலும் வீ வில் லூஸ் அவர் ஜாப்.. அப்புறம் வீட்ல தான் இருக்கணும்.

யா.. ஐ அண்டர்ஸ்டேன்ட்.. நான் பண்ணிடறேன்..

ஐ..நோ.. யூ வில் டூ.. பட்.. ஐ னீட் திஸ் குவிக்லி மேன்…

முத்துவின் விரட்டலிலும் காரணமில்லாமல் இல்லை. கிளையன்ட் விசிட் என்றால் அப்படி ஒரு முக்கியம் ஐடியைப் பொறுத்தவரை. வருபவனுக்கு மாலை போட்டு வரவேற்பது முதல், தனியே ஒரு கான்ஃபரன்ஸ் ரூம், பக்கத்திலேயே ராடிசன் ஹோட்டல் சிப்பாய்கள் ரெண்டுபேர் அவனுக்கு காபியோ, டயட் கோக்கோ ஊத்திக் கொடுக்க. அவனைப் பார்க்கும் போதெல்லாம் அலகில் கிளிப் போட்டது போல சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவன் கேட்பதற்கெல்லாம் பூம் பூம் மாடு போல தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

என்ன லைஃப் டா இது என அவ்வப்போது சலித்துக் கொள்வான் சாகர். ஆனால் எந்த வேலையில் தான் கஷ்டம் இல்லை ?. வெட்ட வெயிலில் ரோட்டு நடுவே நிற்கும் டிராபிக் கான்ஸ்டபிளை விட கஷ்டமானதா நமது வேலை, அல்லது சைக்கிளில் காய்கறி வைத்துக் கொண்டு கூவிக் கூவி விற்கும் பெரியவரை விடக் கஷ்டமானதா நமது வேலை. இல்லவே இல்லை. என மனசைத் தேத்திக் கொள்வான்.

சாலையில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே, பிரியாவுக்கு போன் செய்தான்.

என்கேஜ்ட் என்றது…

நண்பன் ஶ்ரீனிக்கு போன் செய்தான். டேய் அக்‌ஷத்தைக் காணோமாம்டா மச்சி.. உடனே கெளம்பி என் வீட்டுக்கு வா…

பேசிக்கொண்டிருக்கும் போதே பிரியாவின் போன்… கடவுளே நல்ல செய்தியாய் இருக்க வேண்டுமே என வேண்டிக்கொண்டே கிளிக்கினான்…

மறுமுனை இன்னும் அழுது கொண்டிருந்தது.

இதோ நாம் இன்னும் ஐந்து நிமிஷத்துல வந்துடுவேன்.. போலீஸ் ஸ்டேஷன் போலாம்.. அப்பாவும் போயிருக்காருல்ல.. வந்துடுவாங்க… சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆம்புலன்ஸ் கத்திக் கொண்டே எதிர் திசையில் வந்தது.

சாகரின் கால்கள் வலுவிழந்தன… ஐயோ.. பையனுக்கு ஏதாவது ?… அந்த நினைப்பே அவனுக்குள்ளிருந்த கிலியை அதிகரிக்க கைகள் ஈரமாகி வழுக்கின.

இதோ இன்னும் இரண்டு சிக்னல் தான்.. சாகரின் மனம் எல்லா தெய்வங்களையும் உதவிக்கு அழைத்தது.

என்ன அப்பன் நான். பையன் எவ்ளோ தடவை சொன்னான்.. பேசாம லீவ் எடுக்காம அந்த முத்து பேச்சைக் கேட்டு ஆபீஸ் போனதே தப்பு.. கடவுளே நான் ஏதாச்சும் தப்பு பண்ணியிருந்தா என்னை மன்னிச்சுடு… என் பையனுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது… பிளீஸ்… அவனுடைய நெஞ்சம் பதறித் தவித்தது.

அதோ அடுத்த சிக்னலில் வலது பக்கமாக இருக்கும் டோமினோஸ் பீட்ஸா கடையை ஒட்டிய சந்தில் திரும்பினால் வீடு…

வேகமாய் காரை மிதித்து சரேலெனத் திரும்பினான் சாகர். எதிரே வந்த லாரி இன்னும் ஒண்ணே கால் வினாடி தாமதித்திருந்தால் ஏறி மிதித்திருக்கும். நல்ல வேளை ஒன்றும் நடக்கவில்லை. வீட்டிற்கு முன்னால் சின்னதாய் ஒரு கூட்டம்.

வண்டி நின்றது. ஓடி வந்தாள் பிரியா… ரெண்டு மணிக்கு போனாங்க, மணி ஆறாகுது.. இன்னும் வரலைங்க.. என்னமோ ஆயிருக்கு… அவள் அழுது அழுது சோர்ந்து போயிருந்தாள்.

சாகருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கைகளைத் தலையில் வைத்துக் கொண்டு உதடுகளைக் கடித்தான். அவனுடை பார்வை எதிரே இருந்த புதரை நோக்கிப் போனது.

எல்லா வாய்க்கா, புதர் எல்லாம் பாத்துட்டேங்க… அழுகை கலந்து குரல் வந்தது.

என்ன செய்வது ? போலீசுக்குப் போக வேண்டியது தான். சாகர் காரை நோக்கி விரைந்தான்.

அப்போது ஒரு ஆட்டோ வந்து நின்றது.

என்னாச்சு ? கேட்டுக்கொண்டே இறங்கினார் சாகரின் அப்பா. கையில் பையன் அக்‌ஷத். எல்லோருக்கும் போன உயிர் சட்டென திரும்பி வந்தது.

அக்‌ஷத்த்த்… கூவிக்கொண்டே ஓடிப்போய் குழந்தையை அள்ளினாள் பிரியா. கொஞ்ச நேரம் தெய்வங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு குழந்தையை அணைத்தாள்.

ஏன்.. ஏன் கூட்டம் ? என்னாச்சு ? சாகரின் அப்பா புரியாமல் கேட்டார்.

ஏன்பா.. போகும்போ… போனையாவது கைல கொண்டு போயிருக்கலாம்ல… சாகர் பையனைக் கண்ட நிம்மதியில், அப்பாவிடம் மெலிதான எரிச்சலைக் காட்டினான். பையனைக் காணோம்ன்னு நாலு மணி நேரமா ஊர் புல்லா சுத்தியாச்சு.. எங்கே தான் போயிருந்தீங்க.

அய்யோ.. அதான் இந்த ஆர்ப்பாட்டமா.. சாரி.. பையன் பார்க் போணும்னு சொன்னான், பக்கத்து பார்க் மூடியிருந்துது அதான் நம்ம பிள்ளையார் கோயில் பின்னாடி இருக்கிற பார்க்ல கூட்டிட்டு போனேன்.

அவ்ளோ தூரமா போனீங்க..

ஆமா, போகும்போ நடந்து தான் போனோம். சரி லேட்டாயிடுச்சே தேடுவீங்களேன்னு தான் நான் ஆட்டோ புடிச்சு வந்தேன்.

மத்தவங்க பிள்ளையைத் தேடுவாங்கன்னு தெரியாது ? அறிவு கெட்ட ஜென்மம்… வேணும்னா தனியா போய் தொலைஞ்சிருக்க வேண்டியது தானே.. பிரியா உதடுகள் பிரியாமல் திட்டினார்.

எந்த ஆர்ப்பாட்டத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் அக்‌ஷத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.

போன் அழைத்தது…

சாகர்… பையன் கிடைச்சுட்டானா ? மறு முனையில் முத்து.

யா.. கெடச்சுட்டான்.. அப்பா கொஞ்சம் தூரமா கூட்டிட்டு போயிட்டாரு போல. அதுக்குள்ள என்னோட வய்ஃப் கத்தி கலாட்டா பண்ணிட்டாங்க.

ஓ..காட்.. நல்ல வேளை.. ஒரே பதட்டமாயிப் போச்சு. ஏன் வைஃபை மட்டும் சொல்றீங்க ? உங்க முகமே விகாரமாயிப் போச்சுல்ல. அதான்பா பிள்ளைப் பாசம்.

யா.. வேற எதையும் என்னால நெனச்சுக் கூட பாக்க முடியல… முத்து, ஹி.. ஈஸ் மை எவ்ரிதிங்.

ஓ.கே.. குட்.. தேங்க் காட்… சரி, நாளைக்கு லீவ் எடுத்துக்கோங்க.. வீட்ல பையன் கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க..

தாங்க்ஸ் முத்து, நானே கேக்கலாம்ன்னு நினைச்சேன்.

ஹே..நோ..நோ பிராப்ளம்.. கிளையன்ட் வருவான், போவான்.. நம்ம லைஃப், நம்ம கிட்ஸ் அவங்களை நாம தான் பாத்துக்கணும்… ஸ்பென்ட் சம் டைம் வித் ஹிம்…

தேங்க்ஸ் முத்து…  முதன் முறையாக முத்து மீது கொஞ்சம் மரியாதை வந்தது சாகருக்கு.

போனை வைத்த மறு வினாடி, வெளியே விளையாடிக் கொண்டிருந்த பையனை அள்ளினான்.

நாளைக்கு நான் லீவ் போடறேன்.. எங்கே போலாம்… ?

ரியலி ?? இன்னிக்கு போன பார்க்குக்கே போலாம் டாடி… கபடமில்லாமல் சிரித்தான் அக்‌ஷத்…

கண்டிப்பா என அணைப்பை இறுக்கினான் சாகர்.

சேவியர்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.