சென்னையில் ஒரு மழைக்காலம்

.

.

.

நுரைகளை ஒதுக்கி விட்டுக்
கரைகளைத் தாண்டியது
கடல்.

காங்கிரீட் வனத்துக்குள்
பாதை போட்டுப்
பாய்ந்தோடியது
நதி.

என் பூர்வீகம் எங்கே
என
மாடியை எட்டிக் கேட்டது
ஏரி

பழு தாங்கும்
வலு இல்லையென
அழுது புலம்பியது
மேகம்.

வாழவைக்கும் அன்னையாம்
நமது சென்னை
மூச்சு விட
மூன்றாவது மாடி தேடியது.

துயரச் செய்திகளை
பகிரக் கூட முடியாமல்
தலை கவிழ்ந்தது தொழில் நுட்பம்.

ஸ்மார்ட் டிவிகளும்
3டி டிவிகளும்
மின்சாரத் தீனியின்றி
மயங்கியே கிடந்தன.

ஹை கான்பிகரேஷன்
கணினிகள்
வண்ணான் வீட்டுக் கல் போல
அசையாமல் கிடந்தன.

சிக்னல் இல்லாத
ஸ்மார்ட்போன்கள்
செல்லாக் காசுகள் போல
மூலைகளில் முடங்கின.

வாழ்க்கை
வயர்களிலும் இல்லை
வயர்லெஸ்களிலும் இல்லை
என்பது
மனிதனுக்குப் புரிந்தது.

அறைந்து சாத்தப்படும் கதவுகள்
அமைதியாய்த் திறந்தன,
பூட்டியே கிடந்த சன்னல்கள்
தாழ் விலக்கின.

டிஜிடல் தாண்டி
புன்னகை ஐக்கான்களை
உதடுகளில் உடுத்தின
முகங்கள்.

‘அங்கே தண்ணியே ?
இங்கே வாங்களேன்’
சீரியல் தாண்டி
வெளியே வந்தனர் பெண்கள்.

‘சாப்ட ஏதாச்சும் வேணுமா?’
கரிசனைகள்
மாடிகளில் வலம் வந்தன.

சகமனிதனுக்காய்
கண்ணீர் விட
தண்ணீர் போதித்தது.

மத விரோதங்களும்
இனச் சண்டைகளும்
சாதிப் பேச்சுகளும்
தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

தஞ்சம் அடைந்த
வீடுகளில்
பலமத பிரார்த்தனைகள்
ஒரு மனதுடன் நடந்தன.

பேசும் மொழியும்
பின்பற்றும் வழியும்
துருக்களைப் போல உதிர்ந்தன.

கர்வத்தின் கிரீடங்களை
காகங்களும்
நிராகரித்தன.

காட்டுத் தீயைப் போல
பற்றி எரிந்தது
மனித நேயம்
தண்ணீரின் தோள்களில்

நாய்கள் ஜாக்கிரதைகளும்
வானுயர கதவுகளும்
எச்சரிக்கை ஏதுமின்றி
விசாலமாய்த் திறந்து கொண்டன.

வெள்ளைக் காலர்
இளைஞர்கள்
வெள்ளக்காட்டுக்குள்
மீட்புத் தீபம் கொளுத்தினர்.

ரோமியோக்களாய்
வர்ணிக்கப்பட்டவர்கள்
தேசத்தின்
நம்பிக்கைப் படகுகளானார்கள்.

மழைக்கும்
பள்ளிக்கூடம் ஒதுங்காதவர்களை
பெரு வெள்ளம்
ஒதுங்க வைத்தது.

விரோதம் வளர்த்து
நேரம் விழுங்கிய
சமூக வலைத்தளங்கள்
சட்டென
கழுவி வைத்த கடவுளாயின.

திறந்து கிடந்த கதவுகளில்
திருடர்கள் புகவில்லை,
டிராபிக் சிக்னல்களிலும்
கெட்ட வார்த்தைகள் கேட்கவில்லை.

தொலைவில் கிடந்த
அடுத்த வீடு
வாசலுக்குள் வந்தது,
அருகில் இருந்த உலகம்
தொலைவாய் போனது.

பீட்சாவை விட
பிரட் சுவையாய் மாறியது.
பெப்சியை விட
குடிநீர் தேவையாய் ஆனது.

விளம்பர இடைவேளைகளில்
பேசிக்கொண்ட குடும்பம்
நாள் முழுதும்
ஒற்றை விளக்கைச் சுற்றி
ஊர் கதை பேசியது.

வெளிச்சம் மக்களை
வீட்டின் மூலைகளுக்குத்
துரத்துகிறது.
இருட்டே ஒற்றைப் புள்ளியில்
இறுக்கிக் கட்டுகிறது.

எழுத்துகளை விட
பேச்சும்,
ஸ்மைலிகளை விட
புன்னகையும்
உன்னதமானவையென உணரப்பட்டன.

நேரமில்லை என
ஓடியவர்கள்,
‘இன்னும் நேரமிருக்கு’ என
வியந்து நின்றார்கள்.

மழை
பிழையாய் வரவில்லை
பிழையுணர்த்த வந்திருக்கிறது.

இழந்து போன உயிர்கள்,
இழந்து போன பொருட்கள்
வலுவிழந்த வாழ்வாதாரம்
எல்லாம்
நிலையாமையை விளக்கின.

தனக்காய் பிரார்த்தித்தவனை
ஊருக்காய் பிரார்த்திக்கக்
வெள்ளம்
கற்றுத் தந்தது.

ஊரை விழுங்கிய வெள்ளம்
இதயங்களில்
ஈரத்தை இறக்கி வைத்தது.

நம் வேண்டுதல் ஒன்றே !

வெள்ளம் வடியட்டும்,
நோய்கள் முடியட்டும்
வாழ்க்கை விடியட்டும்.

மூடப்படாத இதயத்தோடும்
அடைக்கப்படாத மனிதத்தோடும்
நேசம் மட்டும்
உயிர்ப்புடன் இருக்கட்டும்.

*

2 comments on “சென்னையில் ஒரு மழைக்காலம்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.