திருநங்கையரின் வலி

Image result for transgenders india

 

போலிகளின் பற்களைப்
பிடுங்கத் தெரியாத
நீங்கள்,
திருநங்கைகளோடு மட்டும் ஏன்
கேலிக் குரலை எறிகிறீர்கள்?

திருநங்கைகள் என்ன
விண்ணப்பம் செய்து
விண்ணிலிருந்து
விழுந்தவர்களா ?
ஏதோ ஒரு கருவறையின்
கதவுதிறந்து பிறந்தவர்கள் தானே.

யாரோ செய்த பாவத்தின்
ஆயுள் கைதிகள்
அவர்கள்,
சாலைகளில்
தினம் தினம்
ஏன் தூக்கிலிடுகிறீர்கள்.

அவர்கள் என்ன
ஆசைப்பட்டு திருநங்கையர்
ஆனார்களா ?

நீங்கள் முழுமையாய்
பிறந்தததிலும்,
அவர்கள்
அரைகுறையாய் அவதரித்ததிலும்,
உன் திறமையும்
அவன் தவறும் எங்கும் இல்லையே.

உங்கள் இதயத்துக்கும்
அவர்கள் இதயத்துக்கும்
இருப்பதெல்லாம் இரண்டு
தமனிகள் தானே ?

காயம் பட்ட நெஞ்சங்களை
கேலி செய்யும்
நீங்கள்
உயர்ந்தவர்கள் என்று எப்படி
உங்களை
பிரகடனப் படுத்திக் கொள்ளலாம் ?

ஆடு தொடா இலைகளாய்
வேலிக் கரையில்
விளைகிறது அவர்கள்
வாழ்க்கை,
எருமைகளோடு வந்து
எட்டி மிதிப்பதை நிறுத்துங்கள்.

இல்லையேல்,
அயலானை அன்புசெய்யச் சொன்ன
அத்தனை மதங்களும்
ஓர்
அர்த்தராத்திரி இருட்டாய்
அர்த்தமற்றுப் போய்விடும்.

3 comments on “திருநங்கையரின் வலி

  1. இந்தக் கவிதையின் பக்கத்தை இலக்கியவேல் மாத இதழ் ஆசிரியர் ஐயா திரு. சந்தர் அவர்களுக்கு அனுப்பியுள்ளேன். நன்றி. வணக்கம்.

    வித்யாசாகர்

    Like

  2. வணக்கம் நண்பரே.
    நீங்கள் சொல்லும் அத்தனையும் சரிதான். அவர்களின் இந்நிலைக்கு அவர்கள் பொறுப்பல்லதான்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு, சமீபத்தில் புதுச்சேரிக்கு சென்று வந்தேன். புதுவை நகரத்தில் பல முறை நிறைய திருநங்கைகள் கூட்டம் கூட்டமாய் சுதந்திரமாக பயமின்றி திரிந்து சுற்றுவதை மகிழ்ச்சியுடன் காண முடிந்தது. நன்றாக உடுத்திக் கொண்டு ஆனாலும் பிச்சை எடுத்துதான் பிழைத்து வருகிறார்கள். தைரித்துடன் உலா வருகிறார்கள். பிச்சை கேட்கும்போது மக்கள் அனைவரும், இளைஞர்கள் உட்பட புன்முறுவலுடன் தானம் செய்கிறார்கள். திருநங்கைகளும் குதூகலமாகவே காணப்பட்டார்கள்.

    இவைகளை பார்க்கும்போது, புதுவை மக்களின் மனம் பாலின மாற்றங்களை ஏற்று சக மனிதரை ஒரு சாதாரண மனிதராக பாவித்து நடத்துமளவுக்கு பக்குவமடைந்து உள்ளது நம்பவேண்டி இருக்கிறது.

    ஆண் முழுதும் ஆணுமல்ல. பெண் முழுதும் பெண்ணுமல்ல. ஒவ்வொரு ஆணிலுள்ளும் சிறிது பெண்மை உள்ளது. ஒவ்வொரு பெண்ணிலுள்ளும் சிறிது ஆண்மையும் உள்ளது என நாம் அனைவரும் புரிந்து ஏற்றுக் கொள்ளல் அவசியமாகும்.

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. சமூக நலன் அக்கறை உள்ள பதிவு.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.